மகன் தொடர்ந்து அழைப்பை துண்டித்ததில் சாத்தப்பன் புருவம் முடிச்சிட அமர்ந்திருக்க அடுத்த அரை மணி நேரத்தில் அவரை காண வந்து விட்டனர் பத்பநாபனும் வெங்கடேசனும்.
சாத்தப்பனிடம் பேசும் பொழுதே அவரைக் காண வருகிறேன் என்று மூத்த மகன் சொன்னதை கேட்ட பத்பநாபன் விஷயம் பெரிது என்று புரிந்து கொண்டார்.
“என்ன ஆச்சு வெங்கடேசா” என்று மகனிடம் நடந்ததை கேட்டு அறிந்து கொண்டவருக்கு விதார்த்தின் மீது அளவு கடந்த அதிருப்தி உண்டாகியது.
“ம்ம்.. இன்னைக்கு சாத்தப்பனை பார்த்து எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு வந்திடலாம் ப்பா. எதுவா இருந்தாலும் இது நம்ம மீனு வாழ்க்கை” என்றவருக்கு குரல் தழுதழுத்தது.
வசுந்தராவின் மூலம் மனைவி சொன்னவை அனைத்தும் அவரின் நெஞ்சை அடைத்து, அறுத்தது…!
தனக்காக.. தன்னைக் கொண்டு.. தன் விருப்பத்திற்காக மட்டுமே மகள் சம்மதம் சொல்லி இருக்கிறாள் என்று எண்ண எண்ண அவரின் நெஞ்சில் ஈட்டியாய் குத்தியது மகளின் பாசம்!
விசாலாட்சியே “நம்ம மீனு சந்தோஷம் தவிர நமக்கு வேற எதுவும் முக்கியம் இல்லைங்க… அதுவும் இப்ப வசுந்தராவும் அவ்வளோ கண்ணீரோட பேசிட்டு கிட்டத்தட்ட கெஞ்சிட்டே போனா…. என்னால பாக்க முடியலங்க மீனுக்காக தான் உயிர் வாழ்ரா அவ. வசுந்தராவோட உயிரே நம்ம மீனு தான்க. மீனு வாழ்க்கை நல்லா இருந்தா அதுவே போதும் அவளுக்கு. அப்படி இருக்கும் போது… என்னால அவ கிட்ட எந்த பதிலும் சொல்ல முடியல. ஆறுதல் சொல்லக் கூட வாய் வரலங்க. நீங்க முடிவா சாத்தப்பன் அண்ணன் கிட்ட ஒடைச்சு எல்லாத்தையும் தெளிவா பேசிடுங்க” என்று மகளுக்காக கதறி விட்டார் அவரும்.
இத்தனை பேரின் கதறல் கொண்டா தன் மகளின் திருமண வாழ்வு ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணிய நொடி தாமதிக்காமல் முடிவை எடுத்து விட்டார் வெங்கடேசன்.
எடுத்தது மட்டுமில்லாமல் நேரடியாக இதோ சாத்தப்பனின் முன்னே வந்து நின்றும் விட்டார் தந்தையுடன்.
பத்பநாபனுடன் வந்திருக்கும் நண்பனை கண்ட சாத்தப்பனிற்கு எங்கோ இடித்தது. அதுவும் வெங்கடேசன் முகத்தில் தெரிந்த இறுக்கமும் பத்பநாபனின் முகத்தில் தெரிந்த ஒவ்வாத தன்மையும் அவரை இன்னும் யோசிக்க வைக்க,
“வாங்க மாமா.. வா வெங்கடேசா” என்று இருவரையும் வரவேற்றவர்,
“எதோ பிரச்சனை பத்தி தான் பேச வந்திருக்கீங்கன்னு தெரியுது. முதல்ல காஃபி கொண்டு வர சொல்றேன். குடிச்சிட்டு பேசலாம்” என்று மறுக்க முடியாத குரலில் சொன்னவர் காஃபியை வரவழைத்து பருகி முடித்ததும்,
“சொல்லு வெங்கடேசா… என்ன விஷயம்?” என்று சாத்தப்பன் இரு கைகளையும் மேஜை மேல் கோர்த்த வண்ணம் நிதானமாக கேட்க,
“என் பொண்ணுக்கும் உன் பையனுக்கும் ஒத்து வர மாதிரி எனக்கு தெரியல சாத்தப்பா” என்றவர்,
“உனக்கு தெரியாதது இல்ல. எனக்கு என் பொண்ணு தான் எல்லாம். அவ்ளோ ஆசையா வளத்தவ. அப்படி இருக்கும் போது அவளை உன் வீட்ல கட்டிக் கொடுக்க நான் நினைச்சதுக்கு முக்கிய காரணம் என் பொண்ணு என் கண்ணு முன்னாடியே சந்தோஷமா வாழ்வான்னு தான். ஆனா, இப்ப அவ சந்தோஷமா வாழ்வாங்கிற நம்பிக்கை.. எனக்கு சுத்தமா இல்ல. எனக்கு பிடிச்சுக்கல சாத்தப்பா. நிச்சயத்தை நிப்பாட்டிடலாம்” என்று பட்டென்று விஷயத்தை சுற்றி வளைக்காமல் சொல்லி விட்டார் வெங்கடேசன்.
