முகம் கழுவி வெளியே வந்தவள் அவனைக் கண்டதும் மீண்டும் அழுகத் துடித்த கண்களை அடக்கிக் கொண்டு அவனைப் பார்த்திருக்க, அனுஜா மொத்தத்தையும் சொல்லி விட்டார் என்று அவளின் சிவந்து வீங்கி இருந்த முகத்தை கண்டே புரிந்து கொண்டவன்,
அவளின் நிலையைக் கண்டு பொறுக்காமல் “அழலாமா தென்றல்?” என்றான். அவனின் கனிவில் மீண்டும் கண்கள் உடைப்பெடுத்தது அவளுக்கு.
“என்னமோ பெருசா இருக்குன்னு புரிஞ்சுது மொழி. ஆனா, இப்படி.. அம்மா, தங்கச்சி.. எல்லாம்” என்று கேவியவள், “என்னால தாங்க முடியல” என்று மேலும் மேலும் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்.
“தென்றல்….”
“பேசாதீங்க எதுவும். எதாவது பேசுனிங்கன்னா ரொம்ப அழுகை வரும் எனக்கு” என்றவள் தன் கைகளால் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டாள்.
அவனுக்கு ஆறுதல் சொல்வது கூட எந்த அளவில் என்று தெரியவில்லை. அத்தனை வலித்தது மனம்.
“ரிலாக்ஸ் தென்றல்” என்று மௌனமாய் அவளின் தலையை வருடிக் கொடுத்தவன் “எல்லாமே எல்லாருக்கும் நிலைக்கிறது இல்ல தென்றல். எனக்கும் அம்மா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே நாள்ல இல்லாம போய்ட்டாங்க. அனுமா இல்லேன்னா என்ன ஆகி இருப்பேன்னு சொல்ல முடியல” என்றவனின் குரலிலும் தடுமாற்றம்.
“அம்மாவையும் தங்கச்சியையும் என் கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட கடவுள் என்னை அனாதரவா விடாம எனக்குன்னு ஒரு குடும்பத்தைச் கொடுத்து இருக்காருன்னு நினைச்சு மனசை சமாதானம் செஞ்சுக்குவேன்” என்றவன்,
“ஆனா, அம்மா.. அம்மா தானே தென்றல்… இப்ப தான் என் கிட்ட ‘நானும் பாப்பாவும் திரும்ப வந்திடுவோம் மொழி’ன்னு சொல்லிட்டு போன மாதிரி இருக்கு. போனவங்க தான். திரும்பி வரவே இல்ல” என்றவன் குரலும் உடைந்திருந்தது.
“மொழி” என்றவள் அழைப்பு இந்த நொடி அன்னையின் நினைவை வெகுவாகவே அதிகரித்து இருந்தது அருண்மொழிக்கு!
“அம்மா மொழி தான் சொல்லுவாங்க தென்றல்” என்றவனின் கண்ணீர் அவளின் கழுத்து வளைவை தீண்டி இருக்க கூடவே அவனின் அணைப்பும் இறுகியது.
அவனின் முதுகை வருடிக் கொடுத்தவளின் இதழ்கள் “மொழி மொழி” என ஜெபம் போல் சொல்லிக் கொண்டிருந்தது.
மொழியைத் தவிர வேறு எதையும் மொழியவில்லை அவனின் தென்றல்!
அவளின் மொழி எனும் அழைப்பே அவனின் இழப்புகளுக்கும் காயங்களுக்கும் பெரும் மருந்தாக இருந்தது.
“அன்னைக்கு பீச்ல நீ மொழின்னு சொன்னதும்.. எனக்கு அம்மாவே திரும்ப கூப்பிட்ட ஃபீல். ரொம்ப வருஷம் ஆச்சு அப்படி கேட்டு. அம்மாவுக்கு அடுத்து யாரும் அப்படி கூப்பிட்டது இல்ல தென்றல்” என்றவனின் குரலில் அன்னையின் அழைப்பிற்கான ஏக்கமும் தான் அழைத்ததற்கான நெகிழ்வும் ஒன்றாக தென்பட்டது.
