அன்றைய காலைப் பொழுதில் அனுஜாவையும் அவரின் கணவர் கிருஷ்ணமூர்த்தியையும் தங்கள் இல்லத்தில் எதிர் பாராததால் அவர்களின் திடீர் வருகையில் உறைந்து போய் நின்றிருந்தனர் பத்மநாபன் குடும்பத்தினர்.
வந்திருப்பவர்களை வரவேற்க வேண்டும் என்பதை உணர்ந்து முதலில் அழகம்மை தான் “வாங்க டாக்டரம்மா. வாங்க தம்பி” என அனுஜாவையும் அவரின் கணவர் கிருஷ்ணமூர்த்தியையும் வரவேற்றார்.
அவர் வரவேற்ற பின்னர் தான் மொத்த வீடும் சுயம் பெற்று அவர்களை வரவேற்றனர்.
அவர்களின் அழைப்பை புன்னகை முகத்துடன் ஏற்றுக் கொண்டவர்கள் அப்பெரிய ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்ததும் பத்மநாபன் அவர்களுக்கு எதிரே இருக்கும் சோஃபாவில் அமர அவருடன் வெங்கடேசனும் அமர்ந்தார்.
அழகம்மை கணவரைப் பார்த்து அவர்களின் வருகை உங்களுக்குத் தெரியுமா என அவர்களை சுட்டிக் காட்டி கண்களால் கேட்க, இல்லை எனும் விதமாய் தலை அசைத்தார் பத்மநாபன்.
வெங்கடேசனிற்கு அனுஜாவை நன்றாக தெரிந்திருந்தது. சந்தியா கருவுற்று இருந்த போது அவரின் நண்பர் ஒருவரிடம் நல்ல மகப்பேறு மருத்துவரைப் பற்றி விசாரித்திருக்க அந்த நண்பர் பரிந்துரைத்த மருத்துவர் தான் அனுஜா என்பதால் அவரிடமே சிகிச்சை மேற்கொண்டிருந்தனர்.
எனவே வெங்கடேசனிற்கு அனுஜாவை தெரியாமல் இல்லை. இப்போது அவர்கள் இங்கே வந்திருப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என யோசித்தபடி அவர்களை வரவேற்றவர்,
“சொல்லுங்க டாக்டர். என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று தானே பேச்சினை துவக்கி வைத்தார்.
விசாலாட்சி அவர்களுக்கான காஃபியை கொண்டு வந்து கொடுக்க அதனை எடுத்துக் கொண்டபடி “முதல்ல எல்லாரும் மன்னிக்கணும். ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கணும். இப்படி திடீர்னு கிளம்பி வந்து நிப்போம்னு நாங்களும் நினைக்கல” என்ற அனுஜா,
“ரெண்டு நாள் முன்னாடி தான் ஒரு கான்பரன்ஸ்காக என் பையன் அருணோட வெளிநாடு போயிருந்தேன். மறுநாளே உங்களைப் பாக்க வரலாம்னு இருந்தோம். இன்னைக்கு தான் வரதுக்கான வாய்ப்பு கிடைச்சது” என்றவரின் பேச்சில் வெங்கடேசனின் கண்கள் கூர்மை பெற்றன.
“அதனால என்னம்மா? நல்ல விஷயம் பேச எப்ப வந்தா என்ன?” என்று அழகம்மை சொல்லியதும் தாயை அழுத்தமாய் பார்த்த வெங்கடேசன் வந்திருந்தவர்களை அதே அழுத்தத்துடன் பார்த்து,
“பரவாயில்ல சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று கேட்க,
“கல்யாண விஷயமா தான் பேச வந்திருக்கோம்” என்ற அனுஜா கணவரைப் பார்க்க ஆமோதிப்பாய் தலை அசைத்த கிருஷ்ணமூர்த்தி வெங்கடேசனிடம்,
“எங்க பையன் அருண்மொழிக்கு உங்க பொண்ணு தென்றல் மீனாவை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்” என்றதும் அசாத்திய அமைதி நிலவியது அங்கே.
