காரை செலுத்திக் கொண்டிருந்த தென்றல் மீனாவிற்கு இன்னும் இருதயத்தின் துடிப்பு நின்றபாடில்லை.
மனதை திசை திருப்ப எண்ணி கடற்கரைக்கு வந்திருந்தவளின் மனம் அவனைக் கண்டதும் அவனிருக்கும் திசைப் பக்கமே சென்று அவளை மிகவும் சோதித்தது.
அன்று மருத்துவமனையில் அவனைக் கண்டு விட்டு வந்ததும் வசுந்தராவிடம் கூட எதையும் சொல்லத் திராணியற்று தூக்க மாத்திரையை உட்கொண்டு உறங்கிப் போனவள் அதற்கடுத்து எழவில்லை.
எழவே முடியவில்லை. கண்ணைக் கூட பிரிக்க முடியாத அளவிற்கு காய்ச்சல் கனன்றது. வீட்டில் எல்லோரும் பயந்து போயினர் அவளின் நிலை கண்டு.
நன்றாக இருந்தவளுக்கு திடீரென்று எப்படி இவ்வளவு காய்ச்சல் என்று தவித்துப் போனார்கள்.
“என்ன மீனு? அந்த கேடு கெட்ட விதார்த்தை நினைச்சு வேறு எதையும் மனசுல போட்டு குழப்பி இப்படி உன்னை நீயே வருத்திக்கிறியா? எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட சொல்லிடுடா” என்று வெங்கடேசன் துடித்துப் போய் மகளிடம் கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்ல ப்பா. ரொம்ப நேரம் ஷவர்ல நின்னுட்டேன். அதான் இவளோ காய்ச்சல்” என்று அவரையும் சேர்த்து மொத்த குடும்பத்தையும் சமாளித்திருந்தாள்.
மீண்டும் மீண்டும் யார் எதைக் கேட்டாலும் இதுவே அவளின் பதிலாக இருந்தது. இரண்டு நாட்கள் பெண்கள் அனைவரும் அவளை நன்றாக கவனித்து தேற்றினாலும், விசாலாட்சி மகளை விட்டு நீங்கவில்லை.
“என்னடி நீ? இப்படி காய்ச்சலை இழுத்து விட்டுட்டு இருக்க? ரெண்டு நாள் ஆகியும் இன்னும் இறங்கின பாடில்லை” என்று கவனிப்புகளின் இடையே அவளைத் திட்டித் தீர்க்கவும் மறக்கவில்லை அவர்.
“விடுங்க அக்கா. எதோ ரொம்ப நேரம் தண்ணில நின்னு தலைக்கு குளிச்சு இப்படி ஆகிப் போச்சு. பாவம் மீனு என்ன பண்ணுவா?” என்று வசுந்தரா அவரிடம் சமாதனமாய் கூறியதற்கு,
“நீ சும்மா இரு வசு. நீ இருக்க தைரியம் தான் அவ இப்படி ஒன்னும் சொல்லாம வாய மூடிட்டு இருக்கிறது” என்று வசுந்தராவை கடிந்து கொண்டவர்,
“அந்த பையன் கூட நிச்சயம் நடக்கலன்னு சந்தோஷ படுறதா இல்ல அவனால இவ இப்படி கலங்கி போய் கிடக்கிறத பாத்து வருத்தப் படுறதான்னு தெரியல” என்று கண்ணீருடன் புலம்ப, வீட்டில் உள்ள அனைவருக்கும் இப்படி ஒரு கோணம் மனதில் இருப்பதை கண்டு தென்றல் மீனாவிற்கு கவலையாகிப் போயிற்று.
மகளுக்கு பழச்சாரினை கொண்டு வந்து வைத்தவர் வாய் ஓயாமல் புலம்பித் தள்ள, அவரருகில் சென்று “அம்மா” என்று அவரின் கையினை பிடித்துக் கொண்டவள்,
“நான் நல்லா தான் இருக்கேன். அதை முதல்ல நம்புங்க. அப்புறம் அந்த விதார்த். அவனைப் பத்தி யோசிக்கக் கூட இல்ல நான். அவன் நினைப்பு கூட எனக்கு வரதில்லை” என்று உறுதியுடன் கூறியவள் அவரின் கலக்கம் நீங்காமல் இருப்பதை கண்டு,
“க்ளைமேட் சேஞ். கூடவே நானும் அன்னைக்கு சரியா தலை துவட்டல. அப்படியே படுத்து தூங்கிட்டேன். அதான் இவளோ ஃபீவர். வேற ஒன்னும் இல்லம்மா. நீங்க இப்படி புலம்பி அப்பாவையும் கஷ்ட பட வைக்காதீங்க” என்றவளின் வார்த்தைகளை கேட்ட பின்னர் தான் சற்றே தெளிவாக நடமாடினார் விசாலாட்சி.
