தனிமைச் சிறையில் தன்னைத் தானே பூட்டிக் கொண்டாள் தென்றல் மீனா. வீட்டினர் யாரின் முகத்தையும் பார்க்கத் துணிவின்றி தனக்குள்ளேயே சில்லுச் சில்லாய் நொறுங்கி சிதைந்து போய் இருந்தாள்.
கண்கள் இலக்கின்றி சுவரை வெறித்துக் கொண்டிருக்க மனம் மொழி மொழி என உயிரானவனின் பெயரைச் சொல்லி அரற்றிக் கொண்டிருந்தது.
அவள் அறைக்குள் அடைந்து ஒரு வாரம் மேலாகி விட்டது. எதற்காகவும் வெளி வரவில்லை. வசுந்தராவும் அழகம்மையும் மாறி மாறி அவளுக்கான உணவை எடுத்து வந்து கொடுத்தாலும் வேண்டாம் என தலை அசைப்பு மட்டும் வரும்.
வலுக்கட்டாயமாக பாலையும் பழச்சாறையும் மட்டும் அவளை அருந்த வைத்தனர். அதனை அருந்த வைப்பதற்கே அரும்பாடு பட வேண்டி இருந்தது.
ஒரு வார காலமாக அவள் எந்த வார்த்தையையும் உதிர்க்கவில்லை. உண்பதற்கு கூட வாயைத் திறக்கவில்லை. எல்லாவற்றையும் விட இரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. எல்லாம் வற்றிப் போய் பாலைவனமாக மாறி இருந்தது அவளின் உணர்வுகளுக்கான உலகம்!
நடந்ததை எண்ணி வீட்டார் அனைவரும் கண்ணீர் சிந்தி அத்தனை வேதனைக்கு உள்ளாகியிருந்தனர்.
அதுவும் மயூரி அழுதழுது தன்னையே நொந்து கொண்டாள்.
“சாரிங்க. எதோ அதிர்ச்சில அறிவில்லாம அப்படி எல்லார் முன்னாடியும் பேசிட்டேன். நான் பேசினதும் மீனு என்னைப் பார்த்த பார்வை.. என் உயிரே போய்டுச்சுங்க. சத்தியமா நான் வேணும்னு பேசலங்க. நம்ம அஜ்ஜு மேல சத்தியமா” என்று அப்படி ஒரு அழுகை அழுதாள் முகுந்தனிடம்.
“நான் கேட்டது தப்பு தானே. ஐயோ.. என்ன செய்வேன்.. மீனு வேற யாரையும் பாக்கவே விடல. வசு அத்தையும் பாட்டி தாத்தா மட்டும் தான் அவளை பாக்குறாங்க. நான் சாரி கேக்கணும்னு கெஞ்சியும் பாட்டி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க” என்று அழுகையுடன் அவளின் புலம்பல்கள் நின்றபாடில்லை.
“விடு மயூ. இப்போதைக்கு அவளுக்குத் தேவை கொஞ்சம் தனிமை தான். நாமளும் தள்ளியே இருப்போம். சூழ்நிலை வீட்ல சரியில்லை. அவ நார்மல் ஆனதும் நீ போய் பேசு. மீனு புரிஞ்சுக்குவா” என்று சமாதானம் செய்த கணவனிடம் கண்ணீருடன் தலையை மட்டுமே ஆட்ட முடிந்தது மயூரியால்!
சந்தியா நிகேதனிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இதற்கு மேல் மறைக்க எதுவும் இல்லை என்று அவனே தன் உடன் பிறவாத தங்கையான தென்றல் மீனாவை பற்றி அனைத்தும் கூறி இருந்தான் மனைவியிடம்.
