“வரமா கிடைச்சு இருக்க குடும்பமா?” என்று பத்மநாபன் கேள்வியுடன் பேத்தியை பார்க்க, அவனைப் பற்றி, அவனின் சிறு வயது இழப்புகள், அனுஜாவின் குடும்பம் என அனைத்தும் சொன்னவள் “அவருக்கு இனி நான் எல்லாமுமா இருக்கணும் தாத்தா. இருக்கணும்னு ஆசைப் படுறேன்” என்றாள் கலங்கிய கண்களுடன்.
பேத்தி சொன்னவற்றை கேட்டு விக்கித்துப் போய் அமர்ந்து இருந்தார் பத்மநாபன். இப்படி ஒரு கனமான விஷயம் அவன் வாழ்வில் நிகழ்ந்ததை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
அவன் கடைக்கு வந்து சென்றிருந்ததை பற்றி அறிந்ததும் பேத்தியை சந்திக்க கடை வரை வர வேண்டிய அவசியம் என்னவென்று தான் முதலில் அவருக்குத் தோன்றியது.
அந்த எண்ணம் நீண்டு கொண்டே சென்றதும் அன்று பேத்தியின் முகத்தில் தெரிந்த ஒளியும், நிம்மதியும் என அனைத்தும் அவருக்கு விஷயம் இப்படியும் இருக்குமோ எனும் யூகத்தை கொடுத்திருந்தது.
ஆகையால் தான் நேற்று அவள் கிளம்பும் போது பார்வையால் அவரைத் தொடர்ந்தார். ஆனால் அருண்மொழி குறித்து எதையும் பெரிதாக விசாரிக்கவில்லை.
அந்தப் பெயரை மருத்துவமனையில் கேட்டதோடு சரி. தன் மூத்த பேரன் நிகேதனின் மனைவிக்கு பிரசவம் பார்த்தவன் என்பது வரை மட்டுமே அவரறிந்த விஷயம். மற்றபடி பெரிதாக அவனைப் பற்றி அவர் கேள்விப் படவில்லை. நிகேதன் கேள்வி பட்டதையும், மனைவி தங்கை, அன்னை, சித்தி என பெண்களிடம் தான் யாதார்த்தமாக பகிர்ந்து இருந்தான்.
பேத்தியை கலங்கிப் போய் பார்த்தவர் ‘நீ எதுவும் சொன்னியா மீனாம்மா’ என்று வாய் வரை வந்து நின்று விட்ட வார்த்தைகளை அப்படியே மென்று விழுங்கிக் கொண்டார் பத்மநாபன்!
வேரோடு மண்ணாக புதைந்து விட்ட விஷயத்தை மீண்டும் கிளறி விருட்சமாய் நிற்கும் ஸ்திரமான ஓர் நிலையை குலைக்க விரும்பவில்லை அவர். எனவே வாயை பசை போட்டதை போல் ஒட்டிக் கொண்டார்.
தாத்தாவின் அமைதியை வேறு விதமாக எடுத்துக் கொண்டவளும் “என்ன ஆச்சு தாத்தா? அவரைப் பத்தி சொன்னதும் அமைதியாகிட்டிங்க?” என்று கலக்கமாக கேட்டவள் குரல் உடைந்திருக்க,
“ச்சே ச்சே.. என்ன மீனாம்மா இது? அப்படி எல்லாம் நான் நினைக்கல. அதான் நீயே சொல்லிட்டியே. இனி எல்லாமுமா நான் இருக்கணும்னு” என்றவர்,
“அதென்ன நீ மட்டும் இருக்கிறது.. இனி நம்ம வீட்டு மாப்பிள்ளைக்கு நம்ம குடும்பம் மொத்தமும் இருக்கோமே” என்றதும் தாத்தாவின் பேரன்பு மிக்க வார்த்தைகளில் அளவில்லா மகிழ்ச்சி தென்றல் மீனாவிற்கு.
