“எல்லாரும் ஒண்ணா சேர்ந்து குல தெய்வக் கோவிலுக்கு போகனும்னு தான ஞாயித்துக் கிழமை ஊருக்கு போகலாம்னு இருந்தோம். இப்ப வந்து வர முடியாது. வீட்டுக்கு தூரம்னு நின்னா என்னடி அர்த்தம்” என்று பேத்தியை வாங்கு வாங்கென்று வாங்கிக் கொண்டிருந்தார் அழகம்மை!
அன்று பத்பநாபனின் மொத்த குடும்பமும் அவர்களின் குலதெய்வக் கோவில் இருக்கும் சொந்த ஊரான அழகாபுரம் செல்வதாக இருந்தது.
நிகேதனின் மனைவி சந்தியாவிற்கு நிறை மாதம் நெருங்கி விட்டதால் அவள் மட்டும் வர வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர் வீட்டினர்.
அவளுக்கு துணையாக நிகேதன் தான் உடன் இருப்பதாக கூற, “வீட்டுக்கு தலப் பிள்ளை. நீயே வரலைன்னா என்னடா அர்த்தம். அதெல்லாம் இல்ல. எல்லாரும் போறோம். சந்தியாக்கு துணையா அவுங்க வீட்டாளுங்களை வந்து இருக்கச் சொல்லு. கூடவே நம்ம கௌதம் இருக்கானே” என்று குணநாதனின் மகனை சொன்னவர்,
“அவன் தான் எதோ முக்கியமான வேலை. என்னால வர முடியாது. ஆஃபிஸ் போயே ஆகனும்னு நிக்கிறானே. அவன் இருக்கான்ல. சந்தியா அம்மா அப்பாவும் வந்தா சரி தான. நாம எல்லாரும் ரெண்டு நாள் போய் சாமிய கும்பிட்டு பூஜை முடிச்சிட்டு வந்திடலாம். உறுதியா எல்லாரும் போகனும்” என்று முடிவாக சொல்லி இருந்தார் அழகம்மை.
கௌதமிடமும் மிரட்டி இருந்தார் தான். “ஞாயித்து கிழமை உனக்கென்னடா வேலை? நீயும் வர” என்று அவனிடமும் கட்டளையுடன் சொல்லி இருக்க,
“பாட்டி.. சண்டே ஆஃபிஸ் லீவ் தான். ஆனா, அடுத்த நாள் ஒர்க் இருக்கு. லீவ் எடுக்க முடியாது. ஐ.டி. ஃபீல்ட்ல நீங்க நினைக்கிற எல்லாம் லீவ் கேட்க முடியாது பாட்டி. பிளீஸ்” என்று அழகம்மைக்கு பயந்து கெஞ்சியே விட்டான்.
அவ்வளவு தூரம் கெஞ்சியதால் அவனை விட்டு விட்டார் அழகம்மை. அவருக்கு இந்தக் குல தெய்வ வழி பாட்டில் குடும்பம் மொத்தமும் இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அவரின் பேத்தி தென்றல் மீனா வந்தே ஆக வேண்டும் என்று இருந்தார்.
அவளுக்காக தான் செல்வதே.. பின்னே அவள் வராமல் எப்படி?
காலை அனைவரும் கிளம்புவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, தென்றல் மீனாவோ “எனக்கு பீரியட்ஸ் பாட்டி. நான் வர முடியாது” என்று சொல்லி இருந்தாள்.
கேட்டதும் தான் குதித்துக் கொண்டிருக்கிறார் அழகம்மை.
“இதை அன்னைக்கே சொல்றதுக்கு என்னடி? நாள் கணக்கு உனக்கு தெரியும் தான. சொல்லி இருந்தா வேற தேதி அப்ப போய் இருக்கலாம் தான” என்று திட்டித் தீர்க்க,
“ஆமா… கிளம்புற நேரத்துல வந்து சொல்லு…” என்று எரிச்சல் கொண்டவர்,
“உனக்காக தான்டி போறதே. இப்ப இப்படி வந்து சொல்ற” என்று கோபம் போய் ஆயாசத்துடன் கேட்க, தென்றல் மீனாவிற்கும் பாவமாய் இருந்தது அவரைக் காண.
