தங்களின் உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொண்டு கடினமான முகத்துடன் பத்பநாபனும் அவளும் காரை நெருங்கியதும்,
“வெங்கடேசனுக்கு போனை போடு மீனு. இல்லேன்னா சித்தப்பனுங்களை வர சொல்லு. இவனை சும்மா விடக் கூடாது” என்று பத்பநாபன் இன்னும் கோபம் அடங்காமல் பேத்தியிடம் சொல்ல,
“வேண்டாம் தாத்தா. விட்டர்லாம்” என்றவளின் பதிலில் பத்பநாபன் தான் அதிருப்தி அடைந்தார்.
“விட்டர்லாமா… இவனை எப்படி மீனு விட சொல்ற… நீ அடிச்ச அடிலாம் பத்தாது அந்த பொறுக்கி பயலுக்கு. இன்னும் நல்லா வாங்கணும் அவன். எவ்வளவு தைரியம்.. நம்ம எல்லாரையும் ஏமாத்த பாத்து இருக்கானுங்க அப்பனும் மகனும்” என்றவர்,
“எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்களா தான் இருக்கணும். அன்னைக்கு சாத்தப்பன் பம்முன அப்பவே சந்தேகம் தான் எனக்கு. ஆனா, இந்த அளவு கீழ்த்தரமா இருப்பானுங்கன்னு நினைக்கவே இல்ல” என்றார் கோபம் அடங்காமல்.
“வேணாம் தாத்தா. இவன் கிட்ட வந்து பிரச்சனை பண்ணி சண்டை போடுறதுக்கு கூட இவன்லாம் ஒர்த் இல்ல” என்றாள் தென்றல் மீனா.
அந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு வரும் போது இருந்த கலகலப்பான மனநிலை இப்போது தலை கீழாய் மாறி இருந்தது பத்பநாபனிற்கும் தென்றல் மீனாவிற்கும்.
அவள் குரலில் அளவு கடந்த இறுக்கம் இருந்தது. அந்த நொடி நேரத் தாக்கம் இன்னும் அவளை விட்டு நீங்கி இருக்கவில்லை என்று பத்பநாபனுக்கும் புரிந்தது.
பேத்தியின் இறுக்கத்தில் ஏனடா அவனைக் கண்டோம் என்று ஆகி விட்டது அவருக்கு.
தென்றல் மீனா ரெஸ்ட் ரூம் சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றதும் சாதாரணமாக தான் அவரும் அந்த ஹோட்டலை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அப்போது தான் பார்வை அங்கே இருந்த ரிசப்ஷன் பக்கம் நகர்ந்தது. முதலில் யதார்த்தமாக பார்த்தவர் பின்பு தான் நன்றாக கவனித்தார் அங்கே ரிசப்ஷனிஷ்டிடம் எதோ பேசிக் கொண்டிருந்த விதார்த்தை!
“விதார்த் மாதிரில இருக்கு. வர ரெண்டு நாள் ஆகும்னு சொன்னான் இவன் அப்பங்காரன். இவன் என்னடான்னா இங்க நிக்கிறான்” என்றபடி அவனை கவனிக்க, கையில்லா டி ஷர்ட்டும், ட்ராக் பேண்டும் அணிந்த படி எதையோ கேட்டுக் கொண்டிருந்தான் அந்த ரிஷப்ஷனிஸ்ட்டிடம்.
அவன் கேட்டு முடித்து அங்கிருந்து நகர்ந்ததும் தானும் அவனை பின் தொடர்ந்து அவன் இருக்கும் தளத்திற்கு வந்து விட்டார். அவன் கதவை திறந்து உள்ளே செல்லும் முன்னர் “விதார்த்…” என்று பின்னால் இருந்து இவர் அழைக்க,
யார் என்று ஒரு நொடி திரும்பி பார்த்தவன் பத்பநாபனை அங்கே நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. அப்பட்டமாய் அவன் முகத்தில் அதிர்ச்சி பரவ,
“நீ வர இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சாத்தப்பன் சொன்னான். நீ இங்க…” என்று அவர் கேட்டுக் கொண்டே இருக்க அடுத்து நிகழ்ந்ததில் அப்படியே உறைந்து போய் நின்றார் பத்பநாபன்.
