கண்கள் நோக்கி தீர்க்கமாக தெளிவாக அவன் பேசிய அனைத்தும் அவரை தடுமாறவே வைத்தன.
முதலில் அனுஜா வந்து சென்றதை பற்றி சொன்னதும் சற்றே கலங்கியவன் தன் பெண்ணை விட்டு விலகி கொள் என்று சொன்னதும் மிகத் தெளிவாக நிதானமாக அழுத்தமாக பேசியது அவனின் நேசத்தை பறைசாற்றுவதாய்!
“சாத்தியமே இல்லை தம்பி. நீங்க அவ கண்ணுல இனி படாம இருந்தாலே போதும்! அவ மனசை மாத்தி அவளுக்கான நல்ல வாழ்க்கையை நான் அமைச்சு கொடுத்துடுவேன்”
“மனசை மாத்தியா..?” என்று புன்னகையுடன் கேட்டவன்,
“தென்றலோட மனசு என் கிட்ட வந்து ரொம்ப நாள் ஆச்சு சார்” என்றான் புன்னகை விரிய.
அவனின் உறுதி வெங்கடேசனை மிகவும் பாதித்தது. எவ்வளவு அழகாக பணிவாக காயம் கொள்ளாத வகையில் தங்களின் பெண் எப்பொழுதோ தன்னிடம் சரணாகதி அடைந்து விட்டாள் என்பதை வார்த்தையால் அழுத்தமாய் உணர்த்தி விட்டான்.
அந்த அழுத்தத்தை குறைக்கும் ஆவேசம் எழ,
“அவ என் பொண்ணு தம்பி!” என்றார் அழுத்தம் திருத்தமாக.
“ம்ம். உங்க பொண்ணு தான் சார். என்னோட தென்றலும் கூட!”
“அதென்ன தம்பி தென்றல்! என் பொண்ணுக்கு மீனுன்னு இன்னொரு பேரும் இருக்கு”
வெங்கடேசனிற்கு புகைச்சல் ஒரு புறம். அவனை ஏற்க முடியாத மனம் ஒரு புறம் என அல்லாடிப் போனார்.
அவரின் முக பாவமே அவரின் அலைப்புறுதலை சொல்ல “நான் உங்களை தடுக்க போறதில்ல சார். என்ன பண்ணனுமோ பண்ணுங்க. ஆனா விலகியோ மறந்தோ என்னால வாழ முடியாது” என்றான் முடிவாய்.
“இதே நம்பிக்கையோட எத்தன நாளைக்கு காத்திருக்க போறீங்க தம்பி?”
“தென்றலுக்காக நாள் என்ன? எத்தனை ஜென்மம் வேணாலும் காத்திருக்கலாம் சார்” என்றான்.
மீண்டும் மீண்டும் அவனின் உறுதி வெங்கடேசனின் உறுதியை பதம் பார்த்தது.
பலகீனத்தை வெளிக்காட்டாமல், “நீங்க என் பொண்ணை பாக்கவோ பேசவோ கூடாது தம்பி. அவளுக்காக நான் இன்னொரு மாப்பிள்ளை பாத்து எல்லாம் அடுத்த கட்டத்துக்கு போச்சுன்னா அவ உங்களை மறந்திடுவா. அப்புறம் தான் நீங்களும் உங்க வாழ்க்கையை பாப்பீங்க”
மறந்திடுவாளா… தென்றல் மொழியை மறப்பாளா… அவரின் நம்பிக்கையில் அருண்மொழிக்கு அத்தனை வருத்தமாய் இருந்தது.
அவளின் உயிரான பிரியத்தை அறிந்திருந்தவன் அவன். அவளின் ஆழமான நேசத்தை கண்டு அவன் பிரமித்து பூரித்த மகிழாத நாளில்லை.
தன் மேல் உயிர் நேசத்தை விதைத்த பெண் பூ அவள்! அவளால் நிச்சயம் வெங்கடேசனின் முடிவதை ஏற்க முடியாது என்பது சர்வ நிச்சயம்! தன் எதிரே இருப்பவர் சொல்வதை எல்லாம் செயாலாற்றினால் அதிக காயம் கொள்பவள் தன்னவள் தான். மனம் வலித்தது இப்போதே!