கூறி முடித்ததும் சந்தியா கண்ணீருடன் அமர்ந்து விட “சந்தியா.. உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல. அப்பாக்கு எப்படியும் மீனுவை அவர் பொண்ணா தான் இந்த உலகம் பாக்கணும்னு ஒரு எண்ணம். அதனால தான் உன் கிட்டயும் மயூரி கிட்டயும் நாங்க இதை சொல்லல” என்றவன்,
“உனக்கு தெரியுமா? நம்ம கனி சித்தப்பா பசங்க நவீன் பிரவீன்க்கு கூட இந்த விஷயம் தெரியாது” என்றதும் சந்தியா அதிர்வுடன் கணவனை நோக்க,
ஆமோதிப்பாய் தலை அசைத்தவன், “ம்ம்.. தெரியாது. அப்ப அவுங்களுக்கு ஒரு வயசு தான் இருக்கும். எதையும் நினைவுல பதிய வைக்க முடியாத குழந்தை ரெண்டு பேருமே. ஆனா நான், முகி, கௌதம் மூணு பேருமே விவரம் தெரிஞ்சவங்க. அப்ப எனக்கு பத்து வயசு. முங்குந்தனுக்கும் கௌதமுக்கும் எட்டு வயசு” என்றவன்,
“அப்பா மீனுவை அவர் பொண்ணா வளக்கணும்னு முடிவு செஞ்ச பின்ன எங்க கிட்டயும் இனி இவ உங்க கூட பிறந்த தங்கச்சி தான்னு சொல்லியே எங்க கை கோர்க்க வச்சார். பத்து வயசுல இருந்தே மனசு பதிய வச்சதாலோ என்னவோ.. மீனுவை எங்க கூடப் பிறந்த தங்கச்சியாவே நாங்க பாக்க ஆரம்பிச்சிட்டோம்” என்றதும் சந்தியா மனம் கனத்தது.
கண்கள் பனிக்க கணவனின் தோள் சாய்ந்தவள் “மீனு பாவம்ங்க! கோபத்துல பேசினாலும் மாமா இப்படி பேசி இருக்க வேணாம். ரொம்ப உடைஞ்சு போய்ட்டா மீனு” என்று அவளுக்காக மிகவும் வருத்தம் கொண்டாள் சந்தியா.
“நாங்களும் அப்பா இப்படி பேசுவாருன்னு நினைக்கல சந்தியா. மீனுன்னா அவருக்கு அவ்வளவு இஷ்டம். அதுவும் பிறந்தப்ப அவர் தான் அவளை கைல வாங்கினார் தெரியுமா. அப்ப தான் எங்க அப்பா முதல் முறையா சிரிச்சு நான் பாத்தேன். எப்பவும் அப்பா ஸ்ட்ரிக்ட் தான். கடுகடுன்னு தான் இருக்கும் அவர் முகம். ஆனா மீனுன்னு வந்துட்டா அப்படியே உருகிடுவார்” என்று தொண்டைக் குழி ஏறி இறங்க சொன்னவன்,
“ஆனா இப்ப நடந்த விஷயம்… யாராலும் ஜீரணிச்சுக்க முடியல சந்தியா” என்றான் நிகேதன் ஜீரணிக்க முடியாத குரலில்.
“வசு அத்தை ரொம்ப நொடிச்சு போய்ட்டாங்கங்க. அவுங்களும் யார் கிட்டயும் பேசல. அத்தைக்கும் அழுதழுது பிபி வேற ஷூட் அப் ஆகிடுச்சு. டாக்டர் வந்து செக் பண்ணிட்டு போய் இருக்காங்க” என்றவள்,
“வீடே மாறி போச்சுங்க. எனக்கு கஷ்டமா இருக்கு” என்று கண்ணீர் உகுத்தாள். பெரு மூச்சுடன் மனைவியின் கரத்தை பற்றி அழுத்திக் கொடுத்தவன் “சரி ஆகிடும்” என்றான் விரைவில் அனைத்தும் சரி ஆகி விட வேண்டுமே எனும் கலக்கத்துடன்.
*******
“நீங்க இன்னைக்கும் கடைக்கு போகலயாங்க” என்று குணநாதனிடம் பார்வதி கேட்க, இல்லை என மட்டுமே தலை அசைத்தார் அவர்.
“ஒரு வாரமா யாருமே வீட்ல இருந்து கடைப் பக்கம் போகலங்க. அத்தைக்கு உடம்பு சரயில்லைன்னு மாமாவும் போகல. பெரியவரும் ரூமை விட்டு வரல. விசாலம் அக்கா வேற அழுதுட்டே இருக்காங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க” என்று அவர் கரகரத்த குரலில் சொல்லியவர்,
“ஏங்க நம்ம குடும்பத்துல இப்படி எல்லாம் நடக்குது” என்றார் தாள முடியாமல்.
“எதுவும் நம்ம கைல இல்ல பாரு. மீனு விரும்பின பையனை அண்ணனால ஏத்துக்க முடியலேன்னு எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அவரை மீறி அப்பாவும் சரி நாங்களும் சரி. எதுவுமே பண்ணல. ஆனா அண்ணன் இப்படி மாப்பிள்ளை பாத்து வீடு வரைக்கும் வர வைப்பாருன்னு நினைக்கல. இதை எல்லாம் விட அண்ணன் பேசினது…” என்றவர் சகித்துக் கொள்ள முடியாமல் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டார்.
