ஆறு தளங்களிலும் இருந்த மொத்த நகைகளும் மேல் தளத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அனைத்து நகைகளையும் மீண்டும் ஒரு முறை எடை போட்டு பார்த்துக் கொண்டிருந்தனர் குறிப்பிட்ட முக்கிய ஊழியர்கள்!
நடுநாயகமாக தென்றல் மீனா கைகளை கட்டிக்கொண்டு நின்று அனைத்தையும் பார்வையிட்டு கொண்டிருந்தாள் ஆழமான பார்வையுடன்.
அந்தப் பார்வையில் நிச்சயம் அனைவருக்குமே குளிர் எடுத்தது. இன்று அந்த ஐம்பது சவரன் திரும்பாவிட்டால் நிச்சயம் அனைவரும் ஒரு வழி ஆகி விடுவர் என்பது அத்தனை திண்ணம்!
ஒன்றிரண்டு ஊழியர்கள் “எவன் சுறுட்டிட்டு போனான்னு தெரியல! இதுல இந்த அம்மா நம்மள உக்கார வச்சு உயிரை எடுக்குது!” என்று தங்களை போக விடாமல் தடுத்து வைத்திருந்ததில் புலம்பித் தள்ளினர்.
மீண்டும் எடையை சரி பார்த்ததில் முருகேசன் சொன்னது போல் ஐம்பது சவரன் குறைவாக இருந்தது உறுதியானது.
“இதெப்படிமா மீனு?” என்று பத்மநாபன் குழப்பமாய் பேத்தியிடம் கேட்க, “பாக்கலாம் தாத்தா” என்றவள், இரண்டு ஸ்டாப்களிடம் “அந்த பெரிய நெக்லஸ் எடுத்திட்டு வாங்க” என்று உத்தரவிட்டாள்.
அவர்களும் எடுத்து அவளிடம் கொடுக்க கைகளில் வாங்கும் பொழுதே அதன் எடையை உணர்ந்தவள் கூர்மையாக அந்த நெக்லஸை ஆராய்ந்தாள்.
அந்த நெக்லசின் டாலர் பகுதியில் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு இலை வடிவினாலான சின்ன பாகம் மட்டும் காணாமல் போய் இருந்தது.
“இதுல ரெண்டு லீஃப் டிசைன் மிஸ் ஆகுது தாத்தா” என்று பத்மநாபனிடம் நீட்ட, அவரும் தனது கண்ணாடியை ஒரு முறை துடைத்து பின் அணிந்து கொண்டு பார்த்தார்.
“ஆமா மீனு… சரியா ரெண்டு மட்டும் காணாம போய் இருக்கு” என்றவர் முருகேசனிடம் “இந்த நெக்லசோட கேட்டலாக் புக்கை கொண்டு வா முருகேசா” என்றார்.
சற்று நொடிகளில் முருகேசனும் கொண்டு வந்து கொடுக்க, அதனை வைத்து சரி பார்த்தவர்களுக்கு புரிந்து போனது பெரிய பெரிய நகைகள் காணாமல் போகவில்லை. மாறாக அந்நகைகளில் இருந்து சின்ன சின்ன உதிரி பாகங்கள் தான் காணாமல் போய் இருக்கிறது என!
அதே போல் மற்றுமொரு நெக்லஸில் சின்ன சின்ன தங்க முத்துக்கள் காணாமல் போய் இருந்ததது.
செயின்களில் அதனுடைய ‘S’ டைப் மற்றும் ‘M/W’ வகை ஹூக்” காணாமல் போய் இருந்தது!
அந்தந்த நகைகளின் கேட்டலாக் புத்தகத்தை கொண்டு வந்து பார்த்தபொழுது இன்னும் எந்த எந்த பாகங்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது என்று தெளிவாக கண்டு பிடித்தனர்.