“ரூம்ல போன் சர்வீஸ் சரியா ஒர்க் ஆகலைனு ரிசப்ஷனிஷ்ட் கிட்ட சொல்லிட்டு வரதுக்கு இவளோ நேரமா பேபி…” என்றபடி அவனை பின்னிருந்து ஒரு பெண் வந்து அணைத்துக் கொள்ள, விதார்த்திற்கு திக்கென்று ஆகிப் போனது.
பத்பநாபனோ நடந்ததில் அதிர்ச்சி நீங்காமல் திகைப்புடன் நின்றிருக்க, தன் செய்கைக்கு விதார்த்திடம் இருந்து எந்த ஒரு பிரதிபலனும் இல்லை என்றதும் அந்தப் பெண் அவனை தன் புறம் திருப்பி,
“என்ன ஆச்சு? ஒரு ரியாக்ஷனும் காணோம். வா பேபி. உள்ள போலாம். இங்க நம்ம பிரைவசியா கிஸ் கூட பண்ண முடியாது. கேமரா இருக்கு” என்று அந்தத் தளத்தை திரும்பிப் பார்த்து சொன்னபோது தான் அங்கே நின்றிருந்த பத்பநாபனை கண்டாள்.
அவரோ இவளை அதிர்ச்சியும் அருவருப்புமாய் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது தான் தான் இருக்கும் கோலம் புரிந்தது அப்பெண்ணிற்கு. கையில்லா மேல் அங்கியும், ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருந்தாள்.
“யார் இது விது? உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” என்றபடி உள்ளே அவள் நகர்ந்து டக்கென்று கைக்கு கிடைத்த பெட் ஷீட்டை எடுத்து தன்னை போர்த்திக் கொண்டாள்.
“எஸ் ஹனி! வெயிட்… நான் பேசி அனுப்பிட்டு வரேன். யூ ஸ்டே இன்சைட்” என்று அவசரமும் அந்தரமுமாக அவளிடம் சொன்னவன், கதவை பாதி சாற்றி விட்டு பத்பநாபனை நெருங்கி,
“நீங்க எங்க இங்க?” என்று அதிகாரமான குரலில் கேட்க, அவ்வளவு தான் அவன் டி ஷர்ட்டை கொத்தாக பற்றி விட்டார் பத்பநாபன்.
“பொறுக்கி ராஸ்கல்…..” என்று அவர் பற்றிய வேகத்தில் கர்ஜிக்க, “கையை எடுங்க…” என்று எளிமையாக அவரின் கைகளை தன்னிடம் இருந்து பிரித்து விட்டான் அவன்.
இவனையா தன் வீட்டின் ஒற்றை பெண் பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க எண்ணினோம்.. என்று எண்ண எண்ண அவ்வளவு ஆத்திரம் பிறந்தது அவருக்கு. அந்த ஆத்திரத்தில் அவனிடம் கத்திக் கொண்டிருக்கும் போது தான் தென்றல் மீனாவிடம் இருந்து தொடர் அழைப்புகள் வந்தது.
அவனோடு போராடியபடி அழைப்பை ஏற்று “மீனு….” என்று அவர் சொன்னதும் விதார்த்திற்கு தான் பெரும் அதிர்ச்சி! மீனுவும் இங்கே தான் இருக்கிறாளா என்று அதிர்ச்சி அடைந்தவன் அவரிடம் இருந்து அலைபேசியை பறிக்க முயல, பத்பநாபன் பேத்திக்கு தான் இருக்கும் தளத்தின் தகவலை தெரிவித்து இருந்தார்.
அவ்வளவு தான் விதார்த்திற்கு ஆத்திரம் தலைக்கேற “யாருயா உன்னை மீனுக்கிட்ட சொல்ல சொன்னது….??” என்று அவரின் சட்டையை பற்றிக் கொண்டு ஆவேசமாக கேட்டுக் கொண்டிருந்தான்.
மீனுவிற்கு தன் திருகுதாளங்கள் தெரியப் போவதில் அவனுக்கு பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்ள, அதை நிகழ்த்திய பத்பநாபனின் மேல் ஆத்திரம் வந்தது.
