வசுந்தரா வந்து செல்வது கூட அவள் கருத்தில் பதியவில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர் வீடே அதிரும் படி கத்திய தந்தையின் வார்த்தைகள் அவள் செவிகளில் ஓங்காரமாய் ஒலிக்க பட்டென்று கண்களை திறந்து கொண்டவளுக்கு உறக்கம் எட்டாக் கனியாகி இருந்தது.
“நீ தான் நான் பெத்த பொண்ணே இல்லையே?” எனும் வார்த்தைகள் அவளின் காயம் கொண்ட நெஞ்சை மேலும் மேலும் சுட்டுப் பொசுக்க தீயில் வெந்தது அவளின் அப்பாவிற்கான பாச உணர்வு!
‘ஆமாப்பா. நான் நீங்க பெத்த பொண்ணு இல்ல தான். ஆனா நான் உங்க மீனு இல்லையா? உங்களுக்கு பொறக்கலேன்னாலும் நான் நீங்க வளத்த பொண்ணு ப்பா. உங்க பொண்ணு ப்பா இந்த மீனு. எப்படிப்பா உங்களால இப்படி சொல்ல முடிஞ்சது?’
மௌனமாய் மனதிற்குள் வெங்கடேசனோடு வாதம் புரிந்தவள் அன்று அவர் அனைவரின் முன்பும் பேசிய போது உருக்குலைந்து நின்றிருந்தாள்.
அதுவும் மயூரி அக்கேள்வியை கேட்டதும் அவளின் உணர்வுகள் மடிந்து போய் இருந்தது. வெளிச்சத்தில் வராதவை எல்லாம் தந்தையின் வாய் மொழியில் வெட்ட வெளிச்சமாகி இருக்க அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அறைக்கு வந்து விட்டாள்.
இதோ… ஒரு வார காலமும் ஜடமாக வாழ்வதை போல் ஓர் தவம்!
மனம் யாரிடமும் வெளிப்படையாய் பேச மறுத்தது. வசுந்தராவிடம் கூட வாயைத் திறக்க பயந்து போனாள்!
இந்த ஒரு வார காலமும் தன்னை வந்து காணும் போதெல்லாம் அவர் கண்கள் சிந்திய அளவற்ற கண்ணீரைக் கண்டு எப்படித் துடித்தாள் என்று அவளுக்குத் தானே தெரியும்.
மறந்தும் கூட அவரிடம் வலிகள் நிரம்பிய வார்த்தைகளை உதிர்க்கவில்லை தென்றல் மீனா! எங்கே உதிர்த்தாள் உடைந்து போவோமா என பயந்தே மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டாள்.
மேலும் எங்கே அவரிடம் தன் உள்மனக்கிடங்குகளை கொட்டினால் அவரும் உடைந்து சிதறி விடுவாரோ எனும் பயமே அவரிடமும் மனதை திறக்காததற்கு பெரும் காரணம்.
நிச்சயமாக நடந்த அனர்த்தத்தில் தன்னை விட அதிக காயம் கொண்டிருப்பவர் அவர் தான் என்று நன்கு அறிவாளே! அப்படி இருக்கையில் தான் அவரின் மடி சாய்ந்தால் அவர் ரணப்பட்டுப் போவார் என கல்லாய் இறுகி போய்க் கிடந்தாள்.
ஆனாலும் மற்றொரு பக்கம் தான் கூறா விட்டாலும் தன் துயரத்தை அறிந்து கொள்ளாதவரா தன் அன்பு வசும்மா என்று எண்ணியதும் அவள் இதழ்களில் கொடும் வலியை தாங்கிய புன்னகை உதயமானது.
வெம்மையும் வெறுமையும் மட்டுமே நெஞ்சை சூழ்ந்திருக்க அவை இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மென்று தின்று கொண்டிருந்தது.