“அந்த டாக்டர் அம்மாவுக்கு பெரிய மனசு மீனு” என்றவர்,
“சிலருக்கு தான் மீனாம்மா தெய்வம் தெய்வமான மனசை கொடுத்திருப்பார். அப்படிப் பார்த்தா அந்த அம்மாவும் தெய்வம் தான். முன்ன பின்ன தெரியாத பிள்ளையை தாம் பிள்ளையா வளத்து ஆளாக்கி இருக்க மனசு கடவுளுக்கு சமம்” என்றார் மனதார.
கண்ணீருடன் தலை அசைத்து ஆமோதித்தவள் “ரொம்ப பயந்தேன் தாத்தா. நீங்க என்ன சொல்வீங்களோன்னு” என்றவள்,
“அப்பா, சித்தப்பா கிட்ட எல்லாம் சொல்லணும்” என்று அவரின் முகம் பார்க்க, “இப்ப வேண்டாம் மீனு” என்று உடனடி மறுப்பு அவரிடம்.
“தாத்தா…?”
“வேண்டாம் மீனு. இப்பவே சொன்னா சரி வராது. பொறுமையா சொல்லலாம்” என்றவர்,
“நான் முதல்ல இன்னைக்கு அழகம்ம கிட்ட விஷயத்தை சொல்றேன். அப்புறம் இதைப் பத்தி முடிவு பண்ணலாம்” என்றதும்,
“அப்பா.. அப்பா ஒத்துக்குவார் தானே தாத்தா?” என்று பரிதவிப்புடன் கேட்ட பேத்தியை கண்டு உருகி விட்டது அவருக்கு.
“பாத்துக்கலாம் மீனு” என்றார் பிடி கொடுக்காமல். அவர் சொன்னதைக் கேட்டதும் அவள் முகத்தில் தெளிவில்லை.
“ப்ச்.. இப்படி எதுக்கு டல்லா இருக்க? பாத்துக்கலாம். நாங்க எல்லாம் இருக்கோம்ல. உன் சந்தோஷத்தை விட பெருசு என்ன சொல்லு? உங்க அப்பனும் உன் சந்தோஷம் தான் முக்கியம்னு ஒத்துக்கிட்டாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல மீனு. கலங்காத” என்றார் பேத்தியிடம் நம்பிக்கையாகவே!
அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டவள் “பாட்டிட்ட பேசும் போது நானும் வரேன் தாத்தா” என்றதும்,
“அவ என்ன சொல்லப் போறாளோ?”என்று பெரு மூச்சை விட,
“அதெல்லாம் நீங்க பாட்டியை சரி கட்டிடுவீங்க தாத்தா. எனக்கு அதுல அபார நம்பிக்கை இருக்கு” என்று கண் சிமிட்டி சொல்ல,
“க்க்கும்… உன் பாட்டியை…. நான் சரி கட்டிடுவேன்? அழகை பத்தி தெரிஞ்சும் இப்படி சொல்ற பாத்தியா? விட்டா எனக்கு கட்டம் கட்டிடுவா உன் பாட்டி. இதுல நான் அவளை சரி கட்டிடுவேணாக்கும்?”என்று நொடித்துக் கொண்டவர்,
“நீ சொன்ன மாதிரி என் பொண்டாட்டி தானே.. பொண்டாட்டி சாஃப்ட்னு எல்லாம் நினைக்கக் கூடாது மீனு. அழகம்மை கொஞ்சம் ரக்கட் அழகம்மை தான்” என்று பாவமாய் சொல்ல, தென்றல் மீனாவிற்கு சிரிப்பு பீறிட்டது.
“எனக்காக சரி கட்டுங்க தாத்தா”
“கட்டிப் பாப்போம். அழகம்மா அர்ச்சனை பண்ணா வாங்கிக்க வேண்டியது தான்!” என்று நெஞ்சில் கை வைத்து நொந்து போய் சொல்ல அவரின் கலாட்டாவில் இன்னுமே சிரிப்பு தான் அவளுக்கு.