கிட்டத்தட்ட இது போன்ற நுட்பமான சின்ன சின்ன பாகங்களையும், வடிவமைப்புகளையும் மட்டும் பெரிய பெரிய நகைகளில் இருந்து பிரித்தெடுத்து இருக்கின்றனர். மிகவும் தந்திரமான செயல்பாடு தான்!
தென்றல் மீனா அங்கிருப்போர் அனைவரையும் நிமிர்ந்து பார்வையால் அலச ‘ நிச்சயம் நாங்கள் இல்லை ‘ என்னும் முக பாவனை தான் அனைவரிடமும் தென்பட்டது!
அது சரி…
யார் தான் நாங்கள் திருடினோம் என்று ஒத்துக் கொள்வார்கள்..
அப்படி பகிரங்கமாக அனைவரின் முன்பும் ஒப்புக் கொள்ளப்படும் விஷயமா நடந்து இருக்கிறது??
பத்மநாபன் ஊழியர்களைக் கண்டு “எப்படி இப்படி நடந்தது? யாரோட கவனத்துக்கும் இது வரலையா? எத்தனை நாளா நடக்குது இது? இப்படி சின்ன சின்ன டிசைனிங் கோல்ட் மெட்டீரியல மட்டும் விவரமா உருவி எடுத்திருக்கானுங்க?” என்று கடும் கோபத்துடன் கேட்டுக் கொண்டிருக்க,
சாந்தமான அம்மனிதரின் கோபம் கண்டே அனைவரும் நடுங்கிப் போயினர். இனி வெங்கடேசனும் வந்து அவருக்கும் விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற நினைப்பே அவர்களை இன்னும் பயத்தில் ஆழ்த்தியது!
இதை எல்லாம் விட இப்போது தங்கள் முன்னர் நிற்கும் தென்றல் மீனாவை நினைத்து பேச்சும் மூச்சும் நின்று விடுவது போலிருந்தது அனைவருக்கும்.
வெங்கடேசனின் ‘மினி வெர்ஷன்’ தான் அவரின் மகள் தென்றல் மீனா என அனைவரும் அறிந்தவர்கள் ஆயிற்றே!
“எல்லாரும் பதில் சொல்லாம இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நின்னா என்ன அர்த்தம்?” என்று பத்மநாபன் மீண்டும் கோபமாக கேட்க, அவரின் மூன்றாவது மகன் கனிஅமுதன் வந்து விட்டார் அங்கே!
கூடவே வெங்கடேசனின் மகன்களான நிகேதனும் முகுந்தனும் வந்து சேர்ந்திருந்தனர்!
அண்ணன்களை கண்டதும் தென்றல் மீனா “நீங்களும் வந்தாச்சா அண்ணா?” என்று இருவரிடமும் பொதுவாக கேட்க,
முகுந்தன் தங்கையிடம் “அப்பா கிட்ட சொல்ல வேணாம்னு ஏன் மீனு சொன்ன? நாளைக்கு அப்பா வந்ததும் இந்த பிரச்சனை தெரிய வந்தா ரொம்ப கோபப்படுவாங்க” என்றான் தந்தையின் கோபம் உணர்ந்து.
முகுந்தனின் கேள்விக்கு பத்மநாபனிடம் சொன்ன அதே பதிலை சொன்னவள், “வரட்டும் ண்ணா. நாளைக்கு நான் சொல்லி சமாளிச்சுக்குறேன்” என்று விட்டாள் முடிவாக.
அதற்கு மேல் அண்ணன்காரனும் அவளை வற்புறுத்தவில்லை! எப்போதும் அவள் சொல்லிலும் செயலிலும் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்பதால் அவள் சொல்லியதை ஏற்றுக் கொண்டனர் இருவருமே!
