ஆறு வயது இருக்கும் அருண்மொழிக்கு, அவனின் அன்னை ஜெயந்தி மீண்டும் கருவுற்று இருந்த போது.
அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு. குட்டி பாப்பா வரப் போகிறது என ஆர்வமாய் இருந்தான்.
அருண்மொழியின் தந்தை அன்பழகன் எந்நேரமும் குடி போதையில் மிதந்து குடும்பத்தை கவனிக்காத ஒரு பொறுப்பற்ற மனிதன்.
அவரின் இந்தப் குடி பழக்கத்தினாலே குடும்பத்து சொத்தினை பாதி அழித்திருந்தார். விட்டால் மீதமும் போய் விடுமோ என்று பயந்து அவரின் உடன் பிறப்புகளும் பெற்றவர்களும் அவரை மட்டுமல்லாது அவரால் உருவான குடும்பத்தையும் தள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் ஊரை விட்டே விரட்டியும் விட்டனர்.
அவர்களிடம் எல்லாம் என் குடும்பத்தை இந்த ஊரே மெச்சும் படி தூக்கி நிறுத்துவேன் என்று வசனம் பேசியவர் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தார். வந்த பின்னரும் கிடைத்த வேலையை செய்தாலும் குடி பழக்கத்தை குறைத்த பாடில்லை.
மாறாக அந்த பெரிய மாநகரத்தில் அவரின் குடி பழக்கமும் விஸ்தாரமாகி இருந்தது. அதன் பலன் ஜெயந்திக்கு ஐந்தாம் மாதம் தொடங்கிய போதே குடி போதையில் ஒரு சாலை விபத்தில் தன் உயிரை இழந்து விட்டார்.
ஜெயந்திக்கு கணவனின் இறப்பில் கண்ணீர் கூட வரவில்லை! அனைத்தையும் இழந்து நின்றாகி விட்டது. இப்போது கணவனையும் இழந்து விட்டேன்.. அவ்வளவே! எனும் எண்ணம் தான் அவருக்கு.
கையில் இருக்கும் மகனையும், உள்ளே இருக்கும் மகவையும் நன்றாக வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் குறிக்கோளாக இருந்தது.
கணவனும் உறவுகளும் அவரை கை விட்டிருந்தாலும் அவர் கற்ற கல்வி அவரை கை விடாமல் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டது.
கணிதம் படித்திருந்த ஜெயந்தி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியை தேடிக் கொள்ள, கூடவே அருணையும் அதே பள்ளியில் படிக்க வைத்தார்.
இரண்டு மாதங்கள் தான் அனைத்தும் சீராக சென்றது. அதற்கடுத்து தான் விதியின் விபரீதங்கள் அரங்கேரத் துவங்கி இருந்தது அவர்களின் வாழ்வில்.
ஏழாம் மாத தொடக்கத்தில் இருந்தே ஜெயந்திக்கு அதிக இரத்தப் போக்கும் அடி வயிற்றில் தொடர் வலியுமாய் இருக்க, மருத்துவரிடம் சென்று விசாரித்த போது தான் அவருக்கு நஞ்சுக்கொடி சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என தெரிய வந்தது.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அனுஜா தான். அப்போது அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருந்தார்.
ஜெயந்தியின் நிலையை அறிந்து அவரிடம் நேரடியாக சொல்ல விரும்பாமல் “உங்க ஹஸ்பண்ட் வந்திருக்காங்களா?” என்று கேட்க,
“இல்ல டாக்டர். தவறிட்டார்” என்றார் ஜெயந்தி.
வேறு யாரேனும் உறவினர் இருக்கிறார்களா என்று கேட்க, “நானும் பையனும் தான் டாக்டர். எதா இருந்தாலும் என்கிட்டயே சொல்லுங்க” என்று விட்டார் ஜெயந்தி.
