தனக்குள், தன் அனுமதி இன்றியே நுழைந்திருக்கும் இவ்வுணர்வினை எப்படிக் கையாள்வது என்று அறியாமல் திகைத்தாள் தென்றல் மீனா.
கடந்திருந்த நிமிடங்களையும் அந்நிமிடங்களில் உறைந்திருந்த இனிமையும், தன்னுள் இதமாய் பரவி இருந்த தித்திப்பும் என எல்லாமே அவளை செயலிழக்க வைத்தது.
“ஓ காட்! மீனு… என்ன ஆச்சு உனக்கு?” என்று இரு கையினால் தலையை பற்றிக் கொண்டவள் அதற்கடுத்து எதையும் கண் மூடி சிந்திக்கவே பயந்து போனாள்.
“நானா இப்படி? எப்படி முற்றிலும் என்னை மறந்து அவனை சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்று அவளை அவளே கேள்வி கேட்டுக் கொள்ள, நொடியில் அவளுக்குள் ஒரு போராட்டம்.
கண் மூடினால் எங்கே அவன் முகம் தெரிந்து விடுமோ என்று அஞ்சியே கண்ணை மூடாமல் இருந்தவள் தனக்குள் ஊடுருவி இருக்கும் இவ்வுணர்விற்கு பெயர் சூட்டவே நடுங்கினாள்.
தானா.. அதுவும் தனக்குள் இப்படி ஒரு எண்ணமா.. அவளை அவளாலேயே நம்ப முடியாத அளவிற்கு திகைத்து போனாள்.
சில நொடிகளுக்கு முன்னர் சுகமாய் தெரிந்த சுழல் இப்போது சுனாமியாய் அவளை சுருட்டிக் கொண்டது.
எவ்வளவு நேரம் அதே நிலையில் இருந்தாளோ அலைபேசியின் சத்தத்தில் தன் நிலை அடைந்தவள் அதனை எடுத்துப் பார்க்க வெங்கடேசன் தான் அழைத்திருந்தார்.
“மீனு சாப்பிட வரலையா?” என்று தந்தை கேட்டதும் தான் நேரம் மதியப் பொழுதை தொட்டு விட்டதையே உணர்ந்தாள் தென்றல் மீனா.
“இதோ வரேன் ப்பா” என்றவளிடம்,
“தலை வலி எப்படி இருக்கு மீனு? முருகேசன் சொன்னார். நீ ரெஸ்ட் எடுப்பேன்னு தான் உன்னை வந்து தொந்தரவு பண்ணல” என்றவரின் வார்த்தைகளில் மனம் குற்ற உணர்வில் விழுந்து விட,
“இப்ப கொஞ்சம் பரவாயில்ல ப்பா. வரேன்” என்றவள் கீழ் தளத்திற்கு வந்து விட்டாள்.
லிஃப்ட்டின் மூலம் கீழ் தளம் வந்து சேரும் அந்த கொஞ்ச நொடிகளில் தன் மனதை தெளிவு படுத்தி இருந்தாள் தென்றல் மீனா.
ஒரு வாரமாக அல்லாடிக் கிடந்த மனம் அதனை அறியாமையே என்னவெல்லாமோ சிந்தித்து, குழந்தையை நினைத்ததும் அதனை தொட்டு அருண்மொழியை தேடி சென்று நின்றிருக்கிறது. வேறு ஒன்றும் இல்லை என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
மதிய உணவை முடித்ததும், “வீட்டுக்கு போறியா மீனுமா? ரொம்ப டல்லா இருக்க” என்று வெங்கடேசன் கேட்டதற்கு,
“இல்லப்பா. ஓகே தான். ஈவ்னிங்கே போறேன்” என்று மறுத்து விட்டாள்.
“ஒரு வாரமா கடைக்குள்ள வரப்பா எல்லாம் இப்படி தான்டா இருக்கா இவ” என்று பேத்தியை கண்டு மகனிடம் சொன்ன பத்மநாபன்,
“உடம்புக்கு எதுவும் பண்ணுதா மீனு? இப்ப தான் கொஞ்ச நாளா நல்லா இருந்த. இப்ப நாலஞ்சு நாளா ஆளே ஒரு மாதிரி இருக்க” என்று பத்மநாபன் கேட்டதில் ஒரு நொடி அமைதியானாள்.
வீட்டினரிடம் இன்னும் விதார்த் தன்னை பின் தொடர்ந்து வருவதை பற்றி சொல்லி இருக்கவில்லை. இப்போது சொல்லலாமா என்று யோசித்தவள் நிமிர்ந்து அனைவரின் முகத்தையும் பார்க்க, எல்லோருமே அவளை கேள்வியாக தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்னமா? எதுவும் சொல்லனுமா?” என்று குணநாதன் அவளின் பார்வையில் கேட்க,
“ஆமா சித்தப்பா” என்றவள், மெல்லிய குரலில் விதார்த்தின் செயலையும், அவன் தன்னை பின் தொடர்வதை பற்றியும் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் முகத்திலும் பெரும் அதிர்வு.