“எப்படி எல்லாத்தையும் தாண்டி வந்தீங்க?” என்றவளால் தாள முடியவில்லை.
“என் கஷ்டம் பரவாயில்ல தென்றல். அனும்மா இருக்கதால என்னோட வாழ்க்கை நல்ல வழில அமைஞ்சிடுச்சு. ஆனா யாருமில்லாம இருக்கவங்களை யோசிச்சு பாக்கவே கொடுமையா இருக்கும் தென்றல்”
“அனு அத்தை உண்மையாவே க்ரேட்” என்றவள் அத்தை என சொன்னதில் புன்னகையுடன் அவளின் முகத்தை தன் மார்பில் இருந்து பிரித்தான் அருண்மொழி.
அவளின் கண்ணீரை பெரு விரலால் துடைத்தபடி “நானும். ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் தென்றல். இப்ப இல்ல. பத்து வயசுல இருந்தே” என்றவன்,
“ஆரம்பத்துல எனக்கு கஷ்டமா தான் இருந்தது தென்றல். அதுவும் மேடி இல்லாம ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன். அப்புறம் பழக்கம் ஆகிடுச்சு. நான் தனியா இருக்கது தான் நல்லது தென்றல்” என்றவன்,
“என்னால அனுமா அவுங்க ஃபேமிலி கூட எவ்ளோ சண்டை போட்டிருக்காங்க தெரியுமா தென்றல்? அவ்ளோ வாக்குவாதம் நடந்தது ஒரு நாள். அதுவும் அனும்மாவோட அண்ணா….” என்றவனுக்கு அவரை நினைத்து நெஞ்சமெல்லாம் இப்போதும் நடுங்கியது.
பற்றி இருந்த அவளின் இரு கன்னங்களையும் மேலும் அழுத்தி பற்றிக் கொண்டான் அன்றைய தினத்தின் நினைவில்.
பார்வையை வேறு புறம் திருப்பி நின்றிருந்தவன் சொல்லப் போகும் வார்த்தைகள் இதனால் வரையில் அவன் உயிரை துண்டாடி இருக்கும் வார்த்தைகள் என்று புரிந்தது.
ஆனால் அவனைத் தடுக்கவில்லை. சொல்லட்டும். கொட்டட்டும். எத்தனை ஆண்டுகளாக உள்ளேயே வைத்து மறுகி புழுங்கி தவித்து துடித்தானோ என்று அவன் கைக்குள்ளேயே மௌனமாய் அவனை பார்த்திருந்தாள் தென்றல் மீனா.
பரிதவிப்புடன் அவளிடம் பார்வையை கொண்டு வந்தவன் “ஒரு உயிரை கொல்ல துணியிறவங்களுக்கு எப்படி தென்றல் மனசாட்சி இருக்கும்?” என்றவன் வார்த்தைகளில் அவ்வளவு நடுக்கம்.
கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் பெரிதாக விரிந்தது.
“அவர் அப்படி தான் சொன்னார். இந்த அனாதப் பய இங்கேயே இருந்து ஒரு நாள் உன் சொத்தை எல்லாம் சுருட்டிட்டு போகப் போறான். அதுக்கு நான் விட மாட்டேன். அவனை உருத்தெரியாம அறுத்து போட்ருவேன்னு. எனக்கு அவரு சொன்னது புரிஞ்சதும் அவ்ளோ நடுக்கம். ஆனா அவரு சொன்னதை விட அனும்மா சொன்னது தான் இன்னும் பதற வச்சது” என்றவனுக்கு இப்போதும் உயிரெல்லாம் பதறியது அனுஜாவினுடைய அன்பின் பெறுமதியில்!
அவன் அனாதை என்று சொல்லியே போதே தாங்கொண்ணா தவிப்பில் அவனை இறுக்கி தனக்குள் அடக்கிக் கொண்டாள் தென்றல் மீனா. எல்லாமுமாக நான் இருக்கிறேன் என்பது போல்!