அன்று கடற்கரையில் முதல் முறையாக அவளின் நேசத்தை தனக்கு உணர்த்தி விட்ட சென்ற நாள் நினைவில் நிழலாடியது!
“மொழி” என்ற ஒற்றை அழைப்பில் அவள் கொட்டிய காதலை சிந்தாமல் சிதறாமல் அள்ளி நெஞ்சில் பொக்கிஷமாய் பொத்தி வைத்திருக்கிறான்.
அவள் கண்கள் சிந்திய காதலும் பரிதவிப்பும் என அந்த நொடியில் இருந்து தன் மனதில் நீக்கமற நிறைந்திருந்தவள் அவள். அவளின் மகத்துவமான பேரன்பிலும் காதலிலும் விழுந்து அவளை அவளுக்காகவே நேசித்தவன் அவன்.
அப்படி இருக்க அவளால் தன்னை மறக்க முடியுமா என்ன? அவர் சொன்னவை யாவும் அவரின் வீம்பினை சுட்டிக் காட்ட அந்த வீம்பு உடையும் போது தான் அவரின் மனமும் மாறும் என்று உணர்ந்தவன் அவர் சொல்லியதற்கு ஆமோதிப்பாய் தலை அசைத்தான்.
“இது போதும் தம்பி” என்று எழுந்து கொண்டவருக்கு இனி மகளை எப்படியேனும் மாற்றி விடலாம் என நம்பிக்கை பிறந்தது.
பார்க்காமல் பேசாமல் இருந்தால் இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து விடுவார்கள் என அவர் சராசரி தந்தையாக நினைத்திருக்க, காதல் கொண்ட இதயம் காயம் கொண்டாலும் காதலித்தவர்களை ஒரு போதும் மறவாது என்பதை வெங்கடேசன் அறிந்திருக்கவில்லை.
பிரிவின் போது நினைவாலே அணைத்து ஆற்றுப் படுத்தி வைராக்கியத்துடன் வாழும் வித்தையை மிக இயல்பாகவே காதல் கற்றுக் கொடுத்து விடும்!
அவ்வித்தையை ஏற்க தயாராய் இருந்தான் அருண்மொழி. கடினம் தான். தென்றலிடம் இதைக் குறித்து சொல்லவும் இல்லை தான். ஆனால் வேறு வழியில்லை என்று தோன்றியது.
எதிரே பிடிவாதத்துடனும் வீம்புடனும் இருக்கும் மனிதரின் மனம் இலக சிறிது காலம் ஆகும். அதுவரை காத்திருக்கத் தான் வேண்டும் என அவனும் அவரின் சொல்லிற்கு ஒப்புக் கொண்டான்.
“சொன்ன சொல்லை தட்ட மாட்டீங்கன்னு நம்புறேன். என் பொண்ணு கிட்டையும் இதை தான் சொல்ல போறேன்” என்றவர்,
“நான் வரேன் தம்பி” என்று கிளம்ப,
“சார் ஒரு நிமிஷம்” என அவரை நிறுத்தினான் அருண்மொழி.
என்ன என்பது போல் அவனின் முகம் பார்க்க,
“இத்தனை நாள் மனசுல ஒரு ஓரத்துல நான் அனாதைன்னு ஒரு ஃபீலிங் எனக்குள்ள இருந்துட்டே இருக்கும் சார். எத்தனை ரோஜா பூத்தாலும் செடில இருக்க முள்ளு மாதிரி அந்த விஷயம் என் நெஞ்சை கீறிட்டே இருக்கும். ஆனா இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க அனாதைன்னு சொன்னதும் எனக்கு அப்படி ஃபீலாகவே இல்ல. காரணம் என்ன தெரியுமா சார்? உங்க பொண்ணு! என்னோட தென்றல்” என்றான் நெஞ்சம் விம்ம.