அனுஜாவும் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் வேறு வழியின்றி அவரின் நிலை பற்றி அவருக்கு தெளிவுடன் எச்சரிக்கையாக விளக்கி, தொடர் ஓய்விலும், அதிக பளு தூக்கும் வேலைகள் எல்லாம் செய்ய வேண்டாம் என்றும் அத்தனை வலியுறுத்தி அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால், தொடர் ஓய்வில் இருந்தால்… அவர்களின் வாழ்வாதாரம்? அது மட்டுமின்றி வீட்டு வேலைகள், தண்ணீர் குடம் தூக்குவது என அனைத்தும் ஜெயந்தி தான் செய்தார். அவ்வப்போது கர்ப்பிணி பெண் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உதவி செய்தார்கள் தான்.
ஆனால், தினமும் தொடர்ந்து உதவிக் கரம் நீட்ட முடியாதே அவர்களாலும்!
எனவே, மருத்துவர் அனுஜா சொன்னதையும் மீறி வேலைக்கு சென்றார் ஜெயந்தி! வீட்டு வேலைகளையும் பார்த்தார்.
அதன் விளைவு அடிக்கடி உதிரப் போக்கும், அடி வயிற்றில் வலியும் கூடிக் கொண்டே போனது!
சிறுவனான அருண் தான் அன்னையின் நிலையில் பயந்து போனான். அடிக்கடி உதிரக் கரை படியும் அன்னையின் உடைகளை காணும் போதெல்லாம் “அம்மா.. என்னமா பண்ணுது உங்களுக்கு.. உள்ள பாப்பாக்கு அடி பட்டுடிச்சா…” என்று அழுது அரற்றி பயந்து போவான்.
“எனக்கு ஒன்னுமில்லடா மொழி… உள்ள பாப்பாவும் நல்லா இருக்கா.. பயப்படாத..” என்று அவனை மார்பில் சாய்த்துக் கொண்டு பொய்யாக சமாதானம் செய்யும் போதெல்லாம் அந்தத் தாயுள்ளம் வேதனையில் துடிக்கும்.
தான் இல்லை என்றால் அருணின் நிலை…. நினைக்கும் போதே வேதனையில் உழன்று தவித்துப் போவார். இதை எண்ணி எண்ணியே பல நாள் தூக்கத்தையும் தொலைத்து இரத்த அழுத்தமும் கூடிப் போனது அவருக்கு.
அவனுக்காகவேணும் தன் உயிரை காத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து எட்டாம் மாத முடிவில் பணியை விட்டு விடலாம், குழந்தை பிறந்த பின்னர் பணியை தொடர்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார் ஜெயந்தி.
செலவுகளுக்கு தன் தாலிக் கொடியையும் கணவனிடம் இருந்து காப்பாற்றி வைத்திருந்த நகைகளையும் விற்றுக் கொள்ளலாம் என்று ஒவ்வொரு திட்டமாக யோசித்து வைத்தார்.
ஆனால், அவை எல்லாம் கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்த வகையாகிப் போனது. அவர் வேலையை விடலாம் என்று முடிவு செய்திருந்த மறு நாளே பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தன் உடல் நலத்தை பற்றிக் கூறி விட்டு அறையை விட்டு வரும் போதே அடி வயிற்றில் அதீத வலியை உணர்ந்தவர் நிற்க முடியாமல் சுவற்றை பற்றிக் கொண்டு சரிந்து விட்டார்.
காலடியில் அவ்வளவு உதிரம் போய் இருந்தது. பள்ளியில் பணி புரிந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பள்ளியில் இருந்து கிளம்பும் போது அருணையும் அழைத்துக் கொண்டு தான் கிளம்பினார்கள்.
வரும் வழியில், உடை எல்லாம் உதிரத்தில் நனைந்து அதீத வலியில் துடித்து நடுங்கும் கரங்களால் தன் கன்னத்தை பற்றியபடி “அம்மாவும் பாப்பாவும் வந்திடுவோம் மொழி” என்று அந்த வலியிலும் திக்கித் திணறி தன்னிடம் பேசிய அன்னையை காணக்காண அழுகை தான் பெருகியது அந்த ஆறு வயது அருணுக்கு!