பத்மநாபன் இன்னமும் ஊழியர்களிடம் இரைந்து கொண்டிருந்தார்! அதனைக் கண்ட கனிஅமுதன் “அப்பா நீங்க போங்கப்பா. நாங்க வந்தாச்சு தானே. நாங்க பாத்துக்கிறோம்” என தந்தையிடம் சொல்ல,
“இல்லடா இது என்னன்னு தெரிஞ்சுக்காம எப்படி போக முடியும்? எல்லாம் பக்காவா பண்ணி இருக்காங்க! காணாம போனது என்னமோ அம்பது பவுன். ஆனா அத்தனையும் சின்ன சின்ன உருப்படிங்க” என்றார் ஆதங்கமும் கோபமுமாய்.
“வெரி க்ளெவர் அண்ட் ஸ்மார்ட்!” என்று தென்றல் மீனா கூறவும் அனைவரின் பார்வையும் அவளை நோக்கியது.
“பெருசா திருட வாய்ப்புகள் மிகவுமே கம்மி. பெரிய நகைங்களா எடுத்திருந்தா சீக்கிரம் மாட்டி இருப்பாங்க. அது தெரிஞ்சு தான் இப்படி சின்ன சின்ன பார்ட்சா பார்த்து திருடி இருக்காங்க. அதுவும் இத்தனை சிசிடிவி கேமரா சுத்தி இருந்தும் திருடி இருக்காங்கன்னா அப்ப இது ரொம்ப வெல் பிளான்ட்டான விஷயமா தான் இருக்கணும் தாத்தா. இன்னைக்கு நேத்துன்னு இல்ல.. ரொம்ப நாள் பிளானிங்கா தான் இருக்கணும்” என்றாள் தான் கணித்தவைகள் ஒவ்வொன்றையும் வரிசையாக!
அவள் சொன்னவைகளை கேட்ட கனிஅமுதன் “அப்ப ரொம்ப நாளாவே இப்படி திருட்டு போகுதுன்னு சொல்றியா மீனு?” என்று புரியாமல் கேட்க,
“இல்ல சித்தப்பா… ரொம்ப நாளா திருடி இருந்தா நம்மளுக்கு தெரிய வந்திருக்கும்! தினமும் எல்லா நகைங்களையும் செக் பண்ணி பாத்திட்டு தான லாக்கர்ல வைப்போம்! அப்படி ரொம்ப நாளா திருடி இருந்தாங்கன்னா சின்ன மில்லி கிராம் கம்மியா காட்டி இருந்தா கூட நாம சந்தேக பட்டிருப்போம்! ஆளைப் புடிச்சு இருப்போம்! ஆனா, இது இன்னைக்கு தான் நடந்து இருக்கு!” என்றவள்,
முருகேசனை பார்த்து, “நேத்து வரைக்கும் சேல்ஸ் ஆன நகைங்க தவிர்த்து மிச்சம் இருந்த நகைங்களோட வெயிட் என்ன? அந்த டீட்டெயில்ஸ்ஸ சொல்லுங்க முருகேசன் சார்” என்று கேட்க, அவரும் அவள் கேட்டதற்கிணங்க அனைத்தையும் கூறினார்.
“அப்ப இன்னைக்கு தான் திருடி இருக்கணும் சித்தப்பா! ரொம்ப நாளா பிளான் பண்ணினதை இன்னைக்கு எக்ஸ்சிகியூட் பண்ணி இருக்கணும்! அதனால தான் ஒரே நாள்ல இப்படி சின்ன சின்ன நகைங்களை மட்டும் பக்காவா கழட்டி எடுத்து அம்பது பவுனா சுருட்டி இருக்காங்க” என்றவள்,
“எந்தந்த செக்ஷன்ல இருந்து நகைங்க காணாம போய் இருக்கோ அதுல டியூட்டி பாத்தவங்க நேம் லிஸ்ட்ட தனியா கொடுங்க கிருபாகரன் சார்” என்றாள் சூப்பர்வைசரை நோக்கி!