பத்து நிமிடங்களுக்கு மேலாக அந்த மௌனம் நீடிக்க பின்னால் அரவம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்க்க தென்றல் மீனா படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள்.
அனுஜாவும் அவரின் கணவரும் வந்திருக்கிறார்கள் என வசுந்தரா வந்து அவளிடம் சொல்லி இருக்க “என்ன வசும்மா சொல்றீங்க? அனு அத்தையா?” என்றவளுக்கு பெரும் திகைப்பு.
“ஆமா மீனு. ரெண்டு பேரும் வந்திருக்காங்க. உன் கிட்ட அருண் தம்பி எதுவும் சொன்னாரா?” எனக் கேட்க,
“இல்லையே வசும்மா. நேத்து டேப்லெட் போட்டு தூங்கிட்டேன். அவர் கிட்ட நான் பேசவே இல்ல. முந்தா நாள் பேசும் போது கூட எதுவும் சொல்லலையே? உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் போகலன்னு மட்டும் தான் சொன்னாங்க” என்றவளிடம்,
“எனக்கென்னமோ உங்க விஷயமா தான் பேச வந்திருப்பாங்கன்னு தோணுது மீனு. உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்றதும் கண்கள் விரிய அவரைப் பார்த்தவள்,
“பொண்ணு கேட்டா?” கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு.
“அவுங்களுக்கு தெரியாது போல வசும்மா. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா என் கிட்ட சொல்லி இருப்பாங்க” என்றதும்
“சரி நீ வா. கீழ போகலாம்” என அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
அவள் முகத்தில் இருந்த சோர்வும் கலைப்பும் கண்களில் இருந்த கருவலையும் அவளின் மன நிலையை அப்படியே படம் பிடித்து காட்டியது அனுஜாவிற்கு.
“மீனா” என்று கனிவுடன் அழைத்தவர் தன் அருகே தொட்டுக் காட்டி “வாடா. வந்து உக்கார்” என்றதும் வெங்கடேசனின் விழிகள் மகளையும் அழுத்தமாக தொட்டது.
மறுக்கவும் முடியாமல் அவரருகே செல்லவும் முடியாமல் அவள் ஒரு நொடி தடுமாற “பெரியவங்க கூப்பிடுறாங்க இல்ல. என்னடி நின்னுட்டு இருக்க? போய் உக்காருடி” என்று அழகம்மை அதட்டியதும் அவள் கால்கள் தன்னைப் போல் நகர்ந்து அனுஜாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டது.
வெங்கடேசனின் பார்வை மகளை விட்டு அகலவில்லை. மகள் அவரின் அருகே சென்று அமர தாய் சொல்லியது தான் காரணமாக இருந்தாலும் அவள் சென்று அனுஜாவின் அருகே அமர்ந்தது அத்தனை அதிருப்தியை கொடுத்தது அவருக்கு.
“எப்படி இருக்கடா மீனா?” என்று அன்பொழுக அனுஜா கேட்டதும் “நல்லா இருக்கேன் அத்தை” என்றவள் “நீங்க?” என்று அவரின் நலத்தை விசாரிக்க,
“நல்லா இருக்கேன் மீனா” என்றவர் அவளின் தாடையை பற்றி “ஏன்டா ரொம்ப டல்லா இருக்க? கண்ணெல்லாம் பாரு.. வீங்கி கருவளையம் வந்து இப்படியா ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிறது ” என்று கவலையுடன் சொல்ல அவளின் பார்வை அனிச்சையாக தந்தையை தொட்டது.
அவள் பார்த்ததும் மகளின் முகத்தை பாராமல் முகத்தை திருப்பிக் கொண்டார் வெங்கடேசன். அவரின் அந்த செயல் அத்தனை அடியாய் இருந்தது தென்றல் மீனாவிற்கு.