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் “அப்பான்னு என்னை கூப்பிடாத மீனு” என்று வெங்கடேசன் கூறியது நெஞ்சை பிளந்தது.
தன் ஆறு வயதில் “அப்பான்னு சொல்லு மீனு. பெரியப்பா வேண்டாம்” என முகத்தை சுருக்கி செல்லமாக ஆசையாக ஏக்கமாக அன்பாக கேட்டுக் கொண்டவர் இன்று இனி நீ என்னை அப்பான்னு கூப்பிடவே வேணாம் என்று விட்டாரே என மனம் மாய்ந்து போனது.
உறக்கம் வரவில்லை. மனதும் சமன் படவில்லை. கண்ணீர் ஆவியை வெளியேற்றவும் திராணியில்லை. மொத்தத்தில் அவளிடம் எதற்கும் வலுவுமில்லை. வலிமையும் இல்லை.
தண்ணீரின்றி தவிக்கும் மீனாய் துடித்து தவித்தவள், நெஞ்சோடு அணைத்திருந்தவைகளை விலக்காமல் எழுந்து அமர அப்போது பார்வையில் பட்டது அவள் அறையின் ஒரு பக்க சுவற்றில் பெரிதாய் மாட்டப் பட்டிருக்கும் அவர்களின் குடும்பப் புகைப்படம்!
நீண்ட நெடிய ஆண்டுகள் கழித்து அதனை கையில் எடுத்துப் பார்க்கும் தைரியமும் மனோதிடமும் அந்த நொடி அவளுக்கு ஏற்பட, கையில் இருந்தவைகளை கட்டிலில் வைத்து விட்டு அசைய மறுத்த கால்களை சிரமத்துடன் எழுப்பி நடந்தாள்.
அப்புகைப்படத்தை நெருங்க நெருங்க மனதிற்குள் பெரும் ஓலமாய் ஒரு கதறல்!
“மெய்ப்பா…” என மனம் கதற அந்தக் கதறலை நிறுத்தும் வலி அறியாமல் கால்களை எட்டிப் போட்டாள்.
புகைப்படத்தை நெருங்கியதும் மனதோடு கைகளும் நடுங்க, நடுங்கும் கரத்தால் சுவற்றில் பொருத்தப் பட்டிருந்த படத்தை கையில் எடுத்தால் தென்றல் மீனா.
அந்த புகைப்பட சட்டத்திற்குள் இருந்த அனைவரின் முகத்திலும் சந்தோஷப் புன்னகை மட்டுமே மிதமிஞ்சி இருந்தது.
புன்னகை ஆட்சி புரிந்த அப்புகைப்படத்தை கண்டவளின் உயிரெங்கும் ரணவலி.
நடுநாயகமாக பத்மநாபனும் அழகம்மையும் ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி அவர்கள் ஈன்றெடுத்த ஐந்து மகன்களும் அவர்களின் பிள்ளைச் செல்வங்களும் சூழ்ந்திருந்தனர்!
தென்றல் மீனாவின் ஆறு வயதில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது!
மஷ்ரூம் கட் வெட்டப்பட்ட தலை. பிங்க் வர்ண மேக்சி ஃப்ராக்கில் முகம் கொள்ளா புன்னகையுடன் அவளது தந்தையின் கைகளில் இளவரசியாக வீற்றிருந்தாள் ஆறு வயது தென்றல் மீனா!
ஆம்! இளவரசியே தான்!
பத்மநாபன் அழகம்மையின் இரண்டாம் மகனான மெய்யப்பனுக்கும் வசுந்தரலக்ஷ்மியின் அக்கா வரலக்ஷ்மிக்கும் பிறந்த இளவரசி!
தன்னை ஏந்தி இருந்த தந்தையின் முகத்திலும் புன்னகை மட்டுமே மித மிஞ்சிய நிலையில் இருப்பதை கண்டு “மெய்ப்பா” என்று உயிர் உருக அழைத்தாள் தென்றல் மீனா.
