தன் ட்ராலியில் இரண்டு வாரங்களுக்கு தேவையான உடைமைகள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த அருண்மொழி,
“எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா” பாடல் இன்னிசையாய் அலைபேசியில் ஒலித்ததில் உதட்டினில் உறைந்த புன்னகையுடன் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே ஒதுக்கி விட்டு அழைப்பை ஏற்றான்.
“சொல்லு தென்றல்”
“பேக் பண்ணியாச்சா மொழி?” என்று அந்தப் பக்கம் பேசியவளின் குரல் உற்சாகமாய் வரவிருந்து தோற்றுப் போய் சற்று சோர்வாகவே வந்தது.
அவள் குரலில் மாற்றம் அவனிடமிருந்து தப்புமா என்ன? அம்மாறத்திற்கான காரணம் அறிந்திருந்தவன் “தென்றல் காத்து கொஞ்சம் லேசா வீசுதே?” என்றான் புன்னகை முகமாகவே.
“ம்ம்… ரெண்டு வாரம்ல மொழி. எப்படி பாக்காம.. ப்ச்…”
“ஹேய் தென்றல்.. என்னடா இவ்வளவு சோகம்? இந்த ரெண்டு வாரமே இப்படின்னா அடுத்த மாசம் டெல்லில பத்து நாள் இன்னொரு கான்ஃபரன்ஸ்க்கும் போறதுக்காக அனும்மா ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அதுவும் ஃபிக்ஸ்ட். உனக்கு தெரியும்ல.. நீ தானே போகவே சொன்ன” என்றவன் சிரிக்க,
“ம்ம்” என்றவள் குரலில் ஸ்ருதி இல்லை. சந்தோஷமும் இல்லை.
போகச் சொன்னாள் தான். அவனுக்காகவென போகச்சொல்லி விட்டாள் தான். ஆனாலும் கிளம்பும் சமயம் அனுப்ப மனமே இல்லை என்று எப்படி அவனிடம் சொல்வது?
அங்கே சென்று தங்கும் வரையிலும் அனைத்தும் ஏற்பாடாகி விட்டது என சற்று நேரத்திற்கு முன்னர் தான் அனுஜா அழைத்து சொல்லி இருந்தார் அவளிடம்.
இதோ நாளை இந்நேரம் அவன் நியூ யோர்க்கிற்கு விமானத்தில் பறந்து கொண்டிருப்பான். அப்படி இருக்கையில் இப்போது “என்னை விட்டு போகாதீங்க மொழி” என சொல்லவா முடியும்?
போகச் சொல்லி வலியுறுத்திய தானே இப்போது அதனை உடைத்து விடுவோமோ என்று பயந்தவள் “சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ண கூடாது தென்றல். ஜஸ்ட் டூ வீக்ஸ். அதுக்கு அப்புறம் மொழி வந்திடுவார் உன் கிட்ட” எனத் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டாள்.
சத்தமில்லாமல் தனக்குச் சொல்வதாக எண்ணி அழைப்பில் அவனிருந்ததையும் மறந்து வாய் விட்டே அவள் சொல்லி விட அவளின் தவிப்பில் உருகி விட்டது அவனுக்கு.
“இதுக்கு தான் போக யோசிச்சேன்” என்று முணுமுணத்தவன், “தென்றல்…” என்க,
“ஹான்.. சொல்லுங்க மொழி. இருக்கேன்” என்றாள் கனவில் இருந்து விழிப்பவள் போல்.
“கட் பண்ணிட்டு வீடியோ கால் பண்றேன் தென்றல்” என்றவன் நொடி நேரமும் யோசிக்காமல் காணொளி இணைப்பில் வந்து விட்டான்.
அழைப்பை ஏற்றவள் புன்னகைக்க கடையில் இருக்கும் அவளின் அறையில் அமர்ந்திருப்பதை கண்டு “கடைல இருக்கியா தென்றல்?” என்றதும் ஆம் என்பதாக தலை அசைத்தவளின் புன்னகையில் ஓர் குறைவு!