தனக்காகவென அனைத்தும் ஏற்பாடாகி இருக்க, இப்போது தானே வர முடியாத சூழல் உருவாகியுள்ளதை எண்ணி அத்தனை வருத்தம் கொண்டாள்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் சங்கடமாக இருக்க, வெங்கடேசன் தான் மகள் கவலை கொள்வது பொறுக்காமல் “விடுங்கம்மா. இப்ப என்ன? இன்னொரு நாள் போனா ஆகாதா? எதுக்கு அவளை திட்றீங்க” என்று தாயிடம் சிடுசிடுக்க,
“நீ சும்மா இருடா. எப்பப்பாரு அவளைச் சொன்னா உனக்கு பொங்கிரும்” என்று மகனையும் வைத்து வாங்கியவர்,
“ஊர்ல நம்ம பூசாரிக்கு போன் பண்ணி நாளைக்கு கோவில்ல பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாடும் பண்ண சொல்லியாச்சு. ஊர்ல இருக்க வேலை ஆளுங்க கிட்ட வீட்டையும் துடைச்சு சுத்தம் பண்ணி வைக்க சொல்லியாச்சு. இப்ப வந்து இன்னொரு நாள் போலாமான்னா நல்லாவா இருக்கும்?” என்று கேட்க,
“சரி… அப்ப மீனு அக்காவையும் கூட்டிட்டு போகலாம்” என்றான் நவீன். கனிஅமுதனின் மற்றொரு இரட்டை மகன்.
“கூறு கெட்டு பேசாத” என்று அவனை அதட்டிய அழகம்மைக்கே என்ன செய்வதென்று புரியாத நிலை!
இந்த குல தெய்வக் கோவில் பூஜை வழிபாடு தென்றல் மீனாவிற்காக, அவளின் நலனிற்காக தான் என அத்தனை நம்பினார் அழகம்மை.
அதுக்கு முழு காரணம் நடந்து முடிந்த அனர்த்தனங்கள் தான்!
அன்று ஹோட்டலில் விதார்த்தை கண்டதையும், அதன் பின்னர் நடந்தவையையும் பத்பநாபன் கூறி முடித்ததும் அனைவரின் முகத்திலும் பேரதிர்ச்சி!
சிறு குண்டூசி விழுந்தாலும் பெரும் ஓசையை கிளப்பும் அளவிற்கு அவ்வளவு அமைதியாக இருந்தது மொத்த வீடும்.
அதுவும் பாறையை விட மோசமாக இறுக்கம் பெற்றிருந்த முகத்துடன் அமர்ந்திருக்கும் தென்றல் மீனாவை காணவே அனைவருக்கும் அச்சம் நெஞ்சை அடைத்தது.
திகுதிகுவென எரிந்த வலது கையை மூடியும் பிரித்தும் பார்த்துக் கொண்டிருந்தவளின் உள்ளத்தில் கோடி அலைகளின் சீற்றம்! கூடவே குடும்பம் மொத்தமும் கலங்கிப் போய் இருப்பதை கண்டு உள்ளுக்குள் உடைந்து போனாள்.
அனைவருக்கும் விதார்த்தின் மற்றொரு பக்கம் தெரிய வந்ததில் உள்ளம் கொதித்தாலும், ஒரு வேளை இவனுடன் திருமணம் நடந்திருந்தால்… எனும் எண்ணமே அவர்களை அமைதியிழக்க செய்தது.
கட்டிக் கொடுத்த பின்னர் இந்தக் கூத்தெல்லாம் தெரிய வந்திருந்தால்… நினைத்துக் கூட பார்க்க முடியாத அபாய காட்சியாய் இருந்தது அந்த நினைப்பே!!!!
அனைவருக்குமே இப்படி என்றால் , இப்படி ஒருவனை தன் உயிராய் இருந்த பெண்ணிற்கு மாப்பிள்ளையாக கொண்டு வந்து நிறுத்திய வெங்கடேசனிற்கு எப்படி இருக்கும்?
கண்ணாடிச் சில்லாய் உடைந்து சிதறிப் போனார். நிலை குத்திய பார்வையோடு மகளையே அவர் பார்த்திருக்க அவரின் அமைதியே அவர் எவ்வளவு தூரம் கதிகலங்கி போய் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.