அந்த லிஸ்ட்டை அவர் கொண்டு வந்ததும் “எல்லார் பேரையும் சத்தமா வாசிங்க” என்று அவரிடம் சொன்னவள், “இந்த லிஸ்ட்ல வர்றவங்க எல்லாம் தனியா வந்து நில்லுங்க” என்றாள் ஸ்டாப்களிடம்.
கூடவே, “இன்னைக்கு மார்னிங்ல இருந்து ரெக்கார்ட் ஆன சிசிடிவி ஃபூட்டேஜ ப்ளே பண்ண சொல்லுங்க முருகேசன் சார்” என்று அவருக்கும் உத்தரவிட்டாள்.
கனிஅமுதன் ஆமோதிப்பாய் தலை அசைத்து “உள்ளாளுங்க யாரோ தான் மீனும்மா கை வச்சு இருக்கணும். வெளி ஆளுங்க யாரும் வந்து இவளோ தூரம் பண்ணி இருக்க முடியாது” என்றார் ஆணித்தரமாக.
இளைய மகனும் பேத்தியும் சொன்னவற்றை கேட்ட பத்மநாபன் அத்தளத்தில் கூடி நின்ற ஒட்டு மொத்த ஊழியர் கூட்டத்தையும் ஒரு பார்வை பார்த்தார்.
அவர்களை நம்பித்தானே அத்தனையும்! அப்படி இருக்க.. யாரால் இப்படி ஒரு செயலை துணிந்து செய்திருக்க முடியும் என்கிற நினைப்பே அவரை தளர்ந்து போக வைத்தது.
ஏனோ இந்த நொடி தனது மூத்த மகன் வெங்கடேசன் அருகில் இருந்தால் தேவலாம் போல் தோன்றி விட்டது அவருக்கு. வெங்கடேசன் இருந்தால் இன்னும் கூடுதல் பக்கபலம் தான். இல்லை என்று சொல்வதற்கில்லை.
ஆனால் இந்நேரம் அந்தத் தளமே இரண்டாக பிளந்து இருக்கும். அந்த அளவிற்கு ருத்ர தாண்டவம் ஆடி இருப்பான் மகன் என்று எண்ணுகையில் ‘நல்ல வேலை அவன் இல்ல. இருந்திருந்தா பாதி பேத்துக்கு கன்னம் பழுத்து பல்லு உதிர்ந்து இருக்கும்’ என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டார்.
அவரின் தளர்வை உணர்ந்து கொண்ட தென்றல் மீனா தனது இளைய அண்ணனான முகுந்தனை நோக்கி “முகிண்ணா… நீங்க தாத்தாவை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. நா, நிக்கிண்ணா சித்தப்பா மூணு பேரும் இங்க இருந்து பாத்துக்குறோம்” என்க,
“சரி மீனு” என்றவன் “நீங்க வாங்க தாத்தா. ரொம்பவே டயர்டா தெரியிறீங்க” என்க,
“முகுந்தா… இங்க அப்படியே விட்டுட்டு எப்படிடா வரது?” என்றவருக்கு இல்லம் செல்வதற்கான எண்ணம் துளி கூட இல்லை!
யார் இதனை இவ்வளவு சாதுர்யமாக செய்திருப்பார்கள் என்று கண்டு பிடிக்கும் வரை நிம்மதியாக உறக்கம் வருமா என்று கூட சந்தேகமாகிப் போனது அவருக்கு!
அவரின் எண்ணம் புரிந்தவனாக “தாத்தா… பாட்டி வேற உங்களை காணோம்னு அப்படி ஒரு அழுகைல இருந்தாங்க. உங்களுக்கு போன் பண்ணா நீங்க எடுக்கவும் இல்ல போல. கனி சித்தப்பா விஷயத்தை சொல்லவும் தான் சமாதானம் ஆனாங்க” என்றவன் மேலும்,
“கடைக்கு போனதும் நீங்க அங்க நில்லுங்கடா. கையோட அவரை வீட்டுக்கு வெரசா அனுப்பி வையிங்கன்னு எங்களுக்கு ஆர்டர் போட்டு வேற அனுப்பி இருந்தாங்க” என்க,
மனைவி சொல்லி அனுப்பி இருக்கிறாள் என்கிற ஒரே காரணத்திற்காக மட்டும் அங்கிருந்து அரை மனதுடன் கிளம்பினார் பத்மநாபன்!