“நான் வேணும்னா அனும்மா கிட்ட வரலேன்னு சொல்லி என் ட்ரிப்பை கேன்சல் பண்ணிடவா?” என்றதும் சுதாரித்தவள்,
“என்ன நீங்க? பொசுக்குன்னு கேன்சல் பண்ணிடவான்னு கேக்குறீங்க?” எனத் திகைத்து,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். இது உங்களுக்கு கிடைச்ச நல்ல ஆப்பர்ச்சுனிட்டின்னு அனு அத்தை சொன்னாங்க என்கிட்ட. கண்டிப்பா நீங்க போகனும்” என்றாள் உறுதியாக சற்றே கண்டிப்புடன்.
“என்ன ஜஸ்ட் ரெண்டு வாரம் இந்த மாசம். நெக்ஸ்ட் மந்த் ஒரு பத்தே பத்து நாள். அவ்ளோ தானே” என்றவள்,
“நானும் நெக்ஸ்ட் வீக் அழகாபுரம் கிளம்பிடுவேன். இங்க எல்லாரும் போறோம். மூணு நாள் அங்க தான் இருக்க போறோம். பாப்பாக்கு மொட்டை போட்டு, மறு நாள் பூஜை முடிச்சு ஒரு நாள் இருந்துட்டு அடுத்த நாள் தான் கிளம்புறதா பிளான்” என்றவள்,
“அப்புறம் என்ன? அதெல்லாம் மேனேஜ் பண்ணிடலாம்” என்று அசால்ட்டாக சொன்னாலும் உள்ளுக்குள் அவனின்றிய நாட்கள் எப்படி இருக்குமோ என்று தான் இருந்தது அவளுக்கு!
இருவரும் காதலால் கரைந்து புரிந்து இணைந்து ஆறு மாதங்கள் முடிவடைந்துவிட்டது.
பறந்தோடிய நாட்களில் அவர்களின் புரிதலும் காதலும் இன்னுமின்னும் மெருகேறி இருவரின் நேசபந்தமும் யாராலும் தகர்க்க முடியாத அளவிற்கு வலுப்பெற்று அவர்களை இணை பிரியாமல் கட்டிப் போட்டிருந்தது.
தினம் அலைபேசியில் நிலவின் துணையுடன் நடந்தேறும் உயிர் வருடும் உரையாடல்களும், வாரம் இரண்டு முறையேனும் கடற்கரை சந்திப்பும் என அவர்களின் பொழுதகள் பொன்னான நேசத்தால் கலந்து மனதினுள் பொக்கிஷமாய் சேமிக்கப் பட்டு ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் கொண்டாடப்பட்டது.
நீரோடையை போல் எவ்வித பெரிய சலசலப்புமின்றி சென்று கொண்டிருந்த நாட்களில் இதோ அவர்களின் முதல் பிரிவு!
“சரிடா. பண்ணிடலாம்” என்றவன், “ரெண்டு வாரம் தென்றல்” என்றான் இப்போது.
தற்காலிகமான பிரிவு தான் என்றாலும் இருவராலும் அந்த முதல் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறினார்கள்.
கர்ப்ப ஆரோக்கியம் பற்றிய ஓர் சர்வதேசக் கலந்தாய்விற்காக நியூ யோர்க் நகரத்திற்கு நாளை காலை அனுஜாவுடன் கிளம்பவிருக்கிறான் அருண்மொழி.
இந்தப் பயணம் அருண்மொழி பெரிதாய் விரும்பவில்லை என்றாலும் அனுஜா அத்தனை தூரம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் தென்றல் சொல்லியதற்காகவும் தான் செல்லவே ஒப்புக் கொண்டிருந்தான்.