தன் கண் முன்னே வளர்ந்தவன். நல்லவன்.. என்ற நம்பிக்கையில் தானே அவனை தன் பெண்ணிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தது.
இப்போது அவனின் தரக்குறைவான குணம் அறிந்ததும் ஆடிப் போனார் வெங்கடேசன். நிச்சயம் முடிந்து மீனுவை அவனுக்கே கட்டிக் கொடுத்திருந்தால்…… நினைக்க நினைக்க நெஞ்சில் கத்தியை சொருகியது போலிருந்தது.
அவளால் தந்தையின் உள்ளப் போராட்டத்தை உணர முடிந்தது. அவரின் கலங்கி சிவந்த முகத்தை கூட திரும்பி பார்க்க தைரியம் இல்லை அவளுக்கு.
முயன்று அவரின் முகம் பார்க்க, கலங்கி போய் “மீனு” என்று உடைந்தவர் மகளையும் உடைத்து இருந்தார்.
எவ்வளவு முயன்றும் தென்றல் மீனாவால் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.
அருகே அமர்ந்து இருந்த வசுந்தராவின் தோளில் முகம் புதைத்தவளிடம் சத்தமின்றி ஒரு கேவல் வெடிக்க, அனைவரும் துடித்து விட்டனர்.
அவள் அழுவதில் வெங்கடேசனிற்கும் உயிர் துடித்து விட்டது. இத்தனை உடைந்து அழும் ரகம் இல்லை இருவரும். அங்கிருக்கும் அனைவருக்கும் அது தெரியும்!
ஆனால், இருவரின் வேதனையும் ஒருவரை ஒருவர் கடுமையாக பாதிக்க கண்ணீர் மட்டுமே அங்கே பிரதானமாக இருந்தது.
வசுந்தரா நெஞ்சம் பதற மீனுவின் தலையை கோதி “என்ன மீனு?” என்று அவள் உடைந்து அழுவது பொறுக்காமல் தானும் அழுது விட,
“என்ன இது? ஏன் இப்படி எல்லாம் ஆகணும்” என்று பார்வதி ஆற்றமாட்டாமல் வருந்த, சட்டென்று கண்களை துடைத்துக் கொண்ட தென்றல் மீனா எழுந்து வெங்கடேசனின் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள்,
“சாரிப்பா…. நான் தான்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்று அழுக, “நீ என்ன மா பண்ண? நான்.. நான் தானே அந்த அயோக்கிய ராஸ்கலை…” என்று அழுகை போய் ஆத்திரத்தில் பல்லை கடிக்க,
“இல்லப்பா… நீங்க கேட்டப்பவே நான் வேணாம்னு சொல்லி இருந்தா.. இங்க வரைக்கும் வந்து நின்னிருக்காது” என்றவள்,
“தப்பு.. நான் தான் தப்பு பண்ணிட்டேன். தெளிவா சொல்லி இருக்கணும். இப்ப… என்னால உங்களுக்கு.. வீட்ல எல்லாருக்கும் கஷ்டம்.. சங்கடம்” என்று சொல்லி சொல்லி வருத்தப் பட,
“அட விடுங்க ரெண்டு பேரும். இப்படி மாத்தி மாத்தி அழுது பேசினா ஆச்சா. அந்த கேடுகெட்டவனை தான் நல்லா சாத்திட்டு வந்துட்டல்ல. இனி அவனைப் பத்தின பேச்சு வேணாம்” என்று தன்னை மீட்டுக் கொண்டு அதட்டிய அழகம்மை,
“என்னவோ… உன் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்து இந்த வீட்ல ஒளியே குறைஞ்சு போச்சு” என்றவர், “முதல்ல எல்லாரும் கண்ணைத் துடைங்க. ஒரு பொறுக்கி பண்ணதுக்கு இங்க யாரும் அழுது வெள்ளத்தை உண்டு பண்ண வேணாம்” என்றார் ஓங்கிய குரலில்.
அவரின் திடத்தில் தான் அனைவரும் சற்றே தெம்பாய் உணர்ந்தனர். “டேய் வெங்கடேசா… இப்ப என்ன? நீ கேட்ட.. உனக்காக மீனு ஒத்துக்கிட்டா. அது சரி வரலை. இனி ஆக வேண்டியதை பாக்கணும். இப்படி அழுதுட்டு இருந்தா ஆச்சா? இங்க பாரு மீனுவ… அவளுக்காகவாவது நீ தைரியமா இருக்க வேணாமா?” என்று மகனையும் அரட்ட அவரும் கண்களை துடைத்துக் கொண்டார்.