“என்ன மீனா? முதல் நாளே சொல்லி இருக்கணும்ல நீ?” என்று மகளிடம் கொந்தளித்த வெங்கடேசன் சற்றும் யோசிக்காமல் தம்பிகளையும் மகன்களையும் அழைத்துக் கொண்டு சாத்தப்பனின் வீட்டிற்கே சென்று நின்றது மட்டுமில்லாமல்,
தெனாவெட்டாய் அவரை எதிர் கொண்ட விதார்த்தின் முகத்தை அறைந்து தள்ளி அது போதாமல் கழுத்தைப் பற்றி சுவற்றோடு சாற்றி விட்டார்.
“என் பொண்ணை உனக்கு கட்டி வைக்கணும்னு நினைச்ச பாவத்துக்கே என்னை என்னாலயே மன்னிக்க முடியாம வெந்துகிட்டு இருக்கேன். அதுக்கு காரணம இருக்க உன் மேல கொல வெறில இருக்கேன். கண்ணுல மாட்டுனா உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்னு பாத்தா நீ சிக்குவேணான்னுட்ட. உங்க அப்பனும் உன்னை பொத்தி வச்சிருப்பான்னு தெரிஞ்சு விட்டுட்டேன். அப்படியே விட்டா நீ ஒரு படி மேல போய் அவளை ஃபாலோவா பண்ற? விட்டுடுவேன்னு நினைச்சியா? உன்னை உரிச்சு தொங்க விட்டா தான் என் மனசு ஆறும்” என்று விலாசித் தள்ளி விட்டார் அவனை.
“ஐயோ விடு வெங்கடேசா..” என்று சாத்தப்பன் கெஞ்சி மன்றாடியதெல்லாம் அவரின் கண்ணில் பட்டாலும் விதார்த்தை வெளுத்து விட்டார் வெங்கடேசன்.
வந்திருந்த மகன்களும் தங்கள் பங்கிற்கு அவனை கவனிக்க, எங்கே மகனை கொன்று விடுவார்களோ என பீதியில் உறைந்தே போனார் சாத்தப்பன்.
மகனை அடிப்பவர்களை கண்டு அவரது மனைவி வேறு ஒரு புறம் தலையில் அடித்துக் கொண்டு கதற, யாரை தேற்றுவது, யாரை காப்பாற்றுவது என்று நொந்து போனார்.
உக்கிரமாக நிற்கும் ஆண்களின் கோபத்திற்கு மத்தியில் புகுந்து வெங்கடேசனின் காலில் விழுகாத குறையாக விழுந்து மகனை மறைத்து “இனி அவன் உங்க கண்ணுல பட மாட்டான். ஊட்டி அனுப்பி வச்சிடுறேன். விட்ரு வெங்கடேசா” என கை கூப்பி மகனின் உயிரை பிச்சையாக கேட்காத குறை தான்.
“போதும் ண்ணா. இனி மீனு பின்னாடி வந்தா ஆளே இல்லாம பண்ணிடலாம்” என்று ஆத்திரம் அடங்காமல் நின்றிருந்த அண்ணனையும் அவரின் மகன்களையும், குணநாதனும் கனிஅமுதனும் தான் சமாதானம் செய்து ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.
வீட்டில் விஷயம் பகிறப் பட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர்.
“இவன் என்ன காலை சுத்தின பாம்பு மாதிரி பின்னால வரான்” என்று அழகம்மை மிகவும் கவலை கொள்ள,
“இனி வர மாட்டான் ம்மா. வந்தா இருக்க மாட்டான்” என்று உறுதியாக சொன்னார் வெங்கடேசன். அவரின் முகம் பார்க்கவே அனைவருக்கும் பயமாக இருந்தது.
தென்றல் மீனாவிற்கே தந்தையை நெருங்க அவ்வளவு யோசனை. பெரு மூச்சை விட்டுக் கொண்டிருந்தவரின் ருத்ர தாண்டவத்தை சித்ததப்பாக்களின் மூலம் அறிந்து கொண்டவளுக்கு தந்தையின் இந்தக் கோபம் எதிர்பாராத ஒன்று.
இனி நிச்சயம் அவன் தன்னை பின் தொடரப்போவதில்லை. தான் இருக்கும் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டான். அது சர்வ நிச்சயம். தொடர்ந்தால் அவன் உயிர் ஊசலாடுவதும் உறுதி என்று எண்ணிக் கொண்டவளுக்கு மனதில் பெரும் நிம்மதி.
