பத்மநாபன் தம்பதியருக்கு மொத்தம் ஐந்து மகன்கள். வீட்டின் மூத்தவர் வெங்கடேசன். அவருக்கு அடுத்துப் பிறந்தவர்கள் இரட்டையர்கள். மெய்யப்பன் மற்றும் நாகப்பன்! அவர்களுக்கு அடுத்து குணநாதனும் கனிஅமுதனும் பிறந்திருந்தனர்.
ஐந்து மகன்களை பெற்று விட்டாலும் பெண் குழந்தை வேண்டும் என்கிற ஏக்கமும் ஆசையும் பத்மநாபனுக்கும் அழகம்மைக்கும் இருந்தது.
ஆனால் கனிஅமுதனுக்கு அடுத்து அழகம்மையின் உடல் நலம் சீரில்லாமல் போய் விட்டதால் அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலையும் ஆசையையும் கை விட்டு விட்டனர் இருவருமே.
ஐந்து மகன்களுக்கும் பாரபட்சமின்றி அன்பை பகிர்ந்து ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து நன்றாகப் போற்றி வளர்த்தனர் பெற்றவர்கள்.
வளர்ந்த பின்னர் அதே ஒற்றுமையுடன் பத்மநாபன் செய்து வந்த தங்கம் சார்ந்த தொழிலையே அவர்களின் மக்களும் விரும்ப தந்தையுடன் இணைந்து அவர் நடத்தி வந்த சிறிய அளவிலான நகைக் கடை தொழிலினை பெரிய அளவில் உயர்த்தினார்கள் பத்மநாபனின் மக்கள் ஐவரும்.
வெங்கடேசனிற்கு முதலில் திருமணம் முடிந்து விசாலாட்சி கருவுற்று இருந்த போது அனைவரும் பெண் பிள்ளை வேண்டும் என்ற ஆசையிலும் வேண்டுதலிலும் இருக்க ஆனால் நிகேதன் பிறந்திருந்தான். வெங்கடேசனிற்கு எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனதில் அலாதி வருத்தம் தான்.
மகனின் சோர்ந்த முகத்தை கண்டு “சரி விடு வெங்கடேசா. ஆம்பிளை பிள்ளை வந்திருக்கான். அடுத்தடுத்து பொண்ணு பிறக்கும்டா. இதுக்குப் போய் மூஞ்சியை தொங்கப் போட்டுக்கிட்டு. முதல்ல மகனைப் பாரு” என்று அழகம்மை மகனை தேற்றி இருந்தார்.
அதற்குப் பின்னர் மெய்யப்பனுக்கும் நாகப்பனுக்கும் திருமண வயது வர இருவரில் முதலில் பிறந்த மெய்யப்பனுக்கு கல்யாணத்தை முடித்து விடலாம் என்றெண்ணி அவருக்குப் பெண் பார்த்தனர்.
ஆனால் பார்த்த மூன்று நான்கு பெண்களும் அவர் இரட்டை பிறவி என்பதற்காகவே மெய்யப்பனை வேண்டாம் என்று மறுத்தனர்.
இதே தொடர் கதையாக ஒரு கட்டத்தில் இருவருமே ஒன்று போல் “எங்கள மாதிரி எங்களுக்கு வரப் போற பொண்ணும் ரெட்டை பிறவிங்களா பாருங்க ம்மா” என்று விட அழகம்மை தலையில் கை வைக்காத குறை!
“டேய்.. என்னடா.. ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி பிடிவாதமா ரெட்ட பிறவிங்க தான் வேணும்னு சொல்றீங்க? எங்கடா போவேன் நான்? செஞ்சா வச்சிருக்கு? நீங்க சொன்ன உடனே பாத்து கூட்டிட்டு வந்து கட்டி வைக்க? ஏன்டா இந்த அழிச்சாட்டியம் பண்றீங்க? ஒழுங்கா ஆளுக்கு ஒரு பொண்ணை பாக்குறேன். கட்டிட்டு சந்தோஷமா வாழுற வழிய பாருங்க” என்று இறுதியாக மிரட்டியதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை இரட்டை சகோதரர்கள்.
ஒற்றை காலில் நின்று கட்டினால் எங்களை போல் இரட்டை பிறவியை தான் கட்டுவோம் என்று உறுதியாக சொல்லி விட்டனர்.
பத்மநாபனும் அழகம்மையும் சல்லடை கொண்டு தேடாத குறை தான் இரட்டை மகன்கள் இருவருக்கும்.
அப்படியாக ஒரு நாள் அவர்கள் பெண் தேடிக் கொண்டிருக்கும் போது தான் வரலக்ஷ்மி மற்றும் வசுந்தரலக்ஷ்மியைப் பெற்றவர்கள் அவர்களாகவே முன் வந்து “எங்களுக்கும் ரெட்ட பொம்பள பிள்ளைங்கதாங்க. வளந்தது படிச்சது எல்லாம் ஒன்னா தான். அதே மாதிரி கல்யாணம் பண்ணிப் போறதும் ஒரே வீட்ல தான் சொல்லிட்டாங்க என் பொண்ணுங்க. நாங்களும் ரொம்ப நாளா மாப்பிள்ளை தேடிக்கிட்டு இருக்கோம். நீங்களும் உங்க பசங்களுக்கு ரெட்டை பொண்ணு தான் வேணும்னு தேடிட்டு இருக்கிறதா எங்களுக்கு ஒரு உறவுக்காரவங்க தகவல் சொன்னாங்க. அதான் உங்க கிட்ட கேட்கலாம்னு வந்தோம்” என்று பத்மநாபனிடம் கேட்க பரமசந்தோஷம் அவருக்கு.
