அதே மகிழ்வோடு அனுஜாவுடனே மதர் கேர் மருத்துவமனைக்கு வந்தவன் இரவு பணி முடியும் வரை தென்றலின் அழைப்பிற்காக காத்திருந்தான்.
இல்லம் வந்தும் கூட தென்றல் அலைபேசி வழி தீண்டாமல் இருக்க, தானே அழைத்து விடுவோமா என்று தன் அலைபேசியில் சேமித்து வைத்திருந்த எண்களை தீண்டியும் தீண்டாமலும் பார்வையிட்டு கொண்டிருந்தான்.
தென்றல் என்று பச்சை வர்ண இதயத்துடன் அவளின் எண்களை பதிந்து வைத்திருந்ததை கண்டவனுக்கு ரகசியப் புன்னகை ஒன்று உதயமானது.
உள்ளத்தின் காதல் நமைச்சல் தாங்கமால் அலெக்சாவை உயிர்ப்பித்து பாடலை ஒலிக்கச் சொன்னான்.
எப்போதும் அலெக்சாவே சேமித்து வைத்திருந்த இவனின் பிரத்யேக பாடல் தொகுப்பை பாடுவாள்!!
ஆனால், இன்று “ப்ளே தென்றல் வந்து தீண்டும் போது சாங் அலெக்ஸா” என்றவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க அலெக்ஸா பாடலை ஒலிக்க விட்டாள்!
“தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல…” என்று பாடல் தொடங்க,
“ம்ம்… கொஞ்சமே கொஞ்சம்னாலும் தென்றல் இன்னைக்கு என்னை தீண்டுச்சே!” என்றவனுக்கு இதழ்கள் சிரிப்பில் துடித்தன.
மீண்டும் அவள் தன் சட்டையை பற்றி உரிமையாக உலுக்கியதும் அந்த நூலளவிலான உரசலும் அவன் உள்ளத்தை இம்சிக்க, “தென்றல்….” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.
“வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா” என்று ரசனையுடன் பாடலோடு லயித்து பாடியவனின் எண்ணமெங்கும் தென்றலின் குளுமை!
எண்ணற்ற முறைகள் இந்த பாடலை அவன் கேட்டு இருக்கிறான். கேட்கும் போதெல்லாம் இளையராஜாவின் இசையும் இசையின் இதமும் பாடல் வரிகளும் அதன் பொருளும் தான் அவன் மனதை ஆட்கொண்டிருக்கிறது.
ஆனால் இன்று இசையையும் அவ்விசை தந்த இதத்தையும் தாண்டி மனதிலோர் இன்பப்பரவசம்!
உயிருக்குள் உயிராய் நேசிப்பவளின் நினைவிலும் பெயரிலும் அப்பாடல் இன்று அவனுக்கு புதியதொரு உணர்வைக் கொடுத்தது.
அலெக்சா உடன் சேர்ந்து அவனும் பாடினான்.
“நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம் போடுது”
பாடலில் லயித்தபடி புன்னகையுடன் அவன் அலைபேசித் திரையை வருடிக் கொண்டிருக்க இதோ.. தீண்டி விட்டது அவனின் தென்றல்!
அந்தப் பக்கம் மனமெங்கும் மொழியின் வரிகளைப் படித்து அவனின் காதலில் திண்டாடிப் போய் இருந்தவளுக்கு அழைப்பு செல்லும் அந்த சில நொடிக் காத்திருப்புகள் கூட மிகக் கொடுமையானதாகத் தெரிந்தது.
அவனும் தாமதிக்காமல் அழைப்பை ஏற்றதும், “மொழி” என்றவளின் குரல் அவனுக்கான ஒட்டு மொத்த காதலையும் கொட்டுவதாய்!
உள்ளத்தின் பள்ளத்தை நிரப்பி வெள்ளமாய் பாய்ந்தோடியது அவளின் காதல் ‘மொழி!’ என்ற அழைப்பு.
“இப்ப தான் இன்விடேஷன் பாத்தியா தென்றல்?” என்றான் அவனும் புன்னகை ததும்பிய குரலில்.
