கடலை விட்டு எழும்பி வந்து கொண்டிருந்த அலையை பார்வையிட்டு கொண்டிருந்தார்கள் அருண்மொழியும் மாதவனும்.
“அவர் வந்து உன் கிட்ட இவ்வளவு தூரம் பேசிட்டு போய் இருக்கார். மறக்கனுமாம்.. விலகனுமாம்.. என்னடா இதெல்லாம்?” என்று வெங்கடேசனின் வார்த்தைகளை சகித்துக் கொள்ள முடியாமல் நண்பனிடம் குமுறிக் கொண்டிருந்தான் மாதவன்.
அருண்மொழி மாதவனை பார்த்து இதழ் விரியா புன்னகை ஒன்றினை சிந்த,
“அவருக்கு என்ன தான் பிரச்சனையாம்டா? அவர் பொண்ணு காதலிக்கிறதா? இல்ல அந்தஸ்து அது இதுன்னு…”
“இல்ல மேடி” என்றான் அருண்மொழி.
“வேற என்ன தான் பிரச்சனையாம்டா?”
“பிரச்சனை அவரோட குற்ற உணர்வு தான் மேடி” என்றுதும் நண்பனை புரியாமல் பார்த்தான் மாதவன்.
“எல்லா பொண்ணுங்களுக்கு அவுங்க அப்பா தான் ஃபர்ஸ்ட் ஹீரோன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி எல்லா அப்பாக்களுக்கும் அவுங்க பொண்ணு தான் முதல் இளவரசி. தென்றலோட அப்பாவும் இதுக்கு விதி விலக்கு இல்ல மேடி” என்றவன்,
“அவருக்கு தென்றல் மேல நிறைய பாசம். தன் பொண்ணுன்ற கர்வம். என் பொண்ணு என்னை மாதிரியே இருக்கான்ற பூரிப்பு. இதை எல்லாம் விட அவரோட சொல்லைத் தட்டாத பொண்ணு. அந்த சொல்லை தட்டாத பொண்ணு மேல அளவு கடந்த அன்பு!”
“அந்த அதீத அன்பு தான் அவரோட குற்ற உணர்வுக்கான காரணம் கூட. ஒருத்தவங்க மேல நாம வைக்கிற அன்பு அதீதம் ஆகும் போது நம்மளை அறியாமையே அவுங்களை நாம கண்ட்ரோல் பண்ண ஆரம்பிப்போம் மேடி. வலுக்கட்டாயமா அன்பு வைக்கிறது ஒரு கட்டத்துல கழுத்தை நெரிக்கிற மாதிரி தான். அன்பை காட்டுற விதம் திணிக்கப் படுறதா மாறிடும். அவுங்க நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கணும்னு நினைப்போம். அவுங்களுக்கு நாம மட்டும் தான் நல்லது பண்றோம்னு ஒரு ஃபீலிங் வரும். நம்மளைத் தவிர வேற யாராலும் அவுங்களை நல்லா பாத்துக்க முடியாதுன்னு ஒரு எண்ணம் வரும். மொத்தத்துல தன்னை விட அவுங்க மேல அன்பு செலுத்த யாராலும் முடியாதுன்னு ஒரு பிடிவாதம் வந்திடும்”
“தென்றல் அப்பாவுக்கும் அதே பிடிவாதம் தான். அவரோட பொண்ணுக்கு அவரை விட வேற யாரும் நல்லது பண்ணிட முடியாதுன்னு ஒரு எண்ணம். ஏன்.. தென்றலை விட அவ மேல அதிகம் அக்கறை வச்சிருக்கது நான் தான்னு ரொம்ப நம்புறார். அந்த நம்பிக்கை வீம்பா மாறிடிச்சு” என்றான் நீண்ட விளக்கமாக.
“அப்ப மீனா உன்னை காதலிக்கிறது தான் அவருக்கு பிடிக்கலையா மச்சான்?” என்று மாதவன் கேட்க,
“என் இடத்தில வேற யார் இருந்திருந்தாலும் அவர் இதை தான் பண்ணி இருப்பார் மேடி. அவருக்கு நான் யாருமில்லாதவன், என் ஃபேமிலி பேக்ரவுண்ட், என்னோட பாஸ்ட் எல்லாமே ஒரு சப்பை கட்டு தான்!”
“அவரோட குற்ற உணர்வை போக்க அவரே தன் மகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணைய அமைச்சு கொடுக்கணும்னு விரும்புறார். அந்த விருப்பத்துக்கு தடையாக நான் வந்துட்டேன். என்னை விலக்கிட்டா போதும். அந்த விதார்த் மாதிரி இல்லாம ஒரு நல்ல மாப்பிள்ளையை செலக்ட் பண்ணி தன் பொண்ணு முன்னாடி நிறுத்திடுவேன்னு இருக்கார்” என்றான்.