மழுக்கென்று கண்களில் கண்ணீர் தேங்கி விட்டன. இந்தப் பாரா முகம் இன்னும் எத்தனை நாட்கள் தொடருமோ என பரிதவித்து போனாள் தென்றல் மீனா.
சுற்றி அனைவரின் கண்களுக்கும் எதுவும் தப்பவில்லை. அனுஜாவும் கிருஷ்ணமூர்த்தியுமே கவனித்திருக்க தென்றல் மீனாவின் தவிப்பும் வெங்கடேசனின் முகத்திருப்பலும் அவர்களுக்கே பெரும் சங்கடத்தை கொடுத்தது.
ஆறுதலாக தென்றல் மீனாவின் கைகளை பற்றி அழுத்திக் கொடுத்தவர், பற்றிய கையை விடமால் வெங்கடேசனை பார்த்தார்.
“அருமையான பொண்ணு சார் உங்க பொண்ணு. அவளை எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க எங்களுக்கு ரொம்ப இஷ்டம்” என்றவர்,
“உங்களுக்கும் தெரியும்னு மீனா சொன்னா. என் பையன் அருணும் உங்க பொண்ணு மீனாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அவுங்க விருப்பப் பட்ட வாழ்க்கை துணை அமைஞ்சா ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க ரெண்டு பேரும்” என்றார் நேரடியாகவே.
இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்பதை போல் அவர் அமைதியாக இருக்க பெரு மூச்சுடன் அவரைப் பார்த்த வெங்கடேசன் “உங்க பையனுக்குன்னு சொல்லி வீடேறி வந்து பொண்ணு கேக்குறீங்க? அதிர்ச்சியா இருக்குன்றதை விட ரொம்ப ஆச்சர்யமா இருக்கு” என்றார் ‘இதை நான் எதிர் பார்க்கவில்லை’ எனும் தொனியில்.
அனுஜா ஒன்றும் கூறாமல் புன்னகையை மட்டும் சிந்த “ரெண்டு பேரும் விரும்புறாங்க சரி. நீங்க உங்க பையனுக்கு பொண்ணு கேட்டு வந்ததா சொல்றீங்க?” என்று வெங்கடேசன் கேள்வியுடன் நிறுத்த,
அவரை சற்றும் தடுமாற்றம் இல்லாமல் பார்த்த கிருஷ்ணமூர்த்தி “ஆமாங்க. அருண்மொழியும் எங்க பையன் தான். அவனுக்காக தான் உங்க பொண்ணை கேட்டு வந்திருக்கோம்” என்றார்.
“என் கணவர் சொல்றதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்ல. அவன் எங்க பையன் தான்” என்றார் அனுஜாவும்.
அங்கிருந்த அனைவருக்குமே அருண்மொழியைப் பற்றி தெரியும். இந்த இரண்டு நாட்களில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவனைப் பற்றி விஷயம் தெரியப் படுத்தப்பட்டிருந்தது.
தாங்கள் பெறாத மகனுக்காக இன்னொருவர் வீட்டுப் படி ஏறி வந்து பெண் கேட்கும் அவர்களின் குணம் அங்கிருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது என்றால் அது மிகையல்ல.
“உங்க பையனா?” என்று வெங்கடேசன் அழுத்தம் திருத்தமாக கேட்க அவர் கேள்வியின் நோக்கம் புரிந்தது இருவருக்கும்.
தந்தை என்ன அர்த்தம் கொண்டு இக்கேள்வியை கேக்கிறார் என்று நன்றாக உணர்ந்த தென்றல் மீனா எங்கே அவர் கேட்கும் கேள்வியின் நோக்கம் அனுஜாவையும் கிருஷ்ணமூர்த்தியையும் காயப் படுத்திவிடுமோ என அஞ்சி,
“அப்பா…” என்று அவரை தடுக்க நினைக்க,
“விசாலம்” என்று வீடே அதிர கத்தினார் வெங்கடேசன். அவரின் ஆவேசம் அனைவரையும் ஒன்று போல் திகைக்க வைத்தது. வந்திருந்தவர்கள் உட்பட உட்ச பட்ச அதிர்ச்சியில் திகைத்து அவரைப் பார்த்தனர்.