“இல்லேன்னா விடுங்க. நான் சொல்றேன்” என்றதும், “ஆத்தாடி வேண்டாம் தாயி! உனக்கும் அவளுக்கும் வாய்க்கா தகராறு ஆகிப் போச்சுன்னா அப்புறம் என் மண்டை தான் உருளும். நானே பேசுறேன்” என்றவர்
“வசுக்கிட்ட சொல்லிட்டியா?” என்று கேட்டு விட்டு,
“கண்டிப்பா அவளுக்கு எல்லாம் தெரிஞ்சு இருக்கும்” என்று அவரே சொல்லிக் கொள்ள, மௌனமாய் புன்னகைத்தாள் தென்றல் மீனா.
அதிலேயே அவருக்கான பதில் கிடைத்து விட, “தெரிஞ்சும் எங்க கிட்ட சொல்லலை பாரேன்னு அழகம்ம அவளை திட்ட போறா பாரு” என்றார் பேத்தியிடம்.
அதை ஆமோதித்த பத்மநாபனும் “ம்ம்… எதுக்குமே ரொம்ப ஆசைப் படாத புள்ள. ரொம்ப பக்குவமான குணம். நாகப்பன் விட்டு போனதுல இருந்து நம்ம வீட்ல எங்க மருமகளாவும் உனக்கு இன்னொரு அம்மாவாவும் வாழ்ந்துட்டு வரா” என்றவரின் குரல் அத்தனை கனத்துடன் இருந்தது.
“எனக்கு தெரிஞ்சு வசுவோட சந்தோஷமே உன் சந்தோஷம் தான் மீனு. உனக்காக தான் நாகப்பன் போய் சேர்ந்தும் நம்ம வீட்ல இருக்கா. அவுங்க அம்மா அப்பா கூப்பிட்டும் போகலையே அவுங்க கூட. இன்னொரு கல்யாணமும் பண்ணிக்கல. உன்..” என்றவர் வார்த்தைகள் பயணிக்கும் பாதையை உணர்ந்து அத்தோடு நிறுத்தி விட்டார்.
“ப்ச்.. பாரேன் இப்படி பேசிட்டே இருந்தா பேசிட்டே இருப்போம். நீ போ. போய் வேலையை பாரு. நான் அழகு கிட்ட பேசிட்டு சொல்றேன் இன்னைக்கு” என்றதும் அவரின் நிலை புரிந்து கொண்டவள்,
“தாத்தா” என்றாள் நடுங்கிய குரலில்.
“ச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல மீனு.bபேசிட்டே இருந்ததால படபடன்னு வருது. என்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம். முருகேசன் கிட்ட சொல்லிடு. கொஞ்சம் தூங்குறேன்” என்றவர் பேத்தியின் பதிலை எதிர் பாராமல் படுத்து விட்டு கண்களை மூடிக் கொண்டார்.
கலங்கிய கண்களை நன்றாக துடைத்துக் கொண்டவள் தாத்தாவின் அருகே அமர்ந்து கொண்டாள். சிறிது நேரம் அவரையே பார்த்தவள் உறங்கியதில் அவரின் சுவாசம் சீரானதும் தனது அறைக்கு வந்தாள்.
மாலை வரை வேலையில் மூழ்கி விட ஐந்து மணி போல் “ஃப்ரீயா மொழி. பேசணும்” என்று அருண்மொழிக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அவனின் பதிலிற்காக காத்திருக்க அவனே அழைத்திருந்தான்.
“சொல்லு தென்றல். ஃப்ரீ தான். இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க ஹாஸ்பிட்டல் போகனும்” என்றவன், “நைட் நான் வீட்டுக்கு வரவே லேட் ஆகிடுச்சு தென்றல். நீ தூங்கி இருப்பேன்னு தான் கால் பண்ண முடியல” என்றதும்,
“கால் பண்ணலேன்னதும் தெரிஞ்சது மொழி” என்றவளின் குரலில் அளவு கடந்த துள்ளல்!