“அவனை நீங்க தொடக் கூட முடியாது. தொடுறதுக்கு முன்னாடி என்னை நீங்க சாய்க்கணும்னு அனும்மா சொன்னாங்க” என்றவன்,
“அந்த ஆள் அதுக்கும் அசராம உன்னை சாய்க்குறதுக்கும் துணிஞ்சவன் தான் நான். எங்க பேச்சை மீறி நீ காதலிச்சு கல்யாணம் பண்ணதுக்கே உன்னை வெட்டி போட்டு இருக்கணும்னு அவ்ளோ குரோதத்தோட பேசினார். எனக்கு அவ்ளோ பயம். எங்க அனும்மாவை எதா.. எதாவது.. பண்ணிடுவாரோன்னு…” எனும் போதே கண்கள் கலங்கிப் போனது அவனுக்கு.
“மொழி” என்றவள் உயிர் விண்டே போனது. எவ்வளவு துடித்திருப்பான் என்று கலங்கியது மனம்.
“அன்னைக்கு நைட் எப்படி பயந்தேன் தெரியுமா தென்றல். அனும்மா பக்கத்துல போக கூட பயம் அன்னைக்கு. மேடியை இறுக்கமாக கட்டிப் புடிச்சிட்டு தூங்கினேன். தூக்கத்துல அனுமா அனுமான்னு உளறுனதா சொன்னான் அவன். என்னை பெத்த அம்மா தான் போய்ட்டாங்க. ஆனா, கிடைச்ச அம்மாவாவது நிலைக்கணும்னு தான் பயந்தே ஒதுங்கி போய்ட்டேன்”
“ஒதுங்கி போனாலும் இங்க யாரும் என்னை விடவே இல்ல தெரியுமா. படிக்க வச்சு ஆளாக்கி என்னை இவ்ளோ தூரம் கொண்டு வந்து நிறுத்தினது அனுமா ஃபேமிலி தான்” என்றவனிடம் இப்போது சிறு புன்னகை.
“அனுமாக்கு அவுங்க பசங்க யாராவது ஒருத்தர் டாக்டர் ஆகனும்னு ஆசையாம். நான் இந்த குடும்பத்துக்குள்ள வரதுக்கு முன்னாடியே மாதவன் கிட்ட டாக்டர் டாக்டர்னு சொல்லி வளத்து இருக்காங்க. அவனுக்கும் அனும்மா மாதிரி டாக்டர் ஆகணும்னு தான் ஆசை! நாங்க சின்ன வயசில ஒண்ணா படிச்சப்ப கூட சொல்லுவான். அம்மா மாதிரி ஆகணும்னு. ஆனா நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம் அவன் அதை சொல்லவே இல்ல. காலேஜ் சேருற நேரம் என் கிட்ட அனும்மா என்ன படிக்க ஆசி படுறேன்னு கேட்டப்ப உங்களை மாதிரி கைனிக் ஆகனும்னு சொன்னேன் நான். என்னோட அம்மா மாதிரி எத்தன பேரு இருப்பாங்க. அவுங்களை காப்பாத்தணும்னு ஒரு தாட் அம்மா இறந்ததுல இருந்தே. அதனால யோசிக்காம அனும்மா கிட்ட கைனிக் ஆகணும்னு சொல்லிட்டேன்”
“ஆனா மேடி மெடிசன் கட் ஆஃப் இருந்தும் சேரவே மாட்டேன்னு ஒரே அடம். அனும்மா மிரட்டி கேட்டதுக்கு கூட முடியாதுன்னுட்டான். ஆனா அனும்மா விடல. வேலிட் ரீசன் சொல்லுன்னு சொன்னதும் என்ன சொன்னான் தெரியுமா தென்றல்???” என்றவன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு,
“உங்க மூணு பசங்கள்ள யாராவது ஒருத்தர் டாக்டரானா போதும் தான. அவன் மெடிசன் படிப்பான். உங்களுக்கு அடுத்து அவன் நம்ம ஹாஸ்பிட்டல் பாப்பான். நான் கிச்சனமூர்த்திக்கு ஜூனியர் ஆகிக்கிறேன்னு சொல்லி என்ஜினியரிங் சேர்ந்தான்! நாங்க சொல்ல சொல்ல கேக்கல. எனக்கான இடத்தை இங்க கொடுக்கணும்னு அவனோட ஆசையை மறைச்சுகிட்டான் தெரியுமா” என்றான் வேதனையுடன்.
