மறு நாள் மாலை ஆறு மணி அளவில் தான் கடையில் இருந்து கிளம்ப முடிந்தது தென்றல் மீனாவால்.
கிளம்புகையில் வழக்கம் போல் பத்மநாபனின் அறைக்கு வந்து அவரிடம் சொல்லி விட்டுச் செல்லலாம் என்று அவரின் அறைக்கு வந்திருக்க, வெங்கடேசன் அங்கே தான் இருந்தார்.
மகளைக் கண்டதும் “வா மீனு” என்றவர் “வீட்டுக்கு கிளம்பிட்டயா?” என்று கேட்க,
“ஆமா ப்பா கிளம்பியாச்சு” என்றவள், “நீங்களும் பட்டறைக்கு கிளம்பியாச்சா ப்பா?” என்று அவர் எடுத்து வைத்திருப்பதை கண்டு கேட்க,
“ஆமா மீனு. பட்டறைக்கு போகனும். புது கலெக்ஷன்ஸ் எல்லாம் செஞ்சு ரெடியா இருக்காம். அதை செக் பண்ணி கொண்டு வரணும். அதான் நானும் குணாவும் போகலாம்னு இருக்கோம்” என்றவர்,
“நீயும் வாயேன் மீனு. வீட்டுக்கு தான போகப் போற?” என்று மகளிடம் கேட்க, எப்படி மறுப்பது என்று ஒரு நொடி தடுமாறினாள் தென்றல் மீனா.
சற்று முன்னர் தான் தன் அறையில் இருந்து வரும் போது அருண்மொழிக்கு அழைத்து கடையில் இருந்து கிளம்பப் போவதாக அவள் சொல்லி இருக்க, அவன் பேசிய பின்னர் அனுஜாவும் அவளிடம் பேசி இருந்தார்.
வீட்டிற்கு வரும்படி அவரும் அழைத்திருக்க மறுக்கவே முடியவில்லை அவளால்.
இப்போது பட்டறைக்கு தன்னோடு வரும்படி தந்தை அழைத்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள்.
ஆனால், அவள் பதில் சொல்லி சமாளிப்பதற்கு முன்னர் பத்மநாபன் பேத்தியை காப்பாற்றி இருந்தார்.
“அவளே டயர்டா தெரியிறா. அவ எதுக்கு. நீயும் குணாவும் மட்டும் போய்ட்டு வாங்க வெங்கடேசா” என்றவரின் பார்வை பேத்தியை தான் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
“அதுவும் சரி தான்” என்ற வெங்கடேசன் மகளிடம் “பாத்து போய்ட்டு வா மீனு” என்று விட்டு குணநாதனுடன் கிளம்பி இருந்தார்.
அவர்கள் சென்றதும் பெரு மூச்சுடன் தாத்தாவின் புறம் பார்வையை திருப்பியவள் “நானும் கிளம்புறேன் தாத்தா. கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வீட்டுக்கு போய்டுவேன்” என்க, பத்மநாபன் பேத்தியை குறுகுறுவென பார்த்தபடி சரி என்று தலை அசைத்தார்.
தென்றல் மீனா அவரின் பார்வை மாற்றத்தை உணர்ந்தாலும் எதையும் கேட்கவில்லை.
உள்ளுக்குள் குறுகுறுத்தாலும் இப்போதைக்கு வீட்டாட்களிடம் அருண்மொழியை குறித்து வாயைத் திறக்க அவள் நினைக்கவில்லை.
தங்களுக்குள்ளேயே இன்னும் பரிமாறி, பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் போது வீட்டினரிடம் எப்படி ஆரம்பித்து எதை பகிர்ந்து கொள்ள என்று அமைதி காத்தாள் தென்றல் மீனா.
ஆனால் அனுஜாவின் இல்லத்திற்கு செல்வதை வசுந்தராவிடம் பகிர்ந்திருந்தாள்.
“போய்ட்டு வா மீனு. கவனம்” என்றிருந்தார் வசுந்தரலக்ஷ்மியும்.
அவர் சென்று வா என்று கூறி விட்டாலும் தென்றல் மீனாவிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.