அவருக்கு இன்னமும் மகள் தனக்காக தான் பிடிக்காத ஒருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறாள் என்று நினைக்கும் போது அவ்வளவு குற்ற உணர்வாக இருந்தது.
வெங்கடேசன் கூறியதை கேட்ட சாத்தப்பன் மெல்ல அதிர்ந்தாலும் தன் மகன் தான் எதோ சொதப்பி இருக்கிறான் என்று புரிந்து போனது.
அதுவும் சில நிமிடங்களுக்கு முன்பு அவன் தன் அழைப்பை ஏற்காமல் அலைபேசியை அனைத்து வைத்ததே அவன் எதோ சரியில்லை என்று புரிந்து விட,
“என்ன ஆச்சு? ஏன் திடீர்னு வேண்டாம்னு சொல்ற வெங்கடேசா…? இன்னும் நிச்சயத்திற்கு கொஞ்ச நாள் தான் இருக்கு. நிச்சயதார்த்தத்துக்கு பத்திரிக்கை எல்லாம் அடிச்சு வந்தாச்சு. இப்ப வந்து இப்படி சொல்ற?” தன் தடுமாற்றம் அதிர்ச்சி என எதையும் குரலில் காட்டிக் கொள்ளாமல் சாத்தப்பன் அவ்வளவு இயல்பாய் பேசினார்.
“என்ன ஆச்சா.. உனக்கு தெரியாதா சாத்த்தப்பா.. உன் பையன் பண்ணது?” என்று வெங்கடேசன் சட்டென்று தோன்றிய ஆவேசத்தோடு கேட்க, பத்பநாபன் தான் மகனின் கை பற்றி அவரை தணிக்க முயன்றார்.
‘ நம்ம பையன் தான் எதோ சொதப்பி இருக்கான் ‘ என்று உள்ளுக்குள் பல்லை கடித்து கொண்ட சாத்தப்பன்,
“இப்படி எதையும் தெளிவா சொல்லாம கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நான் என்ன வெங்கடேசா பண்ண முடியும்” என்றார் அப்போதும் தன்னிலையில் இருந்து இறங்கி வராமல்!
வெங்கடேசன் நடந்ததை கூறி முடித்ததும் சாத்தப்பனிற்கு பகீர் என்றாகி விட்டது.
அதுவும் குறிப்பாக மகன் ஊட்டி கிளம்பி சென்றிருக்கிறான் என்று தெரிய வந்ததும் உள்ளம் ஆட்டம் காண இப்போது வெளிப்படையாகவே அதிர்ந்து போனது அவரின் முகம்.
அதைக் கண்ட பத்பநாபன், “என்ன சாத்தப்பா… உனக்கே உன் மகன் இப்படி கிளம்பி போனது தெரியாது போலவே” என்று அவரின் முக பாவனையை வைத்தே கேட்டு விட,
அவர் சரியாக கணித்து கேட்டதும் தலையை உலுக்கி தன்னை நிதானித்துக் கொண்ட சாத்தப்பன், “அது.. அது வந்து மாமா…” என்று ஒரு நொடி தடுமாறியவர்,
“ரெண்டு நாள் முன்னாடி நான் தான் ஊட்டி எஸ்டேட்ல ஒரு வேலை இருந்ததுன்னு அவனை கிளம்பி போக சொன்னேன். இங்க ஆஃபிஸ்ல ஏகப் பட்ட வேலை.. அதனால நானே மறந்து போய்ட்டேன். இல்லேன்னா நானே உனக்கு கூப்பிட்டு சொல்லி இருக்க மாட்டேனா வெங்கடேசா” என்று சாத்தப்பன் அழகாய் பூசி மழுப்பி சமாளித்தார்.
மனதிற்குள் மகனை எண்ணி அவ்வளவு குமைச்சலும் ஆத்திரமும் பிறந்தது. அவன் ஏன் தன் அழைப்பை புறக்கணித்தான் என்று இப்போது புரிய மகனை நினைத்துப் பல்லைக் கடித்தார் சாத்தப்பன்.
அவர் வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்தாலும் அவரின் முகம் காட்டிய அதிர்வும், உடல் மொழியில் தெரிந்த இறுக்கமும் உண்மையை உணர்த்தியது அங்கிருந்த இருவருக்கும்.