பத்மநாபனை அழைத்துக் கொண்டு முகுந்தன் கிளம்ப, “தாத்தாவை விட்டுட்டு நீ திரும்ப வந்திடு முகுந்தா” என்றான் நிகேதன்.
“சரிண்ணா” என்று அவனும் கிளம்பி விட, தென்றல் மீனா கனிஅமுதனிடம், “யாருன்னு சீக்கிரம் கண்டு புடிக்கணும் சித்தப்பா. இதோ இங்க நிக்கிறவங்களை நம்பி தான் அத்தனை பொறுப்பையும் பொருளையும் பத்து மணி நேரம் அவுங்க கட்டுப் பாட்டுக்கு கொடுத்திருக்கோம். ஆனா, நம்ம நம்பிக்கைய சிதைச்சு இப்படி கையாடல் பண்றவங்களை சும்மா விடக க்கூடாது” என்றாள் பேய் முழி முழித்துக் கொண்டிருந்த சில ஊழியர்களை கண்டு அதி தீவிரமான குரலில்!
கனிஅமுதன் ஆமாம் என்று தலை அசைத்து “இப்படி ஒவ்வொன்னா எடுக்க எப்படி நேரம் இருந்திருக்க முடியும்? அதுவும் பொடுசு பொடுசா கட் பண்ணி எடுத்து இருக்கானுங்க” என்று பல்லைக் கடித்தவர், முருகேசன் கையில் ஒரு பெண்ட்ரைவோடு வர மொத்த கவனமும் அவரின் மேல் திரும்பியது.
இத்தனை தந்திரமாய் திருடியவர்கள் சிசிடிவியில் சிக்கி இருக்க மாட்டார்கள் என்று தான் தோன்றியது தென்றல் மீனாவிற்கு. அங்கேயும் எதுவோ குளறுபடியாகி இருக்க வேண்டும் என்கிற சிந்தனை ஓடியது அவளுக்குள்.
அவளின் எண்ணத்திற்கு சிகரம் வைத்தார் போல் தான் இருந்தது முருகேசன் சொன்ன செய்தி!
செக்யூரிட்டி ரூமில் இருந்த ஆப்பரேட்டரும் அவருடன் வந்திருக்க, பேய் அறைந்த முகத்துடன் வந்து நின்றவரை கண்டு “என்ன ஆச்சு முருகேசன் சார்?” என்றாள் அவரிடம்.
ஆப்பரேட்டரோ எச்சில் கூட்டி விழுங்க, முருகேசனும் லேப்டாப்பில் பெண்ட்ரைவை கணக்ட் செய்தபடி தென்றல் மீனாவை பயத்துடன் நோக்கி “மேடம்…. சிசிடிவி செக் பண்ண போனப்ப தான் ஆப்பரேட்டர் ஒரு விஷயம் சொன்னாரு” என்றார் திணறி.
தென்றல் மீனாவின் பார்வை ஆப்பரேட்டரை நோக்கி திரும்ப வெலவெலத்து விட்டது அவருக்கு.
“மேடம்.. முன்னமே ஐயா கிட்ட இன்பார்ம் பண்ணி இருக்கணும். நான் தான் சொல்லாம விட்டேன்” என்றார் பயத்தை குரலில் தேக்கி!
“என்னத்த சொல்லாம விட்டீங்க?” என்று நிகேதன் மிரட்டலாய் கேட்க, “சார்.. நான் வேணும்னு பண்ணல சார்..” என்று அவரோ பயத்தில் விஷயத்தை சொல்லாமல் உளறினார்.