“விசாலம்… உன்னைத் தான்” என்று மீண்டும் இரைந்தவர் மனைவியை முறைக்க “என்னங்க?” என்று நடுங்கிய குரலில் கேட்டார் விசாலாட்சி.
“நான் வந்திருக்கவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். குறுக்க யாரும் பேச வேணாம். அதுக்கான அவசியமும் இல்ல” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னவர்,
“வீடேறி வந்து பொண்ணு கேக்குறாங்க. பொண்ணுக்கு அப்பனா நான் என் பதிலை சொல்லி தான ஆகணும். நான் பேசிக்கிறேன். எல்லாரும் அமைதியா இருந்தா போதும்” என்றதும் தென்றல் மீனாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
இந்தளவிற்கு தந்தை தன்னை ஒதுக்குவார் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவரின் கோபம் புரிந்தது. ஆனால் அக்கோபாம் தன் மீது வெறுப்பாக மாறவுள்ளதோ என அத்தனை அச்சம் கொண்டாள்.
அவரின் பேச்சில் அனைவருக்கும் ஒரு வித பிடித்தமின்மை உதிர்த்தது என்னவோ நிஜம். அனுஜாவிற்கு கண்ணீருடன் இருக்கும் தென்றல் மீனாவை கண்டு மனமெல்லாம் பாரமானது.
“அழாத மீனா” என்று ஆதரவாய் அவளின் தோள் தொட வலிந்து ஒரு புன்னகையை சிந்தியவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“சொல்லுங்க டாக்டர். நீங்க தான் சொல்லணும்” என்றவவர் மீண்டும் தான் கேட்க நினைத்ததை கேட்டார்.
“நீங்க பொண்ணு கேட்டு வந்தது உங்க பையனுக்கு தானா?” என்றதும் அவரை அழுத்தமாக பார்த்த அனுஜா ஆம் என்பது போல் தலை அசைத்தார்.
“எப்படி டாக்டர்?” என்று வெங்கடேசன் கூடுதல் ஆச்சர்யம் கொண்டு கேட்டவர்,
“மன்னிக்கணும். நான் தான் சரியான கேள்வியை கேக்கல போல. அருண்மொழி உங்க சொந்த பையனா?” என்று கேட்க அனுஜாவின் முகம் மாறியது.
கிருஷ்ணமூர்த்தி அவரை பார்க்க, “சொல்லுங்க சார். அருண்மொழி டாக்டர் உங்க சொந்த மகனா? இல்ல தானே?”
“லீகல்லி எங்க பையன் தான்” என்று அனுஜா சொல்ல,
“லீகல்லி உங்க பையனா இருந்தா என்ன இல்லேன்னா என்ன டாக்டர். அவர் உங்க மகன் இல்ல. நீங்க தத்தெடுத்துக்கிட்ட மகனா இருந்தாலும் உங்க சொந்த மகன் இல்லையே?” என்றவர்,
“முதல்ல அந்தப் பையன் உங்க கூடவே இல்லையே? உங்க கூட இருந்து வளராம ஹாஸ்டல் தான வளர்ந்து படிச்சு ஆளாகி இருக்காரு? அப்புறம் எப்படி உங்க பையன்னு சொல்லி உங்களால இவ்வளவு தூரம் வந்து பொண்ணு கேக்க முடியுது?” என்றதும்
“வெங்கடேசா.. கொஞ்சம் பொறுமையா பேசு” என்று பத்மநாபன் எடுத்துரைக்க,
“போதும் ப்பா. நான் பொறுமையா அமைதியா இருந்தது எல்லாம் போதும். இனியும் முடியாது” என்று பட்டென்று கூறியவர் அனுஜா தம்பதியினரிடம் பார்வையை திருப்பினார்.