“ம்ம்..” என்றவளுக்கு அடுத்து வார்த்தைகள் வெளிவரவில்லை.
“தென்றல்” என்றவனும் அமைதியாகி விட,
“காலம் முழுக்க என்னோட மொழியாவே இருப்பீங்களா நீங்க?” அவன் எழுதி இருந்த வரிகளைப் பார்த்து கேட்ட கேள்வியை இப்போது அதை எழுதியவனிடமே கேட்டாள் தென்றல்.
அவளின் கரகரத்த குரலில் “தென்றல் அழறியா?” என்றான்.
அவள் பதில் பேசாமல் இருக்கவும் “தென்றல் என்னமா இது?” என்று அவன் தவிக்க,
“முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மொழி?” என்று வேகமாய் ஒரு அதட்டல் அவளிடத்தில்.
“ம்ம்… தென்றலோட மொழியா தான் இருக்க ஆசை! ஏன் தென்றலுக்கு அந்த ஆசை இல்லையா?” என்றான் புன்னகை பூக்க.
“பேச வரல மொழி. இப்படி யார் கிட்டயும் என் பேச்சு திக்கினது இல்லை. ஆனா, உங்க காதலுக்கு முன்னாடி என்னோடது எதுவும் என்னோடதா இல்ல. இருக்கவும் விரும்பல நான்” என்றவள் இன்னும் விசும்ப,
“இப்பவும் சொல்றேன் தென்றல்! தென்றலில்லாம இனிமேல் மொழி இல்லை. இதை நீ ஆழமா நம்பனும்” என்றான் அவள் உயிரையே ஊடுருவும் குரலில்!
தன்னைக் கொண்டே, தன் பெயரைக் கொண்டே காதலை உணர்த்தி, தனக்குள் காற்றாய் நிறைந்து, சுவாசத்தில் அவனின் சுவடுகளை பதியணிட்டு, தன்னை மொத்தமாய் அவனிடம் சாய்த்தவன் மேல் அளவில்லா காதல் பெருகியது அவளுக்கு.
“நீங்க எழுதி இருக்க ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பொக்கிஷம் மொழி” என்றவள் இதயத்தின் ஆழம் வரை அவ்வரிகளை பொத்தி வைத்துக் கொள்பவள் போல் நெஞ்சோடு அணைத்திருந்த பத்திரிக்கையை இறுக்கிக் கொண்டாள்.
மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்று அவளின் அமைதியும் மெல்லிய விசும்பலும் காட்டிக் கொடுத்தது.
அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர நினைத்தவன் “தென்றல்.. இன்விடேஷன்ல பொண்ணு பேர்… மாப்பிள்ளை பேர் எல்லாம் சரியா தானே இருக்கு? இல்ல தப்பா இருக்கா? ஒரு வேளை தப்பா இருந்தா எப்படி இவன் சட்டையை பிடிக்கலாம்னு யோசிச்சுப் பாத்திட்டு இருக்கியா?” என்றான் குறும்பு கூத்தாடும் குரலில்.
அவனின் பேச்சில் தன்னை திசை மாற்ற முயல்வதை கூட உணராமல் “உங்களை….. அதை விடவே மாட்டீங்களா… எதோ ஒரு வேகத்துல பிடிச்சிட்டேன். அதுக்குன்னு அதையே சொல்வீங்களா?” என்று பல்லை கடித்தவள்,
அடுத்த நொடியே “ஏன் நான் பிடிச்சா என்ன?” என்று வீம்பாக சொல்லியபடி,
“உங்க சட்டையை பிடிக்க கூடாதா நான்? பிடிப்பேன். என் மொழி நீங்க. நான் பிடிக்காம வேற யாரு பிடிக்க போறா” என்று சட்டென்று மூண்டு விட்ட கோபத்துடன் கேட்க,
“ஷ்ஷ்….. தென்றல்.. நான் சொல்றது அப்படியே செய்யேன்” என்றவன்,
அடுத்து அவளைப் பேச விடாமல் “எழுந்து போய் கண்ணாடில உன் ஃபேஸ் பாரேன்!” என்று ஹஸ்கி குரலில் கேட்டுக் கொள்ள,
எதற்கு என்று தெரியா விட்டாலும் அவன் கேட்டதை செய்யச் சொல்லி மனம் சண்டித்தனம் செய்து இதோ கண்ணாடி எதிரே எழுந்து வந்து நின்றும் விட்டாள் தென்றல் மீனா.
