வீட்டை நெருங்கியதும் அனுஜாவிற்கு அழைத்து வந்து விட்டதாக சொல்லியவன் காரை வாசலில் நிறுத்தியதும் செக்யூரிட்டி கணேசன் யாரது புதிதாக என்பது போல் பார்த்தார்.
அருண்மொழியை கண்டதும் புன்னகைத்து கேட்டினை திறந்தவர் “வாங்க தம்பி.. நான் கார் புதுசுன்னதும் யாருன்னு பாத்தேன்” என்றபடி கேட்டினை திறந்து விட்டார்.
புன்னகையுடன் அவருக்கு தலை அசைப்பை தந்தவன், உள்ளே போர்ட்டிக்கோவில் காரை நிறுத்தியதும் இருவரும் இறங்கிக் கொள்ள, வீட்டின் வாயில் படிகளில் தான் மொத்த குடும்பமும் நின்றிருந்தார்கள்.
இருவரும் ஒன்றாக வந்ததை கண்ட அனுஜாவிற்கு உள்ளம் குளிர்ந்து போனது.
“வாம்மா மீனா” என்று மலர்ந்த முகத்துடன் வரவேற்றவர் அவளின் கைப் பிடித்துக் கொள்ள, கிருஷ்ணமூர்த்தியும் “வாம்மா” என்று இன்முகமாய் வரவேற்றார்.
“ஹலோ டாக்டர்” என்று அனுஜாவை கண்டு சிரித்தவள், கிருஷ்ணமூர்த்தியிடம் “ஹலோ அங்கிள்” என்றாள் மரியாதையுடன் புன்னகை முகமாக.
ஸ்வப்னா தென்றலை ஆவென பார்த்து “அருண்ணா அண்ணி செம அழகா இருக்காங்க” என்று சூப்பர் என்பது விரல்களை மடக்கி ஜாடை செய்ய,
“இவ என்னோட பொண்ணு மீனா. ஸ்வப்னா. ஃபேஷன் டெக்னாலஜி பண்ணிட்டு இருக்கா” என மகளை அவளுக்கு அறிமுகம் செய்த அனுஜா மகனைக் காட்டி அறிமுகம் செய்வதற்கு முன்னர் அவனே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
“ஹலோ சிஸ்டர். நான் மாதவன். உங்க வருங்காலத்துக்குன்னு வாய்ச்ச ஒரே ஒரு அப்புராணி தோஸ்த்” என்று ஆர்ப்பாட்டமாய் சொல்ல,
“நீங்க அறிமுகம் பண்ணா இப்படி டேமேஜ் பண்ணுவீங்கன்னு தான் நானே பண்ணிக்கிட்டேன். இப்ப அதுலயும் சேதாரமா?” என்று அவன் அங்கலாய்க்க, நண்பனின் பேச்சில் அருண்மொழி சிரித்தான்.
“டேய்… என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? நியாயமா பாத்தா நீ தான் என்னை நல்ல படியா இன்ட்ரோ பண்ணி இருக்கணும். டாக்டர் மேடம் பண்ணா ரொம்ப சேதாரமா பண்ணுவாங்கன்னு தான் நானே பண்ணிக்கிட்டேன்” என்று அவன் நண்பனை முறைக்க,
“எப்படியோ சேதாரமாகிப் போச்சு தான மேடி. இதுக்கு ஏன் நீ இவ்ளோ மெனக்கெடனும்” என்று நண்பனின் முறைப்பில் சிரித்தான் அருண்மொழி.
இருவரின் வளவளப்பை கண்டு தென்றல் மீனாவிற்கு சிரிப்பு பொங்கியது.