அவர் அதிர்வாய் அவனை நோக்க, “என்னோட தென்றல் எனக்காக இருக்கும் போது நான் ஏன் சார் அனாதைன்னு ஃபீல் பண்ணனும்” என்றவன்,
“தென்றல் மட்டும் இல்ல. உங்க வீடு தேடி வந்து எனக்காக பொண்ணு கேட்டாங்களே.. என்னோட அப்பா அம்மா சார் அவுங்க. அவுங்க மட்டுக் இல்ல தோள் கொடுக்க உயிர் நண்பனா ஒரு தம்பி இருக்கான். என்னையும் தான் கூடப் பிறந்த அண்ணன் மாதிரி அருண் அண்ணான்னு கொண்டாடுற தங்கச்சி ஒருத்தி இருக்கா” என்றவன்,
“தேங்க்ஸ் சார். எனக்குள்ள இருந்தா ஃபீலிங் இனிமேல் இல்லைன்னு சுட்டிக் காட்டினதுக்கு” என்றவன் புன்னகை முகம் மாறாமல் கிளம்பி விட்டான்.
அவன் சென்றதும் தலையை ஒரு முறை உலுக்கிக் கொண்டவர், “என்ன பையன் இவன்.. திமிராவும் பேசல. எடுத்தெரிஞ்சும் பேசல. ஆனா சொல்ல வேண்டியதை அழுத்தமா அமைதியா சிரிச்சிட்டே சொல்லிட்டான்” என்று எண்ணியபடி கிளம்பி இல்லம் வந்தவருக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
அவனிடம் தன் முடிவினை சொல்லி விட்டு வந்தாலும் வீட்டினரிடமும் அதனை சொல்ல வேண்டும். குறிப்பாக தன் பெண்ணிடம்!
விசாலாட்சியை அழைத்து “மீனுவை வர சொல்லு” என்றவர் ஹாலில் அமர ஒவ்வொருவராக வந்து அனைவரும் ஒன்று கூடி விட்டனர்.
“என்ன விஷயம் வெங்கடேசா?” என்று அழகம்மை தடதடக்கும் நெஞ்சத்தோடு கேட்க,
“சொல்றேன். மீனு வரட்டும்” என்றார் பொதுவாக.
வசுந்தரா கை கூப்பி கண்களை மூடிக் கொண்டார். எதுவும் தவறாகி விடக் கூடாது என உள்ளுக்குள் கடவுளிடம் அத்தனை மன்றாடினார்.
தென்றல் மீனா விறுவிறுவென மாடிப் படிகளில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தாள். விசாலாட்சி அறைக்கு வந்து “அப்பா உன்னை கூப்பிட்டார். எதுவோ பேசணுமாம்” என்றதும் அவளின் கால்கள் தாமாக வேகம் கொண்டிருந்தது.
சிறு பிள்ளை போல் குடுகுடுவேன ஓடி வந்து மூச்சு வாங்க தன் முன்னே நிற்கும் மகளை கண்டு வெங்கடேசனின் உள்ளம் வலித்தது.
வலித்த உள்ளத்தில் அவளிடம் சொல்ல வேண்டிய விஷயம் நியாபகம் வர, இளகிய இதயம் மீண்டும் இறுகியது.
“அப்பா.. சொல்லுங்கப்பா” என்று அவள் அவரின் முகம் பார்த்து ஏக்கமாய் கேட்க,
“என் வார்த்தையை காப்பாத்துவேன்ற நம்பிகைல இதை சொல்றேன். அதைக் கேட்பேன்னு நாம் நம்புறேன்” என்று பீடிகையுடன் சொன்னவர்,
மகளை நேராக பார்த்து “உன் மனசை மாத்திக்கிறது நல்லது. இனி அந்தப் பையனை பாக்கவோ பேசவோ கூடாது நீ” என்றதும் கண்ணீருடன் தந்தையை கண்டவளுக்கு நீண்ட நாட்கள் கழித்து அவர் தன்னிடம் பேசியதற்கு சந்தோஷம் கொள்வதா இல்லை அவர் சொன்ன விஷயத்திற்கு வேதனை கொள்வதா எனத் தெரியவில்லை.
“சொல்றது புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன். இனி பாக்கவும் வேணாம். பேசவும் வேணாம். எந்த தொடர்பும் இல்லாம இருக்கது தான் உனக்கு நல்லது” என்றவர் கண்ணீருடன் தன்னை நோக்கும் மகளை காண முடியாமல்,
“கொஞ்ச நாள் போகட்டும். வேற நல்ல மாப்பிள்ளை பாத்த பின்னாடி..”
“அப்பா பிளீஸ்…..” என்று அவரை முடிக்க விடாமல் கெஞ்சி விட்டாள் மகள்.