சுத்தமாக தென்றல் மீனாவால் முடியவில்லை. அவனின் சிறு வயது வாழ்க்கை அனுபவம் ஒரு புறம்.. அனுஜா குடும்பத்தினரின் அன்பு ஒரு புறம் என அவளுக்கே மூச்சடைத்தது.
“அனு அத்தையோட அண்ணா அதுக்கு அப்புறம் எதுவும் டிஸ்டர்ப் பண்ணலையா?” என்று அவனிடம் கேட்க,
“பண்ணல தென்றல். பண்ற அளவு நானும் நடந்துக்கல. ஒட்டவே இல்லையே. ஆனா எதுவும் பண்ணக் கூடிய ஆள் தான் அவர். அப்பவே எம்.எல்.ஏவா இருந்தார். இப்ப மினிஸ்ட்டர். சொல்லவா வேணும்” என்றவன்,
“நம்ம அனும்மா ஹாஸ்பிட்டல் கட்டுறப்ப எவ்ளோ இடைஞ்சல் பண்ணாருன்னு தெரியுமா? ஆனா, அனும்மா எல்லாம் கரெக்ட்டா ப்ராப்பரா பிரசீட் பண்ணதால அவரால எதுவும் அசைக்க முடியல” என்றவன்,
“அதனால தான் தள்ளி நிக்கலாம்னு சொல்றேன்” என்றான் அவளிடம். அவன் பயத்திற்கான காரணம் புரிந்தது.
“புரியுது மொழி” என்றவள் மீண்டும் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள்.
சில மணித்துளிகள் மௌனத்தில் கரைய இருவரின் அணைப்பையும் அப்போது தான் இருவருமே உணர்ந்தனர்.
சிரிப்புடன் “போய் மறுபடியும் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வா தென்றல்” என்று அவளை தன்னில் இருந்து பிரிக்க,
“கொஞ்ச நேரம் மொழி” என்றவள் அவனை விட்டுப் பிரியவில்லை. அவன் மார்பில் இருந்து முகத்தை நிமிர்த்தாமல் கண்கள் மட்டும் அவனில் நிலைக்க விட்டபடி அவனையே பார்க்க,
“என்னமோ சொல்ல வர்ற மாதிரி தெரியுது தென்றல்” என்றான் அவள் இமைகளை வருடியபடி.
“ம்ம் சொல்லணும் மொழி. ஆனா அது சொல்ல வேண்டியது இல்ல தான்” என்றவளின் தடுமாற்றத்தை கண்டு,
‘நிறைய விஷயம் நாம சொல்லாமையே புரிஞ்சிக்க கூடிய ஆள் அவன். நிச்சயம் உன்னையும் நல்லா புரிஞ்சு நடந்துக்குவான்’ என்ற அனுஜாவின் வார்த்தைகளை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
எவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறார் தன்னவனைப் பற்றி! என்று வியப்படைந்தவள் “சொல்ல வரப்ப சொல்றேன் மொழி” என்றாள் அவனிடம்.
“சரி சொல்லலாம். தென்றலால எப்ப முடியுதோ அப்ப சொல்லலாம். நோ பிராப்ளம். இப்ப வா கீழ போகலாம். எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நீயும் கிளம்பனும்” என்றதும் தலை அசைத்து விட்டு அவன் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு முகம் கழுவி வந்ததும் “நீங்களும் வாஷ் பண்ணிட்டு வாங்க மொழி” என்க, அவன் வந்ததும் இருவரும் கீழே சென்றனர்.