சட்டையை பிடித்து அவரை உலுக்கிக் கொண்டிருக்கும் போதே மீனாவும் வந்து விட்டாள். அதன் பிறகு நடந்தவை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவர், இறுதியாக அவன் பல்லை கையில் பிடித்ததை எண்ணி,
“பல்லு போனதெல்லாம் பத்தாது அவனுக்கு. நல்லா போட்டிருக்கணும் இன்னும்” என்று சொன்னவர், இறுக்கமான முகத்துடன் இறுகிப் போய் நிற்கும் பேத்தியை கவலையோடு பார்த்து “மீனு….” என்க,
“வீட்ல எப்படி தாத்தா இதை சொல்லப் போறோம்… அதுவும் அப்பா கிட்ட…” என்று அவள் சொல்லும் போதே குரல் கரகரத்து கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு.
தந்தை இதனை எப்படி தாங்கிக் கொள்வார் என்று நினைக்க நினைக்க இவளுக்கு சொல்லொண்ணா துயரம் நெஞ்சை கவ்வியது.
ஏற்கனவே தனக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிந்ததும் அவ்வளவு குற்ற உணர்வில் தவித்து போய் இருந்தவர், இப்போது விதார்த்தின் மற்றொரு முகத்தை பற்றி தெரிய வந்தால் எப்படி தாங்கிக் கொள்வார் என்று அத்தனை வேதனை அவளுக்கு.
பத்பநாபனுக்கும் மகனை எண்ணி வருத்தம் மேலிட்டது. “துடிச்சு போய்டுவான் மீனு. இப்படி பட்டவனை தான் நாம உசூருக்கு உசுரா வளத்த மகளுக்கு கட்டிக் கொடுக்க இருந்தோம்னு நினைச்சு நினைச்சே துடிச்சு போவான்” என்ற போதே அவருக்கும் குரல் அடைத்துக் கொண்டது.
“அப்பா கிட்ட சொல்லாம இருக்க முடியாதா தாத்தா?” என்று துக்கமும் ஏக்கமுமாய் அவள் கேட்க, கனிவாய் அவளைப் பார்த்தார் பத்பநாபன்.
தந்தைக்காக என அவள் எவ்வளவு யோசிக்கிறாள்? வெங்கடேசன் மீதான பேத்தியின் பாசம் அவர் அறியாதது அல்ல! இருப்பினும் மகனை, மகனின் மனதை எண்ணி பேத்தி பேசியதை கேட்க கேட்க அவருக்கும் பாரம் குடியேறிக் கொண்டது.
“சொல்லாம இருக்க முடியுமா மீனு?” என்று பத்பநாபன் கேட்டதில் நியாயம் இருக்கவே மௌனமானாள் தென்றல் மீனா.
நிச்சயம் தந்தைக்கு தெரியப் படுத்தாமல் இருக்க முடியாது! அவரின் உயிர் நண்பனான சாத்தப்பனையும் அவர் வளர்த்த அருமை பெருமையான மகன் குறித்தும் அவரும் தெரிந்து கொள்ள வேண்டுமே!
மனம் இரும்புக் குண்டை சுமப்பது போல் கனத்தது. தந்தை மட்டுமல்ல.. மொத்த குடும்பமும் விஷயம் அறிந்து துயரம் கொள்ளப் போவது உறுதி…
அனைத்தையும் நினைக்க நினைக்க தன் மீதே எல்லையற்ற கோபம் கிளம்பியது அவளுக்கு.
அன்று அனைவரும் உனக்கு விருப்பமா என்று கேட்டபோதே விருப்பம் இல்லை என்று கண்ணாடித் தெளிவாக சொல்லி இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சனை வந்திருக்காதே என்று தோன்றியது.
வேண்டாம் என்று சொல்லி இருந்தால் தந்தை வருத்தம் கொண்டிருப்பார் தான். ஆனால், இன்று தந்தைக்கு இவ்விஷயம் தெரியப்படுத்தப்படும் போது இன்னும் வருத்தம் கொள்வாரே!
தந்தையை நினைக்க நினைக்க தானாக கண்ணீர் சேர்ந்தது கண்களில். பேத்தியின் நிலை கண்டு பத்பநாபனிற்கு தான் மனம் பொறுக்கவில்லை.
“வா மீனு கிளம்பலாம்” என்று சொல்ல, கண்ணை துடைத்துக் கொண்டு காரில் ஏறி அமர்ந்து ஸ்டியரிங்கை பற்றிய போது தான் கையின் எரிச்சல் அவளுக்கு நன்றாக தெரிந்தது.