அவனுக்கு புரிந்தது எல்லாம் “அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் என்னமோ ஆகி விட்டது” என்பது மட்டும் தான்!
“அம்மா…. அம்மா…” என்று அவரைப் பார்த்து பார்த்து அழுத மகனைக் கண்டு ஜெயந்திக்கும் உயிர் வதையாக இருந்தது.
“பாப்பா வெளில வந்ததும் அவளை தூக்கிப்ப தான. நல்லா பாத்துக்குவ தான” என்று ஜெயந்தி மகனிடம் முயன்று வரவழைத்த சிரிப்புடன் கேட்க, “தூக்கிப்பேன்மா. நீங்க என்னை பத்திரமா பாத்துக்கிட்ட மாதிரி நானும் பாப்பாவை பத்திரமா நல்லா பாத்துப்பேன். நீங்களும் வாங்கம்மா. உங்களையும் தூக்கிப்பேன். நல்லா பத்திரமா பாத்துப்பேன்” என்று அழுகையுடன் தேம்பியபடி அவன் சொல்ல,
உயிர் பிரியும் நொடியில் மகனின் பாசத்தின் உச்சத்தை உணர்ந்து விட்ட ஜெயந்தியின் உள்ளம் பேருவகை கொள்ள “வருவோம்டா மொழி. அழக் கூடாது” என்று மட்டும் சொன்னார் இறுதியாக அவனிடம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் அவரை பரிசோதனை செய்த அனுஜாவிற்கு புரிந்து போனது நிச்சயம் ஒரு உயிரை காப்பாற்றுவதே அரிது என்பது.
பெரும் வலியில் துடித்து குழந்தையை வெளியே தள்ளியதும் ஜெயந்தியின் உயிர் நீங்கி இருந்தது அவரை விட்டு! அழகான பெண் குழந்தை… ஆனால், இறந்து பிறந்திருந்தது.
வருவோம் என்று மகனிடம் சொன்னவர் ஒரே அடியாக இறைவனின் பாதங்களை அடைந்திருந்தார் தன் மகளுடன்!
வெளியே வந்த அனுஜா ஆசிரியர்களிடம் இயலாமையுடன் தலையை இடமும் வளமும் அசைத்து “சாரி” என்று மட்டும் சொல்ல, அனைவருக்கும் வேதனை!
இப்போதாவது அவரின் உறவுகள் யாரும் வந்திருப்பார்களா என்று அங்கிருந்த ஆசிரியர்களிடம் ஜெயந்தியின் உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்க, “அவுங்களுக்கு ரிலேட்டிவ்ஸ் யாரும் இல்ல டாக்டர். ஹஸ்பண்ட் ட்ரங்கர்ட்! ரோட் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு. பையன் மட்டும் தான்” என்று தங்களோடு அழைத்து வந்திருந்த அருணை பார்த்து சொன்னவர்கள்,
“செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான். எங்க ஸ்கூல்ல தான்” என்று சொன்னார்கள் இரக்கம் கொண்ட குரலில்.
அன்னையை எண்ணி விம்மி விம்மி அழுது கொண்டிருக்கும் அந்த சிறுவனைக் கண்டு அனுஜாவின் உள்ளத்தில் பெரும் பாரம் குடியேறிக் கொண்டது.
வந்ததில் இருந்து இப்போது வரை அன்னையை பார்க்கவில்லை. தன்னை பிடித்துக் கொண்டு நின்ற ஆசிரியரின் பிடியில் இருந்து அனுஜாவிடம் வந்தவன், அவரை அண்ணாந்து பார்த்து “அம்மாவும் பாப்பாவும் எப்ப வருவாங்க?” என்று தேம்பிக் கொண்டே கேட்க, அனுஜாவின் கண்கள் கண்ணீரில் நிறைந்து விட்டது.
“அம்மா எப்படி இருக்காங்க. அம்மா ட்ரெஸ்ல பிளட் எல்லாம் போயாச்சா….” என்று மழலை மாறாமல் அழு குரலில் அவன் கேட்ட விதம் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வர வைத்திருந்தது.