வார்த்தையாக கூட இதை எல்லாம் கேட்க முடியவில்லை அவளால். தன்னை நிறுத்திய மகளை வெங்கடேசன் அதிர்ச்சியுடன் நோக்க,
“உங்களுக்கு என்னப்பா? நாம் அவரை பாக்க கூடாது. பேசக் கூடாது தான. சரிப்பா. உங்க இஷ்டம். நான் மொழியை பாக்கல. பேசல. ஆனா நினைக்காம இருக்க மாட்டேன். ஒவ்வொரு நிமிஷமும் அவரை நினைச்சு தான் உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன். இருப்பேன்”” என்றவள்,
“மறக்க முடியாததை மறக்க சொல்லாதீங்கப்பா. அது என்னால முடியாது. ரொம்ப கஷ்டம்” வேதனையில் தோய்ந்து வந்த வார்த்தைகள் யாவும் மருத்துவமனையில் தன்னிடம் பேசிய அருண்மொழியை நினைவூட்டியது வெங்கடேசனிற்கு.
இருவரின் வார்த்தைகளிலும் வேற்றுமை இல்லை! அதே போல் இருவரின் காதலிலும் வேற்றுமை இல்லை!
கண்ணீருடன் “என்னால இன்னொருத்தரை நினைச்சு கூட பாக்க முடியல ப்பா. பிளீஸ்… என் மனசுல அவரு மட்டும் தான் இப்பவும். எப்பவும்” என்று கை கூப்பி விட்டாள் அவரிடம்.
தன் காதலுக்காக தான் தான் போராட வேண்டும் என்று புரிந்து போனது அவளுக்கு. எனவே தான் தந்தையிடம் போராட முடிவு செய்து விட்டாள்.
மகளின் உறுதியில் வெங்கடேசனின் நம்பிக்கை தளர்வது போலிருந்தது. அருண்மொழி அத்தனை நம்பிக்கையுடன் தன்னிடம் பேசியதற்கான அர்த்தம் இப்போது நன்றாகவே விளங்கியது.
“தென்றலோட மனசு என் கிட்ட வந்து ரொம்ப நாள் ஆச்சு சார்” என்று ஒளிரும் புன்னகையுடன் அவன் சொன்னவை இப்போதும் அட்சரம் பிசராமல் அவரின் செவிகளில் ஒலித்தது.
தன் எதிரே கை கூப்பி தன்னிடம் மன்றாடும் மகள் தன் மகளல்ல! அவனின் தென்றல் எனப் புரிந்ததும் உடையவிருந்த மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு மகளைப் பார்த்தவர்,
“என் முடிவில மாற்றம் இருக்கப் போறதில்ல” என்றார் இறுகிய குரலில் உறுதியாக.
“டேய்.. போதும்டா. ஏன்டா இவ்வளவு வீம்பு பண்ற? அவ சந்தோஷம் தான் முக்கியம்னு யோசிச்சு பாருடா. உன்னால இவ்வளவு வீம்பு பிடிக்க முடியாது” என்று பத்மநாபன் தாங்கலுடன் கூற,
“அவ சந்தோஷம் முக்கியம்ன்றதுக்காக தான் ப்பா நானும் இவ்வளவு பிடிவாதமா சொல்றேன். இந்தக் காதல் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். அப்புறம் எல்லாம் காணாம போய்டும். இதை எல்லாம் விட நம்ம எல்லார் கூடவும் சொந்த பந்தமா வாழ்ந்துட்டு எப்படி அந்த அனாதப் பையன் கூட….”
“அப்பா…..” என்று தென்றல் மீனாவின் அழுத்தமான குரல் வெங்கடேசனின் பேச்சிற்கு தடை விதித்தது.
அனைவரும் அவளை அதிர்வுடன் நோக்கினார்கள். அவள் அப்பா என அழைத்ததில் இருந்த அழுத்தம் இதுவரை அங்கே யாரும் உணர்ந்ததில்லை.
வெங்கடேசனே திகைப்புடன் மகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
“அவருக்கு நான் இருக்கேன் ப்பா. அனு அத்தை குடும்பம் இருக்காங்க. மொழி அனாதை இல்லப்பா” என்று அழுத்தத்துடன் கூறி,
“நான் உயிரோட இருக்கிற வரை அவரை அனாதைன்னு சொல்லாதீங்க ப்பா. வலிக்குது” என்று இதயத்தை தொட்டுக் காண்பித்து சொன்னவள் பெருகிய கண்ணீரோடு தளர்ந்து அமர்ந்து விட்டாள்.
