“ரொம்ப நேரம் கைலையே வச்சிருக்கது இல்ல குழந்தையை. உடம்பு நோவெடுக்கும் பிள்ளைக்கு. தொட்டில போடுடி மீனு” என்று தென்றல் மீனாவிடம் சொல்லிச் சொல்லி ஓய்ந்து போய் இருந்தார் அழகம்மை.
கடந்த ஒரு மணி நேரமாக பேத்தியிடம் அவர் இதையே சொல்லிக் கொண்டிருக்க, வாய் வலிக்கும் போலிருந்தது அவருக்கு.
மொத்த குடும்பத்தையும் மறந்து தன் கையில் இருந்த குட்டி உலகத்தில் தன்னை தொலைத்திருந்தவளுக்கு பாட்டியின் சொற்கள் எல்லாம் பெரிதாக தோன்றவில்லை.
மருமகளுடன் ஐக்கியமாகி இருந்தவளை கண்டவர்களுக்கு மனம் நெகிழ்ந்தது. அவளாக போராடி ஒற்றை ஆளாக இருந்து சந்தியாவை மருத்துவமனை அழைத்து வந்து என ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க எல்லோருக்கும் கவலையாக இருந்தாலும், சமாளித்து விட்டாளே என்று ஆசுவாசமாகவும் திகைப்பாகவும் தான் இருந்தது.
தைரியாமானவள் தான். திடமானவளும் கூட! இருப்பினும் நேற்றைய சூழ்நிலை இரு உயிர்களை காப்பாற்றும் நிலை அல்லவா?
அவளாக இருந்து இத்தனை செய்தலில் வெங்கடேசனிற்கு மகளை எண்ணி வழமை போல் பெருமிதம் தான்!
அன்று மாலை தான் மொத்த குடும்பமும் ஊரில் இருந்து நேரே மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அன்றைய நள்ளிரவில் சந்தியா கண் விழித்ததும் நர்ஸிடம் குழந்தையையும் அவளையும் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு ஹாஸ்பிட்டலில் இருந்தே தந்தைக்கு அழைத்து அனைத்தையும் சொல்லி இருந்தாள். கூடவே கௌதமையும் கிளம்பி வரச் சொல்லி இருக்க, அன்று இரவே அவன் வந்து விட்டான் மருத்துவமனைக்கு.
விஷயம் தெரிந்ததும் வீட்டினர் அனைவரும் அடுத்த நொடியே ஊரில் இருந்து கிளம்பி வந்து சேர்ந்திருந்தனர்.
தங்கள் வீட்டுப் பெண் தனியாக ஒரு பிரசவ சூழ்நிலையை எதிர் கொண்டிருக்க, அனைவருக்கும் இந்த சூழ்நிலையில் கிளம்பி இருக்கக் கூடாது என்றே தோன்றியது. அழகம்மை தான் மிகவும் வருத்தம் கொண்டார்.
“நான் தான் பிடிவாதமா போகலாம்னு சொன்னது. சந்தியா அம்மா அப்பா இருப்பாங்கன்னு நினைச்சேன். அவுங்களும் ஒரு துக்கத்துக்கு போவாங்கன்னு நினைக்கல” என்றவர் வருத்தப் பட்டார்.
நிகேதன் தான் அழகம்மை மீது கடுப்பில் இருந்தான். முதல் முறையாக தன் மகளை கைகளில் ஏந்திக் கொள்ள முடியாமல் போய் விட்டதே என்று அந்தப் புது தந்தையானவனுக்கு ஏக்காமாய் இருக்க,
“சும்மா இருங்க பாட்டி.. இதுக்கு தான் நான் இருக்கேன்னு சொன்னேன். தல பிள்ளை.. தலை வாழை பிள்ளைன்னு சொல்லி என்னையும் பேக் பண்ணிட்டீங்க?” என்று அவரிடம் கடுகடுத்தவன்,
“என்னால என் செல்லத்தை முதல் ஆளா கைல வாங்க முடியாம போய்டுச்சு” என்றான் தென்றல் மீனாவின் மடியை சிம்மாசனமாக்கி படுத்திருந்த தன் உயிர் மகளின் கன்னத்தை தீண்டி கொஞ்சியபடி.
“சரிடா… தெரியாம உன்னையும் கூப்பிட்டேன். இனி நீ எங்கேயும் வர வேணாம். பொண்டாட்டி பிள்ளையை பார்” என்று விட்டார் அழகம்மையும்.
ஐந்து ஆண்டுகள் கழித்து கிடைத்திருக்கும் வரத்தை காண தந்தையாக அவன் இல்லையே எனும் வருத்தம் அவனுக்கு இருப்பது அங்கிருப்பவர் அனைவருக்குமே புரிய, அவன் கோபத்தை யாரும் தட்டவில்லை.
அழகம்மை உட்பட அவன் தவிப்பையும் கோபத்தையும் மதித்தனர். எனவே தான் மனைவியையும் பிள்ளையையும் பார் என்று விட்டார்.
