“நல்லா இருக்கேன் தம்பி.. உங்களை தான் ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளை காணோம்” என்றவரின் குரலில் பாசத்துடன் கலந்த வருத்தம்!
“டைம் கிடைக்கலண்ணா” என்று புன்னகையுடன் சொன்னவன், “மேடி வந்தாச்சா?” என்றான் அவனின் கார் இருக்கிறதா என்று அந்த பெரிய வராண்டாவை ஆராய்ந்தபடி.
“தம்பி இன்னும் வரலேங்க. அம்மா காலைல வந்துட்டாங்க. ஐயாவும் பேக்ட்ரிக்கு போகல இன்னைக்கு. வீட்டில தான் இருக்கார்” என்று தகவல் கூறினார் கணேசன்.
“சரிண்ணா..” என்றவன் உள்ளே வந்ததும் அந்தப் விஸ்தாரமான போர்ட்டிக்கோவில் பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்.
ஹாலில் கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து எதோ கோப்புகளை அலசிக் கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தி சொந்தமாக உலோகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றினை நடத்தி வருகிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை சற்றே ஓய்விற்கு கெஞ்ச முழு பொறுப்பினை மகனிடம் ஒப்படைத்து விட்டவர் அவ்வப்போது முக்கியமான வேலைகளை மட்டும் பார்த்துக் கொள்வார்.
அதுவும் பெரும்பாலும் வீட்டில் இருந்து தான் பார்ப்பார். ஃபேக்ட்டரி வரை அவரை வர விட அனுமதிக்க மாட்டான் மாதவன்.
கோப்புகளில் கவனத்தை வைத்திருந்தவர் முகத்தில் அருணை கண்டதும் அத்தனை மகிழ்ச்சி!
மலர்ந்த புன்னகையுடன் “அருண்…. வாப்பா” என்றவரின் குரலில் பாசத்தை தவிர்த்து வேறொன்றும் இல்லை.
“எப்படிப்பா இருக்கீங்க?” என்றபடி வந்தவன், “அனும்மா எங்க?” என்றான் பார்வையை கீழ் தளம் எங்கும் வீசியபடி.
“நல்லா இருக்கேன் அருண். அனுக்கு ஜெட் லாக் இருந்தது. ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா” என்றவர், “உட்கார் முதல்ல.. காஃபி கொண்டு வர சொல்றேன்” என்றவர் பணியாளிடம் காஃபியை கொண்டு வர சொன்னார்.
“மேடி இன்னும் வரலையா ப்பா? மதியம் கால் பண்ணேன். அட்டன் பண்ணல.” என்று அவரிடம் கேட்க, “ஃபேக்ட்டரில செகண்ட் பிளாண்ட்லயும் ஒர்க் ஸ்டார்ட் பண்ணியாச்சு அருண். அதனால நிக்க கூட நேரம் இல்லாம சுத்திட்டு இருக்கான். அனுஜாவை ஏர்போர்ட்ல இருந்து நான் தான் போய் பிக் அப் பண்ணிட்டு வந்தேன். மத்தியம் லஞ்சுக்கு கூட வீட்டுக்கு வரல. ஆஃபிஸ்க்கே கொடுத்து விட சொல்லிட்டான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,
“ஆமா… அனுப்பின சாப்பாடை கூட சாப்பிடாம மெட்டலும் கையுமா சுத்திட்டு இருப்பான் அங்க” என்றபடி வந்தார் அனுஜா. அவர் சொன்ன விதத்தில் சிரித்தனர் இருவரும்.
“இப்ப ஓகேவா அனு?” என்று கிருஷ்ணமூர்த்தி மனைவியை அக்கறையுடன் விசாரிக்க,
“இப்ப நல்லா இருக்குங்க. கொஞ்ச நேரம் முன்னாடி தான் எழுந்தேன். அருண் வாய்ஸ் கேட்டதும் வந்துட்டேன்” என்றவர், அருணின் அருகில் அமர்ந்து கொள்ள,
“எப்படி அனும்மா இருக்கீங்க?” என்றான் அருண்மொழி.