இளம் மருத்துவர்களும் அந்தக் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி இருந்தமையால் யோசிக்காமல் அவனின் பெயரையும் அனுஜா இணைத்திருந்தார்.
வரவில்லை. முடியவே முடியாது. வேண்டாம் என்றவனை மிரட்டி அதட்டி பார்த்தவர் அவன் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை என்றதும் இறுதியில் தென்றலிடம் விஷயத்தை கூறி விட்டார்.
“யங் டாக்டர்ஸ்சும் இதுல கலந்துக்கலாம் மீனா. இவனுக்கு வரதுக்கு என்ன? எவ்வளவு கேசஸ் சக்சஸ் பண்ணி கொடுத்து இருப்பான் தெரியுமா? இவனுக்கு நல்ல சேன்ஸ் மீனா. நீ சொல்லு. நான் மிரட்டி பார்த்தும் வர முடியாதுன்னு நிக்கிறான்” என்றவர்,
“என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது மீனா. நீ தான் பேசி சரி கட்டி அவனை வர வைக்கணும். அவனை நியூ யோர்க் பேக் பண்றது உன் பொறுப்பு” என்று சாமர்த்தியமாக அவள் தலையில் பொறுப்பினை கட்டி விட்டார்.
ஆனால் அவனை ஒப்புக் கொள்ள வைக்க அவள் ஒன்றும் அத்தனை சிரமப் படவில்லை.
“அனு அத்தை இவ்வளவு சொல்றாங்க தானே? போய்ட்டு வாங்க மொழி” என்றதும் மருந்துக்கும் கூட மறுப்பாக அவனால் எதையும் சொல்ல முடியவில்லை.
முதல் முறையாக தன்னிடம் கேட்டுக்கொண்டுள்ளாள் என்றதுமே “சரி தென்றல்” என்று தான் மொழியின் வாய்மொழி வந்திருந்தது.
அடுத்த நாள் மாலை மருத்துவமனையில் அனுஜாவிடம் சென்று நின்றதுமே நமட்டுச் சிரிப்புடன் அவனைப் பார்த்தவர் அவனுக்கென முன் பதிவு செய்து வைத்திருந்த விமான டிக்கட்டினை கொடுக்க, “எல்லாம் வெல் பிளான்ட் போல அனும்மா” என்றான் அவரிடம்.
“எப்படியும் மீனா சொல்லி நீ வராம இருக்க மாட்ட. அதான் நம்பிக்கையா புக் பண்ணிட்டேன்.” என்று கிண்டலாக சிரித்தவர்,
“நெக்ஸ்ட் மந்த் இந்தியாக்குள்ள டெல்லில தான் அந்த கான்ஃபரன்ஸ். ஜஸ்ட் டென் டேஸ். அதுக்கும் டிக்கட் புக் பண்ணியாச்சுடா” என்றதும் அவரை சிரிப்புடன் முறைக்க,
“மீனா தான் அதுக்கும் புக் பண்ண சொல்லிட்டா. இல்லேன்னா நீ அதுக்குள்ள அவ மண்டையை கழுவினாலும் கழுவிடுவியாம். பாவம் புள்ள” என்று அவரும் சிரித்தார்.
“ரொம்ப உஷார் தான் நீங்களும் உங்க மருமகளும்” என்று சிரித்தவன்,
“எப்படியோ ரெண்டு ட்ரிப் பிளான் பண்ணிட்டீங்க தானே! போய்ட்டு வரலாம் அனும்மா. எனக்கும் புது அனுபவமா இருக்கும்” என்று விட்டான் அவனும்.
அவன் வருவதில் அத்தனை மகிழ்ச்சி அனுஜாவிற்கு. முன்பெல்லாம் அவனை அழைத்துச் செல்லக் கூடிய சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்திருக்கவில்லை.
இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்க அவன் உடன் வர வழி சமைத்து விட்டார். அதுவும் தென்றலின் மூலம்.
