மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததும் அவனை பார்க்க வேண்டும் என்றும் பார்க்க வேண்டாம் என்றும் இரு வேறு மன நிலைக்கு இடையே சிக்கித் தவித்தவள் அவனை பார்த்து விட்டால் என்ன செய்வது என்றும் யோசித்து இன்னும் படபடத்துப் போனாள்.
நொடியில் முள் மேல் அமர்ந்திருக்கும் அவஸ்தை ஏற்பட “நீங்க பாத்திட்டு வாங்கமா. நான் வெளில இருக்க கார்டர்ன் ஏரியால இருக்கேன்” என்று விசாலாட்சியிடம் சொன்னவள் எழுந்து வெளியே வந்து விட்டாள்.
அந்த பெரிய விஸ்தாரமான மருத்துவமனையின் முன் வளாகத்தில் பச்சை பசேல் என செடிகளும் மரங்களும் புல்வெளியும் இருக்க ஆங்காங்கே மரத்தினால் ஆன கூரைக்கடியில் கல் பெஞ் போடப் பட்டிருந்தது.
சற்று தூரம் சென்று காலியாக இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டவள் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள்.
கண்ணிமைக்குள் புன்னகையை தாங்கி இருந்த அவனின் பிம்பமே உருவெடுக்க பட்டென்று விழிகளை திறந்து கொண்டாள் தென்றல் மீனா.
“ஷிட்.. என்ன மீனு ஆச்சு உனக்கு? ஏன் இப்படி அவரைப் பத்தியே நினைக்கிற?” என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவள், மதியம் கூறிய சமாதான வார்த்தைகளை இப்போது மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
ஒரு வார காலமாக அல்லாடிக் கிடந்த மனம் மிகவும் சோர்ந்து நிம்மதியை தேடி எதையோ யோசிக்கப் போய் குழந்தையை சென்று சேர்ந்ததும் அதனை தொட்டு அருண்மொழியின் நினைவும் வந்து விட்டது என்று சொல்லிக் கொண்டவள்,
“ஸ்லிப் ஆகிடுச்சு தான். ஆனா, அருண்மொழி கிட்ட தானே?” என்று அவளையே மடக்கி கேள்வி கேட்க, தளர்ந்து விட்டாள் தென்றல் மீனா.
“ப்ச்” என்று அயர்ந்து போய் சுற்றிலும் பார்வையை ஓட்ட, சில கர்ப்பிணி பெண்கள் தத்தம் கணவன் மார்களுடனும், தாய் தந்தையுடனும் வந்து சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
மீண்டும் மனதினுள் ஒரு திடுக்கிடல்! தன்னை அறியாமலேயே அவனைத் தேடுகிறோம் என்று புரிந்தது.
தள்ளாடும் மனதை அடக்க முடியாமல் பார்வையை மீண்டும் சுழல விட்டவளின்
விழிகளில் விழுந்தான் அவன்!
அவனைப் பார்ப்போமா எனும் எதிர்பார்ப்பு இருந்தாலும் அவனை இப்போதே பார்த்து விடுவோம் என்று எதிர் பாராதவளின் அகமெல்லாம் ஒரு வித பரபரப்பு.
மருத்துவமனை வாயிலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவன் யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவனின் மேலிருந்து பார்வையை அகற்ற முடியாமல் திண்டாடிப் போனாள் தென்றல் மீனா.
வாட்ச் அணிந்திருந்த இடது கையினால் அலைபேசியை பற்றிக் கொண்டு பேசியபடி மருத்துவமனையின் முன் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தவனின் உருவம் மனதை ஊடுருவி இன்னும் ஆழமாக அவளுக்குள் பதிவதாய்!
வெள்ளைக் கோட்டை கழற்றி இருக்கவில்லை. அடர் பச்சை வர்ண சட்டையும் சாம்பல் நிற பேண்ட்டையும் டக்கின் செய்து அணிந்து இருந்தான்.
அவளின் தொடர் பார்வை தாக்குதல் அவனையும் சென்று சேர்ந்ததோ என்னவோ?
தன்னை பார்வையால் யாரோ துளைப்பது போல் இருக்கவும் பார்வையை திருப்பியவன் தென்றல் மீனாவின் பக்கம் பார்வையை குவித்து அவனை கவனித்து கண்டு கொண்டு விட்டான்!
அவன் கண்டு கொண்டான் என்பதற்கு மென் புன்னகையுடன் அவனின் விரிந்த விழிகளே சாட்சியாகிப் போனது.