“நல்லா இருக்கேன் அருண். ஒரு வழியா கான்பரன்ஸ் முடிஞ்சது” என்றவர்,
“இன்னும் இல்ல அனும்மா. உங்களை பாத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்” என்றவன்,
“நீங்க வரீங்களா இன்னைக்கு ஹாஸ்பிட்டலுக்கு”
“வரணும் தான். ஏகப் பட்ட போன் கால்ஸ் வந்திருந்தது நான் ஹான்டில் பண்ற கேசஸ் கிட்ட இருந்து. ஆனா இன்னைக்கு வரல அருண். கொஞ்சம் டயர்டா இருக்கு. நாளைக்கு தான் வரலாம்னு இருக்கேன்” என்றார்.
“ஓகே அனும்மா.. நான் இப்ப ஹாஸ்பிடல் போய்ட்டு வீட்டுக்கு போறேன்” என்றபடி எழுந்து கொள்ள,
“முதல்ல உட்கார். உன்கிட்ட இன்னைக்கு நிறைய பேசணும்” என்றவர் அவனின் கையை பற்றி அமர வைத்தார்.
அவர் என்ன பேசப் போகிறார் என்று அவனுக்கும் தெரியுமே… தெரிந்ததால் தான் விரைவில் கிளம்பலாம் என்று எண்ணி எழுந்து கொண்டான். ஆனால், அனுஜா விடவில்லை.
பேசியே தான் ஆக வேண்டும் என்று புரிந்து விட, சிரிப்புடன் அமர்ந்தவன் “சரி சொல்லுங்க” என்றான் தாடையில் கை ஊன்றி.
“சொல்றேன்… சொல்றேன்..” என்றவர் அதற்கு முன்னால் தான் வரும் போது எடுத்து வந்திருந்த பார்சலை அவனிடம் நீட்டினார்.
உள்ளே அவனுக்கான புது கைக் கடிகாரம் இருந்தது. கூடவே சில ஃபார்மல் உடைகளும், ஜெர்கினும் இருக்க “வாட்ச் சூப்பர் அனுமா. ட்ரெஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. நல்ல கலர் செலக்ஷன்” என்றவன் ஜெர்கினை கண்டு “சென்னை வெயிலுக்கு ஜெர்கின் தேவையா அனும்மா” என்று சிரிக்க,
“சரி… பர்ச்சேஸ் பண்ணது எல்லாம் கொடுத்தாச்சு. வேற…” என்று சிரிப்போடு கேட்க,
“ஏன்… வேற சொல்ல இருந்தா தான் இங்க இருப்பியா? இல்லேன்னா கிளம்பிடுவியா?” என்றவரிடம் கோபம் எட்டிப் பார்க்க, “சொல்லுங்க அனும்மா. இருக்கேன்” என்றான் அருண் மெல்லிய புன்னகையுடன்.
“உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கேன் அருண்” என்றார் அனுஜா. ஒரு நொடி மௌனமாக இருந்தவன் அவரின் முகத்தை நிமிர்ந்து பார்க்க,
“என்னடா முழிக்குற… பொண்ணு பாக்கலாம் தானே? வயசாகுது உனக்கும்..” என்று கேட்க மௌனம் மட்டுமே அவன் பதிலாக இருந்தாலும் கண்களில் அளவில்லா பாசம் கொட்டியது.
“டேய்… நீ அமைதியா இருக்கிறதை பார்த்தா நீயே பாத்து வச்சு இருக்கியா?” என்று கேட்க, சட்டென்று சிரிப்பு வந்தது அவனுக்கு.
அவன் பதில் கூறும் முன்னர் அனுஜா முந்திக் கொண்டார். “க்கும்… இவன்….. இவனா லவ் பண்ணி இருப்பான்? லவ் பண்ணி இருந்தா இந்நேரம் அதே பொண்ணை கட்டி வச்சு இருப்பேனே.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. காலேஜ்ல எப்பப்பாரு படிப்பு, புக்ஸ், லைப்ரரி, இப்படி சுத்திட்டு இருப்பான். லவ் பண்ணவெல்லாம் அவனுக்கு நேரம் உறுதியா இருந்திருக்காது. டாக்டரானதுக்கு பின்னாடி ஸ்டெத், ஹாஸ்பிட்டல், பேஷண்ட், இப்படியே போகுது நேரம். இவனும் யாரையும் லவ் பண்ண மாட்டான். எந்த பொண்ணும் இவனையும் லவ் பண்ணி இருக்காது” என்று ஏக போக அலுப்புடன் கூறினார் அனுஜா.