அன்று இரவும் தன்னுடன் படுக்க வந்த தாயை கண்டு முறைத்தவள் “நான் என்ன பாப்பாவா? இப்ப ஓகே தான்மா. தூங்கிடுவேன். நீங்க உங்க ரூம் போங்க” என்றவளிடம்,
“என்னை ஏன் விரட்டுற.. அங்க போனா உங்க அப்பா மீனு இன்னும் டல்லா இருக்கா. போய் அவ கூட இருன்னு இங்க தொரத்துறார். இங்க வந்தா நீ அங்க போங்கன்னு தொரத்துற. என்னடி நினைக்கிறீங்க அப்பாவும் மகளும்” என்று விசாலாட்சி பொரும, மூன்று நாட்கள் கழித்து மெல்லிய புன்னகை வந்தது அவளுக்கு.
“சரி இங்கேயே படுங்க” என்றவள் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து விசாலாட்சி நன்றாக உறங்கியதை உறுதி செய்தவள், எழுந்து வசுந்தராவின் அறைக்கு வந்து விட்டாள்.
அவரின் அமைதியே அவளை என்னவோ செய்ய, நிமிர்ந்து அவரின் முகம் பார்த்தவள் “என் மேல கோபமா வசும்மா” என்றாள் வருத்தத்துடன். அவளும் இந்த மூன்று நாட்களாய் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள் அவரின் முகத்தை.
இப்பொழுது தன் மேல் கோபமா என்று அவளே கேட்டதும் அவ்வளவு தான்.. மொத்தமாய் கொட்டி விட்டார் வசுந்தரா.
“பின்ன இல்லாம.. இப்படியா காய்ச்சலை இழுத்து வைப்ப? நைட் சாப்பிட வேணும்னு வந்து எழுப்பினா உடம்பு அந்தக் கொதி கொதிக்குது. உயிரே போய்டுச்சு ஒரு நிமிஷம். அப்படி உன்னைத் தனியா விட்டு கீழ வரவும் முடியல. இங்கிருந்தே கீழ கத்தி முகுந்தன கூப்பிட்டு டாக்டரை வர சொல்லி எவ்ளோ அக்கப்போர் தெரியுமா. எல்லாரும் பதறிட்டோம். இப்படி காய்ச்சல் வந்து சுய நினைவே இல்லாம கலங்கிற அளவுக்கு அப்படி என்ன தான் அன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல்ல நடந்தது?” என்று படபடவென பொரிந்து தள்ளியவர், இறுதியாக விஷயத்திற்கு வந்து நிற்க, மீண்டும் மௌனம் அவளிடம்.
“பின்ன வராம! என் மீனு இப்படி இல்ல. அவ வேற மாதிரி. மொத்தமா அவளை மாத்தி வச்சு இருக்கார் அந்த டாக்டர் தம்பி. உன்னை இப்படி அழுக வைக்கிற அளவுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, கண்ணீருடன் அவரின் மடி சாய்ந்து கொண்டவள் சிறிது நேரம் எதையும் பேசவில்லை.
“எப்படி வசும்மா உங்களுக்கு தெரியும்?” என்று எதையும் சொல்லாமல் தன்னைக் கண்டு கொண்டு சரியாக கேட்டவரின் பேச்சில் கேள்வியோடு அவள் நிறுத்த,
“உன்னை தெரியாதா மீனு எனக்கு?” என்றவரின் எதிர் கேள்வியில் தென்றல் மீனாவின் மனம் பாசத்தில் தழும்பியது.