“பாப்பா வெளிய வந்தாச்சா? என்ன பாப்பா? பாயா… கிர்ல்லா.. சீக்கிரம் காட்டுங்க. நான் தூக்கணும். அம்மா சொன்னாங்க பாப்பாவை நான் பத்திரமா பாத்துக்கணும்னு. எப்ப காட்டுவீங்க பாப்பாவை” என்று மேலும் அவன் கேட்க, நெஞ்சத்தில் இரத்தம் வடிந்தது அவருக்கு.
விம்மி கொண்டிருந்தவனை காண சகிக்கவில்லை. அந்த ஆறு வயது நிரம்பிய சிறுவனிடம் எப்படி சொல்ல?
“உன் அன்னையும், அவர் வயிற்றில் இருந்த உன் தங்கையும் உயிரை இழந்து விட்டார்கள்” என்று….
ஆனாலும் சொல்லித் தான் ஆக வேண்டும். அவனுக்கு புரியும் படி!
கண்களை துடைத்துக் கொண்டவர், நர்ஸிடம் குழந்தையை தூக்கி வரச் சொன்னார். “டாக்டர்.. ஆனா..” என்று நர்ஸ் கவலையாய் கேட்க,
“தூக்கிட்டு வாங்க” என்று மட்டும் சொன்னவர், குழந்தையை கொண்டு வந்ததும் அருணிடம் “தங்கச்சி பாப்பா” என்று காட்ட,
கண்களில் இருந்த கண்ணீரை தன் சீருடையில் வேக வேகமாக துடைத்துக் கொண்டு ஆர்வமாய் பார்த்தான் அந்த பிஞ்சை.
குட்டி குட்டி கைகளும் கால்களும் செப்பு இதழும் என இருந்தவளை “யாழினி பாப்பா” என்று பூரிப்பாய் அழைத்தவன் அனுஜாவிடம் திரும்பி,
“பாப்பா பிறந்திருந்தா யாழினி பேர் தான் வைக்கணும்னு அம்மாட்ட சொல்லிருந்தேன். அம்மாவும் ஓகே சொன்னாங்களே” என்றவன்,
“பாப்பாவை தூக்கணும். ஆனா, தூக்க தெரியாதே…எப்படி தூக்கணும்?” என்று அவரிடம் கேட்க, கலங்கிய கண்களுடன் அவனை அங்கிருந்த இருக்கையில் அமரச் சொன்னவர் “இப்படி கழுத்துக்கு அடில கையை வச்சு பாப்பாவை கீழ புடிச்சு தூக்கனும்” என்று அவனுக்கு பக்குவமாய் சொல்ல, அவர் சொல்லியதை அழகாக கேட்டுக் கொண்டு பாந்தமாய் தன் உயிர்ப்பிழந்த தங்கையை மடியில் தாங்கிக் கொண்டான் அருண்மொழி.
“யாழினி பாப்பா..” என்றவன் சில்லிட்டு போய் இருந்த குழந்தையின் நெற்றியில் மிக மிக மென்மையாய் இதழ் ஒற்றி “அம்மா இப்படி தான் எனக்கு அடிக்கடி கிஸ் பண்ணுவாங்க” என்று அவரிடம் சொன்னவன்,
“பாப்பா ஜில்லுன்னு இருக்காளே..” என்று அதன் அர்த்தம் புரியாமல் அதையும் பூரிப்புடன் சொல்ல, பார்ப்பவர்களுக்கு தாள முடியவில்லை.
இப்படி உயிராய் கொஞ்சுபவனிடம் எப்படி உன் தங்கையின் உயிர் போய் விட்டது என்று சொல்ல? வாயைத் திறக்கக் கூட பயந்து போய் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
உயிரில்லா பொம்மையை போல் இருக்கும் குழந்தையை ஒரு முறை பார்த்த அனுஜா “உன் பேர் என்ன?” என்று கேட்க, “அருண்மொழி” என்றான் அழகுத் தமிழில்!