“ஸ்….” என்றபடி கையை விரித்து பார்க்க, முற்றிலும் இரத்தப் சிவப்பாக மாறி இருந்தது உள்ளங்கை முழுவதும். அதைக் கண்ட பத்பநாபன் பதறி “என்ன மீனும்மா இது? இப்படி சிவந்து போச்சு” என்றவர்,
“நீ முதல்ல கைய தண்ணில காட்டு. ரொம்ப சிவந்து போய் இருக்கு” என்றவர் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட, காரை விட்டு இறங்கி வலது உள்ளங்கை மற்றும் விரல்களில் தண்ணீரை ஊற்றினாள்.
சற்றே கையின் எரிச்சல் மட்டுப் பட்டதை போல் இருக்க, தண்ணீரை பருகிக் கொண்டு மனதின் கொதிப்பை அடக்க முயன்றாள்.
பேத்தியை கவலையுடன் பார்த்த பத்பநாபன், “உன்னால எப்படி ஓட்ட முடியும்? நீ வா. நான் காரை எடுக்குறேன்” என்றார் அவளிடம்.
“இல்ல தாத்தா. ட்ராஃபிக் ஜாஸ்தியா இருக்கும். நீங்க எப்படி மேனேஜ் பண்ணுவீங்க? நானே ட்ரைவ் பண்ணிடுவேன்” என்றவளை முறைத்தவர்,
“என்னை என்னன்னு நினைச்ச நீ? நான்லாம் அந்த காலத்துல வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டு அம்பாசிடர எடுத்தேன்னா சும்மா சர்ருன்னு பறப்பேன் தெரியுமா?.. இவ்வளவு ஏன்… நான் அம்பாசிடர் ஓட்டுன அழகுல மயங்கி தான் அழகம்ம என்னை கல்யாணம் பண்ணிக்கவே ஒத்துக்கிட்டா… என்னை என்பது வயசு கிழவன்னு தப்புக் கணக்க போடாத மீனும்மா. இப்ப நான் ஓட்டுற ஓட்டுல உன்னோட டாட்டா நெக்ஸான் பறக்கும் பாக்குறியா….” என்று ஃபுல் எனர்ஜியுடன் பத்பநாபன் பேசப்பேச, அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் தென்றல் மீனாவின் முகத்தில் புன்னகை பூக்கள் அரும்பியது.
“நீங்க இருக்கீங்களே தாத்தா…. உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் டக்குன்னு மன நிலமையை மாத்த முடியும்” என்றவள்,
“நம்ம வீட்டு ட்ரைவர் யாரையாவது வர சொல்லலாம் தாத்தா” என்றாள் அவரிடம்.
“நுங்கம்பாக்கம் வரைக்கும் ட்ரைவர் வந்து நம்ம வீட்டுக்கு போய்… சுத்தமா ரெண்டு மணி நேரம் மேல ஆயிடும் மீனு. வேணவே வேணாம்” என்று மறுத்தவர்,
“நான் ஓட்டுறேன்னு சொல்றேன். கேக்குறியா? அப்படி என்ன எனக்கு வயசாகி போச்சு. கொஞ்ச மாசமா தான நான் காரை ஓட்டுறது இல்ல. சொல்லப் போனா ஓட்ட விடுறது இல்ல நீங்க எல்லாரும். நீ தள்ளு. நானே எடுக்கிறேன்” என்றவர் பிடிவாதமாக அவளிடம் சொல்லி விட்டு அவரே வீடு வரைக்கும் காரை ஓட்டிக் கொண்டு வந்து விட்டார்.
இல்லம் வந்ததுமே இருவரையும் முதலில் கவனித்தது பார்வதி தான்.
“வாங்க மாமா..” என்று பத்பநாபனை பார்த்து சொன்னவர், “என்ன மீனு நீயும் வீடு வந்துட்ட. கடைக்கு போகல?” என்று கேட்க,
“இல்ல சித்தி” என்று மட்டும் சொன்னவள், சோஃபாவில் அயர்ந்து போய் அமர்ந்து விட்டாள்.
“காஃபி சித்தி… தல வலிக்குது” என்று மட்டும் சொன்னவள் சோஃபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்ள, பத்பநாபனை பார்த்தவர் இருவரின் முகமும் சரியில்லை என்று புரிந்து கொண்டு அடுக்களை பக்கம் நகர்ந்து விட்டார்.