“ஆமாமா…. இந்த வெள்ளை கோட் சாமியார் அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டான்” என்று கேட்ட மாதவன் குரலில் மூவரும் திரும்பிப் பார்க்க, வீட்டிற்குள் வந்தவன் அருணின் தோளில் கை போட்டு “உன் மூஞ்சி அதுக்கெல்லாம் லாய்க்கே இல்லன்னு தான் தெரியுமே” என்று கிண்டல் செய்ய,
“நான் செட் ஆக மாட்டேன் தான். நீ மட்டும் செட்டாவியா? நீயும் அதே லிஸ்ட் தான்டா. மாதவன் பேர் வச்சதுக்காகவாவது நீ எதாவது பண்ணி இருக்கணும். நீ என்னடான்னா சிங்கிளாவே இருக்க” என்று நண்பனை வாரியவன்,
“அனும்மாக்கு பயந்து தானே நீ எந்த கலாட்டாவும் பண்ணல” என்று கிண்டலாக கேட்க,
“வொய்… வொய்… வொய்….. ஆனானப்பட்ட அனுஜாவே மிஸ்டர் கிச்சினமூர்த்தியை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நான் லவ் பண்ணா உன்னோட அனும்மா தடை சொல்ல போறாங்களா என்ன? நானெல்லாம் நினைச்சு இருந்தா எங்கேயோ போய் இருப்பேன் லவ்ல. ஆனா பாரு…காலமும் காதலும் எனக்கு சிக்கல” என்றான் மாதவன் காலரை தூக்கி விடாத குறையாக.
“ஆமா… புருடா விடாதடா… காலமும் காதலும் சிக்கலையாம்.. எந்த பொண்ணும் உன் சிடுசிடுப்பு மூஞ்சி பக்கம் திரும்பி கூட இருக்க மாட்டா. அப்படி எதாவது பொண்ணு சிக்கி இருந்தா தான் ஆச்சர்யம்..” என்ற அனுஜா, “போய் முதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு வா” என்று அதட்ட,
நண்பனின் தோளில் இருந்து தன் கையை எடுத்தபடி “இதோ ஆரம்பிச்சாச்சு..” என்று சலித்த மாதவன் நமட்டுச் சிரிப்போடு அமர்ந்திருக்கும் நண்பனை கண்டு,
“நீ ஏன்டா அமைதியா இருக்க? உன் பங்குக்கு நீ எதாவது சொல்லு…” என்று முறைக்க,
அருணோ, “ஃப்ரெஷ் அப் ஆகிட்டு பிரஷ் பண்ணிட்டு வா. காஃபி குடிக்கலாம்” என்க,
“ச்சீ… ஈவ்னிங் காஃபிக்கு கூடவாடா இப்படி.. எந்நேரமும் பிரஷும் கையுமா அலைய விடுவாங்க போல அம்மாவும் புள்ளையும்” என்று அனுஜாவையும் அவனையும் மாற்றி மாற்றி பார்த்து சொன்னவன்,
“போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன். இருங்க” என்றவன் அடுத்த பதினைந்தாவது நிமிடம் கீழே வந்திருந்தான்.
“இதோ வந்துட்டான்” என்ற கிருஷ்ணமூர்த்தி அருணிடம் “அப்ப நீ பொண்ணு பாக்கல தான. நாங்க பாக்குறோம். சொல்லு அருண். எப்படிப் பட்ட பொண்ணு வேணும்” என்று கேட்க, வார்த்தைகள் வராமல் அவர்களின் அன்பில் நெகிழ்ந்து மௌனமாகி அமர்ந்திருந்தான் அருண்மொழி.
“என் வாழ்க்கைல இவளோ அக்கறை எடுத்து அன்பு காட்ட நான் என்ன பண்ணேண்ணு எனக்கு தெரியல அனும்மா” என்று மெகிழ்ந்தவனை கண்ட மாதவன்,
“சும்மா சோக கீதம் வாசிக்க கூடாது. ஒழுங்கா பதில் சொல்லு” என்று அதட்டி தான் அனுஜாவிற்கு மகன் என்று நிரூபித்தான்.