“என்ன ஆச்சு முருகேசன் சார். ஸ்டரைட்டா சொல்லுங்க. எல்லாருக்கும் நேரம் போகுது. மணி இப்பவே மூணாக போகுது” என்றாள் தென்றல் மீனா கோபத்தை உள்ளடக்கிய குரலில்!
ஆப்பரேட்டருக்கு வியர்த்து உடலெல்லாம் நனைந்து விட்டது. அவர் வாயை திறக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து முருகேசனே விஷயத்தை கூறினார்.
“மேடம் இன்னைக்கு மதியானம் ஒரு மணில இருந்தே செக்கன்ட் பிளோர்ல இருந்த கேமரா ஒர்க் ஆகல” என்றவர் தென்றல் மீனாவின் உக்கிரப் பார்வையில் அப்படியே வாயை மூடிக் கொண்டார்.
அவளின் உக்கிரத்தில் உள்ளுக்குள் கிலி பிடித்தாலும், விட்டால் விஷயத்தை முழுதாய் சொல்ல விடாமல் அர்ச்சித்து விடுவாள் என்றெண்ணி உடனே தொடர்ந்தார்.
“என்னன்னு வந்து ஆப்பரேட்டரும் செக் பண்ணி இருக்காரு. கேமராக்கு கொடுத்திருந்த கணக்ஷன் கட் ஆகி இருக்கிறது அப்ப தான் தெரிய வந்திருக்கு” என்றார் ஒரு வழியாய்.
“ஏன் அப்பாக்கோ, அண்ணனுக்கோ சொல்லல” என்று கனிஅமுதன் அவரை நோக்கி கோபமாக கேட்க,
“சூப்பர்வைசர் கிட்ட சொன்னேன் சார். அவர் தான் நான் ஐயா கிட்ட சொல்லி இன்னைக்குள்ள சரி பண்ணிடுறேன். நீ போனு சொன்னாரு. நானும் வந்துட்டேன்” என்க,
“எங்க செக்கண்ட் ப்ளோரோட சூப்பர்வைசர் என்று கூட்டத்தை நோக்கி அவள் கத்த, முருகேசன் நடுங்கிய குரலில்… “இன்னைக்கு லஞ்ச் முடிஞ்சதும் அவரு வந்து உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் வாங்கிட்டு போனாரு மேடம்” என்றார் பம்மிய குரலில்!
அவ்வளவு தான்….. தென்றல் மீனா கத்தித் தீர்த்து விட்டாள் அவரை நோக்கி! ஒன்றைத் தொட்டால் அது இன்னொன்றை கிளப்ப, இப்போது கேமராவிலும் எதுவும் ரெக்கார்ட் ஆகாமல் இருக்க, கூடவே சம்மந்தப்பட்ட ஆளும் உடல் நலம் சரியில்லை என்று விடுமுறை வாங்கி தப்பித்திருக்க கோபம் உச்சிக்கு ஏறி விட்டது அவளுக்கு.
அடுத்த அரை மணி நேரம் தீவிரமாக வேலை செய்ததில் காணாமல் போன சின்ன சின்ன பாகங்கள் அடங்கிய நகைகளின் செக்ஷன்களில் வேலை செய்தவர்களை விசாரிக்க, இன்னும் இரண்டு ஸ்டாப்கள் அந்த சூப்பர்வைசரோடு விடுமுறை எடுத்துக் கொண்டு சென்றது தெரிய வந்தது.
ஆட்கள் யாரென்று யூகித்து விட்ட பின்னர் போலீசிற்கு தகவல் கொடுக்க, முருகேசன் உள்ளுக்குள் “க்கும்…. விடிய விடிய யாரையும் அசைய கூட விடாம இவுங்களே நின்னு எல்லாம் விசாரிச்சு கண்டு புடிச்சிட்டாங்க…. இப்ப எதுக்கு போலீஸ்???” என்று எண்ணிக் கொண்டாலும் வாயை இறுக மூடிக் கொண்டு நின்றிருந்தார்.