“வீட்ல யாரு கிட்டயும் சொல்லல வசும்மா. அதே சமயம் அவர் கேட்டதும் என்னால மறுக்கவும் முடியல. வரேன்னு சொல்லிட்டேன்” என்றாள் தயக்கத்துடன்.
“இதனால என்ன? அந்த டாக்டர் மேடத்தை நாமளும் பாத்தோமே மீனு. ரொம்ப நல்ல டைப். அது எல்லாம் போக தம்பிக்கு அவுங்க ரொம்ப வேண்டப் பட்டவங்களா இருக்கப் போய் தான் அவரும் உன்னை கூப்பிட்டு இருக்கார். போய்ட்டு வா” என்றவரின் வார்த்தைகளில் தான் அவளின் தயக்கம் நீங்கி இருந்தது.
ஆனால், இப்போது பத்மநாபனின் பார்வையில் மீண்டும் ஒரு மாதிரி தயக்கமாக உணர்ந்தவள் குழப்பமான மன நிலையுடன் கிளம்பி இருக்க, காரில் ஏறி அமர்ந்ததும் அருண்மொழியிடம் இருந்து அழைப்பு வந்தது.
தலையை உலுக்கிக் கொண்டு உள்ளுக்குள் சலசலத்த எண்ணப் போக்குகளை உதறி விட்டு அழைப்பை ஏற்றாள்.
“கிளம்பியாச்சா தென்றல்?” என்றான் அருண்மொழி.
“இல்ல மொழி. இப்ப தான் ஸ்டார்ட் பண்றேன். நீங்க லொகேஷன் அண்ட் அட்ரஸ் ஷேர் பண்ணுங்க” என்றதும்,
“இல்ல நீ ஹாஸ்பிட்டல் வந்திடு தென்றல். சேர்ந்தே போய்டலாம்” என்றவன்,
“அனும்மா ஈவ்னிங் சீக்கிரமே வீட்டுக்கு போய்ட்டாங்க. நானும் அவுங்களோட போறதா தான் இருந்தது. அப்புறம் நீ தனியா வர வேணாம்னு தான் உன்னோட போகலாம்னு ஹாஸ்பிட்டல்ல வெயிட் பண்றேன்” என்றான்.
“ஓகே மொழி” என்றவளிடம்,
“உனக்கு ஓகே தான தென்றல். இல்லேன்னா சொல்லிடுடா. அனும்மா அண்டர்ஸ்டேண்ட் பண்ணிப்பாங்க” என்றான் அவள் குரலின் மாற்றத்தை உணர்ந்து.
தன் குரலை வைத்தே தன்னை புரிந்து அனுசரிப்பவனிடம் மெய்யாகவே அவளால் மறுப்பாக எதையும் சொல்ல முடியவில்லை.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல மொழி. நான் வரேன்” என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினாள்.
அவள் வந்ததும் அருண்மொழிக்கு அழைக்க, “கிளம்பிட்டேன் தென்றல். வெளிய வந்துட்டு இருக்கேன்” என்றதும்,
“ஓகே மொழி. வாங்க” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள் அன்று நின்றிருந்த அதே கார்டன் ஏரியாவில் வந்து நின்றாள்.
அன்றைக்கான மன நிலையும், இன்றைக்கான மன நிலையையும் ஒப்பிட்டு யோசித்தவளுக்கு அழகான புன்னகை அரும்பியது.
அன்று போலவே இன்றும் மருத்துவமனை வாயிலை திரும்பிப் பார்க்க, அங்கே வந்து சேர்ந்திருந்தான் அருண்மொழியும்.
வந்ததுமே தன்னைப் போல அவனின் பார்வையும் இவள் இருக்கும் திசையை நோக்கி திரும்பி இருக்க, இருவரின் முகத்திலும் மலர்ந்த புன்னகை!
இளநீல நிற ஜார்ஜெட் குர்தியில் செம்பருத்தி நிறத்தில் இலைகள் ஆங்காங்கே அழகாய் விழுந்திருக்க, இடது கையில் வாட்சும், வலது கையில் கைப்பையும், முகத்தில் அன்றைய நாளுக்கான சோர்வையும், கண்களில் தனக்கான அளவில்லா காதலையும் தாங்கி நின்றவளை கண்டு அருண்மொழியின் நெஞ்சம் இன்பமாய் துடித்தது.