“அந்த நல்ல மாப்பிள்ளை நீயா ஏன்டா இருக்கக் கூடாது? உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க அந்த ஆள் கொடுத்து வச்சிருக்கணும்டா” என்றான் மாதவன் நண்பனின் தோளில் கையிட்டு பெருமையாக!
“நான் நல்லவனா இருந்தாலும் அவரு செலக்ட் பண்ண நல்லவன் இல்லையே மேடி! அவர் பொண்ணு விருப்பப் பட்டவனா இருக்கேனே. அதான் அவரால என்னை ஏத்துக்க முடியல” என்றான் அருண்மொழி.
“ஆக மொத்தம் அவருக்கு பொண்ணு மேல பாசம் எக்குத் தப்பா முத்திப் போய் இருக்கு” என்றதும்,
“அவருக்குத் தேவை ஒரு ஃபுல்ஃபில்நெஸ்(Fullfillness). குற்ற உணர்வை போக்குற அளவுக்கு ஒரு மன நிறைவு வேணும். அந்த மன நிறைவை அவரே தேடிக்கணும்னு நினைக்கிறார்” என்றான் அவரின் மனதை நன்கு அறிந்தவனாய்.
“இன்னைக்கு அவரு பேசினதை வச்சு என்னால அவரை புரிஞ்சிக்க முடிஞ்சது மேடி. சொல்லப் போனா அவரு ரொம்ப பாவம். தன் பொண்ணுக்காக என்ன வேணாலும் செய்வேன்னு சொல்லி தென்றலை காயப் படுத்தி கடைசில அவரையும் ரொம்ப காயப் படுத்திக்க போறாரோன்னு பயமா இருக்கு” என்றான் கலங்கிய குரலில்!
நண்பனின் கலக்கம் மனதில் பாரத்தை கூட்டியது மாதவனுக்கு.
“இன்னும் எத்தனை நாள்டா இந்தப் போராட்டம்? மீனா உன் வாழ்க்கைக்குள்ள வந்த பின்னாடி தான்டா உன் முகத்துல உண்மையான சந்தோஷத்தை பாக்க முடிஞ்சது” என்றவன்,
“இப்ப.. இப்படி உன்னை பாக்க முடியலடா அருண். ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் கண்கள் பனிக்க.
“சரி ஆகிடும் மேடி. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றான் அருண்மொழியும் கரகரத்த குரலில். வெளியே அவன் நம்பிக்கையாக கூறினாலும் உள்ளுக்குள் அவன் எவ்வளவு தவித்து கலங்குகிறான் என்பதை நன்றாக உணர முடிந்தது மாதவனால்.
“அந்தக் கடவுள் இன்னும் உனக்கு என்ன சோதனை வச்சிருக்காருன்னு எனக்குத் தெரியல மச்சான். ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். உன் நல்ல மனசுக்கு நீ மீனா கூட நல்லா இருக்கணும்டா. மீனாவை தவிர வேற யாரும் உன் வாழ்க்கையை அழகாக்க போறதில்ல” என்றவன்,
“நீ வேணும்னா பாரேன். எல்லாம் நல்லதாவே நடக்கும். கலங்காத மச்சான்” என்றான் அவனை அணைத்துக் கொண்டு.
இருவரும் சிறிது நேரம் கழித்து கிளம்புவதற்காக எழுந்து கொள்ள அவர்களின் எதிரே வந்து நின்றான் விதார்த். வெங்கடேசனின் கை வண்ணத்தில் விதார்த்தின் முக அமைப்பே மாறி இருந்தது.
முகத்தில் ஆங்காங்கே பிளாஸ்டர் போடப்பட்டிருக்க உதடுகள் வீங்கி பார்க்கவே அடையாளம் தெரியாத வகையில் இருந்தான். மாதவன் அவனை யார் என்பது போல் பார்க்க, அருண்மொழியின் முகம் இறுகியது.
“அன்னைக்கு சொன்ன மாதிரி உன்னையும் மீனுவையும் பிரிச்சு காட்டிட்டேன் பாத்தியா?” என்று அருண்மொழியை கண்டு வக்கிரத்துடன் நக்கலாக கூறினான் விதார்த்.
முன் பற்கள் வேறு பாதி காணாமல் போய் இருக்க அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குலறலாக வெளி வந்தது.
“மச்சான்.. யாருடா இவன்? உன்னையும் மீனாவயும் பிரிச்சிட்டேன்னு சொல்றான். ஆளு வேற ரொம்ப அடி வாங்கி இருக்கான்” என்று மாதவன் அருணிடம் கேட்க,
“ஹேய்.. நீ யாரு? மீனான்னு தெரிஞ்ச மாதிரி சொல்ற” என்று மாதவனை சந்தேகமாக பார்த்துக் கேட்ட விதார்த்,
“ஓ…. உனக்கும் அவளைத் தெரியுமா? உன்னயுமா லவ் பண்றா? இவனை மட்டும் தான் லவ் பண்றதா நினைச்சேன்” என்று விதார்த் எகத்தாளமாக கூறி முடிக்கும் முன்னர் “அடிங்க…” என்று மாதவன் விதார்த்தின் கன்னத்தில் இரண்டு அடிகளை இறக்கி இருந்தான்.