“யாரும் இத்தனை வருஷத்துல அதை பேசினதே இல்லங்க. நானும் சரி, விசாலம் அக்கா, சாந்தி, ஏன் வசுந்தரா கூட பெரியவர் மீனுவோட அப்பா இல்லேன்ற விஷயம் தெரிஞ்சும் எந்த சூழ்நிலயிலயும் வாயை விட்டது இல்ல. காரணம் உங்க அண்ணன் சொன்ன சொல்லுக்காக நாங்க யாரும் இதைப் பத்தி மூச்சு விட்டதில்ல. ஆனா இன்னைக்கு பெரியவரே இப்படி வாயை விடுவார்ன்னு நினைக்கல” என்றார் விரக்தியாக.
“எல்லாத்துக்கும் ஒரு கணக்கிருக்கு பார்வதி. இந்த கணக்கும் ஆண்டவன் போட்டது தான். விடு. எல்லாம் நல்லபடியா முடியானும்னு கடவுள் கிட்ட வேண்டிப்போம்” என்றார் தனக்கும் சேர்த்து மனைவிக்குத் தெம்பூட்டும் விதமாய்.
********
“மீனு அக்கா வெங்கடேசன் பெரியப்பாவோட சொந்த பொண்ணு இல்லையாமா?” என்று மகன்கள் கேட்ட கேள்விக்கு சாந்தியால் பதில் கூற முடியவில்லை. கண்ணீருடன் கணவனை பார்க்க கனிஅமுதனாலும் எதையும் கூற முடியவில்லை.
“சொல்லுங்கப்பா. உங்களுக்கு தெரியுமா? ஏன் எங்க கிட்ட சொல்லல” என பிரவீனும் நவீனும் மாற்றி மாற்றி கேட்க,
“சொல்லலடா. அப்ப உங்களுக்கு ஒரு வயசு தான் இருக்கும். சொன்னா புரியாத வயசு. சொல்லிப் புரிஞ்சிக்க கூடிய வயசு வந்தப்ப நீங்க மீனுவை உங்க பெரியப்பா பொண்ணாவே பாக்க ஆரம்பிச்சுட்டீங்க. உங்க பெரியப்பாவும் இதுக்கு தான் ஆசைப் பட்டார். நாங்களும் விட்டுட்டோம். என்னைக்கும் இது வெளில வராத விஷயம் தானே. அப்புறம் ஏன் சொல்லிக்கிட்டுன்னு உங்க அப்பாவும் வேணாம்னு சொன்னதால நானும் சொல்லல உங்க கிட்ட. ஆனா இன்னைக்கு அந்த மனுஷனே இப்படி புள்ளையை நோகடிப்பாருன்னு நினைக்கலடா. அவரு வாயலையே நீ என் பொண்ணு இல்லேன்னு சொல்லுவாருன்னு இங்க இருக்கிற ஒருத்தரும் நினைச்சு கூட பாத்திருக்கல” என்று மகன்களிடம் அழுது கரைந்தார் சாந்தியும்.
இப்படி வீட்டில் உள்ள அனைவரும் நொந்து போய் தங்களுக்குள்ளேயே தங்களின் மனக் காயத்தை பகிர்ந்து வெதும்பிக் கொள்ள, ரணம் கொண்டிருந்தவள் ஒரு துளி கண்ணீரினை உதிர்க்கவில்லை.
வெறித்த பார்வையுடன் திக் பிரம்மை பிடித்தவளாய் விட்டத்தை வெறித்துக் கொண்டும் சுவரை பார்த்துக் கொண்டும் அமர்ந்திருந்தாள்.
இரவில் கண்கள் மூடி இருந்தாலும் சதிராடும் விழிகள் வேதனையில் உறக்கமின்றி உழன்று கொண்டிருக்காள் என்பதை உணர்த்தியது.
எவ்விதத்திலும் அவளுக்கான ஆறுதலையும் தேறுதலையும் யாராலும் கூற இயலவில்லை.
அன்று இரவு அவளுக்காக பாலினை எடுத்த வந்த வசுந்தரா தென்றல் மீனா இருந்த நிலையை கண்டு துடித்துப் போனார்.
அருண்மொழியின் கைக்குட்டையையும் அவன் தந்த பத்திரிக்கையையும் நெஞ்சோடு அணைத்தபடி தரையில் சாய்ந்து அவள் படுத்திருந்த விதம் அவர் உயிரைக் குடித்தது!
ஆதரவற்ற நிலையில் நிற்பதை போல் அவள் இருந்த நிலை மனதை கொல்ல ஒரு முடிவுடன் கண்களை துடைத்துக் கொண்டு அவளின் அறையை விட்டு வெளியேறினார் வசுந்தரா.