உள்ளங்கை விரித்து அவளிடம் கை அசைத்தவன் அவளை நோக்கி நடந்து வந்தான்.
“அன்னைக்கு என்னைப் பார்த்ததும் இவ்ளோ சிரிக்கல நீங்க” என்றாள் அவன் தன்னை நெருங்கியதும்.
விரிந்த புன்னகையுடன் அவளை நோக்கியவன் “அன்னைக்கு தென்றல் ஃபேஸ்ல கூட இந்த அளவு ஸ்மைல் இல்ல. ஆனா, இப்ப..” என்று இரு கண்களையும் அழகாய் சிமிட்டி புன்னகையுடன் தோள் குலுக்கியவன்,
“அப்படியே மத்தாப்பூ மாதிரி மின்னுது தென்றல்” என்றான் ரசனை சொட்ட!
“ம்ம்.. கிளம்பனுமே” என்றவள் பார்வையை அவனை விட்டு விலக்கிக் கொண்டாள். அலைபேசியிலேயே மொத்தமாய் சிவக்க வைத்தவன் இப்போது நேரிலும் அதனை செவ்வனே செய்ய அவளால் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.
எனவே தான் பேச்சை மாற்றும் விதமாக கிளம்பனுமே என்று சொல்லி விட்டாள்.
அவளின் எண்ணம் புரிந்து “தென்றல்..” என்றவன் குரலில் இன்னும் நகைப்பு கூடிப் போய் இருந்தது.
“பிளீஸ் மொழி” என்று அவள் சிணுங்களாய் கெஞ்ச, “ஓகே தென்றல். போகலாம்” என்றபடி அவளுடன் பார்க்கிங் ஏரியா வரை நடந்தான்.
“உங்களுக்கு டியூட்டி முடிஞ்சதா மொழி?”என்று அவனோடு சிறு இடைவெளி விட்டு நடந்தபடி கேட்க,
“இல்ல தென்றல். எப்படியும் அனும்மா வீட்டுக்கு போய்ட்டு திரும்பி வரணும்” என்றவன் “நான் பைக்ல வரேன் தென்றல். நீ ஃபாலோ பண்ணிக்கோ” என்று பைக்கை எடுக்க நெருங்க,
“என் கூடவே வரேன்னு சொல்லிட்டு ஏன் பைக் எடுக்குறீங்க நீங்க? வாங்க கார்லையே போகலாம். நான் வந்து உங்களை திரும்ப ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்றாள் அவனைத் தடுத்து.
“திரும்ப வந்து ட்ராப் பண்ணி நீ வீட்டுக்கு போறதுக்கு டைம் ஆயிடும் தென்றல். இப்பவே லேட்” என்று அவன் நேரத்தை பார்க்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க வாங்க” என்றவள் அவன் பேசுவதற்கு இடம் அளிக்காமல் “நீங்க ட்ரைவ் பண்றீங்களா?” என்று அவனிடம் தன் கார் கீயை கொடுக்க,
“தென்றல்..” என்று இடமும் வலமும் தலையசைத்து சிரித்தவனிடம் “அப்ப வாங்க ரெண்டு பேரும் பைக்ல போகலாம்” என்று ஒற்றை காலுக்கு நின்றாள் அவள்!
“நீ ஃபாலோ பண்ணிக்கோ தென்றல். நான் திரும்பி வந்துப்பேன்”
ஒன்றும் சொல்லாமல் அவள் அமைதியாக அவனின் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டு சாவியை நீட்டியபடி இருக்க, “பிடிவாதம் பிடிக்குதே இந்த தென்றல்” என்றான் சிரிப்புடன்.
“மொழி..” என்று அதட்டியவள், “ட்ரைவ் பண்ணுவீங்க தான நீங்க?” என்று கேட்டு அவன் ஆமோதிப்பாய் தலை அசைத்ததும் எந்த வித தயக்கமும் இன்றி,
“வாங்க நீங்க” என்று அவனின் வலது கை விரல்களை பற்றி இழுத்துக் கொண்டு போய் காரின் ட்ரைவர் சீட்டில் அவனை இறுத்தியவள் சீட் பெல்ட்டையும் போட்டு முடித்து “ஸ்டார்ட் பண்ணுங்க” என்றபடி மறு பக்கம் வந்து அமர்ந்து கொண்டாள்.