“அவனை சும்மா விடப் போறதில்லை” என்று விதார்த்தை கொன்று புதைக்கும் ஆத்திரத்தோடு வெங்கடேசன் கூற,
“வேண்டாம் ப்பா. ப்ளீஸ்… இனி அவனைப் பத்தின பேச்சு கூட வேண்டாம்” என்றவள், தந்தையின் கைகளை பற்றிக் கொண்டு “எனக்கு இன்னொரு விஷயம் உங்க கிட்ட கேக்கணும் ப்பா. கேட்கவா?” என்று அனுமதி வேண்ட, அவள் கேட்ட விதமே நெஞ்சை பொசுக்கியது.
விதார்த்துடனான திருமண பேச்சு, அவனின் செய்கைகள், நடத்தைகள் என ஒவ்வொன்றும் அவளின் மனதை வெகுவாக கலங்கடித்து தளர்ந்து போக செய்திருக்க திருமணம் எனும் சொல்லை கூட சிறிது நாட்கள் கேட்க விரும்பவில்லை அவள்!
எனவே தான் முன்பு தந்தையிடம் தெளிவாக சொல்லாமல் தான் செய்த தவறை இப்போது செய்ய விரும்பவில்லை.
மனம் திறந்து அவரிடமே இப்போதைக்கு திருமண பேச்சு வேண்டாம் என்று விட்டாள். வெங்கடேசனிற்கும் மகளின் மனம் புரிந்தது.
தானும் முன்பு செய்த தவறையே செய்து விடக் கூடாது எனும் பெரும் கவனத்தோடு “சரி மீனும்மா….” என்று விட்டார்.
ஆனால், மகளிடம் சொல்லியதை போல அவர்களை அப்படியே விட மனம் துளியும் இல்லை அவருக்கு. மீனுவிற்கு தெரியாமல் சாத்தப்பனின் இல்லத்திற்கே சென்று அவரின் கழுத்தை பிடித்து விட்டார்.
“அப்பனும் மகனும் சேர்ந்து நாடகமாடி ஏமாத்தவா பாக்குறீங்க? எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நம்பிக்கையா தான் உன் கூட நான் உறவு பாராட்டி இருந்தேன். அந்த நம்பிக்கைல தான் நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்த பையன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். பொறுக்கிய வளத்து நான் உயிரா வளத்த மகளுக்கு கட்டி எங்க வீட்டு சம்மந்தி ஆகி உன்னோட கௌரவத்தை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கணும்னு நீ நினைச்சு இருக்க?” என்று அடிக்காத குறையாய் பேசியவர்,
“இனி உன்னோட கௌரவம் என்ன ஆகுதுன்னு பாரு! கேட்பாங்க தானே ஊருக்குள்ள.. ஏன் நிச்சயம் நின்னு போச்சுன்னு… உன் மகனோட அருமை பெருமை பத்தி சொல்லி வைக்கிறேன்” என்றவர்,
“எப்படியும் உன் மகனை எங்கேயாவது ஒளிஞ்சுக்க சொல்லி இருப்ப. அவன் என்னைக்கு என் கண்ணுல படுறானோ அன்னைக்கு என் பொண்ணு உடைச்சது போக மிச்ச பல்லோட முகத்தையும் பேத்துடுவேன்” என்று மிரட்டி விட்டுத் தான் ஓய்ந்தார்.
நண்பனின் இந்த உக்கிர அவதாரத்தில் சாத்தப்பன் அரண்டே போனார்.
மேலும் நிச்சயம் ஏன் நின்றது என்று கேட்கும் அனைவரிடமும் உண்மையை சொல்லப் போகிறேன் என்று சொன்னதும் ஆடித் தான் போனார் சாத்தப்பன்.
வாயைத் திறந்து பேசக் கூட முடியவில்லை. எங்கே பேச? வெங்கடேசன் கழுத்தொடு நெரித்து அவரை கொல்லாத குறையாக அல்லவா நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தன்னை நிற்க வைத்த தன் மகனின் மீது எல்லை கடந்தது அவரின் ஆத்திரம்.