“ம்ம் பாத்துட்டேன். ஃபேஸ்க்கு என்ன மொழி?” என்றவளுக்கு என்ன சொல்ல வருகிறான் என்று புரியாத நிலை!
“ஃபேஸ்க்கு ஒன்னுமில்ல தென்றல். ஆனா, நோஸ் சிவந்து இருக்கு தானே” என்றவனின் குரல் இன்னும் ரகசியமாய் அவளை சேர்ந்தது.
“ம்ம்…” என்றவள் குரலுமே இப்போது இறங்கி இருக்க, “உங்களுக்கு எப்படி தெரியும்? மூக்கு சிவந்து இருக்குன்னு?” என்று தன் நாசியை தொட்டுப் பார்த்துக் கொண்டே கேட்க,
“தெரியுமே… தென்றலுக்கு கோபம் வந்தா அந்த மூக்கு மிளகாய் மாதிரி சிவந்து போகும்னு. இன்னைக்கு காலைல கூட சிவந்துச்சே” என்றான் உல்லாசமாய்.
“அச்சச்சோ மொழி!” என்றவள் தன்னிச்சையாக ஒற்றை கை கொண்டு செஞ்சாந்தாய் சிவந்த முகத்தை மூடி இருந்தாள். இதழ்களில் அளவில்லா வெட்கப் புன்னகை மிளிர்ந்து கொண்டிருந்தது.
“அச்சோ அச்சச்சோவாகியாச்சா…” என்றவன் அதற்கும் வம்பிழுக்க, அவளுக்குத் தான் அத்தனை இம்சையாய் இருந்தது அவனின் பேச்சுக்களும், புன்னகையும்.
அவளின் அமைதி மேலும் அவனைத் தூண்ட, “எல்லா சிவப்பும் உந்தன் கோபம்” என்று பாடியவனின் இதழ்கள் ரசனையைத் தாங்கி இருந்தது.
“மொழி பிளீஸ்…” என்றவளின் அவஸ்தை குரல் இன்னும் அவனை கட்டி இழுத்தது.
“ஓகே.. ஓகே..” என்றவன் மனம் கேட்காமல் “இன்னும் ஒண்ணே ஒண்ணு சொல்றேன்” என்றவனின் கள்ளக் குரலை கண்டு கொண்டு,
‘நோ மொழி’ என்று மறுக்க வந்தவளின் இதழ்கள் இதயத்தின் சதியில், சொல் பேச்சுக் கேளாமல் “சொ..ல்லுங்க மொழி” என்றிருந்தது திக்கித் திணறி!
“வெரி குட் தென்றல்” என மீண்டும் நமட்டுச் சிரிப்புடன் சொன்னவன்,
“காதல் வந்தா தூக்கம் வராது போல தென்றல்” என்றான் சிரிப்புடன்.
“எனக்கும் கொஞ்ச நாளா தூக்கமே வந்தது இல்லை மொழி. கண்ணை மூடினா ஹாஸ்பிட்டல்ல ஃபர்ஸ்ட் டைம் உங்களை பாத்தது,அண்ணியை நினைச்சு நான் பயந்தப்ப நீங்க என்னை காம் டவுன் பண்ணது, என் கிட்ட பாப்பாவை தூக்கித் தந்தது, அவளை எப்படி தூக்கணும்னு கைட் பண்ணது, செரிஷ் த மொமெண்ட்னு சொன்னது, மறு நாள் சிரிச்சிட்டே கதவுல சாய்ஞ்சு நின்னு எங்களை பாத்தது, இதெல்லாம் கண்ணுக்குள்ளயே நிக்கும். தூக்கமே போய்டும். உங்களைத் தவிர்த்து வேறெதுவும் தோணாது” என்று சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு ஆரம்ப நாட்களில் தவித்த தவிப்பை எண்ணி மெல்லிய புன்னகை பூத்தது.