கட்டுங்கடங்காத கோவத்தில் கனன்று கொண்டிருந்த தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன.
“ஒரு வாரம் ஆச்சா மீனு உனக்கு சொல்றதுக்கு? அதுவும் அப்பா கேட்ட பின்ன?” என்று மனத் தாங்கலோடு மகளிடம் கேட்க,
அதில் அவள் முகம் வாடியதை கண்டு பொறுக்காமல் “விடு. இனி வர மாட்டான். வந்தாலும் எங்க கிட்ட சொல்லு” என்றவர்,
“என் மக தைரியமானவ தான். ஆனா, நாங்களும் உன் கூட இருக்கோம்னு தெரிஞ்சுக்க மீனு. எல்லாத்தையும் நீயே சமாளிச்சு கஷ்ட படுவியா? ஒரு வாரமா பின்னாடி வந்து இருக்கான். சொல்லாம அப்படி வேற என்ன உனக்கு நினைப்பு?” என்று வெங்கடேசன் மகளிடம் குறைபட, தென்றல் மீனாவிடம் பெரும் மௌனம்.
‘அப்படி என்ன நினைப்பு?’ என்று தந்தை கேட்ட கேள்வியை திரும்ப அவளுக்கு அவளே கேட்டுக் கொள்ள, உள்ளுக்குள் மின்னலென தோன்றி மறைந்தான் அருண்மொழி!
நொடியில் அவள் முகத்தில் மெல்லிய திகைப்போடி மறைய, யாரும் அறியா வண்ணம் தன்னை இயல்பாக்கி கொண்டாள்.
ஆனால், அவளையே பார்த்தபடி இருந்த வசுந்தராவின் இதழில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது.
முதல் முறையாக அனைவரின் முன்பும் தென்றல் மீனா தடுமாறுகிறாளே..! தடுமாறியது மட்டுமல்லாமல் அந்தத் தடுமாற்றத்தை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு தன்னை இயல்பாய் காட்டிக் கொள்கிறாள்.
நேசம் கொண்டிருந்த நெஞ்சத்தில் கள்ளமும் குடி புகுந்து விட்டிருந்ததை நன்றாகவே உணர்ந்து கொண்டவருக்கு பெறா மகளின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்று பயம் ஒன்று உருவானது. கூடவே, அவனே மீனுவிற்கு மணாளன் ஆக வேண்டும் என்றவரின் உள்ளம் வேண்டிக் கொண்டது.
தந்தையின் கேள்விக்கு பதிலை நீண்ட நேரமாக யோசித்தவளின் சிந்தனை அவனில் சென்று நின்றதும் தன்னை மீட்டுக் கொண்டு “சொல்லிடலாம் தான் இருந்தேன் ப்பா. சரியான சூழ்நிலை அமையல. இன்னைக்கு மதியம் கடைல எல்லாரும் என்னை கவனிச்சு கேட்டதும் சொல்லிட்டேன்” என்றாள் தந்தையிடம்.
“சரி இனி அந்த சாத்தப்பன் பத்தின பேச்சு.. அவன் பையன பத்தி பேச்சு இந்த வீட்ல வேண்டாம். விடுங்க” என்ற பத்மநாபன்,
“மணி ஆறு ஆச்சு. கடைக்கு மறுபடியும் போகனும்” என்றபடி மகன்களுடன் கிளம்பி விட, “நான் வரல ப்பா. நாளைக்கே வரேன்” என்று வீட்டில் இருந்து கொண்டாள் தென்றல் மீனா.
நிகேதனும் வீட்டிலேயே நின்று விட, “நீங்க போகலையா அண்ணா?” என்று கேட்டவளிடம்,
“இல்ல மீனு. அனு டாக்டர் மூணாவது வாரம் செக் அப்கு வர சொல்லி இருந்தாங்க தான. குழந்தையும் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போகனும் இன்னைக்கு. அம்மாவும் கூட வராங்க” என்றவன்,
“நீயும் வாயேன். கடைக்கும் போகலேன்னு சொல்லிட்ட. உனக்கும் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்” என்று அவளிடம் கேட்க,
“ஆமாடி. ரூமுக்குள்ள போய் அடைஞ்சு கிடந்து கண்டதையும் நினைச்சுட்டு பொழுதை போக்காம நீயும் போய்ட்டு வா” என்று அழகம்மை பேத்திக்கு மாறுதலாக இருக்கும் என்று கிளம்பச் சொல்ல, மறுக்க முடியாமல் தானும் அவர்களோடு மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தாள் தென்றல் மீனா.
வரும் வழியெல்லாம் அவனைக் காண்போமா எனும் சிந்தனை தான் அவளை பந்தாடிக் கொண்டிருந்தது.