விஷயம் தெரிந்ததும் எத்தனை துடித்தான் என்று அவர்களும் வரும் வழியெல்லாம் கவனித்துக் கொண்டு தானே வந்திருந்தார்கள்.
அதுவும் பெண் குழந்தை என்றதும் அனைவருக்கும் விண்ணைத் தொடும் சந்தோஷம். கூடவே தாங்கள் கூட இருந்து பார்க்க முடியவில்லையே என்று அதே அளவிற்கான வருத்தம். இதனுடன் அங்கே தென்றல் மீனா மட்டும் இருந்து சமாளித்து இருக்கிறாளே என்று கவலை என உணர்வுகளின் பிடியில் தான் அனைவரின் பயண நேரமும் கழிந்தது.
இங்கே வந்து சேரும் வரையில் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் தென்றல் மீனாவிற்கும் கௌதமிற்கும் அழைத்துக் கொண்டே இருந்தனர்.
ஆர்வம் தாங்க முடியாமல் “பாப்பாவை வீடியோ கால்ல காட்டுங்க” என்று அர்ஜுன் குதூகலிக்க, அவனை சமாளித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது மயூரிக்கு.
ஹாஸ்பிட்டல் வந்திறங்கிய நொடியில் இருந்து இந்த நொடி வரை மொத்த குடும்பமும் குழந்தையை கொண்டாடித் தீர்த்து மகிழ்ந்து போயினர்.
வசுந்தராவிடம் குழந்தையை கொடுத்த போது கட்டுப் படுத்த முடியாத கண்ணீருடன் குழந்தையை வாங்காமல் தென்றல் மீனாவை தான் ஒரு பார்வை பார்த்தார்.
முதல் முறையாக அவள் பிறந்த தருணத்தை நினைவு கூறுகிறார் என்று அனைவருக்கும் புரியாமல் இல்லை.
அக்குடும்பத்தில் அனைவருக்கும் ஆண் பிள்ளைகள் தான். பத்மநாபனுக்குமே உடன் பிறந்தவர்களில் அண்ணன் தம்பி தானே தவிற சகோதரிகள் இல்லை.
பத்மநாபன் தம்பதியினருக்கு பிறந்தவர்கள் அனைவரும் ஆண் பிள்ளையாகிப் போக, பெண் பிள்ளைக்கு ஏங்கும் நிலை!
அப்படி இருக்கும் போது தான் குணநாதன் மனைவி பார்வதி கருவுற்று இருந்தார். அது பெண் பிள்ளையாக இருக்க வேண்டும் என குடும்பம் மொத்தமும் அத்தனை எதிர் பார்த்திருக்க, கௌதம் பிறந்திருந்தான். அதற்கு அடுத்து கனி அமுதனுக்கும் லதாவிற்கும் இரட்டையர்கள் நவீனும் பிரவீனும் பிறந்திருந்தனர். அனைவருக்கும் அத்தனை ஏமாற்றம்!
அதற்கடுத்து அவ்வீட்டில் இரண்டு ஆண்டுகள் கழித்து தென்றல் மீனா பிறந்திருந்தாள்.
குடும்பத்தில் அனைவருக்கும் கோலாகல கொண்டாட்டம் தான்! பெண் பிள்ளை என்று! அந்தக் கொண்டாட்டம் அதற்கு அடுத்து என வசுந்தராவின் சிந்தனை சிட்டுக்கள் இலக்கின்றி பயணித்து பலவற்றை நினைவு படுத்த, கண்கள் குலமாகிப் போனது.
“பாப்பாவை வாங்குங்க வசும்மா..” என்று கனிவான குரலில் அவள் சொல்லவும் தான் குழந்தையை வாங்கினார். அப்படியே சந்தியாவை உரித்து வைத்திருந்தாள் பிள்ளை.
“எங்க வீட்டுக்கு வந்த ரெண்டாவது பொண்ணு குட்டி…” என்று ஆசையோடும் ஏக்கத்தோடும் பிள்ளையை கொஞ்சியவாறு “இப்ப தான் உன்னோட அத்தையை கைல தூக்கின மாதிரி இருக்குது. அதுக்குள்ள நீ பிறந்திட்ட” என்று நெகிழ்வாய் சொன்னவரின் பேச்சில் அனைவருக்குமே சந்தோஷப் புன்னகை.
அந்த சந்தோஷம் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்தது. அனைவரும் குழந்தையை வாங்கிப் பார்த்து கொஞ்சி முடித்ததும் “நான் வச்சிக்கிறேன் என் தங்கத்தை” என்று மருமகளை வாங்கி மடியில் கிடத்தியவள் தான்.