ஒரு பெரு மூச்சை விட்டபடி மூவரையும் பார்த்தவன் “எனக்கு கல்யாணம்… ஒரு தனி வாழ்க்கை இப்படி எல்லாம் யோசிக்கல நான். அதை பத்தி சிந்திக்கிறதுக்கான சந்தர்ப்பம் கூட அமையல. அன்னைக்கு மேடி கேட்டதும் தான் இப்படியும் ஒன்னு இருக்குல்லன்னு தோணுச்சு” என்றவனின் பேச்சில் அனுஜா கலங்கிப் போய் அவனைப் பார்க்க,
“சீரியஸ்லி அனும்மா… எனக்கே என்ன பதில் சொல்றதுன்னு தெரியல” என்றான் அருண் மெய்யாகவே என்ன சொல்வதென்று தெரியாத பாவனையில்.
“முதல்ல மேடிக்கு பாருங்க அனும்மா. எனக்கு என்ன அவசரம்?” என்று வேறு கேட்க, அவனை முறைத்த மாதவன்,
“ஃபர்ஸ்ட் நீ ஜெயில்ல போய் இருந்து எக்ஸ்பிரியன்ஸ் பண்ணிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. அப்புறம் நானும் அரெஸ்ட் ஆகிக்கிறேன்” என்று நக்கலாக சொன்னவன்,
“அப்புறம் என்ன? சபைய கலைக்கலாம் தான” என்று மூவரையும் பார்த்து கேட்க, “நான் இப்ப தான் வரேன். புது சபையை ஆரம்பிக்கலாம்” என்று வந்தாள் ஸ்வப்னா.
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனுஜாவின் மகள். மாதவனின் தங்கை. தற்போது பி. எஸ்.சி ஃபேஷன் டெக்னாலஜி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.
“வாங்க அருண்ணா” என்று அவனை வரவேற்றவள், “இப்ப தான் வர வழி தெரிஞ்சது போல உங்களுக்கு” என்று இடுப்பில் கை ஊன்றி அவனை மிரட்டியவள்,
அன்னையிடம் அவரின் பயணம் பற்றி விசாரித்து விட்டு “நீங்களும் அருண் அண்ணாவை எதுவும் சொல்லாம அப்படியே விட்டு வச்சிருக்கீங்க ம்மா” என்று அன்னையையும் திட்டியவள்,
“இருங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து பேசிக்கிறேன்” என்று அவளின் அறைப் பக்கம் நகர்ந்து விட்டாள்.
“வந்தா…. படபடன்னு பேசி பொறிஞ்சிட்டு கிளம்பிட்டா…” என்று மாதவன் சலித்துக் கொள்ள,
“அவளைப் பார்த்து கத்துக்க, பாரு.. எப்படி வந்ததும் ஃப்ரெஷ் அப் ஆக போறான்னு. உன்னை தான் கழுத்தை பிடிச்சு தள்ளாத குறையா தள்ளனும்” என்றார் அனுஜா.
“உங்களுக்கு எப்பவும் நான்னா தக்காளி சட்னி தான்” என்று பொரிந்தவன், “இவன் கிட்ட இன்னொரு விஷயமும் கேக்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்க தான? கேளுங்க” என்று அவருக்கு கண்ணை காண்பிக்க,
அனுஜாவும் மாதவனிடம் கண்ணை மூடித் திறந்தபடி “நீ எப்ப நம்ம ஹாஸ்பிட்டல்ல மொத்தமா வந்து ஜாயின் பண்ணிக்க போற அருண்” என்று அனுஜா அருணை பார்த்து கேட்க, அருணிடம் மௌனம்.
“சொல்லுடா. இன்னைக்கு நீ பதில் சொல்லியே ஆகனும்” என்று அவனை அழுத்தமாக பார்த்தபடி அனுஜா கேட்க,
“அனு….” என்று மனைவியின் கையை தட்டிக் கொடுத்த கிருஷ்ணமூர்த்திக்கும் இவ்விஷயத்தில் வருத்தம் தான்.
“வாயத் திறக்குறானா பாருங்க.. எத்தனை முறை கேட்டுட்டேன் இவன் கிட்ட… எப்ப ஹாஸ்பிடல் பொறுப்பை முழுசா ஏத்துக்க போறேன்னு. ஒரு வார்த்தை வாயை திறந்து பேசுவானா.. ஊமை ஆகிடுவான் இதை கேட்டா மட்டும். இவன் கைனிக் முடிச்சதும் எவ்வளோ கெஞ்சினேன். நம்ம ஹாஸ்பிட்டல்லையே வந்து டியூட்டி பாருன்னு. பிடிவாதமா மறுத்து கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல போய் ஜாயின் பண்ணிட்டான்” என்றவரிடம் அவ்வளவு ஆற்றாமையும் கவலையும்.