“அன்னைக்கு நைட் நீயும் அந்த பையனும் குழந்தையை கொஞ்சிட்டு இருந்தப்ப நான் பாத்தேன். கண்ணெடுக்க முடியல. அப்படி இருந்தீங்க ரெண்டு பேரும்” என்றவரின் வார்த்தைகளில் அதற்கு மேல் தன் உணர்வுகளை மறைக்க முடியாமல் சத்தமின்றிய ஒரு கேவலுடன் அவரைக் கட்டிக் கொண்டவள் அழுது கரைந்தாள்.
“இப்ப தான சொன்னேன் மீனு. அழக் கூடாதுன்னு” என்றவர் அவளைத் தேற்ற முயன்று அதட்டிக் கூறினாலும் அவர் குரலும் தவிப்பை கொண்டிருந்தது.
இந்த அளவிற்கு உடைந்து அழும் ரகம் இல்லையே அவள்!
விடாமல் அழுது கொண்டிருந்தவளின் செய்கையில் மீண்டும் காய்ச்சல் வந்து விட்டால் என்ன செய்வது என்று வசுந்தரா பயந்து போனார்.
“மீனு…” என்று கலக்கமாக அழைத்தவர், அவளின் கன்னம் வருடி “என்னமா? ஏன் இப்படி உன்னைப் போட்டு வருத்திக்கிற. என்னால ரொம்ப அதட்டவும் முடியல மீனும்மா” என்றார் அவள் படும் பாட்டை கண்டு பொறுக்க முடியாமல்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தேற்றி அவளிடம் இருந்து முழு விஷயத்தையும் வாங்கி முடித்ததும் வசுந்தராவிடம் கலக்கம் எல்லாம் நீங்கி இருந்தது. கூடவே பெரும் மௌனமும் அவரை கட்டிப் போட்டது.
ஒரு வேளை தான் காதல் வயப்பட்டது பிடிக்கவில்லையோ என்று தென்றல் மீனா யோசிக்க, அவரின் அமைதியான முகத்தில் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை அவளால்.
“முழுசா சொல்லி முடி மீனு” என்றதும்,
“அவரைப் பிடிக்கும்னு எதிர் பார்க்கவே இல்ல வசும்மா. எப்படி பிடிச்சதுன்னு இப்பக் கூட நம்ப முடியல” என்று இப்போதும் நம்ப முடியாத குரலில் சொன்னவள்,
“ஆனா, அவர் மனசுல நான் ரொம்ப சாதாரணமா இயல்பா ஒரு இடத்தில இருக்கேன்.” என்றவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
“அவருக்கு அலயன்ஸ் பேசின பொண்ணு கூட இந்நேரம் பேசி இருப்பார் தானே” என்று சிறு பிள்ளை போல் அவள் அழ, அவள் சொல்லி முடிக்கும் வரை மௌனமாய் இருந்தவர், அவள் அமைதியாகி போனதும் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பினார்.
அவள் கண்ணீரைத் துடைத்தபடி “உனக்குன்னு இருக்கிறதை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது மீனு. கடவுள் நினைச்சா கூட” என்றவரின் வார்த்தைகளில் அசைக்க முடியாத அளவிற்கு ஒரு திடம்!
“உனக்குன்னு ஒரு விஷயம் உருவாகி உன்கிட்ட அது சேரணும்னு இருக்குன்னா அதை யாரால தடுக்க முடியும். சொல்லு? தடுக்க நினைச்சாலும் அந்தத் தடை எல்லாம் தாண்டி உன் மடி வந்து சேரும்டா!” என்றவரிடம் அத்தனை உறுதி!
தென்றல் மீனா கலக்கமாய் அவரின் முகத்தைப் பார்க்க, “விதார்த் கூட உனக்கு கல்யாணம் பேசினாங்க. அதுவும் பெரியவர் பேசின கல்யாணம். நடக்கும்னு தான் எல்லாரும் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா நடந்ததா? இல்லை தானே! எவ்ளோ குளறுபடி இடைல. அவன் குணமே தரங்கெட்ட தனமா இருந்திருக்கு. அதை உன் கண்ணுலேயே கடவுள் காட்டி இருக்கார்” என்றவர்,
“அந்த டாக்டர் தம்பிக்கு நீ தான்னு தெய்வம் முடிவு பண்ணி இருந்தா உன்கிட்ட நிச்சயம் அவரைக் கொண்டு வந்து சேர்க்கும் மீனு. அதை நீ நம்பனும்” என்றவரின் வார்த்தைகளில் அவளின் மனம் சற்றே தெளிவது போல் இருந்தது.