போலீஸ் வந்து அனைத்தையும் ஒரு முறை விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டு என அனைத்தையும் முடித்து விட்டு கிளம்பும் போது நேரம் விடியற்காலை நான்கை தாண்டி இருந்தது!
எஞ்சி இருந்த ஊழியர்களும் அப்போது தான் இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். பெண் ஸ்டாப்களின் தந்தை, அண்ணன், கணவன், என பலர் அங்கே இரவில் இருந்து காத்துக் கிடந்தனர்.
அன்றைய நாள் ஞாயிறு தான் என்பதால் கடையும் விடுமுறை தான். எனவே அனைவரும் “விட்டா போதும்டா சாமி…” என்ற மன நிலையில் கிளம்பி விட்டனர்.
அவர்களின் அறைக்கு வந்த பின்னர் தென்றல் மீனா தலையை பற்றிக் கொண்டாள்! தூக்கமின்மையும் இரவில் இருந்து வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது அப்படி ஒரு அசதியையும் தலை வலியையும் கொடுத்திருந்தது அவளுக்கு.
அவளின் நிலை கண்ட கனிஅமுதன் “மீனும்மா போலீசுக்கு சொல்லியாச்சு. இனி அவுங்க பாத்துப்பாங்க எல்லாம். நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடும்மா.. பாரு கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்கு. ஆளே ஒரு மாதிரி ஆகிட்ட” என்றார் அக்கறையும் கவலையுமாய்.
“இன்னைக்கு மாப்பிள்ளை வேற உன்னைப் பாக்க பத்து மணி மேல வரதா சொல்லி இருந்தாரு. ரெண்டு பேரும் நிச்சயதார்த்தத்துக்கு தேவையானது எல்லாம் நீங்களே போய் ஷாப்பிங் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாரே..” என்று கனிஅமுதன் நினைவு படுத்திச் சொல்ல, அப்போது தான் அவளுக்குமே தனது வருங்கால கணவன் விதார்த் தன்னை காண வருவது நினைவு வந்தது.
“அச்சோ…. ஆமா சித்தப்பா!!!! மறந்துட்டேன்” என்றாள் தலையில் கை வைத்து!!!
“சரிம்மா…. நீ பாத்து சொல்லிடு” என்றவர், “நீயும் அண்ணனுங்களோட கிளம்புமா. உன் காரை நான் எடுத்திட்டு வரேன். உன்னால இப்ப ட்ரைவ் பண்ண முடியாது” என்று அவளின் கார் சாவியை வாங்கிக் கொண்டார்.
“பாத்து வாங்க சித்தப்பா” என்ற மூவரும் இல்லத்திற்கு கிளம்பி வந்துவிட்டனர்.
“ஏன்டி.. மணி என்னன்னு பாத்தியா? கிட்டத்தட்ட ஆறாகப் போகுது… ஒரு பொட்டு தூங்கல நீ? இதுல மாப்பிள்ளை வேற இன்னைக்கு உன்னை ஷாப்பிங் கூட்டி போக வரேன்னு சொன்னாரு…” என்றவர்,
“உன்னை யாரு முதல்ல ஏர்போர்ட்ல இருந்து வந்ததும் வராததுமா கடைப் பக்கம் போக சொன்னா? வீட்டுக்கு தான உன்னை வர சொன்னேன்” என்று திட்டிக் கொண்டே போக,
“அம்மா…… திட்டுங்க… நல்லா திட்டுங்க… ஆனா, இப்ப திட்டாதீங்க… நான் போய் தூங்கி எழுந்து ஃப்ரெஷா வரேன்…. அப்புறம் நீங்களும் ஃப்ரெஷா திட்டுங்க…” என்று அயர்வாய் சொன்னவள்,
மாடியில் இருக்கும் தனதறையை நோக்கி படிகளில் ஏறியவாறே “முடிஞ்சா ஒரு கப் காஃபிமா” என்று விட்டு சென்றாள்.