இதை எல்லாம் கண்ணிமைக்கும் நொடிக்குள் அவள் நடத்தி முடித்திருக்க, தன் கை பற்றி இழுத்த போது “தென்றல்…” என அருண்மொழி மெல்லிய சிரிப்புடன் அழைத்ததோ, சீட் பெல்ட்டினை அணிந்து விடும் போது ஏற்பட்ட நெருக்கங்களையோ, அவளின் கூந்தல் அவன் முகம் உரசியதையோ, அதில் பேச்சற்று “ஹே தென்றல்..” என்றவன் திகைப்பாக அழைத்ததோ அவள் கருத்தை எட்டவில்லை.
மறு பக்கம் வந்து அவள் அமர்ந்ததும் அவனின் பார்வை அவளை தொடர்ந்ததை உணர்ந்து, “என்ன முழிப்பு? ஸ்டார்ட் பண்ணுங்க மொழி” என்றவள் அவன் பார்வையில்,
“எனக்கு வழி தெரியாது தானே. நான் ட்ரைவ் பண்ணும் போது மேப்பே (map) ரொம்ப ரேரா தான் யூஸ் பண்ணுவேன். ரோட்ல தான் ஃபுல் கான்சன்ட்ரேஷன் இருக்கணும் எனக்கு. நீங்க ரூட் சொல்லி நான் ஓட்டி.. ம்ஹும்.. என்னால முடியாது மொழி. நீங்களே ஓட்டுங்க. திரும்பி நான் ட்ராப் பண்ணிட்டே வீட்டுக்கு போறேன்” என்றாள் மடமடவென.
“நீ எனக்கு சீட் பெல்ட் போட்டு விட்ட மாதிரி நானும் ஹெல்ப் பண்ணனுமான்னு யோசிச்சுப் பாத்திட்டு இருக்கேன் தென்றல்” என்றான் குறும்பு புன்னகை மின்ன!
அப்போது தான் செய்தவை நினைவுக்கே வர, படக்கென்று சீட் பெல்ட்டை எடுத்து போட்டுக் கொண்டவள் “போகலாம். ரெடி” என்றாள் விவரமாய் அவன் புறம் பார்வையை திருப்பாமல்!
“ரெடியா?” என்றான் அவனும் ஸ்டியரிங்கில் தலை சாய்த்து அவளின் படபடப்பை ரசித்தபடி.
“உங்களை…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவன் புறம் திரும்ப,
“சட்டையை பிடிக்கணும்.. அதானே.. இந்தா தென்றல்” என்று அவன் சற்றே அவளை நெருங்க,
“பார்க்கிங் ஏரியால என்ன கலாட்டா பண்றீங்க நீங்க?” என்று அலுத்துக் கொண்டவளை கண்டு பெரும் சிரிப்பு அருண்மொழிக்கு.
“என்னை டென்ஷன் பண்றீங்க நீங்க?” என்று அவள் முறைக்க,
‘கமான் தென்றல்.. இன்னும்.. அப்ப தான் மூக்கு சிவக்கும்’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் “நான் என்ன டென்ஷன் பண்றேன் தென்றல்” என்றபடி காரை கிளப்பியவன்,
“நீ பண்ண நினைச்சதை தான் சொன்னேன்” என்றான் விஷமமான குரலில்.
“அப்பப்பா… உங்க அட்டாகாசம் தாங்கல” என்று நொந்து கொண்டவள்,
“சத்தியமா நீங்க இவளோ பேசுவீங்களா?” என்று அவனிடமே கேட்டும் விட,
“எனக்கே இப்ப தான் தென்றல் தெரியும் இவ்ளோ பேசுவேன்னு. அதுவும் உன்கிட்ட தான் இவ்ளோ… லிமிட் தாண்டி போய்டும் போல விட்டா” என்று சிரித்துக் கொள்ள,
“அதென்ன என்கிட்ட லிமிட்” என்று மூக்கை சுருக்க, அவன் பார்வை தன்னிடம் திரும்பியதும்,