அவனை நினைத்து ஏங்கிய நாட்களை எல்லாம் அவனிடமே பகிர்ந்து கொள்ள, அவளின் காதலில் பிரம்மித்து தான் போனான் அருண்மொழி.
“எந்த நம்பிக்கைல தென்றல் என் மேல இவ்ளோ காதல்?” என்று குரல் கமற கேட்டவனிடம்,
வார்த்தைகள் வராமல் மௌனம் காத்தவன் அவள் அன்பின் மிகுதியில் விண்ணைத் தொடும் சந்தோஷத்தில் இருந்தான்.
“இன்னைக்கு நல்லா தூங்குவ தானே தென்றல்” என்றவனிடம், “ஹ்ம்ம்… கண்டிப்பா மொழி” அப்போது தான் நேரத்தைப் பார்க்க, பன்னிரண்டை தொடவிருந்தது.
“ஐயோ மொழி.. இவளோ நேரம் ஆகிடுச்சு. நீங்க தூங்குங்க. நாளைக்கு டியூட்டி இருக்கு தானே” என்று கேட்க,
“ம்ம் போகனும் தென்றல்” என்றவன் அனுஜா கேட்டதை நினைவு கூர்ந்தவனாய்,
“நாளைக்கு ஈவ்னிங் நீ ஃப்ரீயா தென்றல்? உன்னை பாக்கனும்னு அனும்மா கேட்டாங்க” என்றான்.
அனுஜா என்றதும் நிகேதனிடம் அவர் பேசியது நினைவு வர, அதைக் குறித்து அவனே சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.
அண்ணன் கேள்வி பட்டதை வைத்து வந்து சொன்ன போது அருண்மொழி அவரின் சொந்த மகன் இல்லை என்கிறது மட்டும் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தது. இப்போது அவனிடம் அதைப் பற்றி கேட்கவும் முடியவில்லை அவளால்.
“அனும்மாவை உனக்கு தெரியும் தானே தென்றல். ஹாஸ்பிட்டல்ல பாத்திருப்ப” என்றவனின் குரலில் தன்னிலை அடைந்தவள்,
“ஹான் தெரியும் மொழி”
“ஹ்ம்ம்.. அவுங்க.. என்னோட.. அவுங்களும் எனக்கு அம்மா தான்” என்றவனுக்கு அன்னையை, தங்கை, தன்னை பற்றி சொல்ல வேண்டும் என்று யோசித்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தான்.
“வேணாம் மொழி. எதுவா இருந்தாலும் நாளைக்கு நேர்லயே பேசலாம். சொல்ல முடியாம தவிக்கிறீங்க நீங்க. என்னமோ பெரிய விஷயம் இருக்குன்னு புரியுது. நாளைக்கே சொல்லுங்க” என்றவள் எப்போது வர வேண்டும் என்று அவனிடம் கேட்டுக் கொள்ள,
அவளின் புரிதலில் தவிப்பெல்லாம் பின்னே சென்று விட்டது அருண்மொழிக்கு.
“ஈவ்னிங் நீ கிளம்பும் போது எனக்கு கால் பண்ணு தென்றல். போகலாம்” என்றதும், “சரி மொழி. குட் நைட்” என்றாள்.
“கண்டிப்பா தூங்குவேன். நீங்களும் தூங்குங்க. குட் நைட்” என்று விட்டு அழைப்பை துண்டித்தார்கள் இருவருமே.
தூங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்ட இருவருக்குமே உறக்கம் கண்களை எட்டி இருக்கவில்லை.
அன்றைய தினம் அத்தனை அழகான தருணங்களை அவர்களுக்கு நினைத்து நினைத்து ரசிக்கக் கொடுத்திருக்க, ஒருவர் நினைவில் மற்றொருவர் சுகமாய் தங்களை மூழ்கடித்துக் கொண்டனர்.
மறு நாள் அனுஜாவின் இல்லத்தில் அருண்மொழியின் அனைத்தையும் தெரிந்து கொண்டதும் நெஞ்சம் பரிதவித்து ரணவலியில் சிலையாய் சமைந்து போனாள் தென்றல் மீனா!