அறைக்கு வந்ததும் ஜன்னலின் அருகே சென்று நின்று கொண்ட தென்றல் மீனா பெரிய பெரிய மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை நிதானப் படுத்த முயன்றாள்.
வீட்டிற்குள் நுழைந்த பொழுது அர்ஜுனில் தொடங்கி சந்தியா அண்ணி வரை என எல்லோரும் ஒரு வகையில் அவளின் கோபத்தை மட்டுப் படுத்த அவர்களை அறியாமலேயே உதவி செய்திருந்தாலும் உள்ளத்தின் கொதிப்பும் விதார்த் மீதான வெறுப்பும் குறைவதை போல தெரியவில்லை அவளுக்கு!
முதல் முறையாக… அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும் சஞ்சலம் நிறைந்த விஷயம் என்றால் அது விதார்த்துடனான இத்திருமணம் தான். தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தானே இப்படித் தடுமாறுவது அவளை முற்றிலும் தளர்ந்து போக வைத்திருந்தது.
விதார்த் தன்னிடம் அவனின் விருப்பத்தை சொன்ன போது தெளிவாக திடமாக மறுத்தவளால் தன் மொத்த குடும்பமும் தன்னிடம் தன் சம்மதத்தை வேண்டி நின்ற போது மறுக்க முடியாமல் போனது!
அந்த நொடியில் தன் தெளிவையும் திடத்தையும் பாசமெனும் உணர்வு சிறை செய்து அவளை கட்டிப் போட்டது போலொரு எண்ணம்!
அதுவும் இன்று விதார்த் குரலில் இருந்த அலட்சியமும், அகம்பாவமும் அவளை போட்டு அலைக்கழிக்க “ஹவ் டேர்…” என்று அவனை எண்ணி பல்லைக் கடித்தாள் தென்றல் மீனா.
நிச்சயம் அவனோடான தன் வாழ்வு மகிழ்வையும், நிம்மதியையும் தராது என்று இந்த நொடி அவள் மனதில் அத்தனை ஸ்திரம் பெற்றது!
ஸ்திரம் பெற்ற நொடி அன்று வெங்கடேசன் மொத்த எதிர் பார்ப்பையும் முகத்தில் தேக்கி தன்னை பார்த்த பார்வை அவள் கண் முன்னே வர, தள்ளாடி தளர்ந்து அமர்ந்து விட்டாள் தென்றல் மீனா.
“அப்பாவிற்காக….” என்று ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் வந்து நின்று விட்டது போல் இருந்தது அவளுக்கு.
கதவு திறக்கும் சத்தத்தில் கவனம் களைந்தவவள் வசுந்தரா வருவதை கண்டு “வசும்மா..” என்றபடி அவரை தாவி அணைத்துக் கொண்டாள்.
எதுவும் கேட்காமல் மௌனமாக அவளின் தலையை வருடிக் கொடுத்தவர், கட்டிலில் அவளுடன் அமர, அவரிடம் மொத்தத்தையும் சொல்லி முடித்தவள்,
“இனி விதார்த் கூட கல்யாணம் முடியிற வரைக்கும் அடிக்கடி பேசாம இருக்கிறது தான் நல்லதுன்னு தோணுது வசும்மா. பேசினா அவர் மேல இருக்கிற கொஞ்ச நஞ்ச அபிப்ராயமும் போய்டும் போல. அதுவும் இன்னைக்கு….. நினைச்சாலே கோபம் கோபமா வருது..” என்றவள்,
“இனி பேசவே மாட்டேன் வசும்மா…” என்றவள், “பேசுனா இந்த கல்யாணம் நடக்காதோன்னு தோணுது” என்று விட்டாள்.
கவலையும் வேதனையுமாய் அவரை பார்த்த வசுந்தரா “உனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சும் ஏன் மீனு வேணாம்னு சொல்ல மாட்டேங்குற” என்று கேட்க, தென்றல் மீனாவிடம் மௌனம்.