“ஐயோ மக்கு டாக்டர்!!!! என் தாத்தா ஓகே சொல்லிட்டார். எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா மொழி?” என்று அவள் ஆர்ப்பரிக்க,
“என்ன சொல்ற தென்றல்? உங்க தாத்தாக்கிட்ட சொல்லிட்டியா?” என்று அவன் மெல்லிய அதிர்வோடு கேட்க,
“சொல்ல வேண்டிய சூழல் மொழி. ஆனா தாத்தா செம தெரியுமா?”
“எப்படி தெரியும் தென்றல்? எதுவும் பிராப்ளம் இல்லையே?”
“இல்ல மொழி” என்றவள்,
“எப்படி தெரியும்னா கேக்குறீங்க? நேர்லயே வந்து பத்திரிக்கை வச்சிட்டு போனீங்கள்ல” என்று அவள் சிரிக்க,
“ஓ நோ….” என்றவன் குரலில் அப்பட்டமான பதட்டம்.
“ஒன்னுமில்ல மொழி. தாத்தாக்கு மட்டும் தான் தெரிஞ்சு இருக்கு. நேத்து அனு அத்தை வீட்டுக்கு கிளம்பி வரும் போதே தாத்தா என்னை குறுகுறுன்னு பாத்தார். அப்பவே சொல்லி இருக்கலாம்னு நினைச்சேன். ஆனா நேத்து சொல்றது சரியான சந்தர்ப்பம் இல்லேன்னு பட்டது. இன்னைக்கு சொன்னதும் தாத்த்தாக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா மொழி” என்று அவனுடன் பத்மநாபன் சொன்னவைகள் அனைத்தையும் மகிழ்வுடன் பகிர்ந்த கொண்டாள்.
மகிழ்ச்சியில் அவனுக்குத் தான் வார்த்தைகள் மௌனமாகிக் கொண்டன.
“என்னால இன்னும் நம்ப முடியல தென்றல். ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷம். இன்னொரு பக்கம் இன்னும் எல்லாரும் என்ன சொல்வாங்கன்னு டென்ஷன்” என்றவனின் குரலில் இன்னமும் நம்ப முடியாத பாவனை.
“என்னாலையும். பாட்டி கிட்ட இன்னைக்கு சொல்றேன்னு சொல்லி இருக்கார் மொழி” என்றவள்,
“எனக்கு இப்ப ரொம்ப பயம் இல்ல மொழி. ஓரளவு தாத்தா சமாளிப்பார்னு நம்பிக்கை இருக்கு” என்றவள்,
“எதுக்கு டென்ஷன் உங்களுக்கு. அதெல்லாம் வேணாம். பாசிட்டிவ் ஃபீல் இருக்கணும் தானே. இப்படி நீங்க டென்ஷன் ஆனா எப்படிப்பா? உங்க வாய்ஸ் இப்படி கேட்க முடியல” என்று அவனிடமே வருத்தமாக கேட்க,
“ஹே தென்றல்! சரி விடு. பாத்துக்கலாம்” என்றதும்,
“ம்ம்…” என்றவள், “உண்மையாவே நீங்க எனக்குள்ள வந்த மாயம் எப்படின்னு தெரியல மொழி” என்றாள் குரல் மயங்க.
“வந்த மாயம் எப்படின்னு நிஜமாவே தெரியலையா தென்றல்” என்றவன் குரல் மேலும் அவளை மயக்க,
“எனக்கு உங்களை பாக்கணும் மொழி. இப்பவே…”
“தென்றல்…”
“பாக்கணும் மொழி!”
“ஓகே. சிக்ஸ் ஓ கிளாக் பீச் வரேன் தென்றல்”
“நிஜமா?”
“இல்ல கனவு”
“மொழிழிழி..!”
“பின்ன நிஜமான்னு கேட்டா என்ன சொல்ல தென்றல்?”