“நம்பிக்கை சாதாரண வார்த்தையா தெரியலாம் மீனு. ஆனா, அந்த நம்பிக்கை நமக்குள்ள எவ்ளோ மாற்றங்களை கொண்டு வரும் தெரியுமா? சும்மா நம்பிக்கை இருக்குன்னு வாய் வார்த்தையா சொல்றது வேற. ஆழமா நாம ஒரு விஷயத்தை நம்பினா தான் நம்பிக்கை நம்மை அரவணச்சுக்கும். நமக்கு உறுதுணையா இருக்கும். நீ உன் மனசை நம்பு. உன் விருப்பத்தை நம்பு. எங்க யார் கிட்ட உன்னை கொண்டு போய் சேர்க்கணுமோ அந்த நம்பிக்கை உன்னை கொண்டு போய் சேர்த்திடும்” என்றவரின் வார்த்தைகளில் அவளுள் சிறு துணுக்காய் நம்பிக்கை பிறந்தது என்னவோ நிஜம்.
அதையும் மீறிய பயத்துடன் “கிடைக்காமலயே போய்ட்டார்னா?” என்று தென்றல் மீனா குழந்தையாய் கேட்க, தாயுள்ளம் அவளின் தவிப்பில் கசிந்து போனது.
“உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்” என்றவரின் வார்த்தைகளில் மீண்டும் கலங்கிப் போனது அவளின் முகம்.
“ஷ்…. சும்மா அழக் கூடாது மீனு” என்றவர், “அதையும் மீறி வாழ்க்கைல உன்கிட்ட வந்து சேரலேன்னா அந்த பையனோட வாழ்நாள் உன்னோட இல்லைன்னு கடவுள் நிர்ணயிச்சட்டதா தான் நீ நினைக்கணும் மீனு. இப்படி கலங்க கூடாது. கலங்கி ஒரே இடத்தில தேங்கி நின்னா வாழ்க்கை என்ன ஆகுறது?” என்றவரின் வார்த்தைகள் அவளுள் இருந்த காதல் காயங்களுக்கு பெரும் மருந்தாக இருந்தது.
அதற்கு மேல் வசுந்தரா எதையும் பேசவில்லை. தென்றல் மீனாவும் எதையும் கேட்கவில்லை. அவரின் வார்த்தைகளில் ரணமாய் இருந்த உள்ளம் சற்றே ஆற்றுப் பட்டது போலிருக்க, நிதர்சனமும் புரிந்தது.
தனக்கு அவனைப் பிடித்து, அவன் மேல் நேசம் பிறந்திருக்கிறது என்றாள் அது என் உணர்வுகளின் பாதை பயணித்த விதம்! என் பிடித்தத்திற்குறிய எண்ணங்களின் சங்கமம் தான் அந்தக் காதல் புள்ளி!
ஆனால் அதே போல் அவனுக்கும் தன் மேல் இதே மாதிரியான உணர்வுகள் இல்லையே என வருந்தி தன்னையும் வருத்திக் கொள்வதில் என்ன நியாயம் என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவள் அதன் பிறகு கலங்கவில்லை. மனதை ஒரு நிலைபடுத்தி இருந்தாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவர், “புரிஞ்சது தானே மீனு? இனி அழுக கூடாது” என்று சொல்ல,
“மாட்டேன் வசும்மா” என்றவள் அவரை அணைத்துக் கொண்டு “என் மேல கோபம் வரலையா? காதல் வந்ததுக்கு?” என்று கேட்க,
“வரல மீனு. கோபம் வர மாதிரியான பையனை நீ காதலிக்கல” என்று சாதாரணமாக சொன்னவர்,
“என்னமோ அந்தப் பையன் கூட நீ குழந்தையை பிடிச்சு நின்னுட்டு இருந்த போது உன் முகத்துல அவ்ளோ சிரிப்பு. அந்த சிரிப்புல அவ்ளோ வெளிச்சம். அந்தப் பையன் முகத்துல அவ்ளோ சாந்தம், அமைதி, கனிவு! கூடவே நிறைஞ்ச சிரிப்பு! அதைப் பாக்க எனக்கு கண் நிறைஞ்சு போச்சு தெரியுமா. ஹாஸ்ப்பிட்டல்ல நிகேதன் போய் அந்தத் தம்பியை பார்த்து ஒரு நாள் பேசிட்டு வந்தான். அப்பா அவன் கிட்ட விசாரிச்சேன் அந்தத் தம்பியை பத்தி. ரொம்ப நல்ல மாதிரின்னு சொன்னான்” என்றவர்,
“நீ வேணும்னா பாரு. நான் வேண்டுற தெய்வம் உனக்கு நிச்சயம் அந்த பையனை உன் கிட்ட சேர்க்கும்” என்றதும் அவரை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டவள்,
“போய் தூங்குறேன் வசும்மா” என்று எழுந்து கொண்டாள்.