“அதான் ஈவ்னிங் நம்ம ஹாஸ்பிடல் வரேனே அனும்மா” என்று சமாதானக் குரலில் கூறியவனை முடிந்த மட்டும் முறைத்தவர்,
“நீ வந்து போறதை பத்தி நான் பேசல அருண். எப்ப முழுசா அதை உன் பொறுப்பில் எடுத்துக்க போற. எனக்கு அடுத்து அங்க எல்லாமே நீ தான். அதுல எந்த மாற்றமும் கிடையாது” என்று அழுத்தமாக சொன்னவர், அவனின் தொடர் அமைதியில்,
“அப்படின்னா உனக்கு வர எண்ணமே இல்ல. அப்படித் தான!” என்று கோபத்தில் குரலை உயர்த்த… அருண் அவரின் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை.
மனைவியின் கோபத்திலும் அருணின் மௌனத்திலும் கிருஷ்ணமூர்த்தியும் மாதவனும் பெரு மூச்சை விட்டுக் கொண்டனர்.
இது அடிக்கடி நடக்கும் ஒன்று தான். அனுஜா இதனைக் குறித்து அருணிடம் கேட்கும் போதெல்லாம் மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுப்பவன், “ஈவ்னிங் வரத் தானே செய்றேன்” என்று இலவச ஒற்றை வரி பதிலையும் கொடுத்து நழுவிக் கொள்வான்.
இன்றும் அப்படியே அவன் சொல்லி நழுவப் பார்க்க, அனுஜாவின் கோபம் வெளிப்பட்டு விட்டது.
“சொல்லுடா. என்ன தான்டா நினைச்சிட்டு இருக்க நீ? இன்னைக்கு நீ பதில் சொல்லணும். சொல்லியே ஆகனும்” என்றவரிடம் அத்தனை பிடிவாதம்.
“அனும்மா ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக சொன்ன அருண்.. “என்னோட பதில் என்னன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பேசுறீங்க?” என்றான் கவலையுடன்.
அவனுக்கு குறையாத கவலையை கண்களில் தேக்கி, “என்னடா பெரிய பதில்.. போடா” என்றவர் மறுபடியும் வேகமாக திரும்பி,
“யாரோ என்னவோ சொன்னா… அதுக்கு இங்க எங்களோட இருக்க மாட்டேன்னு போய்டுவியா” பத்து வயது அருணிடம் கேட்ட அதே கேள்வியை இப்போது மீண்டும் அவர் கேட்க, அங்கிருந்த அனைவரின் நெஞ்சமும் கனத்தது.
“அனும்மா… இது எதுக்கு இப்ப?” என்றான் அருண் அதைப் பற்றி பேசுவதை தவிர்த்தபடி.
ஸ்வப்னா இவர்களின் பேச்சை கேட்டபடி வந்திருக்க, “அப்படி எல்லாம் எஸ்கேப் ஆக வேண்டாம் அருண்ணா. அம்மா கேக்குறது நியாயம் தானே…. யாரோ என்னவோ சொன்னா.. நீங்க ஏன் எங்களோட ஒன்னா இல்ல. ரெண்டு வருஷம் இங்க தானே இருந்தீங்க? உங்க ரூம் இன்னும் இங்க உங்களுக்காக அப்படியே தான் இருக்கு. நீங்க தான் கெஸ்ட் மாதிரி அப்பப்ப வந்து தங்கிட்டு போறீங்க? எப்ப ஒன்னா இருக்க போறீங்க?” என்று அவளும் கவலையோடு கேட்க, அவர்களின் அன்பில் அருண்மொழிக்கு தான் மூச்சு முட்டிப் போனது.
இங்கே இருக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை. இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
யாரோ ஒருவர் பேசினாலும்…. பேசினார்களே!!!! அந்த யாரோ ஒருவர்… அனுஜாவின் சொந்த அண்ணன் தான்.