“நிஜம்னு சொல்லுங்க”
“அப்பப்பா….. மொத்தமா ஆட்டிப் படை என்னை” என்று காதலாய் சிரித்துக் கொண்டவன் “நிஜம் தான் தென்றல்” என்றான் அவள் கேட்டதை மறுக்காமல்.
அதில் அவளுக்கும் சிரிப்பு வர, “தாத்தா சொன்னார்…” என்றாள் மொட்டையாக.
“என்னன்னு தென்றல்?”
“அந்த டாக்டர் பய பாவம். உன் கிட்ட சிக்கி இருக்கான் பாரேன். என்ன அடி வாங்கப் போறானோ… மாரியாத்தா.. நீ தான் என் பேத்தி கிட்ட இருந்து அந்த அப்பாவி பிள்ளையை பொழைக்க வைக்கணும்னு சொன்னார். கொழுப்பு புடிச்ச தாத்தா”
அவள் சொல்லி முடித்ததும் வெடித்து சிரித்தான் அருண்மொழி.
“உங்க தாத்தா உண்மையாவே செம தான் போ. அடி வாங்குவேனு எல்லாம் எனக்காக யோசிக்கிறார் பாரேன்” என்றவனின் குரலில் கேலியை மீறிய நெகிழ்வும் மகிழ்வும்!
அதை உணர்ந்தவளும் அவனை உணர்ச்சி வசப் பேச்சை மாற்றும் விதமாய் “அடி வாங்குவீங்க?” என்று அவனிடமே விளையாட்டாய் கேட்க,
“தென்றல் அடிக்குமா?” என்று குறும்பாக திருப்பிக் கேட்டவன்,
“எனக்குத் தெரிஞ்சு தென்றல் தொடும், இதமா வருடும், தலை கோதும், தழுவும்… அப்புறம்..”
“அப்புறமும் வேணாம். விழுப்புரமும் வேணாம். நான் பீச் வந்துட்டு கால் பண்றேன் மொழி” என்றவள் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் உஷாராகி அழைப்பை துண்டித்து விட்டாள்.
“கொஞ்சம் விட்டா இன்னும் வெட்கப் பட வச்சிடுவார்” என்று சொல்லி முகத்தை தேய்த்துக் கொண்டவளின் காது மடல்களோடு சேர்ந்து கன்னக் கதுப்புகளும் முகமும் என மொத்தமாய் சிவந்து போனாள் தென்றல் மீனா.
“மொழி மோசம். மோசம். மோசம்!” என்று அவனிடம் சொல்ல முடியாமல் தன் முகத்தை மூடிக் கொண்டே சொல்லிக் கொள்ள, குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசை அவளின் கவனத்தை ஈர்த்தது.
அருண்மொழி தான் அனுப்பிருந்தான். “தென்றல் சத்தமின்றி முத்தமும் இடுமாம் தென்றல்!” என்ற செய்தியை கண்டதும் மேலும் குப்பென்று சிவந்து போனது அவளின் முகம்.
“ஐயோ…” என்றவள் அலைபேசியோடு சேர்த்து முகத்தை மூடிக் கொள்ள, அடுத்த குறுஞ்செய்திக்கான சப்தம் அவளை மீட்டியது.
“இயற்கை தென்றல் மாதிரி என்னோட தென்றலும் இதை எல்லாம் பண்ணும்னு நினைக்கிறேன்” என்று பச்சை வர்ண இதயத்துடன் கண்ணடிக்கும் பொம்மையும் முத்தமிடும் பொம்மையும் வரிசையாய் அணிவகுத்திருக்க, “அப்பப்ப்பா…” என்றாகி விட்டது தென்றலுக்கு.
அவன் அனுப்பிய ஒவ்வொரு வரிகளும் அவளின் வெட்கத்தை கூட்டிக் கொண்டே செல்ல, மீண்டும் மீண்டும் மனதிற்குள் வாசித்த வரிகள் அவனின் வாய் மொழியாக அவளின் செவிகளை மிக மிக அருகே தீண்டுவதாய் ஓர் இன்ப பிரம்மை!