இங்கே வரும் போது இருந்த தயக்கமும் கூச்சமும் இப்போது சுத்தமாக இல்லை அவளுக்கு. தன் மொழிக்கென அனைத்துமாக இருப்பவர்களோடு வெகு இயல்பாக உரிமையாக அன்பாக பேச முடிந்தது தென்றல் மீனாவால்.
தனக்கானவனுக்கு கிடைத்த சொந்தம் தனக்கும் சொந்தம் தான் என்று எண்ணி அவர்களோடு இணைந்து கொண்டாள்.
கிளம்பும் நேரம் கிருஷ்ணமூர்த்தியும் அனுஜாவும் அவளின் வீட்டில் தாங்கள் பேசுவதாக சொல்லி அவளுக்கு இன்முகமாகவே விடை கொடுத்தனர்.
தானே மருத்துவமனை செல்கிறேன் என்று தன்னைக் கிளம்பச் சொல்லியவனை ஒற்றை முறைப்பில் தன்னோடு வர வைத்திருந்தாள் தென்றல் மீனா.
அதைக் கண்ட மாதவனும் “இனிமேல் எல்லாம் நீ இஷ்டத்துக்கு டியூட்டி டியூட்டின்னு இருக்க முடியாது மச்சான். எல்லாம் இனி வூட்டம்மாவா வரப் போறவங்க கஸ்டடில தான்” என்று அவனை வார,
அருண் பதில் சொல்லும் முன் தென்றல் முந்தி இருந்தாள். “கூடிய சீக்கிரம் நீங்களும் கஸ்டடிக்கு கீழ வரணும் மாதவ் அண்ணா” என்று அவனிடம் லகுவாக வாயடித்தவள் அனுஜாவிடம் “சீக்கிரம் அண்ணாக்கு ஒரு பொண்ணு பாருங்க அத்தை. அவரு பாக்குற மாதிரி தெரியல” என்று வேறு சொல்ல,
“சூப்பர் தென்றல்” என்று அவளின் தோள் தட்டினான் அருண்மொழி. “எல்லாம் கூட்டு சேர்ந்துட்டா நான் எங்க போக?” என்ற மாதவன்,
“யூ டூ ம்மா?” என்று தென்றல் மீனாவிடம் பாவமாய் கேட்க, அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
அதே சிரிப்புடன் மன நிறைவுடனும் அங்கிருந்து அருண்மொழியோடு கிளம்பினாள்.
மருத்துவமனை வந்ததும் “ஓகே தென்றல். பத்திரமா போய்ட்டு வா. போய்ட்டு கால் பண்ணு. டியூட்டில இருந்தா அட்டன் பண்ண முடியாது. நைட் வந்து கால் பண்றேன்” என்றவன் இறங்க எத்தனிக்க,
அவனின் கைப் பற்றி தடுத்து “ஒரு நிமிஷம் மொழி” என்றவள் அலைபாயும் கண்களுடன் “வீட்ல எப்ப பேசலாம்னு அனு அத்தை கேட்டாங்க. என்னால எதுவும் சொல்ல முடியல மொழி. வீட்ல இப்போதைக்கு என்னோட கல்யாண பேச்சை மறுபடியும் ஸ்டார்ட் பண்ணல” என்றவள்,
ஏற்கனவே திருமணம் என்று நிச்சயம் வரை வந்து நின்றது விதார்த்தை பற்றி அதன் பின்னர் அவன் தன்னை பின் தொடர்ந்தது தான் திருமண பேச்சை சிறிது நாட்களுக்கு வேணாம் என்றது என அனைத்தையும் சொன்னவள்,
“கொஞ்ச நாள் போனதும் நானே சொல்றேன் மொழி வீட்ல” என்றதும், “ஓகே தென்றல். டைம் எடுத்துப்போம். உன் ஃபேமிலி பெருசு. நானும் பாத்தேன் தான ஹாஸ்பிட்டல்ல” என்றவன் பெரு மூச்சுடன்,
“எனக்கும் கொஞ்சம் டென்ஷன் இருக்கு தென்றல். பயமும்” என்று அவள் பற்றி இருந்த தன் விரல்களால் அவளின் விரல்களை இறுகப் பற்றிக் கொண்டான்.