ஒரு கை தன்னை ஏந்தி இருக்க மற்றொரு கையால் மனைவி வரலக்ஷ்மியை அணைத்துப் பிடித்திருந்தார் மெய்யப்பன்.
பார்க்கப் பார்க்க கண்கள் கலங்குவது போலிருந்தது. கலங்கத் துடித்த கண்களில் தன் தந்தையின் அருகே இருந்த அவரின் இரட்டையரான நாகப்பனை வந்தடைய அவரின் அருகில் தன் தாய் வரலட்சுமியின் இரட்டையரான தனக்கு இன்னொரு தாயான வசுந்தரலக்ஷ்மி!
இரட்டை தம்பதிகள் ஒன்று போல் ஒற்றுமையுடன் தோற்றமளித்தனர் அப்புகைப்படத்தில்.
பத்மநாபன் தம்பதியினருக்கு பின்னே நால்வரும் நின்றிருக்க மெய்யப்பனின் கைகளில் அவரின் கழுத்தை கட்டிக் கொண்ட நிலையில் முத்துப் பற்கள் மின்ன முகம் கொள்ளா பிள்ளைச் சிரிப்புடன் தென்றல் மீனா!
பத்மநாபனின் வலது பக்கம் வெங்கடேசன் விசாலாட்சியுடன் அவர்களது இரு மகன்கள் நிகேதன் மற்றும் முகுந்தன் இருக்க, அழகம்மையின் பக்கம் குணநாதன் பார்வதி, அவர்களின் எட்டு வயது மகன் கௌதம் இருந்தான்.
கனிஅமுதனும் சாந்தியும் பெரியவர்களின் கீழே அமர்ந்திருக்க அவர்களின் கையில் பதினொரு மாதங்கள் பூர்த்தி அடைந்திருந்த இரட்டை மகன்களான பிரவீன் மட்டும் நவீனை ஏந்தி இருந்தனர்.
அவளின் குடும்பம்! அவளை போற்றி வளர்த்த குடும்பம்!அன்னை தந்தை இறந்த பின்னரும் அன்பால் அவளை அரவணைத்த குடும்பம்!
அன்னை தந்தையின் இழப்பை எண்ணி கண்கள் மூடிக் கொண்டவளுள் இப்பிரபஞ்சத்தில் காலடி பதிக்காத ஓர் சிசுவின் நியாபகம் உள்ளத்தை பிசைய நடுங்கும் ஆட்காட்டி விரலால் அப்புகைப்படத்தில் இருந்த வசுந்தராவின் முகத்தை வருடியவள் அதே நடுக்கத்துடன் அவ்விரலினை அவரின் மேடிட்ட வயிற்றில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
“வசும்மா பாப்பா” என்று மௌனமாய் கதறிக் குலுங்கியது ஆறு வயது தென்றல் மீனாவின் உள்ளம்!
அப்புகைப்படத்தை எடுக்கும் போது வசுந்தராவிற்கு ஆறு மாதம்! ஏழாம் மாதம் அவருக்கு வளைகாப்பு நிகழ்ந்தது. வளைகாப்பு முடிந்து அவரை திரும்பி அவரின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லும் நாள் கண் முன்னே வந்து அவளின் ஈரக்குலையை நடுங்க வைத்தது.
தொடுத்திருந்த நினைவுச் சரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்ந்து அவளின் ஆறு வயதை தொட்டிருக்க இழப்பின் வலி இதயத்தை இறுக்கியது.
மெல்ல மெல்ல மனதிற்குள் தாங்கொண்ணா ரணம் ஏற்பட அன்னை தந்தையை இழந்த நாளும் வசும்மா அவரது சிசுவை இழந்து கூடவே நினைவை இழந்த நாளும் நியாபக அடுக்கில் வந்து அவளின் எண்ணவோட்டங்களை சில மணித்துளிகள் உறைய வைத்தது.