“மொழி” என்று மட்டும் பதில் அனுப்பி வைக்க, “தென்றலின் மொழி” என்று பதிலுக்கு அனுப்பி வைத்தான் அவன்.
“பீச் கிளம்புறேன் நான். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்று அனுப்பி விட்டு தாத்தாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.
“இன்னைக்கும் வேலையா?” என்று பத்மநாபன் பேத்தியிடம் குறும்பாக கேட்க, “தாத்தா…” என்று சிணுங்கியவள் “மொழியை பார்க்க பீச் போறேன்” என்றாள் மறைக்காமல்.
“போய்ட்டு வா மீனு. இனி இதையும் சமாளிக்கணும்” என்றவர் கிண்டல் செய்தாலும் இன்முகமாகவே பேத்திக்கு விடை கொடுத்தார். மறுப்பு கூறி பேத்தியின் சந்தோஷத்தை கெடுக்க மனம் வரவில்லை அவருக்கு.
சரியாக ஆறு மணி போல் அவள் கடற்கரையில் இருக்க, அவள் வந்த இரண்டு நிமிடங்களில் அருண்மொழியும் வந்திருந்தான்.
அவனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்தவளின் முகம் அவனின் அகத்தை அளவில்லா சந்தோஷத்துடன் நிறைத்தது.
“ப்ப்பா… ரொம்ப அழகா இருக்க தென்றல்”
“ம்ம்ஹும்?” என்று புருவமுயர்த்தி பாவனையாக கேட்டவளின் விழிகள் மொத்தமாய் அவனை வாரிக் கொள்வதாய்!
“இந்தக் கண்ணு இருக்கே” என்று முகத்தின் அருகே நெருங்கி நின்று சொன்னவன், அவளின் விழிகள் விரிவதை கண்டு “பாக்காணும்னு சொல்லி வர சொன்ன வேலையை சரியா செய்ற தென்றல்” என்றதும் தன்னிலை அடைந்தவள், தன் இடது கரத்தினை அவனின் வலது கரத்தோடு கோர்த்துக் கொண்டு எதிரே மிதமான வேகத்துடன் மிதந்து எழுந்து வரும் அலைகளை பார்வையிட்டாள்.
அவளின் மனம் புரிந்து அவனும் அமைதியாக, “தாத்தா சம்மதம் சொன்ன மாதிரி எல்லாரும் சொன்னா சந்தோஷமா இருக்கும் மொழி” என்றாள் மௌனத்தை விலக்கி.
சிறிது நேரம் இருவரும் ஓயாத அலைகளை மட்டுமே மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவே அந்த நொடியில் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.
குல்ஃபி விற்கும் ஆள் இவனைக் கடந்து செல்லும் போது “இன்னா சார்? தோஸ்த் வரலையா?” என்று கேட்க,
“இல்லண்ணா” என்று சிரிப்புடன் தலை அசைத்தவன், “நீ குல்ஃபி சாப்பிடுவியா தென்றல்?” என்று கேட்க, அவள் ஆர்வமாய் தலை அசைக்கவும் ஒன்று மட்டும் வாங்க,
“உங்களுக்கு?” என்றாள் கேள்வியாக.
அவன் பதில் சொல்லும் முன்னர் அந்த ஆள் முந்தி இருந்தான். “அட இன்னாம்மா நீ வேற? இந்தத் தம்பி உனக்கு வாங்க் கொடுக்கறதே பெர்சு. இதோட தோஸ்த் வருவாப்ல. இந்தா இவர்கிட்ட சண்டை போட்டு வந்து ரெண்டு வாங்கி துண்ணுட்டு போவும். அந்த ரெண்டு துண்ணுறதுக்கு அவ்ளோ சலம்பல் பண்ணும். பாவம் அந்த புள்ள. துண்ண விடுறதே பெர்சுன்னு நினச்சுக்க வேண்டிது தான்” என்றார் மடமடவென அவளுக்கு ஒரு குல்ஃபியை எடுத்து நீட்டியபடி.