தென்றல் மீனாவை நினைக்க நினைக்க அவருக்குள் பூரிப்பும் அன்பும் பெருகியது. அருண்மொழியின் வாழ்வை இந்த அளவிற்கு நிறைப்பாள் என்று அவருமே எதிர்பார்க்கவில்லை.
இருவரும் இன்னும் திருமண பந்தத்தால் இணையவில்லை. அது ஒன்றே குறை! மற்றபடி உணர்வால் இணைந்து இருதயங்கள் இடம் மாறி இளைப்பாறி இருந்தது.
மொழி தான் தென்றல்! தென்றல் தான் மொழி எனும் வரையிலும் ஒருவரில் ஒருவர் நீராய் பாய்ந்து நிரம்பி தழும்பி இருந்தனர்.
தான் பெறா மகனுடைய வாழ்கையின் அர்த்தமும் மொத்தமும் தென்றல் மீனா தான் என்பதை எண்ணி அத்தனை அகமகிழ்ந்து போனார் அனுஜா.
தான் இந்தக் கலந்தாய்விற்கு உடன் வரச் சொல்லிய போது வேண்டாமே என மறுத்தவன் அவள் சொன்னதும் ஒப்புக் கொண்டு இதோ தன் எதிரே சம்மதத்துடன் வந்து நிற்பவனை கண்டு நிறைவான புன்னகை அவரின் முகத்தில்.
“நெக்ஸ்ட் வீக் கிளம்பனும்டா. தேவையானது எல்லாம் பேக் பண்ணிக்கோ. நியூ யோர்க் சிட்டி குளிர் தாங்குற மாதிரி ஜெர்கின் எல்லாம் வாங்கிடு நீ” என்றவரிடம்,
“கண்டிப்பா வரணுமா?” என்று அவன் மீண்டும் புன்னகையுடன் கேட்க, “இதோ மீனாக்கு கால் பண்றேன்” என்று அலைபேசியை எடுத்ததும் முறைப்புடன் சிரித்தவன்,
“நல்லா என்னை வச்சு செய்றீங்க அனும்மா நீங்களும் தென்றலும்” என்று சொல்லி விட்டு கிளம்பியவன் அவன் பணி புரியும் அரசு மருத்துவமனையிலும் விஷயத்தை சொல்லி இரண்டு வாரங்களுடன் இணைத்து தன்னிடம் இல்லாதவற்றை வாங்க வேண்டும் என இன்றும் விடுமுறை பெற்று விட்டான்.
முழு மனதுடன் இல்லாவிட்டாலும் அறை மனதுடன் இதோ கிளம்பிக் கொண்டிருக்கிறான் நாளைய பயணத்திற்கு.
“ரெண்டு வாரம் தென்றல்” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டு ஏக்கமாய் சொல்லியவனின் குரல் அவளை என்னவோ செய்ய,
“மொழி… பிளீஸ்.. ரெண்டு வாரம் தானேன்னு நினைக்கலாம் ரெண்டு பேரும். இல்லேன்னா…” என்றவள்,”ரொம்ப கஷ்டம்பா” என்றாள் குரல் கமற.
“ஓகே. ஓகே. டூ வீக்ஸ் ஒன்லி. நம்மளை வீக்காக்காம இருந்தா சரிதான் தென்றல்” என்று லகுவாக சொல்லி சிரித்துக் கொண்டவன், “நார்மலா இருக்கணும் நீயும். ஹேப்பியா செண்ட் ஆஃப் பண்ணனும் என்னை” என்றான் புன்னகையுடன்.
“கண்டிப்பா. நாளைக்கு ஏர்போர்ட் வரை வருவேன்” என்றவள்,
“பேக்கிங் எல்லாம் முடிஞ்சதா மொழி?”
“அல்மோஸ்ட் முடிஞ்சது தென்றல்” என்றான் தன் அருகே இருந்த ட்ராலியை காட்டி.