நடந்த அனைத்தையும் விதார்த்தே அவரிடம் சொல்லி இருக்க, “எல்லாம் போச்சா… இனி கனவுல கூட அந்த வீட்டு மாப்பிள்ளை ஆக முடியாது நீ. என்னோட எண்ணமும் நடக்காது. நல்லா பண்ணி இருக்கடா.. ஊட்டிலயே கூத்தடிச்சி முடிச்சிட்டு வந்திருக்க வேண்டியது தான. இங்க வந்தும் ரூம் வேற போட்டு கூத்தடிச்சது பத்தாதுன்னு அவுங்க ரெண்டு பேர் கண்ணுல வேற மாட்டி இருக்க” என்று மகனிடம் எரிந்து விழ மட்டுமே முடிந்தது அவரால்.
விதார்த்திற்கு தந்தையின் புலம்பலில் கவலை இல்லை போலும்.. “எப்படியாவது பேசி சரி கட்டி மீனு ஃபேமிலியை கன்வின்ஸ் பண்ணி அவளை எனக்கு கட்டி வைங்க. காலத்துக்கும் என் காலடில தான் கிடக்கணும் அவ. பல்லை பேத்துட்டு போய் இருக்கா. கூடவே வச்சு அவளை நான் ஆட்டிப் படைக்கணும்” என்று அவன் தந்தையிடம் கொந்தளித்தான்.
இதனை சொல்லி முடிப்பதற்குள் வாயெல்லாம் வலி எடுத்து உடைந்த பற்களின் இடத்தில் இருந்து இரத்தம் கசிய ஆரம்பித்து இருந்தது அவனுக்கு.
பேசவே முடியவில்லை. வாய் அவ்வளவு வலிக்க வார்த்தைகள் குளறுபடியாக வெளிவந்தது விதார்த்திடம்.
மகன் சொன்னதை கேட்ட சாத்தப்பனிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“கன்வின்ஸ் பண்ணி கட்டி வைக்கணுமா? வச்சிட்டு தான் மறு வேலை பாப்பாங்க பாரு. வெங்கடேசனுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன செய்வான்னு பயந்து நான் இங்க வயித்துல நெருப்பை கட்டிட்டு சுத்திட்டு இருக்கேன். உனக்கு மறுபடியும் மீனாவை கட்டி கொடுத்து அவளை ஆட்டிப் படைக்கணுமா? பாத்த தான… ஒன்னு விட்டதுக்கே பல்லு போய் வந்து நிக்கிற? இதுல நீ அவளை ஆட்டிப் படைக்க ஆசைப் படுற? எனக்கு தெரிஞ்ச வரை அவ வெங்கடேசனோட மறு உருவம். ரொம்ப தைரியமான பொண்ணு. அப்படித்தான் அவன் வளத்து இருக்கான்” என்று மகனுக்கு ஒவ்வொன்றாய் எடுத்து சொன்னவர்,
“ஒழுங்கா நான் சொல்றதை கேளு … எங்கேயாவது கொஞ்ச நாள் கண்காணாத ஊரா போய் இருந்திடு. இங்க வெங்கடேசன் கண்ணுல மாட்டுன… மிச்ச இருக்க பல்லையும் கைல தட்டி கொடுத்திடுவான்” என்று மகனை எச்சரித்தார் சாத்தப்பன்.
“நீங்களும் பூச்சாண்டி காட்டுறீங்க தான. முடியாது. நான் எங்கேயும் போக மாட்டேன். வரட்டும் அந்த ஆள். அவர் கிட்ட சவால் விட்டு அந்த ஆளோட பொண்ணை கட்டிக் காட்டுறேன்” என்று விதார்த் பல் வலியோடு சபதம் போட,
“பட்டுத் திருந்து. இனி நான் உனக்கு எச பாட்டு பாடிக்கிட்டு இருக்க மாட்டேன். இருந்தா என் பேர் கௌரவம் அந்தஸ்து எல்லாம் கெட்டு போய்டும். யாராவது ஏதாவது கேட்டா எனக்கு மகனே இல்லை என்று போய்க்கிட்டே இருப்பேன்” என்று தண்ணீர் தெளித்து தலை முழுகாத குறையாக மகனை விட்டு விட்டார் சாத்தப்பன்.