“நீங்க பெத்த புள்ள மாதிரி நினைக்கிற ஒருத்தருக்காக பொண்ணு கேட்டு வந்து நிக்கிறீங்க. அது உங்க பெருந்தன்மை. ஆனா என்னால பெருந்தன்மையா நடந்துக்க முடியல. என் பொண்ணை என்னால யாருமில்லாத ஒரு அனாதை பையனுக்கு கட்டிக் கொடுக்க முடியாது. எனக்கு அதுல விருப்பமும் சம்மதமும் இல்ல. நான் அவளுக்கு வேற மாப்பிள்ளை பாக்குறதா இருக்கேன்” என்றதும் திகைத்து எழுந்து நின்று விட்டாள் தென்றல் மீனா.
யாருமில்லாத அனாதை பையனுக்கு எனும் போதே அனுஜா இருக்கையில் இருந்து எழுந்து விட்டார். அவருடன் கிருஷ்ணமூர்த்தியும்.
அதைத் தொடர்ந்து தந்தை சொன்ன விஷயம் தென்றல் மீனாவின் இதயத்தை உடைத்திருக்க செவிகளில் அமிலமாய் விழுந்த வார்த்தைகள் அவளின் இதயத்தை துண்டு துண்டாக கூறு போட்டன!
வேறு மாப்பிள்ளையா? இன்னொருவனா? மருந்துக்கும் கூட அவளால் இதனை கேட்க முடியவில்லை.
மொழி எனும் உலகத்தோடு காதலுடன் சஞ்சரித்து கொண்டிருக்கும் இதயம் இன்னொருவனின் நிழலை கூட தொட்டுப் பார்க்காது என தந்தைக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என அவளுக்கு விளங்கவில்லை.
முதலில் அப்படி யோசிக்கவே முடியவில்லை அவளால். தீ மேல் நிற்கும் உணர்வில் அவள் உடலும் உள்ளமும் பற்றி எரியும் உணர்வு.
தந்தையின் வார்த்தைகளை நம்ப முடியாமல் ஏற்க முடியாமல் “அப்பா..” என்றழைத்தவளின் விளிப்பில் முதல் முறையாக ஆதங்கம், கோபம், விரக்தி, இயலாமை என அனைத்தும் தென்பட்டது.
“என் முடிவில மாற்றமில்லை. என் பொண்ணுக்கு அவ ஆசைப் பட்டதை கொடுக்கலேன்னாலும் ஒரு நல்ல வாழ்க்கையை நிச்சயம் அமைச்சு கொடுப்பேன். அவ சந்தோஷமா இருப்பா” என்றார் உறுதியாக.
பத்மநாபன் மகனை வெறுப்புடன் பார்த்து முகம் திருப்பிக் கொண்டார். என்ன சொல்லியும் இனி மகனை மாற்ற முடியாது எனும் நிலைக்கு வந்து விட்டார் அவர்.
அனுஜாவிற்கு பதில் சொல்லும் சாக்கில் தந்தை அவரது முடிவை தன்னிடம் சொல்லி விட்டது நன்றாக புரிந்து தென்றல் மீனாவிற்கு.
இதயத்தில் அம்பாய் இறங்கிய வார்த்தைகள் அவளை கொல்லாமல் கொல்ல கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அனுஜா வெங்கடேசனின் பதிலும் பேச்சிலும் பேசிய விதத்திலும் என முற்றிலும் மாறிப் போனார்.
சாந்தமாக இருந்த முகம் கல்லென கடினமுற்றது அவருக்கு.