சட்டென்று தன்னை கண்டு விடுவான் என்று எண்ணி இராதவளும் தடுமாறி கையில் இருந்த கைப்பையை கீழே தவற விட, அவள் குனிந்து அதனை எடுப்பதற்கும் அருண்மொழி இவளை நெருங்கி வருவதற்கும் சரியாக இருந்தது.
குனிந்திருந்த தன் கண் முன்னே தெரிந்த சாம்பல் வர்ண பேண்ட்டும், இளம் பழுப்பு நிற ஷூவும் அவன் தன் எதிரே நின்றிருக்கிறான் என்பதை உணர்த்த, முகத்தை சீர் செய்து கொண்டு எழுந்து நின்றாள் தென்றல் மீனா.
தனக்குள் பெரும் பூகம்பத்தை நிகழ்த்தி இருப்பவன், தன் முன்னே அமரிக்கையான புன்னகையுடன் வந்து நிற்பதை கண்டவளுக்கு சொல்லில் அடங்காத கோபம் எழுந்தது.
இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் வெளிய அமைதியாய் அறிமுகப் புன்னகை ஒன்றினை சிந்தினாள் தென்றல் மீனா.
“ஹாய்” என்று அறிமுகமானதோர் முகத்தை கண்டு விட்ட பாவனையுடன் அவன் புன்னகைக்க, தானும் அந்த புன்னகை நிறைந்த முகத்தை அவதானித்தபடி, அவனுக்கு ஒரு ‘ஹலோ’ சொல்லக் கூட மறந்து போனவளாக நின்றிருந்தாள்.
எதிரே நின்றவனின் முகத்தை தொடர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு தென்றல் மீனாவிடம் ஒரு வித தத்தளிப்பு.
அவனக்கு அப்படி எதுவும் இல்லை போலும்!
“எப்படி இருக்கீங்க?” என்றவன் புன்னகையுடன் கேட்டு விட்டு, ஒரு நொடி அமைதியாகி நெற்றியில் விரல் வைத்து யோசித்தான்.
அவன் அமைதியான முக பாவனையும் நெற்றியில் விரல் வைத்து யோசித்த விதமும் சொல்லாமல் சொன்னது அவன் தன் பெயரை தான் யோசிக்கிறான் என.
நொடியில் மழுக்கென்று கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டன. தென்றலை மறந்து விட்டான் என மனம் ஏற்க மறுத்தது.
அவனைக் கண்டதும் ஒளிக்கீற்றாய் உள்ளுக்குள் உருவெடுத்த உணர்வுகள், அவன் தன் பெயரை மறந்து விட்டிருந்ததில் அப்படியே வடிந்து போனது.
அவனுக்கு தன் பெயர் கூட நினைவில் இல்லை. ஆனால், தன் நினைவுகள் முழுவதும் அவனால் ஆளப் பட்டு, தான் அவன் நினைவில் ஆழ்ந்து போய் இருக்கிறோம் என்று தோன்றிய நேரம் சுய இரக்கத்தில் கண்கள் கலங்கும் போல் இருந்தது.
முயன்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் அதற்கு மேல் தன் பெயரைக் கூட மறந்து விட்டிருந்தவனின் முன்னால் உடைந்து அழுது விடுவோமோ எனப் பயந்து அங்கிருந்து நகர்ந்து விடலாம் என்று எண்ணிய நேரம்,
“ஸ்… சாரி..” என்றவன் பட்டென்று பளிச்சென புன்னகைத்து “தென்றல் மீனா..” என்க, அவன் அழைப்பில் மீனாவும் ஒட்டிக் கொண்டு வந்ததில் துளி கூட சந்தோஷம் கொள்ள முடியவில்லை அவளால்.
மறந்து விட்டானே என்று மனம் தவியாய் தவித்தது.
“எஸ் டாக்டர்” என்று குரலை செருமிக் கொண்டு பேசியவளிடம்,
“எப்படி இருக்கீங்க? குழந்தை எப்படி இருக்கா?” என்று விசாரித்தான் மீண்டும்.
“ம்ம்.. ஃபைன் டாக்டர்” என்று இரண்டு வார்த்தைகளால் பதில் சொன்னவளின் முகத்தில் ஒளி குன்றிப் போய், கருத்துக் கிடந்தது.
அதை அவனும் கவனித்தவனாய் “ஆர் யூ ஓகே தென்றல்? டல்லா இருக்க மாதிரி தெரியுது?” என்று கேட்க, அந்த வார்த்தைகளில் தெரிந்த அக்கறையில் இவள் மனம் சரிந்து விழுந்தது.