அவரின் மடியில் தலை சாய்த்து விழி மூடிக் கொண்டவளின் மனதில் பெரும் அலைப்புறுதல்!!!
“எனக்கு ஒரு சந்தேகம் மீனு.. கேட்கவா” என்று வசுந்தரா கேட்க,
“என்ன வசும்மா.. கேட்கவான்னு எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க? கேளுங்க”
“இல்ல… எல்லாத்தையும் தெளிவா நிமிர்வா நீ எதிர் கொண்டு தான் நான் பாத்திருக்கேன். கடை விஷயங்கள்லயும் சரி! வீட்ல சில சமயம் எடுக்கிற முடிவுகள்லயும் சரி! உன்கிட்ட தெளிவு இருக்கும். ஆனா இந்த கல்யாண விஷயம்…உன்னோட முடிவு… இதுல ஏன் உன்கிட்ட தெளிவே இல்ல மீனு?” என்று அவளை ஆராயும் பார்வை பார்த்து கேட்க,
அந்தப் பார்வையை எதிர் நோக்க முடியாமல் தவறு செய்த குழந்தையாய் தலை கவிழ்ந்தாள் தென்றல் மீனா!
“அன்னைக்கு அப்பா அவ்ளோ தூரம் எதிர்பார்ப்போட என் முகத்தை பார்க்கும் போது மறுக்க முடியல வசும்மா” என்றாள் மெல்லிய குரலில்.
“யாரோட எதிர்பார்ப்புக்கும் ஆசைக்கும் யாரோட வாழ்க்கையையும் கொடுக்க முடியாது மீனு!” என்று தீர்க்கமாக சொன்னவர்,
“எதையோ பூர்த்தி செய்றதுக்காக உன்னோட வாழ்கையையே தூக்கி கொடுப்பியா?” என்று வசுந்தரலக்ஷ்மி வார்த்தையால் அவளின் உள்ளத்தை உருக்க தென்றல் மீனாவின் கண்களில் கண்ணீர்.
அவளின் தலையை வருடிக் கொடுத்திருந்த வசுந்தராவிற்கோ மனதில் பாரம் கூடிக் கொண்டது.
அன்று போல் இன்றும் தான் பெறாத மகளின் திருமண வாழ்வை எண்ணும் போது சொல்லொண்ணா பயமும் பரிதவிப்பும் அவரை சூழ்ந்து கொண்டது.
“இந்த கல்யாணம் முடிவானதுல இருந்தே நீ நீயா இல்ல மீனு. எதையோ இழந்த மாதிரி இருக்க. எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு… என்ன ஆகுமோ..? எப்படி அங்க போய் அந்த தம்பி கூட வாழப் போறியோன்னு பதக்கு பதக்குன்னு வருது. உனக்கு விருப்பம் இல்லாட்டியும் நம்ம குடும்பத்துக்காக தான் நீ விதார்த்துக்கு ஒத்துக்கிட்ட” என்றவர்,
“நான் வேணும்னா மூத்தவர் கிட்ட உனக்கு விருப்பம் இல்லேன்னு சொல்லிடவா” என்க, மீண்டும் வேண்டவே வேண்டாம் என்று மறுத்து விட்டாள் தென்றல் மீனா.