“என்ன சொன்னீங்க சார்? சந்தோஷமா இருப்பாளா? எவ்வளவு பெரிய கண் மூடித் தனமான நம்பிக்கை உங்களுக்கு? அவ சந்தோஷமே என் பையன் தான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என்றவர்,
அவர் தன்னை முறைத்ததை கண்டு கொள்ளாமல் “ஆமா. நீங்க அதை நம்பி தான் ஆகனும். என் பையன் தான் அவன். நீங்க கேட்டீங்களே? உங்க சொந்த புள்ளையான்னு…” என்றவர் நொடியில் கண்கள் கலங்க குரல் தழுதழுக்க,
“அப்பேர்பட்ட பிள்ளையை என் வயித்துல சுமக்குறதுக்கான பாக்கியத்தை ஆண்டவன் எனக்குத் தரலையேன்னு நான் ஏங்காத நாளில்ல. என் வயித்துல அவனை நான் சுமக்கல. நான் பெத்தேன்ற அங்கீகாரம் மட்டும் தான் அவனுக்கு கிடைக்கல. ஆனா என் அருண் எனக்குக் கிடைச்சது என்னோட பாக்கியம் சார். ஆண்டவனா எனக்குக் கொடுத்த பொக்கிஷம் அவன்” என்றவர்,
“இதோ.. உங்களை மாதிரி தான். சொல்லப் போனா உங்களை விட மோசமா என் அண்ணன் இந்த மாதிரி பேசி சொத்தை சுருட்டிட்டு போய்டுவான்.. இவனை துரத்தி விடு. இல்லேன்னா அவனையும் கொன்றுவேன் உன்னையும் சேர்த்து கொல்லுவேன் அப்படி இப்படின்னு மிரட்டினதுக்கு பயந்து தான் நாலு வருஷம் எங்க கூட இருந்தவன் எங்களை விட்டு பிரிஞ்சு போனான். இப்ப வரை அவன் எங்க கூட வரல. வரவும் மாட்டான். என்னோட இன்னொரு புள்ளயை என் கிட்ட இருந்து பிரிச்ச எங்க அண்ணனை நான் வெறுக்காத நாளில்ல. ஆனா, பிரிஞ்சு போனாலும் அவன் எங்க புள்ளை தான். அவனை என்னைக்கும் அனாதைன்னு நாங்க நினைச்சது இல்ல. அப்படி சொன்ன சொந்தங்கள் யாரு கூடயும் நாங்க சொந்தம் கொண்டாடுறதும் இல்ல” என்றார் உணர்ச்சி வசமாக.
அழகம்மை அவரை நெருங்கி அவரின் கரம் பற்றிக் கொண்டு “அவன் எதோ கோபத்துல பேசுறான் ம்மா. நீ வருத்தப் படாத” என்றார் கனிவுடன் கண்கள் கலங்க.
“அம்மா.. நான் கோபத்துல சொல்லல. உறுதியா தான் சொல்றேன். மீனுக்கு வேற மாப்பிள்ளை பாக்க தான் போறேன்”
அவரின் குரலில் தெரிந்த பிடிவாதம் பத்மநாபன் தம்பதியினரை மட்டுமல்லாது அங்கிருந்த அனைவரையும் பயம் கொள்ள வைத்தது. ஆனால் அனுஜாவும் கிருஷ்ணமூர்த்தியும் ஒருவரை ஒருவர் மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.
காதல் திருமணத்தில் அவர்கள் தாண்டி வராத தடையா? இது போல் நூறு வெங்கடேசனை பார்த்தவர்கள் நாங்கள் எனும் நிலையில் இருந்தனர் இருவரும்.
“வேண்டாம்டா. மீனு விருப்பம் மீறி நடக்கிறது எதுவும் அவளுக்கு சந்தோஷத்தை தராதுடா” என்றார் அழகம்மை கெஞ்சுதலாக.