தொட்டிலில் போடவே இல்லை. யாரிடமும் தரவும் இல்லை. அவர்களும் கேட்கவில்லை. இப்போது அண்ணன் தன் பிள்ளையை ஆசையாய் வருடவும் “நீங்க தூக்குறீங்களா அண்ணா?” என்று அவனிடம் கேட்க, மறுக்கவா முடியும் அவனால்?
இத்தனை நேரம் அத்தை மடியை மெத்தையாய் கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்த குழந்தை இப்போது தகப்பன் மடிக்கு மாறி இருந்தாள்.
தென்றல் மீனா லாவகமாக குழந்தையை அவனிடம் கொடுத்த விதத்தை கண்டு அனைவருமே ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயினர்.
அர்ஜுன் பிறந்திருந்த போது பெரியவர்கள் அனைவரும் அவனைத் தூக்கிக் கொள்ளச் சொல்லி மிகவும் கெஞ்சி இருக்கின்றனர்.
“பிள்ளையை தூக்க பொம்பளை பயப்படலாமா? நாளைக்கு உனக்கும் பிள்ளை பிறக்கும். அப்ப தூக்க வேண்டாமா?தூக்குடி” என்று அழகம்மை மிரட்டியதற்கு கூட அவள் அசையவில்லை.
“கழுத்து நிக்கல பாட்டி. எனக்கு தூக்க பயமா இருக்கு. கழுத்து நின்னதும் நான் தூக்குறேன்” என்றவள் சொன்னது போல் கழுத்து நின்ற பின்னர் தான் அர்ஜுனை கையில் ஏந்தி இருந்தாள்.
அதுவரையிலும் மற்றவர் கையில் இருக்கும் போது தான் அவனைக் கொஞ்சி இருக்கிறாள். முத்தமிட்டு இருக்கிறாள்.
அப்படி இருந்தவள், பிறந்த குழந்தையை கையில் இவ்வளவு நேரம் வைத்திருந்தது மட்டுமின்றி அதனை நிகேதனின் கைகளில் பாந்தமாக தந்திருக்க,
“எப்படி மீனு குழந்தையை தூக்கி பழகுன?” என்று விசாலாட்சி தான் மகளை ஆச்சர்யமாய் பார்த்துக் கேட்டார்.
அந்நேரம் வரை அனைவர் மனதிலும் நின்ற கேள்வி அவரிடமிருந்து வந்து விட கண்கள் ஒளிர அன்னையை கண்டவள், “அண்ணிக்கு டெலிவரி பாத்த டாக்டர் தான் கைட் பண்ணாங்க ம்மா” என்றவள்,
“நான் வாங்க பயந்தேன். டாக்டர் விடல. உங்க கைல தான் முதல்ல வந்திருக்கா. தூக்குங்க. நான் கைட் பண்றேன்னு சொல்லி தூக்க வச்சுட்டார் என்னோட தங்க குட்டியை” என்றாள் ஆசையுடன்.
“நல்ல வேளை… அந்த மகராசனுக்கு புண்ணியமா போகும். அர்ஜுன் பிறந்தப்ப தூக்க சொல்லி தலையால தண்ணி குடிச்சு நின்னேன். தூக்குவேனான்னு நின்னியே… இப்ப அந்த டாக்டர் சொன்னதும் பழகிட்ட” என்று அழகம்மை அங்கலாய்க்க,
நேற்று தன் கைகளில் பிள்ளையை கொடுக்கும் போது “தலையோட சேர்த்து கழுத்துக்கு கீழ பிடிங்க தென்றல். அணைவா பிடிச்சிக்கங்க. அதே சமயம் அழுத்தி பிடிச்சிட வேண்டாம்” என்று ஒவ்வொன்றாய் பொறுமையாக சொன்னவனின் செய்கை இப்போதும் குட்டி காட்சியாக நினைவுகளில் ஓட தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது தென்றல் மீனாவிற்கு.
அதுவும் அவன் தன்னை தென்றல் என்று அழைத்த விதம்… அவன் அழைத்த பெயர்.. என எல்லாமே புதிதான ஒரு உணர்வினை கொடுத்திருந்தது.
மீனுவாகவே அனைவராலும் அழைக்கப்பட்டவளுக்கு முதல் முறையாக தனக்கு தென்றல் எனும் பெயரும் உண்டு என நினைவு படுத்தி இருந்தான். அவனின் அழைப்பில் தான், தென்றல் சுவாசம் பெற்றிருக்கிறது என்பது புரிய, இதழில் புன்னகை உயிர்ப்பித்த வண்ணமே இருந்தது பெண்ணிற்கு.
அனைவரும் சந்தோஷம் நிறைந்த முகத்துடன் இருக்க, தகப்பனின் மடியில் இருந்த குழந்தை பசிக்கு சிணுங்கவே ஆண்கள் எல்லோரும் வெளியே வந்திருந்தனர்.
குழந்தைக்கு சந்தியா பாலூட்டி முடித்ததும், அனுஜா வந்திருந்தார் அவளையும் குழந்தையையும் பார்க்கவென்று.