“நாளைக்கு கடைக்கு போற தான?” என்று வசுந்தரா கேட்க,
“கண்டிப்பா. போகலாம்னு தான் இருக்கேன் வசும்மா” என்றாள் புன்னகையுடன். அவளின் பதிலில் மகள் தெளிவாகிவிட்டாள் என்று புரிய, புன்னகையுடன் தலை அசைத்து கொண்டவர் உறங்கிப் போனார்.
மறு நாள் கடைக்கு கிளம்பி வந்து நின்றவளை வீட்டில் அனைவருமே ஏன் என்பது போல் பார்க்க, “ஒரு காய்ச்சலுக்கு என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ண பாக்குறீங்க எல்லாரும்” என்று பொதுவாகவே பதில் சொன்னவளின் மெல்லிய கோபத்தில் அனைவரும் வாயை மூடிக் கொண்டனர்.
கிளம்பும் முன்னே சந்தியா அவளிடம் “உன் மருமக உன்னை ரொம்ப மிஸ் பண்றா மீனு. காய்ச்சல்னு நீ வந்து பாக்கவே இல்ல அவளை” என்று சிரிப்புடன் சொல்ல, குழந்தை என்றதும் அந்தக் குழந்தையை கையில் ஏந்தச் செய்தவனின் நினைவும் சேர்ந்து எழ, சோர்ந்து போகும் போல் இருந்த மனதை வசுந்தராவின் வார்த்தைகளை கொண்டு மீட்டுக் கொண்டவள்,
“இன்னும் கொஞ்சம் கோல்ட் இருக்கு அண்ணி. சரியானதும் பாப்பாவை வந்து பாக்குறேன்” என்று விட்டு கிளம்பி வந்து விட்டாள்.
வேலைகள் அவளை இழுத்துக் கொண்டாலும், மற்றொரு பக்கம் அவளின் கவனத்தை அவ்வப்போது சிதைத்துக் கொண்டே இருந்தது அருண்மொழியின் சிரித்த முகம்!
மதியம் வரையிலும் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதற்கு மேல் முடியாமல் “நான் என் ரூமுக்கு போறேன் தாத்தா” என்று சொல்லி விட்டு அவள் எழ,
“டயர்டா இருந்தா வீட்டுக்கு போறியா மீனு?” என்று கேட்க பத்மநாபனிடம்,
“இல்ல தாத்தா. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்” என்று சென்று விட்டாள். தனிமையில் வந்ததும் இன்னுமே அவன் நினைவுகள் அவளைச் சூழ்ந்து மூச்சடைக்க வைக்க, எழுந்து வெளியே வந்தவள், இரண்டாம் தளத்தில் சென்று ஒரு செக்ஷனில் அமர்ந்து கொண்டாள்.
அவள் வந்ததுமே அனைவரும் மரியாதையாக பணிவுடன் அவளுக்கு என்ன வேண்டும் என்று உபசரிப்பாய் கேட்டு அருகில் வந்து நிற்க, “வேலையை பாருங்க எல்லாரும்” என்றவள், வந்திருந்த வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தாள்.
மாலை ஐந்து மணிக்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வசுந்தராவின் வார்த்தைகள் மனதை தேற்றினாலும் காதலில் சிக்குண்டு தவித்த மனம் அடங்குவேனா என்று ஆட்டம் காண்பித்தது அவளுக்கு.