வசுந்தரா ஆதரவாய் அவளை பற்றிக் கொள்ள அழகம்மையும் பேத்தியை நெருங்கி அணைத்துக் கொள்ள சந்தியா மயூரி பார்வதி லதா என அனைவருமே அவளை சுற்றி வளைத்துக் கொண்டனர்.
“அழுகாத மீனு” என்று பெண்கள் அனைவரும் அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருக்க விசாலாட்சி அதிர்ந்து நின்று கொண்டிருந்த கணவரைக் கண்டு வாய் பொத்தி அழுதார்.
“அண்ணே… நம்ம மீனுவை அந்தப் பையனுக்கே கட்டி வைக்கலாம் அண்ணே! நல்ல பையன். நம்ம மீனு சந்தோஷம் ரொம்ப முக்கியம் தானே. கொஞ்சம் மனசு வைங்களேன்” என்று குணநாதன் முதல் முறையாக தன் தயக்கம் விடுத்து தன் கருத்தினை சொல்லி விட கனிஅமுதனும் அதையே சொல்ல தனக்காக தந்தையிடம் எடுத்துச் சொல்லும் சித்தப்பாக்களை கண்டவளின் கண்கள் மேலும் கண்ணீரை சிந்தியது.
“அப்பா.. நாங்களும் நல்லாவே விசாரிச்சிட்டோம் ப்பா. டாக்டர் ரொம்ப நல்லவர். நம்ம மீனுக்காக நீங்க அவரை ஏத்துக்கலாமே ப்பா” என்று நிகேதன் தந்தையிடம் வேண்ட,
“அவ விருப்பத்தை மீறி நாம அமைச்சு கொடுக்கிற வாழ்க்கை அவளுக்கு நரகம் தான் ப்பா. மீனு பாவம் ப்பா” என முகுந்தனும் தந்தையிடம் வேண்ட,
எல்லோரும் மகளின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை விட அதனை தானும் ஏற்க வேண்டும் என கெஞ்சுவது வெங்கடேசனிற்கு கோபத்தை தான் கொடுத்தது.
“ஓஹோ.. அப்ப எல்லாருக்கும் சம்மதம். ஆனா என் பொண்ணோட நல்லதை நினைச்சு நான் பண்றது தான் தப்பு இல்ல” என்று அனைவரையும் கண்டு ஆக்ரோஷமாக கேட்டவர்,
“நான் இப்ப அந்தப் பையனை தான் பாத்து பேசிட்டு வரேன்” என்றதும் விழுக்கென்று தந்தையை நிமிர்ந்து பார்த்தாள் தென்றல் மீனா.
“அவன் கிட்டயும் இதை தான் சொல்லிட்டு வந்தேன். என் பொண்ணை பாக்க வேண்டாம். பேச வேண்டாம். மறந்திடுன்னு. அவனும் இதோ.. இப்ப என் பொண்ணு சொன்னாளே.. அதே மாதிரி பாக்கல. பேசல. ஆனா மறக்க சொல்லாதீங்க. அது என்னால முடியாதுன்னு சொன்னான்” என்று இரைந்தவர்,
அவன் சொன்ன அனைத்தையும் கூறி விட்டு இறுதியாக “என் பொண்ணு என்னை மீற மாட்டான்ற நம்பிக்கைல அவன் கிட்ட சொல்லிட்டு வந்தேன். இப்ப அந்த நம்பிக்கை பொய்யா போய்டுமோன்னு பயம் வருது” என்றார் தென்றல் மீனாவை பார்த்தபடி.
அவளுக்கு தந்தை கூறியவை எதுவும் மனதில் பதியவில்லை. அருண்மொழி சொன்னவை அனைத்தையும் தந்தை சொல்லியதும் மனம் முழுவதும் மொழி மொழி எனும் நாமம் மட்டுமே இடைவெளியின்றி எதிரொலித்துக் கொண்டிருந்தது.
என் மொழி! தென்றலின் மொழி! அவன் சொல்வது போல் அவளே மனதிற்குள் சொல்லிக் கொள்ள வேதனையில் வெளியேறிய கண்ணீர் இப்போது ஆனந்தமாகவும் வெளியேறியது.