அவளின் குரலிலும் முகத்திலும் அப்பட்டமான சோர்வினை கண்டவர் அதற்கு மேல் எதுவும் கூறாமல் வேக வேகமாக கிச்சனிற்குள் நுழைய, அடுத்த ஐந்தாம் நிமிடம் அங்கே வந்து விட்டார் வசுந்தரலக்ஷ்மி.
“மீனுக்கு நல்ல தலைவலி போல அண்ணி.. இப்ப தான் போய் பாத்திட்டு வந்தேன். மாத்திரை போடணும்னு சொல்லிட்டு இருந்தா” என்றார் கவலையுடன்.
“ஆமா வசு.. பாரு இவளை.. நைட் முழுக்க தூக்கம் இல்லாம முகமெல்லாம் வீங்கி கண்ணெல்லாம் சிவந்து போய் வந்திருக்கா…. இவளை யாரு விடிய விடிய அங்க உக்காந்து விசாரணை பண்ண சொன்னது. முகுந்தன், மாமாவை கூட்டிட்டு வரப்பவே இவளும் வந்திருக்க வேண்டியது தானே” என்று வாய் புலம்பித் தள்ளினாலும், கைகள் மகள் கேட்டுச் சென்ற காஃபியை அவளுக்கு பிடித்த பதத்தில் கலக்கத் தவறவில்லை.
“ஏர்போர்ட்ல இருந்து வந்ததும் எதுவுமே சாப்பிட்ட மாதிரி தெரியல அண்ணி. ஒரே நைட்ல ஆளே ஓய்ஞ்சு போன மாதிரி ஆயிட்டா. வெறும் காஃபி மட்டும் போதாது.. பிள்ள பசில இருப்பா. மூணு தோசையும் சேர்த்து சாப்பிடச் சொல்லி மாத்திரை போட சொல்றேன்” என்றவர்,
வேக வேகமாக மாவை எடுத்து வந்து மூன்று தோசைகளை சுட சுட வார்த்தவர் அவளுக்குப் பிடித்தமான ஆந்திரா கார சட்னியை நான்கு மணிக்கே எழுந்து செய்திருந்தார்.
அதனுடன் விசாலாட்சி போட்டிருந்த காஃபியை வாங்கிக் கொண்டு தென்றல் மீனாவின் அறைக்கு கிட்டத்தட்ட ஓடினார்.
செல்லும் அவரையே பார்த்திருந்த விசாலாட்சி “மீனுன்னா உசுரை விட்ருவா வசு…” என்று மெல்ல சிரித்துக் கொண்டார்.
**********
அறைக்கு வந்ததும் ஹீட்டரை போட்டு சுடுநீரில் குளித்து வந்தவள் முதல் வேலையாக விதார்த்திற்கு அழைத்து இன்று மாலை வரும்படி சொல்ல வேண்டும் என்று எண்ணி அலைபேசியை எடுத்தவள்,
“எழுந்திருப்பாரா இந்நேரம்…” என்றபடி மணியை பார்க்க அது ஆறென காட்டியதும் “ஜாகிங் போக எழுந்திருப்பாருன்னு தான் நினைக்கிறேன்! கூப்பிட்டு பாப்போம்” என்று அவனுக்கு அழைத்தாள்.
இரண்டே ரிங்கில் விதார்த் அழைப்பை ஏற்றதும் “விதா….ர்த்…” என்று இவள் சொல்லி முடிப்பதற்குள்.. அலைபேசி வாயிலாக எண்ணற்ற முத்தங்களை தென்றல் மீனாவிற்கு கடத்தி இருந்தான் விதார்த்!!!!