மென்மையாக புன்னகைத்தவர் குழந்தையை அவனிடம் இருந்து வாங்கிக் கொள்ள, அதற்கே ஏக்கமாய் பார்த்தவன் “ஏன் வாங்கிட்டீங்க? நான் வச்சிருக்கேன்” என்றான் சுருங்கி விட்ட முகத்துடன்.
அவன் சொன்னதை கேட்டபடி நர்ஸிடம் கண்ணைக் காட்டி குழந்தையை கொடுத்தவர் “அருணோட அம்மாவும் யாழினி பாப்பாபும் அருண் கிட்ட இருக்க முடியாது இனிமேல். ரெண்டு பேரும் பத்திரமா சாமி கிட்ட போய்ட்டாங்க” தொண்டைக் குழி ஏறி இறங்க அவனிடம் புரியும் விதமாய் சொன்னவர் தவிப்புடன் அவனின் முகம் பார்க்க,
அவர் சொன்னதை கேட்டவன் ஒரு நொடி புருவம் சுருக்கி முகத்தை குனிந்து யோசித்து விட்டு சடாரென்று நிமிர்ந்து “சாமிய பாக்க முடியாதே.. அப்ப அம்மா.. அம்மா.. அம்மாவையும் பாக்க முடியாதா.. பாப்பா… பாப்பாவை இப்ப பாத்தனே” என்று அழுகத் தயாரான நிலையில் கேட்க,
“ஆமா.. இனி வர மாட்டாங்க. சாமி கிட்டப் போய்ட்டாங்க” என்றார் அவன் தலை கோதி. அவன் புரிந்து கொண்டு கேட்ட விதத்தில் அனுஜாவிற்கு உயிரே போய் விட்டது.
இந்த குழந்தைக்கு இப்படி ஒரு நிலையா வந்திருக்க வேண்டும்? கடவுளை எண்ணி அத்தனை கோபம் வந்தது அந்த நொடியில்.
“இல்ல… அம்மா.. அம்மா வேணும்.. அம்மா காட்டுங்க. பாப்பா.. பாப்பாவை திரும்ப தாங்க. நான் சாமிக்கு தர மாட்டேன். பத்திரமா நானே பாத்துப்பேன்” என்று எழுந்து நின்று அவன் அழுக, அதற்கு மேல் அவனை சமாதானம் செய்ய முடியாமல் அள்ளி அணைத்துக் கொண்டார் அனுஜா.
அன்று அவனை அணைத்து அரவணைத்தவர் தான். இன்றளவும் அவனை அரவணைத்து அவனுக்கு இன்னொரு தாயாய் தாங்கிப் பிடித்து நிற்கின்றார்.
தனக்காக அவர் உறவுகளை கூட இழக்க யோசிக்கவில்லை. அவருக்காக தான் என்ன செய்தோம் என்று யோசித்த நொடி “சரி அனும்மா. கல்யாணத்துக்கு பொண்ணு பாருங்க” என்று விட்டான் முழு மனதுடன்.
“அது நீ சொல்லலேன்னாலும் நான் பாக்க தான் போறேன். நம்ம ஹாஸ்பிட்டல்ல எப்ப ஃபுல்லா ஜாயின் பண்ண போற? நம்ம வீட்டுக்கு எப்ப வருவ?” என்று பிடிவாதம் குறையாமல் அனுஜா கேட்க,
“ரெண்டும் சாத்தியம் இல்ல அனுமா” என்று விட்டான் அவனும் பிடிவாதமாக. இதற்கு மேல் இதனை மறைத்தோ வெளிப்படையாக சொல்லாமலோ இருக்க முடியாது என்று அவனுக்கும் புரிந்து விட,
“சாத்தியம் இல்ல. நான் அப்படியே இருக்கேனே. ஹாஸ்பிட்டல் வரதை நிறுத்த மாட்டேன். என்னைக்கும் என்னோட சர்வீஸ் அங்கையும் இருக்கும். அது நம்மளோட ஹாஸ்பிட்டல் தான். ஆனா, அதோட அதிகார உரிமையும் நிர்வாக பொறுப்பும் என்னைக்கும் உங்களோடது தான். இதுக்கு மேல என்னை ஃபோர்ஸ் செய்யாதீங்க அனும்மா” அவர் புரிந்து கொள்ள மறுத்ததில் இயலாமையுடன் கெஞ்சியே விட்டான் அருண்மொழி.