“காத்திருக்கலாம் மொழி” என்று மனதோடு அவனிடம் சொல்லிக் கொண்டாள்.
“உறுதியா நான் சம்மதிக்கவே மாட்டேன்” என்று வெங்கடேசன் கத்திக் கொண்டிருக்க, பொறுமை இழந்த பத்மநாபன் எழுந்து நின்று “என் பேத்திக்கு அவ விருப்பப் படுற வாழ்க்கையை தான் நான் அமைச்சு கொடுப்பேன். நீ வேற மாப்பிள்ளை பாக்குறேன் அது இதுன்னு சொல்லிட்டு இருந்தேன்னா எனக்கு கெட்ட கோபம் வந்திடும் வெங்டேசா. வாதத்துக்கு மருந்திருக்கு. பிடிவாதத்துக்கு மருந்தில்லன்னு சொல்லுவாங்க. உன் பிடிவாதத்தை விட்டு வெளிய வந்து நம்ம மீனுக்காக யோசி” என்றவர்,
“என்னை மீறி என் பேத்தியை எப்படி நீ இன்னொருத்தனுக்கு கட்டி வைக்கிறேன்னு நானும் பாக்குறேன்” என்றவர் பேத்தியிடம் திரும்பி “நீ கவல படாத மீனு. தாத்தா இருக்கேன். உங்கப்பன் என்ன செய்றான்னு பாத்திடலாம்” என்று உறுதுணையாக கூறியவர் மீண்டும் மகனை பார்த்தார்.
கிட்டத்தட்ட அவரின் பார்வையில் “என்னை மீறி செய்து தான் பாரேன்!!!” எனும் சவால் தான் இருந்தது.
யாரும் பத்மநாபனின் கோபத்தை இந்த அளவிற்கு கண்டதில்லை. வெங்கடேசன் உட்பட! அழகம்மைக்கே கணவரின் அவதாரத்தில் கண்கள் விரிந்து கொண்டன.
ஆனால் மனதிற்குள் “அப்படி போடுங்க!!! இல்லேன்னா நாம பெத்ததை அடக்க முடியாது” என்று மார் தட்டாத குறை தான்!
“தாத்தா” என்று தென்றல் மீனா திகைப்பாய் அழைக்க, “நீ ஏன் அழுகுற மீனு. உங்க அப்பன் வீம்பு எது வரை போகுதுன்னு நானும் பாக்குறேன். கண்ணைத் துடை” என்றவர்,
“இங்க எல்லாரும் மீனு விருப்பத்தை நிறைவேத்த தயார் ஆகிட்டாங்கடா. நீயும் தெளிஞ்சு வா. அவனைப் பாத்து பேசிட்டு வந்த பிறகும் உன் மனசு மாறலன்னா என்னடா அர்த்தம்? உனக்கு உன் பொண்ணு உன்னை மீறி காதலிச்சு அவனையே கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்காளேன்னு ஈகோ” என்றதும் பதிலின்றி தந்தையை பார்த்தார் வெங்கடேசன்.
“உண்மை உன்னை பேச விடல தானே” என்றவர், “நீ என்ன வேணும்னாலும் செய்டா. ஆனா என் பேத்தி அருணுக்கு தான். நான் உயிரோட இருக்கிற வரை நீ வேற எதுவும் செய்ய முடியாது” முடிவாக கூறி விட்டு விறுவிறுவென சென்று விட்டார் பத்மநாபன்.
அனைவரும் அவர் செல்வதையே பார்க்க “இப்ப தான்டா உனக்கு எங்கிருந்து இவ்வளவு கோபம் வந்ததுன்னு புரியுது” என்று மூத்த மகனைக் கண்டு சொன்ன அழகம்மை,
“நான் உனக்கு அப்பான்னு நிரூபிச்சிட்டு போறாருடா. அவரை மீறி எதாவது செஞ்சேன்னு வை.. நிலமை இன்னும் மோசம் தான். பாத்துக்க” என்று தானும் தன் பங்கிற்கு மகனை எச்சரித்து சென்று விட்டார் அழகம்மை. செய்வதறியாது திகைத்து நின்றார் வெங்கடேசன்!!!