தன்னை கவனிக்கிறான்! அவன் கவனிக்கும் படி தானும் தன் உணர்வுகளை வெளிப்படையாக காண்பிக்கிறோம் என்று புரிந்ததும் முகத்தை இடமும் வலமும் ஆட்டிக் கொள்ள, அவளின் செயலை தன் கேள்விக்கான பதிலாக எண்ணி,
“ஓகே இல்லையா? என்ன ஆச்சு தென்றல்?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசி சிணுங்கியது.
பாடலன்றி எதோ ஒரு இளையராஜா இசையை தான் ரிங் டோனாக வைத்திருந்தான். அதையும் அவளின் மனம் கவனிக்க, அடங்காத மனதை ‘ஸ்டாப் இட் மீனு’ என்று அதட்டி வைத்தாள்.
“ஒன் செக்கண்ட் தென்றல்” என்றவன் அவளிடம் சொல்லி விட்டு அழைப்பை ஏற்றான்.
“சொல்லுங்க அக்ஷயா? வந்துட்டீங்களா?” என்று கேட்டவன் அந்தப் பக்கம் இருந்து பதில் வந்ததும்,
“நான் இங்க தான் வெளில இருக்க கார்டன் ஏரியால இருக்கேன். நீங்க உள்ள போட்டீங்களா?”
“ஓகே என் ரூம்லையே வெயிட் பண்ணுங்க. டூ மினிட்ஸ்ல வந்துடுறேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
‘யாரு அக்ஷயா? அவுங்களை ரிசீவ் பண்ண தான் வெளில வந்தாரா?’ என்று இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“என்ன ஆச்சு தென்றல்? எதோ மாதிரி இருக்கீங்க?” என்று மீண்டும் கேட்டவன்,
“உங்க அண்ணிக்கு செக் அப்காக வந்தீங்களா? குழந்தை ஓகே தான? எதுவும் பார்ப்ளமா?” என்றான் அவள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டு, அவள் சோர்வாக இருப்பதன் காரணத்தை அறிய வேண்டி.
“செக் அப் தான் டாக்டர். குழந்தை ஓகே தான்” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அழைப்பு வந்தது அவனுக்கு.
“டேய்.. முதல்ல பேசிப் பாருடா உனக்கு பிடிச்சு இருந்தா தான் அடுத்து எல்லாம்” என்றவர்,
“சரி பேசிட்டு சொல்லு. எனக்கு நெக்ஸ்ட் பேஷண்ட் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க” என்றவர் வைத்து விட,
சிரிப்புடன் அழைப்பை துண்டித்தவன் இவள் புறம் திரும்பியதும், திகைத்து நிலை குத்திய பார்வையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் புன்னகை குறைந்து புருவத்தை சுளித்தான்.
“தென்றல்.. ஆர் யூ ஓகே?” என்று அவளின் பார்வையிலும், சரியில்லாத முக பாவனையிலும் என்னவென்று மீண்டும் கேட்க,
“நத்திங் டாக்டர். ஐயம் லீவிங்” என்றவள் மருந்துக்கும் அவனை திரும்பியும் பாராமல் அங்கிருந்து கார் நிற்கும் இடத்திற்கு விரைந்தாள்.
வேக வேகமாக விலகி செல்பவளை கண்டு ஒரு நொடி புருவத்தை சுருக்கினான் அருண்மொழி.
“எதோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்காங்க. என்னன்னு தெரியலயே” என்று யோசித்தவனுக்கு ஒன்றும் புரியாத நிலை.
அவன் பார்வை தன் மேல் இருப்பதை உணர்ந்து அவனைத் திரும்பிப் பார்க்கத் துடித்த கண்களையும் மனதையும் அடக்கியவள் “திரும்பி பாக்காத மீனு. பாத்தேனா கொன்னுடுவேன்” என்று தன்னைத் தானே மிரட்டிக் கொண்டு இயலாமையில் துடித்த மனதை அடக்கிக் கொண்டு சென்று விட்டாள்.
அனுஜாவிடம் தான் பேசிய விஷயம் மொத்தமாய் அவளை உடைத்து உருக்குலைத்து விட்டிருப்பதை அறியாமலேயே தனக்காக காத்திருக்கும் அக்ஷயாவிடம் பேசுவதற்காக உள்ளே சென்றான் அருண்மொழி!