“அவன் அப்படித்தான். ஓவரா வாய் பேசுவான். டிசைன் அப்படி. இவன் கூட சேர்ந்தா இவனும் பேசுவான். ரெண்டும் கூட்டு சேர்ந்தா நம்மளை கழட்டி விட்டிருவானுங்க” என்று அருணை காட்டி சொன்ன அனுஜா,
“நீ வாம்மா. வாசல்லையே நின்னு பேசிட்டு இருக்கோம்” என்றபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
ஹாலில் அமர்ந்ததும் “சந்தியா, பாப்பா, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க மீனா?” என்று அவர்களின் நலனை விசாரிக்க, வேலையாள் திலகா அவர்களுக்கான காஃபியை கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றார்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க டாக்டர். பாப்பா தான் கொஞ்சம் நைட் தூங்குறது இல்ல. அண்ணி, அம்மா எல்லாம் மாத்தி மாத்தி பாத்துக்குறாங்க”
“கொஞ்ச நாள் அப்படி தான் இருக்கும் மீனா. ரெண்டு மூணு மாசம் போனா நைட் தூங்கிடுவா” என்றவர்,
“நேத்து இவன் விஷயத்தை சொன்னதும் எனக்கு உன்னை பாக்கணும்னு பரபரன்னு இருந்தது மீனா. அதான் கூட்டிட்டு வர சொல்லிட்டேன். உனக்கு சிரமம் எதுவும் இல்லையே?” என்றவர் சங்கடமான புன்னகையுடன் கேட்க,
“பரவாயில்ல டாக்டர்” என்றவள் சட்டென்று “அது ஹாஸ்பிட்டல்ல டாக்டர்னு கூப்பிட்டே பழக்கம் ஆனதால டாக்டர்னே வருது டாக்டர்” என்று சிரிக்க,
“இப்பவும் டாக்டர் தான் வருது மீனா” என்று சிரித்தவர்,
“இவன் லவ்ன்னு சொன்னதும் எங்க எல்லாருக்கும் அவ்ளோ ஷாக் தெரியுமா?” என்று இப்போதும் ஆச்சர்யமாய் சிரிக்க,
“பின்ன வெள்ளை கோட் சாமியார் இப்படி ஒரு செய்தியை சொன்னா ஷாக் தான் ஆகும்” என்று மாதவன் கேலி செய்தான் நண்பனை.
“வெள்ளைக் கோட் சாமியாரா” என்று தென்றல் மீனா திகைப்புடன் அருணை பார்க்க, “எனக்கு அவன் வச்சிருக்க பேரு தென்றல்!” என்று கண் சிமிட்டினான் அருண்மொழி.
“அட ஆமாம்மா.. இவன் லவ்கு எல்லாம் செட்டே ஆக மாட்டான்னு தான் நாங்க எல்லாம் நினைச்சோம்”
“நீ மட்டும் என்ன? அவனைச் சொல்ற? அருண் சொன்ன மாதிரி நான் உனக்கு மாதவன்னு பேர் வச்சதுக்காகவாவது நீ எதாவது பண்ணி இருக்கணும்” என்ற அனுஜா,
“நீ அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்டடா” என்று வேறு சொல்லிக் கொள்ள அவர்களின் கலகலப்பில் தென்றல் மீனாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“இவனுங்க கிட்ட பேசினா இப்படி தான் மீனா. நாம பேச வந்ததை மறந்துடுவோம். அவனுங்க கிடக்குறானுங்க. நீ வா மீனா. உன் கிட்ட நிறைய பேசணும்” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு வீட்டை காட்டியபடி மேல் தளத்திற்கு வந்திருந்தார் அனுஜா.
“அருண் உன்கிட்ட எங்களை பத்தி சொல்லி இருந்தானா மீனா” என்று அனுஜா மெல்ல பேச்சினை தொடங்க,
“ரெண்டு நாள் தான் இருக்கும் டாக்டர் நாங்க பேசியே. நேத்து பேசும் போது சொல்ல வந்தாங்க. நான் தான் நேர்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என்றவளின் புரிதலில் உள்ளம் நெகிழ்ந்தது அனுஜாவிற்கு.
“அதுவும் சரி தான் மீனா” என்றவர், “வா இது அருண் ரூம் தான். மாசத்துல ரெண்டு மூணு தடவ இங்க ஸ்டே பண்ணுவான். உள்ள போய் பேசலாம்” என்றவர் அறைக்குள் அழைத்துச் செல்ல, ‘மாசத்துல ரெண்டு மூணு தடவ தான்னா…?’ என்று கேள்வியாக அறைக்குள் நுழைந்தாள் தென்றல் மீனா.
அறை அத்தனை நேர்த்தியாய் அழகாய் இருந்தது. ஒரு மர கப்போர்டில் மருத்துவம் சார்ந்த புத்தகங்களும், நிறைய ஸ்பைரல் ஃபைல்களும் இருந்தன.
