தென்றல் மீனாவின் மொழி என்னும் அழைப்பை கேட்டு மாதவனின் மனம் நிறைந்து போனது.
சிறு வயதில் தங்களோடு அவன் வந்து விட்ட பின்னர் பல நாட்கள் உறங்கத்தின் பிடியில் அவனையும் அறியாமல் “அம்மா மொழி சொல்லுங்கம்மா. சாமிட்ட இருந்து திரும்பி வாங்கம்மா” என்று அவன் கண்ணீர் வழிய அழுதது இன்னமும் அதன் சுவடு நீங்காமல் அவன் மனதில் ரணமாய் உறைந்து கிடக்கிறது.
அவன் அழுகும் போதெல்லாம் அவன் மேல் காலிட்டு அணைத்துக் கொண்டு “தூங்குடா அருண்” என்று அவன் கண்ணீரைத் துடைத்து விட்டது இன்னும் நெஞ்சில் கனம் மிகுந்த பசுமையாய்!
இப்போது அவன் பெற்ற அன்னைக்கு பின்னர் அவனை தாயாய் தாரமாய் அரவணைத்துக் கொள்ளப் போகும் பெண் அதே போல் அழைக்கவும் சொல்லொண்ணா மகிழ்வு மாதவனுக்கு.
“என்ன அண்ணா சத்தத்தை காணோம்?” என்றவள் குரலில் சுயம் பெற்றவன் “சொல்லுமா” என்றான்.
குரல் லேசாக கரகரத்துப் போய் இருந்தது. அந்தப் பக்கம் தென்றல் மீனா அதை உணராத போதிலும் உயிர் நண்பனின் குரல் மாற்றம் அருண்மொழியின் கண்களில் இருந்து தப்பவில்லை.
“மேடி.. நீ யாருன்னு எனக்கு தெரியும்” என்று அருண் சிரித்தாலும் அவன் கண்ணோரம் கசிந்திருப்பதை கண்டு கொண்டான் சரியாக. அதனை சுட்டிக் காட்டி “என்ன மேடி?” என்று வருத்தமாக கேட்டான் என்னவோ என்று.
இப்படி கசிந்து போகும் அளவிற்கு என்ன என்று அவனுக்குப் புரியவில்லை.
“டேய். நீ ஏன்டா ஒரு மாதிரி ஆகிட்ட” என்று அதட்டியபடி நண்பனின் தோளில் கையிட்டு கொண்டான் மாதவன்.
அருண் அவனை இன்னும் கவலையாக பார்க்க, “சந்தோஷமா இருக்கு மச்சான். உன் ஃபேஸ்ல இந்த சிரிப்பு. அதுல மீனா சிஸ்டர்காக இருக்க லவ். ரொம்ப மனசு நிறைஞ்சு போய் இருக்கு. எப்பவும் நீ சிரிச்சாலும் இந்த ஸ்மைல்.. ரொம்ப நிறைவா, முழுமையா, காதலா.. சம்திங் டிவைன் மச்சான்” என்று நண்பனின் தோளில் தட்டியபடி மனதார சொன்னான் மாதவன்.
அவன் சந்தோஷத்தில் உள்ளம் நிறைய தானும் அவனை தோளோடு அணைத்துக் கொண்டவன் “இப்படி எல்லாம் நான் இருப்பேன்னு நானே நினைச்சது இல்ல மேடி. ஆனா தென்றல் வந்த பின்னாடி..” என்றவன் முடிக்காமல் புன்னகையுடன் நிறுத்தி விட்டான். தன்னுலகில் சஞ்சரித்தும் விட்டான் சில மணித்துளிகள்.
அவன் முடிக்காமல் விட்டதும் முகத்தில் தெரிந்த பூரண மகிழ்வும் என தன் நண்பன் அருணை புதிதாக உணர்ந்தான் மாதவன்.