எனவே தான் அடங்காத மனதை அடக்கும் வழி தெரியாமல் தன்னை திசை திருப்பிக் கொள்ள எண்ணி கடற்கரை வந்திருந்தாள்.
அலைகடல் திரண்டு வந்து அவள் பாதங்களை குளிர்வித்து சென்றதை கூட உணராமல் அப்படியே நின்றவள் தன் அருகில் யாரோ நெருங்கி வந்து நிற்கும் உணர்வில் பார்வையை திருப்ப, நிச்சயம் அவனை அந்த நொடி அங்கே எதிர் பார்க்கவில்லை தென்றல் மீனா!
அதன் பிறகு நடந்தவையையும் எதிர் பார்க்கவில்லை அவள்!
அவனைக் கண்டதும், அவன் தன்னிடம் கேட்டதும், தான் அவனிடம் இல்லை என மறுத்ததும், அவன் தன்னிடம் மீண்டும் கேட்டதும், சீண்டியதும், யாசித்ததும் அதற்கடுத்து தான் அவனை மொழி என உயிர் தவிப்புடன் அழைத்ததும் என அனைத்தையுமே எதிர் பார்க்கவில்லை அவள்!!!
மின்னல் வேகத்தில் அரங்கேறி இருந்த அந்த வார்த்தைகளின் பரிமாற்றத்தில் அவள் கண்டு கொண்டது ஒன்றே ஒன்றை தான்!
அவனும் தன்னை, தன் நேசத்தை உணர்ந்து கொண்டான் என!
‘எனக்கு தெளிவா ஒரே ஒரு வார்த்தைல புரிய வையேன் தென்றல்’ என்று கேட்டதுமே அவன் தன்னை புரிந்து கொண்டான் என்றவளுக்கு அதிர்ச்சியும் திகைப்பும் தான் முதலில்!
அதற்கடுத்து அவன் சொன்ன ‘இந்தக் கண்ணுல நான் பாக்குற விஷயமும் உணருற அர்த்தமும் எங்க தப்பா இருக்குமோன்னு பயமா இருக்கு தென்றல்’ என்ற தவிப்பான வார்த்தைகள் அவன் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொடுத்து விட்டது.
எனவே தான் பொறுக்க முடியாமல் மனதிற்குள் மட்டுமே அழைத்த அழைப்பை நேரில் அழைத்து விட்டாள்.
அதன் பின் படபடவென அவனைப் பொரிந்து தள்ளி விட்டு வந்தவளுக்குத் தெரியவில்லை தான் அவனுள் “மொழி” எனும் மந்திரத்தால் நிகழ்த்தி இருக்கும் பெரும் மாயம்!
தன் உயிர்க்காதலை அவனுள் மிக ஆழமாக அழுத்தமாக விதைத்து விட்டு வந்திருக்கிறோம் என்று உணராமல் இதோ இந்த நொடி பதட்டத்தில் தாறுமாறாக மூச்சு வாங்கியது அவளுக்கு.
தன் காதலை உணர்ந்து கொண்டான் என அவனின் வார்த்தைகளே அவளுக்கு எடுத்துரைக்க, உணர்ந்து கொண்டவனின் எதிரொலி என்ன என்று தெரியாத போதிலும் அவன் முகத்திலும், குரலிலும், சிரிப்பிலும், கெஞ்சலிலும் தனக்கான உணர்வுகளை உணர முடிந்தது அவளால்!
ஆகையால் தான் அவன் சொன்ன “ஃபர்ஸ்ட் இன்விட்டேஷன் தென்றலுக்கு தான்” என்றதில் இப்போது வரை கோபம் பொங்கியது.
“ஃபர்ஸ்ட் இன்விடேஷன் எனக்காமா? வந்து வைக்கட்டும்! வச்சு தான் பார்க்கட்டும்!” என்று கருவிக் கொண்டபடி இல்லம் வந்து சேர்ந்திருந்தவள், அன்றைய நாளை பெரும் தத்தளிப்புடன் தான் கடந்திருந்தாள்.
ஆனால், மறு நாள் ஸ்வர்ணம் பேலஸிற்கே அழைப்பிதழோடு வந்து இதை விட மோசமாய் தன்னை தத்தளிக்க வைப்பான் என கனவிலும் நினைக்கவில்லை தென்றல் மீனா!