சுவற்றில் அத்தனை புகைப்படங்கள். கீழே ஹாலில் மாட்ட பட்டிருந்ததை போலவே அனுஜா தம்பதியினருடன் ஸ்வப்னா, அருண், மாதவன் மூவரும் இருக்கும் ஒரு குடும்ப புகைப்படம் அவனின் அறையிலும் ஃப்ரேம் செய்து மாட்டப் பட்டிருக்க, அத்தனை அழகாய் இருந்தது அப்படம் அனைவரின் புன்னகையை ஏந்திக் கொண்டு!
அருகே மாதவனும் அருணும் மட்டும் இருக்கும் ஓர் புகைப்படம். இருவருமே ஒரே மாதிரியான ரவுண்ட் நெக் டி ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து ஜீன்ஸை முக்கால் காலிற்கு ஏற்றி விட்டு கடற்கரையில் நின்றிருந்தனர். மாதவன் அருணின் கழுத்தை சுற்றி கையால் அணைத்திருக்க, இருவரின் முகத்திலும் அளவில்லா புன்னகை!
அடுத்த புகைப் படத்தில் அனுஜாவும் அவனும்!
அருண் பட்டமளிப்பு விழாவின் போது அணியப்படும் உடையுடன் இருக்க, அவனுடன் அனுஜாவும். கல்லூரியின் போது எடுத்த புகைப்படம் என்று அவனின் முகத்தை பார்த்தபோதே தெரிந்தது.
ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள் அங்கே இருந்த ஜெயந்தியின் புகைப்படத்தை கண்டதும் பேச்சில்லாமல் நின்று விட்டாள்.
புகைப்படத்தில் இருப்பவரின் சாயல் அப்படியே அருணை கண் முன்னே கொண்டு வந்தது தென்றல் மீனாவிற்கு.
“டாக்டர்…” என்றபடி அவள் அனுஜாவை அதிர்ச்சியுடன் அழைத்த போது அவரின் புகைப்படம் அருகே, பிறந்த குழந்தையாய் இருந்த இன்னொரு புகைப்படத்தையும் கண்டு விக்கித்து போனாள்.
பெரு மூச்சுடன் அவளை நெருங்கிய அனுஜா அவளின் தோள் தொட, அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவளிடம் ஆமோதிப்பாய் தலை அசைத்தவர் ஜெயந்தியின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே “ஜெயந்தி. அருணோட அம்மா. இது யாழினி. அவன் தங்கச்சி. அவ பிறந்தப்ப தான் ரெண்டு பேருமே இறந்து போய்ட்டாங்க மீனா” என்று குரலடைக்க சொன்னவர்,
“அவுங்களுக்கு டெலிவரி பார்த்தது நான் தான்” எனும் போதே கண்கள் கலங்கிப் போனது அவருக்கு.
அவள் அசையாது அவரையே கண்ணீர் தேங்க பார்த்துக் கொண்டிருக்க, அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தவர்
“அவுங்களோட இழப்பு அருணுக்கு பெரிய வலி மீனா. அவுங்க அப்பா சரியில்லாம போனதுக்கு அவுங்க அம்மா எவ்ளோ போராடி கஷ்ட பட்டாங்க தெரியுமா? அவுங்களோட வாழ்வாதாரத்துக்காக வயித்துல குழந்தையோட ரொம்பவே கஷ்ட பட்டிருக்காங்க. அது அவுங்களையே இல்லாம ஆக்கிடுச்சு” என்றவர் முகம் கசங்க,
“அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அருண் கண்ணீரோட ஒன்னும் புரியாத குழந்தையா நின்ன விதம் இப்பவும் என் நெஞ்சை அறுக்கும்! அதே சமயம் ஜெயந்தியை காப்பாத்த முடியாம போன வலி எனக்குள்ள. பாப்பாவை கைல தூக்க தெரியாம அவன் என்கிட்ட கேட்டது எல்லாம் நெஞ்சை உருக்கிடுச்சு” என்றார் வேதனையுடன்.
தன் மொழியின் நிலையை கேட்டு மொழி மறந்து நின்றிருந்தாள் தென்றல் மீனா. முதல் முறையாக அவன் தன்னிடம் மருத்துவமனையில் குழந்தையை தூக்கச் சொல்லிய போது தான் மறுத்து கூறியதற்கு ஒரு நொடி அவன் முகம் ஜீவனற்று உறைந்தது ஏன் என இப்போது நன்றாகவே விளங்கியது அவளுக்கு.