“இல்ல வசும்மா…. அப்பாவோட ஆசை இது. குடும்பத்துக்காக ஒத்துக்கிட்டது ரெண்டாம் பட்சம் தான். ஆனா, அப்பா.. ப்ச்… எப்படி சொல்ல… அவரு என்கிட்ட ரொம்ப எதிர் பார்த்த ஒரு விஷயம், என்னோட கல்யாணம் அவரோட விருப்பமா இருக்கணும்றது தான். அதை நான் மறுக்க நினைச்சாலும் என்னால முடியாது வசும்மா” என்றவள்,
“எனக்கு விதார்த்தை எப்படி ஹாண்டில் பண்றதுன்னு தான் தெரியல வசும்மா. அது தெரிஞ்சிதுன்னா என்னால நிதானமா தெளிவா இருக்க முடியும். பாக்கலாம். எப்படியும் எதாவது ஒரு வழி கிடைக்கும். நீங்க அன்னைக்கு சொன்ன மாதிரி என்னை அவருக்கு பழக்கிக்க தான வேணும்” என்றவள்,
“நீங்க எனக்காக யோசிக்கிறது புரியுது வசும்மா. ஆனா, நீங்க இதை அப்பா கிட்ட போய் பேசினீங்கன்னா விஷயம் வேற மாதிரி பிரச்சனையா மாறிடுமோன்னு பயமா இருக்கு. அதான் சொல்றேன். விடுங்க. கொஞ்ச நாள் அமைதியா இருந்தா எல்லாம் சரியாகிடும். இனி விதார்த் கிட்ட பேச எனக்கு ஐடியா இல்ல. பாக்கலாம். என்ன தான் பண்றாருன்னு” என்றவள்,
“நேரம் ஆச்சு வசும்மா.. நான் சாப்டுட்டு மறுபடியும் கடைக்கு வரதா சொல்லிட்டு தான் வந்தேன். கீழ போய் சாப்டுட்டு கிளம்புறேன்” என்றவள் அவருடன் கீழே வந்தாள்.
அவள் உண்டு முடித்து கிளம்பியதும் விசாலாட்சி வசுந்தராவை பிடித்துக் கொண்டார்.
“எதாவது சொன்னாளா வசுந்தரா..” என்று கேட்க, விஷயத்தை சொன்ன வசுந்தரா மீனாவின் பேச்சையும் மீறி மனம் கேளாமல் “அவளுக்கு விருப்பம் இல்ல அக்கா. நமக்காக தான் ஒத்துக்கிட்டா. இப்ப மூத்தவர் மனசு சங்கடப் படுமேன்னு வேணாம்னு சொல்ல ரொம்ப தயங்குறா” என்றவர் கலங்கிய கண்களுடன்,
“அந்த தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டா மீனு சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுது அக்கா. நீங்க தான் முடிவு பண்ணனும் இனி. நான் எதுவும் பேசவான்னு கேட்டா மீனு வேண்டவே வேண்டாம்னு தடுத்திட்டா. ஆனா எனக்கு மனசு அடிச்சிக்குது. நீங்க தான் மூத்தவர் கிட்ட பேசணும்” என்று மன்றாடியே விட, விசாலாட்சிக்கும் மகளின் வாழ்வை எண்ணி பயம் பிடித்துக் கொண்டது!
அடுத்த நொடி தாமதிக்காமல் கணவனிடம் அழைத்து அனைத்தையும் சொல்லியே விட, வெங்கடேசனிற்கும் மனதை போட்டு பிசைந்தது.
அவரும் அடுத்து என்னவென்றெல்லாம் யோசிக்கவில்லை. உடனே சாத்தப்பனிற்கு அழைத்து விட்டார்.
“ம்ம்…. சரி ஆஃபிஸ்ல தான் இருக்கேன் வெங்கடேசா. வா பேசிக்கலாம்” என்றவர் அழைப்பை துண்டித்ததும் “என்ன ஆச்சு? வெங்கடேசன் குரலே சரி இல்லையே… என்ன பிரச்சனை?” என்று யோசித்து அமர்ந்து விட்டார்.
எதற்கும் மகனிற்கு அழைத்து பாக்கலாம் என்று அழைப்பு விடுக்க, அவனோ இவரின் அழைப்பை கண்டதும் அழைப்பை துண்டித்தான். அதில் சாத்தப்பனின் புருவங்கள் முடிச்சிட மீண்டும் மகனின் எண்ணிற்கு முயன்றார்.
இரண்டு மூன்று முறை தொடர்ந்து அழைப்பை துண்டித்தவன், அவரின் தொடர் அழைப்பில் அலைபேசியை அணைத்து விட்டான்.