அனுஜா அவனை அசையாத பார்வை பார்க்க, “விடு அனு.. அவன் தான் இவ்வளோ தூரம் சொல்றான்ல” என்ற கணவரையும் அவர் உடைந்து போய் பார்க்க, “பாத்துக்கலாம்” என்று சொல்லி மனைவியை சமாதானம் செய்தவர் பேச்சை மாற்றும் விதமாக அருணிடம் திரும்பி,
“எந்த மாதிரி பொண்ணு பாக்கட்டும் அருண்” என்று கேட்க, பெரு மூச்சை விட்டுக் கொண்டவன் “என்னை மாதிரி பாருங்கப்பா போதும்” என்றான் ஒற்றை வரியில்.
“உன்னை மாதிரின்னா… டாக்டராவா… ஐயோ… இன்னொரு வெள்ளை கோட்டா….” என்று மாதவன் புலம்ப, “இல்ல மேடி… என்னை மாதிரி யாரும் இல்லாம……” என்று அவன் அடுத்த சொல்லை சொல்லும் முன்னர்,
“அருண்…..” “டேய்……” “அருண்ணா…” என்று நால்வரும் குரலை உயர்த்தி இருந்தனர்.
மாதவன் ஒரு படி மேலே சென்று அவன் சட்டையை கொத்தாக பற்றி “யாரும் இல்லேன்னா.. அப்ப நாங்க யாருடா உனக்கு?” என்று நொடியில் கிளர்ந்த கோபத்தோடு கேட்க,
“மேடி.. அப்படி சொல்ல வரல..” என்று அருணின் சமாதானம் அவனிடம் செல்லவில்லை.
“வேற நொப்படி சொல்ல வந்த?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டவன், “நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு வெறும் மண்ணா தான் தெரியிறோம் இல்ல..” என்று கோபம் குறையாமல் கேட்டவன், அவன் பேச வாய் திறப்பதற்கு கூட அனுமதிக்கவில்லை.
“பேசாதடா. நானும் உன்னை எதுக்கும் ரொம்ப ஃபோர்ஸ் பண்ண கூடாதுன்னு ரொம்ப அமைதியா இருந்தா உன் இஷ்டத்துக்கு பேசுற… இப்ப.. அனாதைன்னு சொல்ல வர. உனக்கு நாங்க நாலு பேரும் இருக்கோம்னு எப்ப உன் மண்டைக்கு புரியும்? ஹான்… எவ்ளோ தைரியம்..” என்று அத்தனை உரிமையாய் ஆத்திரத்துடன் அவனின் சட்டையை பற்றி உலுக்க, அவனின் தார்மீக கோபம் அருணிடம் புன்னகையை வரவழைத்தது.