“பொறுக்கி ராஸ்கல்…” என மாதவன் கொந்தளிக்க அவன் உதிர்த்த வார்த்தைகளில் எரிமலையாய் எரிந்தது நெஞ்சம்.
“இவன் தான் மேடி.. விதார்த்” என்றான் அருண்மொழி நண்பன் கையால் அடி வாங்குபவனை பார்த்தபடி.
“நீதானா அது..” என்ற மாதவன் அவன் சட்டையை கொத்தாக பற்ற, நண்பனின் கையை நிதானமாக அவனில் இருந்து பிரித்தவன் “நான் பாத்துக்குறேன் மேடி” என்றான்.
அவன் பார்வையே விதார்த்திற்கு அச்சத்தை கொடுத்தது.
“அன்னைக்கே உன்னை அடிச்சு வெளுத்திருக்கணும். விட்டது என் தப்பு தான்” என்று சட்டையை கை முஷ்டி வரை ஏற்றிவிட்டு டர்கின் செய்திருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டபடி,
“போட்டோ எடுக்குற நீ!! எவ்வளவு தைரியம்..?” ஓங்கி அவன் செவிப்பறை கிழிய ஒரு அறை விட்டான் அருண்மொழி.
‘கொய்ங்….’ எனும் சப்தம் தான் விதார்த்திற்கு கேட்டது. தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் முன்னர் அடுத்த அடி!
“நீ அடங்கவே மாட்ட இல்ல!” என்று அவன் சட்டைக் காலரை பற்றி சற்று நொடிகளுக்கு முன்னர் பேசிய வாயை உடைத்தே விட்டான்.
“வேணாம். விடு என்னை..” என விதார்த் அலற,
“விட்டதால தான இவ்வளவு பண்ணிருக்க..” என்றவன் அவன் உச்சதந்தலை முடியை பற்றியபடி வெங்கடேசன் விட்டு வைத்ததை எல்லாம் சேதாரமாக்கி விட்டான்.
“இனி என் கண்ணுல நீ படக் கூடாது! பட்டா அதான் உனக்கு கடைசி நாள். இனி வருவ என் கண்ணு முன்னாடி?” என்று அவன் தீப்பார்வை பார்த்துக் கேட்டதில் பதில் சொல்லக் கூடத் திராணியின்றி அரை மயக்கத்தில் மயங்கி விழுந்து விட்டான் விதார்த்.
“மச்சான்…?” என்று மாதவன் நண்பனின் அடியை அதிர்ச்சியுடனும் நம்ப முடியாத புன்னகையுடனும் பார்க்க,
கீழே மயங்கி விழுந்திருந்தவனை கண்டு “உசுரோட தான் இருக்கானா?” என்று வேறு மாதவன் கேட்க,
“இருக்கான். ஆனா உசுரோட இருந்தாலும் வேஸ்ட் தான்” என்ற அருண்மொழி “வா மேடி. கிளம்பலாம். மயக்கம் தெளிஞ்சதும் யாரையாவது வர சொல்லி அவனே போய்டுவான். பொறுக்கி ராஸ்கல்!” என்றதும்,
“வந்து வாங்கிட்டு இப்ப மயங்கி கிடக்கிறான். இனி கண்ணுல பட்டா ஃபேக்ட்டரி தூக்கிட்டு போய் மெல்ட் பண்ணிட வேண்டியது தான் இவனை” என்றவன் நண்பனுடன் கிளம்பினான்.
இருவரும் கரையை தாண்டி சாலையை நெருங்கியதும் “மீனா கிட்ட பேசினியா அருண்?” என்று கேட்க, இல்லை எனும் விதமாய் தலை அசைத்தவன்,
“அவுங்க அப்பா கிட்ட சொன்ன மாதிரி பேசவோ பாக்கவோ போறதில்ல மேடி”
“என்னடா நீ? அவரு சொன்னாருன்னு இப்படி பேசாம பாக்காம..” என அத்தனை வருத்தம் கொண்டான் மாதவன்.
“மீனா பாவம்டா. நீ நியூ யோர்க் போய்ட்டு வந்ததில இருந்து நீங்க பாக்கல தானே!” என்றதும் ஆமோதிப்பாய் தலை அசைத்தவன்,
“அவர் தென்றல் கிட்டயும் இதை சொல்லி இருப்பார் மேடி. அதான் தென்றலும் எனக்கு இப்ப வரை கால் பண்ணவும் இல்ல. பேசவும் இல்ல” என்றவன்,
மெய்யாகவே அவர்களின் காதலை கண்டு மாதவனுக்கு அகமெல்லாம் சிலிர்த்தது. இருவரும் பேசிப் புரிந்து கொள்தை விட உணர்ந்து புரிந்து கொள்வது தான் அதிகம்.