“இந்த அனாதை பயல எல்லாம் எதுக்கு சொந்த பிள்ளை மாதிரி நீ வச்சு வளத்துட்டு இருக்க. எங்கேயாவது ஆசுரமத்துல சேர்த்து விட வேண்டியது தானே. வளந்து உன் சொத்தை எல்லாம் சுருட்டிட்டு போறதுக்கு நீயே வழி வகுக்கிறியா..”
இந்த வார்த்தைகள் இன்னும் அவன் நெஞ்சை விட்டு நீங்காமல் பச்சை ரணமாய் அப்படியே பதிந்து போய் இருந்தது.
அண்ணன் அப்படிப் பேசியதற்கு அனுஜா கொந்தளித்து அவரோடு சண்டையிட்டு உறவே வேண்டாம் எனும் நிலைக்கே சென்று விட்டார்.
அன்றில் இருந்து அண்ணனோடு அவருக்கு பேச்சில்லை. உறவு பாராட்டுவதும் இல்லை.
அவரின் அண்ணனோடு மட்டுமல்ல மேலும் ஒன்றிரண்டு நபர்கள் அதையே சொல்லி “இந்தப் பயலை தொரத்தி விடு வீட்ட விட்டு” என்று அவரை திட்டிய போதெல்லாம் அவர்களிடமும் சண்டையிட்டு உறவே வேண்டாம் என்று விட்டார்.
தன்னால் அனுஜா அவரின் சொந்தங்களோடு சண்டை பிடித்துக் கொண்டு விலகுவது அருணுக்கு அத்தனை வலியை கொடுத்தது.
சொந்தத்தின் அருமை சொந்த பந்தம் இல்லாதவனுக்கு தானே புரியும்!!!
அவனுக்கும் புரிந்தது. எனவே தான் பிடிவாதமாக அவர்களோடு இருக்க மாட்டேன் என்று சொல்லி ஹாஸ்டலில் சேர்த்து விடச் சொன்னான்.
அவனுக்கும் மேல் பிடிவாதம் பிடித்து “எங்களோடு தான் இருக்கணும் நீ. உன்னை எங்கையும் அனுப்ப முடியாது” என்று அனுஜா தன் பிடியில் நிற்க, அழுது பார்த்தான். அனுஜா அசையவில்லை.
கெஞ்சியும் பார்த்தான். சாப்பிடாமல் கூட பிடிவாதம் பிடித்துப் பார்த்தான். ஒரு கட்டத்தில் எதற்கும் அனுஜா அசையப் போவதில்லை என்று புரிந்து,
“என்னை ஹாஸ்டல் விடலேன்னா எங்கையாவது காணாம போய்டுவேன் அனும்மா” என்று மிரட்டித் தான் தன் காரியத்தை சாதித்துக் கொண்டான்.
அப்படி சாத்தித்ததும் அவனுக்கொன்றும் அத்தனை சந்தோசத்தை கொடுத்திருக்கவில்லை. அளவு கடந்த வேதனையை தான் கொடுத்தது.
கிடைத்த சொந்தங்களையும் விட்டு விட்டு தனியாக ஹாஸ்டல் வந்தவனுக்கு மகிழ்ச்சியா பொங்கும்?? துக்கம் தான் பொங்கியது.
“டேய் அருண்.. டேய் அருண்..” என்று தன் தோளில் உரிமையாக கை போட்டு தன்னோடு விளையாடும் நண்பன் மாதவன்,
இவனைக் கண்டதும் குட்டி குட்டி கால்களை வைத்துக் கொண்டு “அருண்ணா…” என குடுகுடுவென இவனிடம் ஓடி வரும் ஸ்வப்னா.
பள்ளிக்கு செல்லும் போது “நோட் புக்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டயா அருண்..” என்று மாதவனை விசாரிப்பது போல் தன்னையும் சமமாக விசாரிக்கும் கிருஷ்ணமூர்த்தி,
“அருண்.. சாப்பிட்டியா.. இந்தா இன்னைக்கு உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் ரைஸ், கத்திரிக்கா மசால். ஒழுங்கா சாப்பிட்டு மாதவனையும் வேஸ்ட் பண்ணாம சாப்பிட வச்சிடு” என்று புன்னகை முகமாக வழி அனுப்பும் அனுஜா…
இவர்களை எல்லாம் இழந்து விட்ட வலி இன்றளவும் அந்த வேதனையின் ஆழம் குறையாமல் அவனுள் புதைந்து கிடக்கிறது. இருந்தும் அவனின் முடிவில் மாற்றம் இல்லை.