விசாலாட்சியிடம் மீனுவும் பத்பநாபனும் வந்து விட்டதை சொன்னவர் “ரெண்டு பேரோட முகமே சரியில்லை. என்னன்னு தெரியல” என்றும் சொல்ல, விஷயம் அனைவருக்கும் சொல்லப் பட்டு அழகம்மை முதல் குழந்தை அர்ஜுன் வரை அனைவரும் கூடி விட்டனர் ஹாலில்.
“என்னங்க ஆச்சு?” என்று அழகம்மை கணவனிடம் கேட்க, கண்கள் பேத்தியிடம் தான் இருந்தது.
பாறையை விட மோசமாக இறுக்கம் பெற்றிருந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் தென்றல் மீனாவை காணவே அனைவருக்கும் அச்சம் நெஞ்சை அடைத்தது.
கையில் தண்ணீர் ஊற்றி இருந்தாலும் கையின் எரிச்சல் அடங்கி இருக்கவில்லை. திகுதிகுவென எரிந்த வலது கையை மூடியும் பிரித்தும் பார்க்க, அதை கவனித்த வசுந்தரா “என்ன மீனு கைல?” என்று பதறி விட, அனைவருக்குமே அந்தப் பதட்டம் ஒட்டிக் கொண்டது.
வசுந்தரா அவள் தோள் தொட்டு அருகே அமர்ந்ததும் தன்னைப் போல தென்றல் மீனாவின் உடலும் உள்ளமும் இளகியது.
லேசாக கண்கள் கலங்க “ஒரு விஷயம். எல்லார் கிட்டையும் சொல்லணும். அப்பா, அண்ணா, சித்தப்பா எல்லாரும் வந்ததும் பேசலாம் வசும்மா” என்று மட்டும் தலை அசைக்க, அதில் விஷயம் பெரிது என்று புரிந்து வசுந்தரா அமைதி ஆகி விட்டார்.
பத்பநாபன் வெங்கடேசனிற்கு அழைக்க, அழைப்பை ஏற்றதும் “சொல்லுங்கப்பா. அந்த டீலரை பாத்து பேசியாச்சா? எல்லாம் ஓகேவா? மீனு என்ன சொன்னா?” என்றவர் விசாரிக்க,
“மீனு கிட்ட போனை கொடுங்க. என் கிட்ட எதுவும் மீனு சொல்லலையே வீட்டுக்கு போறதா? என்னப்பா ஆச்சு?”
“மீனு இங்க தான் இருக்கா வெங்கடேசா. நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம். கூடவே, கனி, குணா, முகுந்தன், நிகேதன் எல்லாரையும் கிளம்பி வர சொல்லு” என்றவரிடம்
“அப்பா…. உங்களுக்கு என்ன ஆச்சு?” என்றவர், “மீனு…மீனுக்கு எதுவுமா?” என்று பதற,
“டேய்…. என்னை விசாரிக்காம சீக்கிரம் எல்லாரையும் கூட்டிட்டு வா. அங்க கடைல முருகேசனை எல்லாத்தையும் பாத்துக்க சொல்லு. விதார்த் விஷயமா பேசணும்” என்று மட்டும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார் பத்பநாபன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் வந்து விட, தந்தையின் ஓய்ந்த தோற்றமும் மகளின் இறுகிய முகமும் கலங்கிய கண்களும் என்னவோ என்று பதட்டம் கொள்ள வைத்தது அவர்களை.
வெங்கடேசன் மகளின் அருகே பதறி வந்து அமர்ந்து “என்ன ஆச்சு மீனு? விதார்த் விஷயம்னு அப்பா சொன்னார்… என்னமா?” என்று விசாரிக்க, அவளால் ஒரு சொல்லைக் கூட உதிர்க்க முடியவில்லை.
கேள்வியாக தந்தையின் புறம் திரும்பிப் பார்க்க அனைவரையும் பெரு மூச்சுடன் கண்ட பத்பநாபன் கசந்த குரலில் நிகழ்ந்ததை கூறி முடித்தார்!
அவர் சொல்லி முடித்ததும் சிறு குண்டூசி விழுந்தாலும் பெரும் ஓசையை கிளப்பும் அளவிற்கு அவ்வளவு அமைதியாக இருந்தது மொத்த வீடும்!