இவர்களின் உயிர் காதலுக்காகவேணும் நீண்ட நாட்கள் காத்திருக்காமல் வெங்கடேசனின் மனம் விரைவில் மாற வேண்டும் என இறைவனிடம் மனதார வேண்டிக் கொண்டான் மாதவன்.
*******************
ஒரு மாத காலம் கரைந்திருந்த நிலையில்..
அருண்மொழி அனுஜாவுடன் அடுத்த கலந்தாய்விற்கென பத்து நாட்கள் டெல்லி சென்றிருந்த சமயம்..
“உங்களை பாக்கணும் போல இருக்கு மொழி. சீக்கிரம் வந்திடுங்களேன்..” என சுய நினைவில்லாமல் உளறிக் கொண்டிருந்தாள் தென்றல் மீனா.
அவளின் கைகளில் அருண்மொழி தன் காதலை வெளிப்படுத்தி ஆசையாய் கொடுத்திருந்த பத்திரிக்கை! அதில் எழுதி இருந்த வரிகளை வருடிக் கொண்டிருந்தவளின் காய்ந்த அதரங்கள் மீண்டும் மீண்டும் அந்த வரிகளை படித்து உலர்ந்து போனது.
நெஞ்சோடு அதனை அணைத்துக் கொண்டவளின் அருகில் அன்று கடையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளவென அவன் கொடுத்திருந்த கைக்குட்டை.
அதனையும் எடுத்து இதயத்துடன் பொத்தி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டவளிடம் உதடுகள் துடிக்க மொழி எனும் முணுமுணுப்பு.
கையில் இருந்த மொழியின் எழுத்துக்களை வருடியவாறு அதன் மேல் தன் கன்னங்களை வைத்து தரையில் சாய்ந்து கொண்டவள் அவளையும் அறியாமல் கண்ணயர்ந்தாள்!
ஒரு வாரம் உறக்கம் என்பதே கிஞ்சித்தும் அவளிடம் இல்லை. இன்று அவன் கைக்குட்டையை நெஞ்சோடு அணைத்தபடி கண்களை மூடியதும் மொழியின் மார்பில் சாய்ந்திருப்பதை போல் எழுந்த பிரம்மையை கலைக்க விரும்பாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள் தென்றல் மீனா.
சிறிது நொடிகளில் உறக்கம் கண்களை எட்டும் நேரம்…
“நான் பெத்த பொண்ணு மாதிரி உன்னை உயிரா வளத்த இந்த அப்பாவை எவனோ ஒருத்தனுக்காக தூக்கி எறிஞ்சிட்ட தானே மீனு! என் பொண்ணா இருந்திருந்தா என்னை நம்பிருப்பா! நீ தான் என் பொண்ணு இல்லையே! என் பொண்ணுன்ற கர்வம் இந்த நிமிஷத்துல இருந்து அழிஞ்சு போச்சு மீனு! நீ நான் பெத்த பொண்ணு இல்லேன்னு ரொம்ப வருஷம் கழிச்சு நியாபகப் படுத்திட்ட!!”
வெங்கடேசன் உதிர்த்த வார்த்தைகள்!!!!
கடந்த ஒரு வார காலமாக அவள் மனதை ரணமாக்கும் வார்த்தைகள்! மனதை அடியோடு கொன்று குவித்த வார்த்தைகள்! வேரோடு அவளை சாய்த்த வார்த்தைகள்! இன்றும் அவளின் தூக்கத்தை பறித்துக் கொண்டு போய் விட்டது.
தன்னை போற்றி வளர்த்த தந்தையின் ஆவேச வார்த்தைகள் நடுக் கடலில் சிக்கிய படகாய் அவளை தத்தளிக்க வைத்தது!
வற்றி இருந்த கண்கள் வலியுடன் மூடிக் கொண்டன. உறக்கத்தை இழந்திருந்த விழிகளும் உணவை புறக்கணித்திருந்த உடலும் தெம்பின்றி அவளை மயக்க நிலைக்கு கொண்டு செல்ல மெல்ல மெல்ல தன் நினைவை இழந்து மயங்கி இருந்தாள் தென்றல் மீனா.
அந்த மயக்க நிலையிலும் மனம் தன்னவனைத் தேட “மொழி” என்று இறுதியாக அவள் மொழிந்தது ஓசையின்றி வெளிவந்து காற்றோடு கலந்திருந்தது ஆறாத காயம் தந்த கண்ணீரின் சுவடுகளுடன்!