பள்ளிப் படிப்பில் இருந்து, கல்லூரி படிப்பு வரை ஹாஸ்டலில் தான் அவனின் வாசம். அந்த நிகழ்விற்கு பின்னர் இவனாக அனுஜாவின் இல்லத்திற்கு வருவது அத்தி பூத்தார் போலத் தான்!
விசேஷங்களின் போதும் வர மாட்டேன் என்று நிற்பவனை அதட்டி மிரட்டி தான் அழைத்து வருவார் அனுஜா.
ஒரு கட்டத்தில் அவனின் விலகல் நிரந்தரமானதாகிப் போக, அவ்வப்போது வந்து செல்வான்.
அருண் விலகி நின்றாலும் அனுஜாவின் குடும்பம் அவனை விலகி நிற்க விடவில்லை. அவர்களும் விலகவில்லை.
கைப் பட்டால் தானாக ஒட்டிக் கொள்ளும் பசையை போல் அவனோடு ஒட்டிக் கொண்டே உறவை உயிர்ப்பித்து வைத்திருந்தனர் மொத்த குடும்பமும்.
அருண் மருத்துவனாக பணியில் அமர்ந்த பின்னர் சிறிது நாட்கள் பிஜியில் தங்கிக் கொண்டவன் அங்கே சுத்த பத்தம் போதாமல் வாடகைக்கு வீடெடுத்து தங்கி இருந்தான்.
அதன் பின்னர் இருக்க வீடு அவசியம் என்று உணர்ந்து வங்கியில் லோன் பெற்று இப்போது அவனிருக்கும் சிறிய அபார்ட்மெண்டை வாங்கினான்.
இதற்கெல்லாம் அனுஜாவின் கோபம் எல்லையை கடந்து அவனிடம் சண்டை வரை வந்து நிற்கும். புன்னகை முகத்துடனும் சமாதான வார்த்தைகளுடனும் அவரை சரி கட்டி சமாளிப்பான் அருண்மொழி.
ஆனால் இன்று அவனின் புன்னகை முகமும், சமாதான வார்த்தைகளும் அவரிடம் எடுபடாமல் எட்டி நின்றது.
குடும்பமே அவனிடம் உரிமையுடன் அவனுக்கு இங்கே அனைத்து உரிமையும் இருக்கிறது என்று நிற்க, அந்த உரிமைக்கு உற்றவனாய் இருக்க முடியாமல் தள்ளி நின்றிருந்தான் அருண்மொழி மனதில் புரையோடிப் போய் இருந்த காயத்துடன்!
இப்போதும் தனக்காக பெண் பார்க்கும் நிலையிலும், அவரின் சொந்த உழைப்பில் உருவாக்கிய ‘மதர் கேர்’ ஹாஸ்பிட்டலையும் தன் பொறுப்பில் விடும் எண்ணத்தில் இருப்பவரின் அன்பில் அவனுக்கு தான் மனம் கலங்கியது.
தன் அன்னை ஜெயந்தி இறந்ததில் இருந்து தனக்கு இன்னோர் அன்னையாய் இருப்பவர். இப்போது கோபம் கொண்டு அவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருக்க, அந்த முகத் திருப்பலை கூடத் தாள முடியவில்லை அருண்மொழியால்.
“இப்படி கோபப் பட்டு முகத்தை திருப்பினா நான் எங்க அனும்மா போவேன்..” என்று அவனும் கலங்கியபடி கேட்க, அவனின் பேச்சில் அனைவருக்குமே கண்கள் கலங்கி விட்டது.
மெய் தானே!!
செல்வதற்கு அவனுக்கும் வழி இல்லையே! வழி இருந்திருந்தால் என்றோ சென்றிருப்பானே! விடுதியில் தங்கிக் கொள்ள வேண்டிய அவசியமும் அவசரமும் வந்திருக்காதே!
அனைத்தையும் நினைக்க நினைக்க, நினைவுகள் சுமையாகி அருணை அழுத்த, கண்களை மூடிக் கொண்டு வேக மூச்சுக்களை வெளியேற்றிவனுக்குள் அன்னை ஜெயந்தியின் நினைவுகள் மேலெழும்பி மேலும் அவனை உடையச் செய்தது.