ஆனாலும் அவனை மிரட்டி சென்னையில் இருக்க வேண்டாம் என ஊட்டிக்கே அனுப்பி வைத்து விட்டார். அதையும் சரியாக கணித்து சொன்ன வெங்கடேசனை அச்சம் துளிர்க்க பார்த்தவர்,
“அவசர பட வேண்டாம் வெங்கடேசா. நான் பெத்த பொறுக்கி ராஸ்கல் இப்படி பண்ணுவான்னு நானும் நினைக்கல” என்று சமாளிக்க பார்க்க,
“போதும்” என்று கர்ஜித்த வெங்கடேசன் “நீ பெத்த பொறுக்கிய என் கண்ணுல படாம இருக்க சொல்லு. பட்டான்… செத்தான்..” என்று கடுமையாக எச்சரித்து விட்டு அதற்கு மேல் அங்கு நிற்கக் கூட பிடிக்காமல் கிளம்பி விட்டார்.
இங்கு வரும் போதே தெரிந்தது விதார்த் அங்கே இல்லை என. இருந்திருந்தால் அவனின் எலும்புகளை எண்ணி இருப்பார். தன் பெண்ணையும் தங்களின் குடும்பத்தையும் ஏமாற்ற இருந்தவனை கொன்று குவிக்கும் ஆத்திரம்.
ஒரு வேளை அன்று அந்த ஹோட்டலில் தந்தை அவனை பார்க்காமல் விட்டிருந்தால் அவனின் மற்றொரு பக்கம் கண்ணுக்கு தெரியாத நிலையிலேயே இருந்திருக்கும்.
நினைக்கவே ரணமாக இருந்தது. நல்ல வேளை எதுவும் தவறாக நடந்தேறவில்லை என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டவர் மகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருமணப் பேச்சை எடுக்கவே இல்லை. ஆனால், இந்த முறை நடந்தது போல் அடுத்த முறை இருந்து விடக் கூடாது, மிகவும் கவனமாக மாப்பிள்ளை குறித்து அனைத்தும் விசாரித்து தெரிந்து கொண்ட பின்னர் தான் வீட்டில் திருமண பேச்சை குறித்து ஆரம்பிக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்தார்.
தந்தை தன்னை புரிந்து கொண்டு திருமணப் பேச்சை எடுக்காதது குறித்து மீனாவிற்கும் பெரும் நிம்மதி. அவளின் நிம்மதியில் மற்றவர்களும் நிம்மதி அடைய, வீடும் பழைய கலகலப்புடன் கலை கட்டியது.
ஆனால், அழகம்மை தான் நடந்த அனைத்தையும் எண்ணி கலங்கி அவர்களின் குடும்ப ஜோதிடரிடம் சென்று அனைத்தையும் சொல்லி புலம்பி இருந்தார்.
“உங்க பேத்தியோட கல்யாணம் தடங்கள் இல்லாம நடக்காது. தடங்கள் வரும். அதுவும் உங்க குடும்பத்துல ஒருத்தராலயே” என்ற ஜோதிடர்,
“எதுக்கும் குடும்பமா எல்லாரும் உங்க பேத்தியை கூட்டிட்டு உங்க குல தெய்வக் கோவில்ல போய் பூஜை பண்ணிட்டு வந்திடுங்க” என்று சொல்லி அனுப்பி இருந்தார்.
அதன் பொருட்டே அழகாபுரம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார் அழகம்மை. குடும்பத்தில் அனைவருக்கும் ஒன்றாக செல்வது சந்தோஷமாக இருக்க, தென்றல் மீனா இப்போது வர முடியாது போனதில் அனைவருக்கும் செல்ல வேண்டுமா என்று தான் இருந்தது.
வசுந்தரா அழகம்மையிடம் “நானும் இருக்கேனே அத்தை.. நீங்க போய்ட்டு வாங்க. நான் எதுக்கு?” என்று கேட்க, அவரை ஏகத்திற்கும் முறைத்தவர்,
“அதென்ன நான் எதுக்கு? நீ இந்த வீட்டு மருமக. நீயும் தான் வர” என்று அவரின் வாயை அடைத்து விட்டவர், பேத்தியிடம் திரும்ப ,
“ஐயம் ஹெல்ப்லெஸ் பாட்டி. சாரி.. நீங்க எல்லாம் போய்ட்டு வாங்க. நான் இன்னொரு நாள் வரேன். அண்ணிக்கு துணையா நான் இங்க இருக்கேன்” என்றாள்.
அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை. குடும்பமாக செல்ல அவளுக்கும் ஆசை தான். குடும்பத்தோடு செல்லும் சொந்த ஊரிற்கான பயணத்தை அவளுமே வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்க, தன் மாதாந்திர பிரச்சனை தடையாக அமையும் என்று எண்ணி இருக்கவில்லை.
அவள் சொன்னதை கேட்ட அழகம்மை “ம்ம்.. நீயில்லாம எப்படி மீனு?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்க,
“இப்ப எதுக்கு அழகு கவல படுற. இந்த முறை நாம போய்ட்டு வருவோம். இன்னொரு தடவ அவளையும் கூட்டிட்டு போகலாம். சாமிக்கின்னு கிளம்பியாச்சு. இனி எதுக்கு எல்லாத்தையும் நிறுத்தனும்?” என்று பத்பநாபன் மனைவிக்கு புரிய வைக்க,
“சரி.. இப்போதைக்கு நாம போய் வரலாம்” என்று அரை மனதாக சொன்னவர், “அடுத்த முறை போகும் போது எல்லாரும் இருக்கணும்.. இப்பவே சொல்லிட்டேன்” என்று உறுதியுடன் கூறி விட்டார்.
அதன் படி கௌதம், சந்தியா, தென்றல் மீனா வீட்டில் இருக்க மற்றவர்கள் கிளம்பி இருந்தார்கள்.
சந்தியாவிடம் அத்தனை பத்திரங்கள் சொல்லி இருந்தான் நிகேதன். “நாளைக்கு உனக்கு லாஸ்ட் ஸ்கேன் வேற இருக்கு சந்தியா. உங்க அம்மா அப்பா வந்திடுவாங்க தான. பத்திரமா அவுங்க கூடபோய்ட்டு வா. நம்ம ட்ரைவர் இருக்கார்” என்று சொல்லி,
“அதனால என்னங்க? போய்ட்டு வாங்க. இன்னைக்கு சாய்ந்தரமே அம்மாவும் அப்பாவும் இங்க வந்துடுவாங்க. மீனுவும் இருக்கா. கௌதமும் இங்க தான். இவ்ளோ பேர் இருக்கும் போது என்ன பயம்? அனுஜா டாக்டர் கொடுத்த டேட்கும் இன்னும் இருபது நாள் இருக்கு. பயப்படாம நிம்மதியா போய் எங்களுக்கும் சேர்த்து கும்பிட்டு வாங்க” என்று கணவனுக்கு தைரியம் கூறி இருந்தாள் சந்தியா.
“அனுஜா டாக்டர்ன உடனே தான் நியாபகம் வருது சந்தியா. அவுங்க ஃபாரின்ல இருந்து வந்துட்டாங்களாம். நாளைக்கு ஸ்கேன்காக அப்பாயின்மெண்ட் வாங்குறதுக்கு ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி கேட்கும் போது சொன்னாங்க. நாளைக்கு அவுங்க தான் ஸ்கேன் பண்ணுவாங்க. கால் வேற ரொம்ப வீங்குது. எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணி பாத்திட்டு வந்துடுங்க. சரியா?” என்று ஒவ்வொன்றாய் மனைவிக்கு சொல்லி இருந்தான்.
அவனின் புலம்பலில் தென்றல் மீனா அலுத்துக் கொண்டு “அண்ணா… ஏன் இப்படி பயந்து எங்களுக்கும் பயம் காட்டுறீங்க அண்ணி பேபி ரெண்டு பேரையும் பத்திரமா நான் பாத்துக்கிறேன். நீங்க பயமில்லாம போய்ட்டு வாங்க” என்று தானும் அண்ணனுக்கு தைரியம் கூறி அனுப்பி வைத்தாள்!
ஆனால், அண்ணனுக்கு கொடுத்த தைரியம் எல்லாம் மறு நாளே சந்தியாவை மருத்துவமனையில் அனுமதித்ததும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருந்தது.