அவளுக்கும் அவனின் உணர்வுகள் புரிய, “மொழி” என்றாள் அவன் கைகளை மேலும் அழுத்திக் கொடுத்து.
சுற்றும் முற்றும் பார்வையை திருப்பியவன் “இன்னமும் அந்த ஆள் உன்னை ஃபாலோ பண்ணுவானா?” என்று கேட்க,
“பண்ண மாட்டான். பண்றதுக்கான தைரியம் இல்லாத மாதிரி தான் அப்பா, அண்ணாங்க எல்லாம் போய் கவனிச்சிட்டு வந்தாங்க” என்று பல்லைக் கடித்தவளிடம்,
“பண்ணான்னா நீ கழட்டினது போக மிச்சம் இருக்க பல்லை கழட்டிடலாம் தென்றல்” என்றான் கண் சிமிட்டி! ஆனால் வார்த்தைகளின் அழுத்தம் இதுவரை அவனிடத்தில் அவள் கண்டிராதது!
“மொழி” என்று அவள் திகைப்புடன் அவன் சொன்னதில் சிரித்தும் விட,
“மொழி தான் தென்றல்! தென்றலோட மொழி. தென்றலுக்கு மட்டுமேயான மொழி!” என்றான் கண் சிமிட்டி காதல் புன்னகையுடன்.
“விட்டா இப்படி பேசியே கவுத்திடுவீங்க நீங்க. டியூட்டிக்கு டைம் ஆச்சு” என்று அவனை கிளப்பப் பார்க்க, மனமே இல்லாமல் பற்றி இருந்த அவளின் கைகளை விட்டவன்,
“போய்ட்டு வரேன் தென்றல்” என்றபடி இறங்கிக் கொண்டான். உள்ளே செல்லும் முன்னர் மீண்டும் அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்து கை அசைக்க, இருவரின் முகத்திலும் அகத்திலும் அலாதியான காதலுடன் கூடிய நிறைவான புன்னகை!
அப்புன்னகை குறைந்து ததும்பி தள்ளாடித் தவிக்கும் நாளும் வந்தது.
வலியின்றி வாழ்வேது! துயரில்லா காதலேது! தடுமாறாத வாழ்க்கை உண்டோ? தடம் மாறாமல் கரை சேர்ந்த பயணங்கள் தான் உண்டோ?
அவர்களும் தடுமாறினார்கள். வலியின் உச்சத்தில் நின்று தத்தளித்தார்கள்.
எதிர்ப்புகளை எதிர் கொள்ளாமல் காதலில் மீள்வது எப்படி? வாழ்வில் இணைவது எப்படி? அவர்களும் ரணத்துடன் எதிர் கொண்டனர் அனைத்தையும்!
சதா சர்வகாலமும் ஒருவரை ஒருவர் நினைத்து தவித்து துடித்து மூச்சை இறுக்கிப் பிடித்து வாழ்வில் இணைவோம் என்கிற நம்பிக்கை நீர்ப்படையாமல் அவர்களின் வாழ்வை விழிநீரில் கரைத்து கரை சேரும் நாளை எதிர் நோக்கி காத்திருந்தார்கள்!
காதலுற்ற உயிர் நெஞ்சங்கள் உயிர் வதையை அனுபவிக்கும் நாட்களும் அவர்களை நெருங்கவதற்கென காலம் வழி வகுத்திருக்க, விதியும் விலகி நின்று அவர்களின் துயரத்தை வேடிக்கை பார்க்கத் தயாராய் இருந்தது.