“மாதவா… என்ன இது? சட்டைல இருந்து கையை எடு” என்று கிருஷ்ணமூர்த்தி மகனை அதட்ட,
“நீங்க சும்மா இருங்கப்பா. இந்தப் பயலை இன்னைக்கு சும்மா விட போறதில்ல நான். ரொம்ப பேசுறான். இவனை மாதிரி யாருமில்லாம பொண்ணு பாக்கணுமாமே… நாலு வருஷம் ஒன்னா தான இருந்தான் இங்க நம்ம கூட. அப்புறம் திடீர்னு ஹாஸ்டல் சேர்ந்தா தான் ஆச்சுன்னு விட்டுட்டு போய்ட்டான். இவனுக்கு மேல அம்மாவும் நானும் பிடிவாதமா இருந்தோம். ஏன் நாம எல்லாருமே போக கூடாதுன்னு சொன்னோம். ஆனா நம்மள மிரட்டி போய்ட்டான். அதுக்கு அடுத்து இவனை எதுக்கும் கம்பல் பண்ணவே பயமா இருக்கும் எனக்கு. எங்க ஃபோர்ஸ் பண்ணா நம்மளை விட்டு போய்டுவானோன்னு. இவன் போனதுக்கு அப்புறம் எவ்ளோ நாள் மேல கால் போட்டு தூங்க, விளையாட, படிக்க கூட இவன் இல்லைன்னு அழுவேன் தெரியுமா. பத்து வயசுல என்னை நிறைய அழுக வச்சவன் இவன் தான்” என்று மனதில் உள்ள அனைத்தையும் கொட்டித் தீர்த்தவன் சிவந்த கண்களோடு நண்பனை திரும்பிப் பார்க்க,
அவன் கொட்டித் தீர்த்ததில் உணர்வுகள் தாளாமல் “மேடி…” என்று அவனை அணைக்க முயல, பற்றிய சட்டைக் காலரோடு அவனை ஒரே தள்ளாக தள்ளியவன்,
“போடா… எல்லாம் பேசிட்டு என்ன பெருசா கட்டிப் புடி வைத்தியம் பண்ண வர? போ.. கண்ணு முன்னாடி இருக்காத. அறைஞ்சிட கிறைஞ்சிட போறேன்” என்று ஆத்திரம் குறையாமல் சொன்னவன்,
மீண்டும் அவன் சட்டை காலரை பற்றிக் கொண்டு “உனக்கு யாருமில்லைன்னு இன்னொரு தடவை சொன்னேன்னா பேச வாயே இல்லாம பண்ணிடுவேன்” என்று கத்தி விட்டு மேலேறி சென்று விட்டான்.
பத்து வயதில் இருந்து மாதவன் அடைத்து வைத்த கோபமும், ஆத்திரமும் மொத்தமாக கரையுடத்து இருந்தது இன்று. அருண் சொல்ல வந்ததில் அனைவருக்கும் கோபம் தான். ஆனால், மாதவன் உடைந்து விட்டது அவனின் பேச்சிலேயே புரிந்தது.
“அனுமா நான்…” என்று அவரிடமும் எதையோ விளக்க முயல, “இன்னொரு நாள் பேசிக்கலாம்ங்க. அவனை இப்ப ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப சொல்லுங்க” என்று அவனை தவிர்த்து கணவரிடம் சொன்னவர்,
“இருந்தா நானும் கைய ஓங்கிட போறேன்” என்று கூறி அருணை முறைத்து விட்டு எழுந்து சென்று விட்டார்.
“இனி இப்படி பேசாதீங்க அருண்ணா. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று ஸ்வப்னாவும் வருந்த, அனைவரையும் நோகடித்து விட்டோம் என்று புரிந்து போனது அவனுக்கு.
அருணின் தோளில் தட்டிக் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி “ரிலாக்ஸ் அருண்” என்றவர்,
“நீயும் இந்த வீட்டு பையன்னு மறந்திட வேண்டாம்” என்று மட்டும் சொல்லி விட்டார் அழுத்தமாக.
“சாரிப்பா. பேச வந்ததை ஒழுங்கா பேச முடியல” என்றவன், “எல்லாருக்கும் என் மேல கோபம். புரியுது. எல்லாரும் என்னை தாங்கும் போது நான் மட்டும் தனின்னு பேசி இருக்கக் கூடாது. வேணும்னு பேசல. எதோ தற்செயலா தான்” என்று தடுமாறியவன்,
இருந்தால் மேலும் எதையாவது நிதானமின்றி உளறுவோம் என்று “வரேன் ப்பா. இன்னொரு நாள் பேசலாம். டைம் ஆச்சு” என்று கிளம்பி விட்டான்.
காயம் கொண்ட மனதுடன் ஆளுக்கொரு பக்கம் செல்லும் அனைவரையும் பார்த்த கிருஷ்ணமூர்த்தி “சீக்கிரம் எல்லாரும் சரியாகனும்” என்று பெரு மூச்சொன்றை வெளியேற்றினார்.