ஆக, விதார்த் ஊட்டி கிளம்பி செல்வதை தந்தையிடம் கூட தெரிவிக்கவில்லை என்று புரிந்து போக வெங்கடேசனின் கோபம் இன்னுமே அதிகரித்தது.
சாத்தப்பனை கண்டு அவர் கோபமாக எதோ பேச வாய் திறக்க, பத்பநாபன் மகனின் கை பற்றி தடுத்து விட்டார்.
மகனிடம் கண்ணை காட்டி அமைதியாக இருக்கும் படி சொன்னவர், “சரி சாத்தப்பா… நீ தான் மகனை ஊட்டிக்கு அனுப்புனேன்னு சொல்ற. அப்ப ஒரு வார்த்தை எங்களுக்கு சொல்லி இருந்திருக்கணுமா இல்லையா? இங்க அதிக வேலை. அதனால மறந்துட்டேன்னு சொல்ற. அப்ப அங்க நகைக் கடைல எங்களுக்கும் எங்க பேத்திக்கும் வேலை இல்லையா?” நறுக்கென்று கேட்டு விட்டார் பத்பநாபன்!
இவர்களிடம் எல்லாம் பேச்சு வாங்கும் நிலையில் தன்னை நிற்க வைத்து விட்டானே மகன் என்று விதார்த் மீது அவ்வளவு ஆத்திரம் சாத்தப்பனிற்கு.
“தப்பு தான் மாமா. மன்னிச்சுக்கங்க” என்று இறங்கி வந்த சாத்தப்பன், “என் மகனும் மீனு கிட்ட பேசினது சரி கிடையாது. இன்னும் நாலு நாள்ல வந்திடுவான். நான் அவன் கிட்ட பேசி கண்டிச்சு வைக்கிறேன்” என்றவர்,
“விதார்த் இப்படி பேசிறதை எல்லாம் நீங்க பெருசா நினைக்க வேண்டாம் மாமா. அவன் ஆசை பட்டு கேட்ட பொண்ணு தான் மீனு. அதனால அவளை நல்லாவே வச்சு பாத்துக்குவான். அதுக்கு நான் உங்களுக்கு உத்திரவாதம் தரேன். இந்த சின்ன விஷயத்துக்காக கல்யாணம் வேண்டாம்ற வரைக்கும் ஏன் யோசிச்சு இவ்வளோ தூரம் பேச வந்திருக்கீங்க?” என்றார் இதற்கெல்லாம் கல்யாணத்தை நிறுத்துவீர்களா என்று சொல்லாமல் சொல்லும் வகையில்!!!
அவரை அழுத்தமாக பார்த்த வெங்கடேசன் “அதெல்லாம் இருக்கட்டும் சாத்தப்பா.. எனக்கொரு சந்தேகம். கேட்கலாமா?” என்றார் அவரை துளைக்கும் பார்வை பார்த்தபடி.
“கேளு வெங்கடேசா…”
“விதார்த்தை நீ தான் வேலையா ஊட்டி அனுப்சேன்னு சொல்ற சரி. நாலு நாள்ல வந்திடுவான்னு சொல்ற. அதுக்கும் சரி. ஆனா, என் பொண்ணு கிட்ட தன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்க போறதா தான் சொல்லிட்டு போயிருக்கான். கூடவே வர ஒரு வாரம் ஆகும்னு சொல்லி இருக்கான்” என்றவர்,
“நீ சொல்றது ஒரு மாதிரி இருக்கு. உன் பையன் சொல்றது ஒரு மாதிரி இருக்கு. எதை நாங்க நம்பனும்?” என்று அழுத்தமாய் கேட்க, சாத்தப்பனிற்கு வியர்க்க ஆரம்பித்தது.
“நாலு நாள்ல வேலை முடிஞ்சிடும் வெங்கடேசா. உறுதியா வந்துடுவான். அவன் வந்ததும் பேசிக்கலாமே” என்று கெஞ்சுவது போல் கேட்க,
இருக்கையில் இருந்து எழுந்த கொண்ட வெங்கடேசன், “வரட்டும். எப்படியும் வந்து தானே ஆகணும். பேசிக்கலாம். பேசி ஒரு முடிவுக்கு வந்திடலாம். உன் பையன் வந்ததும் எங்களுக்கு சொல்லு. அப்பையும் இங்க அதிக வேலைன்னு மறந்துடாத” என்று சொல்லி விட்டு தந்தையுடன் கிளம்பி விட்டார் வெங்கடேசன்.
ஆனால், விதார்த் சென்னைக்கு திரும்பியதும் சூழ்நிலை அனைத்தும் சுனாமியாக மாறி இருந்தது!!! அவனைக் கண்ட தென்றல் மீனாவும் புயலாக மாறி இருந்தாள்!!!