“தரும். நிச்சயம் நான் அமைச்சு கொடுக்குற வாழ்க்கை என் பொண்ணுக்கு சந்தோஷத்தை மட்டும் தான் தரும்” என்றவர் அனுஜாவிடம் கை கூப்ப,
தடுமாற்றம் இல்லாமல் அவரைக் கண்ட அனுஜா “உண்மையான காதலுக்கு ஆயுள் கெட்டி சார். அதோட பலமும் கெட்டி தான். என் பையனும் உங்க பொண்ணும் விரும்புறதை நீங்க என்னமோ சாதாரண பொழுதுபோக்குக் காதல்னு நினைச்சுட்டிருக்கீங்க போல. ஆனா அவுங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற அன்பும் காதலும் தெய்வீகமானது. உங்க பிடிவாதத்தாலயும் கோபத்தாலயும் அந்தக் காதலை பிரிக்க முடியாது” என்றவர் தன் கணவரை பெருமையுடன் பார்த்து,
“எங்க கல்யாணமும் காதல் கல்யாணம் தான். முப்பது வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல இருக்க பல ஆளுங்கள மீறி எங்களோட காதல் கல்யாணத்துல முடிஞ்சது. எங்க காதலை நாங்க நம்பினோம். இப்ப எங்க பையன் காதலையும் நாங்க நம்புறோம். அவுங்க சேருறதை ஆண்டவன் கூட தடுக்க முடியாது” என்று ஸ்திரமாக சொன்னவர்,
திக் பிரம்மை பிடித்தவள் போல் நிற்கும் தென்றல் மீனாவின் தலை கோதி “தைரியமா இருக்கணும்டா மீனா” என்று சொல்லி “போய்ட்டு வரோம்” என பொதுவாக கூறி விட்டு கணவருடன் கிளம்பினார்.
அவர்கள் சென்றதும் பத்மநாபன் பேத்தியை பாவமாக பார்க்க, அனைவரும் எப்படி வெங்கடேசனிடம் பேசுவது என குழம்பித் தவித்து நின்றனர்.
மகள் விஷயத்தில் அவள் இந்தளவு பிடிவாதமாக நிற்பதன் காரணம் தான் என்னவென்று எவராலும் கண்டறிய இயலவில்லை.
தென்றல் மீனாவை அருண்மொழிக்கு கல்யாணம் செய்து வைப்பதில் அவருக்கு என்ன பிரச்சனை என்றும் யாருக்கும் புரியவில்லை.
ஆம்! அனைவருக்குமே அருண்மொழியை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வதில் சம்மதம் இருந்தது.
குணநாதனும் கனிஅமுதனும் அவனைப் பற்றி விசாரித்து இருந்ததை சொன்னதும் “நல்ல பையன் தான. என்ன குடும்பம் இல்ல. அதனால என்ன? நாம எல்லாம் இல்லையா?” என அத்தனை பேராலும் விஸ்தாரமாக நல்லெண்ணத்துடன் சிந்திக்க முடிந்தது.
இப்பேர்பட்ட குணம் கொண்டவன் என்பதால் தான் தங்கள் வீட்டுப் பெண் தென்றல் மீனாவின் விருப்பத்தை பெற்றுள்ளான். அவனுக்கே அவளை மணம் முடித்து வைத்தால் தான் என்ன என அனைவருமே சிந்தித்து விட்டனர்.
ஆனால் சிந்தித்த எதையும் செயலாற்றும் தைரியம் அங்கிருந்த யாருக்கும் இல்லை. வெங்கடேசனை மீறி எதையும் செய்தால் விபரீதமாகி விடுமோ என அத்தனை நடுங்கினர்.
ஆனால் மெய்யாகவே வார்த்தையால் சில விபரீதங்கள் நிகழும் போது யாராலும் அதனை தடுக்க முடியவில்லை.
வார்த்தைகள் காற்றில் கலந்து ஓசை பெற்று செவியில் அறைந்து நெஞ்சில் பாய்ந்து தென்றல் மீனாவை உருக்குலைத்து உடையச் செய்த போது அனைவராலும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.