தென்றல் சிரிப்புடன் இவன் பக்கம் பார்வையை திருப்ப, அருண்மொழி அவரை முறைப்புடன் பார்த்தபடி பணத்தை நீட்டினான்.
“கட்டு சார். கட்டு சார். அப்படியே கொஞ்சம் பெரிய மனசோட ரெண்டு வாங்கிக் குடு சார். எதுக்கு கஞ்சத்தனம் பண்ணிட்டு” என்றவன்,
“நாளைக்கு தோஸ்த்த கூட்டி வா ஸார். அதான் உன்னான்ட சண்டை போட்டாவது ரெண்டு வாங்கித் துண்ணும். வூட்டம்மா உன்னான்ட அடிச்சிக்கிற மாதிரி தெர்ல. ஒரே லவ்ஸா லுக் வுடுது. அப்புறம் எப்படி எனக்கு கல்லா கட்டும்” என போகிற போக்கில் சொல்லி விட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்று விட்டான்.
“இவனை..” என்று அருண் முறைக்க, குல்ஃபியை உண்ணாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாள் தென்றல் மீனா.
“கல்யாணம் ஆன பின்னாடியும் பண்ணுவீங்களா?” என்று குறும்பாக கேட்க,
“தென்றலுக்கு பண்ணும் போது கசக்கவா செய்யும்?” என்றான் புருவமுயர்த்தி பிரித்தறிய முடியாத குரலில்.
“தினமும் எல்லா நேரமும் நீங்களே பண்ணுவீங்களா?” என்று பேச்சை மாற்ற,
“இல்ல தென்றல். மார்னிங் மட்டும் பண்ணுவேன். மதியம் ஜி. ஹச் பக்கத்துல ஒரு ஹோம் மெஸ்ல இருந்து லஞ் ஹாஸ்பிட்டலுக்கு வந்திடும். நைட் அனும்மா வீட்ல இருந்து டின்னர் கொண்டு வருவாங்க”
“ஓ..” என்றவள், “நான் வீட்ல ரொம்ப கிட்சன் பக்கம் போனதில்ல மொழி. அம்மா, வசும்மா, சித்திங்க, அண்ணிங்க தான் எல்லாம். என்னமோ கிட்சன் பக்கம் போகணும்னு தோணவே இல்ல” என்றவள்,
“உண்மையாவே காஃபி கூட போட மாட்டேன் மொழி. அம்மா கையால குடிக்கிற காஃபி தான் இஷ்டம். வசும்மா பண்ணி கொடுக்குற தோசையும் கார சட்னியும் ரொம்ப ரொம்ப இஷ்டம்” என்றாள் ரசனையாய் குல்ஃபியை உண்டு முடித்தபடி.
அவள் உண்டு முடித்ததும் தன் கர்சீபை நீட்ட “ஆல்ரெடி உங்களோடது என்கிட்ட இருக்கு” என்று சொன்னாலும் அவன் தந்ததை வாங்கிக் கொண்டாள்.
“அது யாரு தென்றல் வசும்மா?” என்று அவன் புரியாத புன்னகையுடன் வினவ,
“வசும்மா..” என்றதும் அவள் முகமே கனிந்து விட்டது.
“அவுங்க எனக்கு இன்னொரு அம்மா மொழி” என்றதும் விழிகள் விரிய அவளைப் பார்த்தான்.
“என்னோட சித்தி அவுங்க” என்றவள்,
“சித்தப்பா இல்ல. அவுங்க மட்டும் தான்” என்றவள் குரல் முற்றிலும் மாறி இருந்தது.
“சித்தப்பா இறந்ததும் இங்கேயே தான் இருக்காங்க. எனக்கு இன்னொரு அம்மாவா. தாத்தா பாட்டிக்கு மருமகளா. போகல என்னை விட்டு. எங்களை விட்டு” என்றாள் முயன்று புன்னகைத்து.