“நீயும் லவ் பண்ணு மேடி. சிடுமூஞ்சி மாதவனை சிரிச்ச மூஞ்சி மாதவனா எப்ப நாங்க பாக்குறது” என்று அருண் சிரிக்க,
“டேய் நானாடா பண்ண மாட்டேங்கிறேன்.. எதுவும் அமையல. அதுக்கான சூழல் கூட உருவாகல. உருவானா பாப்போம்” என்றவன்,
அவனாகவே தலையை இல்லை என்பது போல் ஆட்டி “நம்ம முகத்துக்கு அதெல்லாம் சரி பட்டு வரவும் வராது மச்சான். மம்மி சொன்ன பொண்ண கட்டினா தான் டார்ச்சர் இல்லன்னு சும்மாவா பாடி இருக்காங்க. நான் டார்ச்சர் இல்லாத வழியை ஃபாலோ பண்ணி அரேஞ் மேரேஜ் பண்ணிக்கலான்னு இருக்கேன்” என்றதும்,
“சொல்லிடலாம். இன்னும் ரெண்டு மாசம் போகட்டும்டா. இன்னொரு யூனிட்ல வேலை தலைக்கு மேல இருக்கு. இப்ப மேரேஜ்னு கமிட் பண்ணிட்டா மண்டை காய்ஞ்சு போகும். ஐ திங்க் ஐ கேன்னாட் பேலன்ஸ். பாப்போம்” என்றான் லகுவாக.
“அரேஞ் மேரேஜ்னு சொல்ற. அப்புறம் ஏன் தள்ளி போடணும். அம்மா கிட்ட நான் சொல்றேன். இப்ப பாத்தா ரெண்டு மாசத்துல அமைஞ்சா ஓகே தான? அப்புறம் என்ன” என்றவன் மாதவன் மறுப்பாக கூற வருவதை கண்டு,
“நீ பேசாம இருடா. இப்படியே விட்டா நீ பேச்லர் தான் கடைசி வரை!” என்றவன்,
“நாளைக்கு அம்மா கிட்ட சொல்லிடுறேன்” என்றதும் “கல்யாணம் எனும் விதி யாரை விட்டது. பாக்க சொல்லு மச்சான். நான் வாயத் திறந்தா இப்ப தான் கல்யாண நினைப்பு வந்ததான்னு எடக்கா பேசுவாங்க. தேவையா. என்னமோ பண்ணுங்க” என்று விட்டான் மாதவனும் சாதாரணமாக.
இருவரும் சிறிது நேரம் கடற்கரையில் இருந்து விட்டு கிளம்பி இருந்தனர்.
இல்லம் வந்ததும் மாதவன் கொடுத்து அனுப்பிய இரவு உணவை உண்டு விட்டு தென்றலுக்கு அழைத்தான் அருண்மொழி.
அழைப்பை ஏற்றதும் “வீட்டுக்கு வந்தாச்சா மொழி?” என்று தென்றல் கேட்க,
“வந்தாச்சு தென்றல். இப்ப தான் சாப்பிட்டேன்” என்றவன்,
“சொல்லுடா. என்ன விஷயம்?” என்றதும் அழகம்மை அவனை பார்க்க வேண்டும் என்று சொன்னதை சொல்ல,
“நாளைக்கேவா?” என்று கேட்டாலும் “சரி தென்றல் வரேன். நாளைக்கு சண்டே எனக்கு ஜி. ஹச் டியூட்டி ஆஃப் தான். மார்னிங் வரட்டுமா?” என்று கேட்க,
“சரி மொழி” என்று சொல்லி பாட்டியுடன் பேசிய விஷயங்களை பகிர்ந்து கொண்டு அழைப்பை துண்டித்தவளுக்கு நாளை தாத்தா பாட்டி மற்றும் குறிப்பாக வசுந்தராவுடன் அவனை நேரில் சந்திக்கப் போகும் படபடப்பு இப்போதே சூழ்ந்து கொண்டது.