“என்னமோ அவனை அப்படியே விட முடியல மீனா என்னால. ஆறு வயசுல எனக்கு தங்கமா ஒரு மகனை ஆண்டவன் கொடுத்திருக்கான்னு நான் நினைச்சு சந்தோஷ படாத நாளில்ல தெரியுமா? அவன் வளர்ந்து பக்குவமா குணமா நடந்துக்குறது எல்லாம் பாத்தா ஏன் இவன் என் வயித்துல பிறக்கலேன்னு அவ்ளோ ஏங்கி இருக்கேன். எனக்கு மாதவனும் அவனும் வேற வேற இல்லமா. அருண் என் பையன் தான்”
அதுவரை சிலையாய் சமைந்து நின்றவள் அதற்கு மேல் முடியாமல் அனுஜாவை இறுக்கி அணைத்து கொண்டாள் தென்றல் மீனா.
உடல் அழுகையில் குலுங்கியது. உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்று புரிந்தது அனுஜாவும் அவளின் முதுகை தட்டிக் கொடுத்து “நாங்க என்ன தான் அவனுக்கு ஒரு ஃபேமிலியா இருந்தாலும் என் அண்ணன் பேசின பேச்சால அவன் எங்களை விட்டு தள்ளி நிக்கிறான் மீனா. எங்க கூட இல்ல. தனி வீட்ல தான் இருக்கான்” என்று அதையும் பகிர்ந்து கொண்டவர்,
“பிடிவாதமா அவன் மனசை கல்லாக்கிக்கிட்டான். எங்களுக்காகவே எங்களை விட்டு தூரமா நிக்கிறான். ஆனா நாங்க அவனை எதுக்கும் விட்டது இல்ல. அவனையும் ஒரு கட்டத்துக்கு மேல கட்டாயப் படுத்த முடியல. ஆனா ஒன்னு மட்டும் மாறாது மீனா” என்றவர் அவளின் முகம் நிமிர்த்தி,
“அருண் நான் பெறாத மகன். இந்த குடும்பம் அவனோடதும் தான். அவனுக்காக எப்பவும் நாங்க எல்லாரும் இருப்போம்! இனி உனக்காகவும் நாங்க இருப்போம். இனி நீயும் நம்ம குடும்பம் தான்” என்று சொல்லும் போதே அவர் குரலில் அவ்வளவு நெகிழ்வு.
தான் உயிராய் நேசிப்பவனை இக்குடும்பம் உயிராய் தாங்கி வருவதை கண்டு அவர்கள் மேல் பெரும் மரியாதையும் அன்பும் சொந்தமும் உருவானது அவளுக்கு.
“ரியல்லி நீங்க கிரேட் டாக்டர்” என்றவள், இல்லை என்பது போல் தலை அசைத்து “ரியல்லி நீங்க கிரேட் அத்தை” என்றாள் கரகரத்த குரலில்.
அவள் உறவு முறை வைத்து அழைத்ததும் அத்தனை மகிழ்ச்சி அனுஜாவிற்கு.
“நாங்க எல்லாரும் இருந்தாலும் இனி நீ தான் அவனுக்கு எல்லாமுமா இருக்கணும் மீனா” என்றதும் ஆமோதிப்பாய் தலை அசைத்தவளுக்கு ஆறு வயதில் எப்படி இந்த இழப்பை எதிர் கொண்டிருப்பான் என்று எண்ணி மனம் கலங்கியது.
கலங்கிய மனதில் மேலும் சில நினைவுகள் வந்து அவளை மூச்சடைக்க வைக்க, அவளின் நிலை கண்டு “இதை உன்கிட்ட சொல்லணும்னு தான் தனியா கூட்டிட்டு வந்தேன் மீனா. அருணும் புரிஞ்சதால தான் இன்னும் இங்க வராம இருக்கான்” என்றவர்,
“வாஷ் ரூம் இங்க இருக்கு பார். ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா மீனா. நான் அருணை வரச் சொல்றேன்” என்று அவர் வெளியேற, அவர் சென்ற இரண்டு நிமிடத்தில் அருண்மொழி வந்திருந்தான் உள்ளே.