ஒன்றும் சொல்லாமல் அவள் தோளில் கையிட்டு தன்னோடு அணைத்துக் கொண்டான். இதை குறித்து தான் எதையோ தன்னிடம் சொல்ல வந்து அது முடியாமல், அவசியம் இல்லை என நினைத்து தடுமாறுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது அவனுக்கு.
இருந்தும் எதையும் கேட்டு அவளின் உணர்வுகளை களைய விரும்பவில்லை அவன். இழப்புகளின் வலியை உணர்ந்தவன் மௌனமாய் அவளின் தோளினை ஆதரவாய் பற்றி இருந்தான்.
சிறிது நொடிகளில் அவள் கண்ணீர் கன்னம் தொட்டிருக்க, அதைக் கூட உணராமல் கடலை வெறித்தது தென்றலின் பார்வை.
அவள் கண்ணீரை கண்டவன் பொறுக்காமல் அதனை துடைத்து விட, அப்போது தான் தானுமே அழுதிருப்பதை உணர்ந்து அவன் புறம் பார்வையை திருப்பினாள்.
“இது விஷயமா நிறைய அழுதிருப்பேன்னு தோணுது தென்றல்” என்றவனிடம்,
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா மொழி? நான் என்னை உணருறதுக்கு முன்னாடியே வசும்மாக்கு என்னைத் தெரிஞ்சு இருக்கு” என்றவள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாள்.
சூரியன் கடலுக்குள் மறையும் சமயம் தான் இவ்வளவு நேரம் தான் பேசி இருப்பதே புரிந்து, “சொல்ல மாட்டீங்களா?” என்று அவனை முறைக்க,
“நீ சொல்லிட்டு இருந்தியே தென்றல். கேட்க தான் தோணுச்சு. நிறுத்த தோணலடா” என்றான் புன்னகை பூக்க.
“இப்படி சொன்னா எப்படி கோபப் பட?” என்று அவள் வேறு புறம் பார்வையை திருப்பிக் கொள்ள,
“கோபம் இப்ப வருமா?” என்றான் ஆர்வமாய்!
“மொழி” என்று முறைக்க முயன்று தோற்றவள், அவன் பார்வை தன் நாசியையும் முகத்தையும் மொய்த்ததை உணர்ந்து அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“பீச் மொழி” என்றாள் முகத்தை நிமிர்த்தாமல்.
“யாரும் நம்மள பாக்க பீச் வரல தென்றல்” என்றான் அவள் தலையோடு தன் தலை சாய்த்து.
இருவருக்குமே அந்த நொடியில் சுற்றம் கருத்தில் இல்லை. கருத்தில் கொள்ளவும் விரும்பவில்லை. தங்களுக்கான உலகத்தில் உறைய விரும்புவதை போல் அசையாமல் நின்றிருந்தனர்.
நேரம் கடப்பதை உணர்ந்து “நீங்க ஹாஸ்பிட்டல் போகனும்” என்று அவனின் தோளில் இருந்து நிமிர்ந்தபடி கேட்க,
“ம்ம்.. ஒன் ஹார் பர்மிஷன் சொல்லிட்டேன். என் பேஷண்ட்ஸ் எல்லாம் இன்னொரு டாக்டருக்கு மாத்தி இருப்பாங்க. அனும்மாக்கும் இன்பார்ம் பண்ணிட்டேன்” என்றவன் நேரத்தைப் பார்க்க,
“இப்ப கிளம்பினா சரியா இருக்கும் தென்றல்” என்றதும் இருவரும் கோர்த்திருந்த கைகளை விடாமல் மணலில் நடக்கத் துவங்கினர்.
“இவன் கூட சேர்ந்து சுத்தத் தான் என்னை கல்யாணம் பண்ணலயா நீ?” என்று நாராசமாக கேட்ட குரலில் இருவரும் முக சுளிப்புடன் ஒன்று போல் பார்வையை திருப்ப, விதார்த்தின் உக்கிரப் பார்வை அவர்களை வெறியுடன் வெறித்துக் கொண்டிருந்தது!