தாங்கள் ஊர் ஊராக தேடிக் கலைத்து அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மகன்களையும் சமாதானம் செய்ய முடியாமல் தவித்துப் போய் இருந்த நிலையில் பெண்களைப் பெற்றவரே நேரில் வந்து கேட்டு சென்றது எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்தது பத்மநாபனிற்கு.
தாமதிக்காமல் மனைவியிடம் விஷயத்தை சொல்ல அழகம்மை துள்ளி குதித்து விட்டார்.
“அப்பாடி… இவனுங்களை எப்படி சரி கட்டுறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தோம்ங்க. கடைசில கடவுள் தானா ஒரு வழியை நம்ம கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டார். நம்ம குல தெய்வம் நம்மளை கை விடல. நீங்க மேற்கொண்டு ஆக வேண்டியது பாருங்க” என்று விட்டார் கணவரிடம்.
அதற்கடுத்து மளமளவென காரியங்கள் நடக்க இரட்டை சகோதரர்கள் மெய்யப்பனுக்கும் நாகப்பனுக்கும் ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளான வரலக்ஷ்மியுடனும் வசுந்தரலக்ஷ்மியுடனும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும் இரு தம்பதியினருக்குமே குழந்தை பிறக்காமலிருக்க அழகம்மைக்கு அத்தனை வேதனை.
ஜாதகம் ஜோசியம் எனப் பார்த்து கோவில் குளம் பரிகாரம் பூஜை என செய்ய வேண்டியது அனைத்தையும் செய்தனர். எதுவும் நடக்கவில்லை.
சகோதரிகள் இருவரும் நித்தம் கண்ணீரில் கரையும் போதெல்லாம் அவர்களின் துணையானவர்கள் முயன்று சமாதானம் செய்தனர்.
“ஏன் எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கடவுள் குழந்தை பாக்கியத்தை கொடுக்கல… அப்படி என்ன பாவம் செஞ்சோம்?” என்று வரலக்ஷ்மி மெய்யப்பனிடம் கதறி தீர்த்து விட, வசுந்தரலக்ஷ்மியும் அதே நிலையில் தான் இருந்தார்.
என்ன நடந்தால் மனைவியை தேற்றலாம் என சகோதரர்கள் இருவரும் நொந்து போயினர். கண்ணீரில் கரையும் இரு சகோதரிகளுக்கும் நிகேதன் மட்டுமே ஆறுதலாய் இருந்தான்.
மருத்துவ ரீதியாகவும் பரிசோதனை மேற்கொண்ட போது இரு ஜோடிகளுக்கும் அனைத்தும் நலம் என்றே மருத்துவர்கள் கூறி விட இனியும் என்ன என்று தான் யாருக்கும் புரியவில்லை.
சிறிது நாட்கள் சென்ற பின்னர் ஒரு பழமை வாய்ந்த ஜோதிடரிடம் சென்று கேட்ட போது “இவுங்களுக்கு நீங்க ரெட்டை பொண்ணுங்களா பாத்து கட்டி வச்சிருக்கவே கூடாது. ஆனா பண்ணிட்டீங்க. விதி தான் எல்லாத்தையும் தீர்மானிக்கும். இனி நான் சொல்ற பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க. நல்லது நடக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கங்க” என்று தெய்வ வாக்கினை போல் சொல்லி அனுப்பி வைத்தார்.
“என்னங்க இது? ஜோசியர் இப்படி சொல்லிட்டார்? இவனுங்க அடம் புடிச்சாலும் பரவாயில்லேன்னு தனித் தனி பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கணுமோ?” என்று அழகம்மை பயத்தில் கணவரிடம் புலம்ப,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அழகு. நீ புலம்பாத. நம்ம பசங்க நல்லா இருப்பாங்க” என்று மனைவியை சமாளித்து சமாதானம் செய்தார் பத்மநாபன்.
இதற்கிடையே குணநாதனிற்கு திருமணம் முடிந்து பார்வதி கருவுற்று இருக்க, அவருடன் விசாலாட்சியும் இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தார்.
வரலக்ஷ்மிக்கும் வசுந்தரலக்ஷ்மிக்கும் அவர்களைக் கண்டு ஏக்கமாய் இருந்த போதிலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் காட்டிக் கொண்டால் அது அவர்களுக்கு எத்தனை வருத்தத்தை அளிக்கும் என்றுணர்ந்து புன்னகையுடனே வலம் வந்தனர்.
விசாலாட்சிக்கு முதலில் பிரவசவ வலி வந்து விட குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் அத்தனை எதிர் பார்ப்பு.
அதுவும் வெங்கடேசன் பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என அத்தனை தெய்வத்திற்கும் வேண்டுதல் வைத்து விட்டார். ஆனால் அந்த வேண்டுதலை எல்லாம் பொய்யாக்கி விட்டு முகுந்தன் பிறந்திருந்தான்.
வெங்கடேசனின் முகமே விழுந்து விட்டது. பெண் பிள்ளை என அத்தனை எதிர்பார்ப்பும் பொய்யாகி விட இடிந்து போனார் அவர்.
அடுத்த இருபது நாளில் பார்வதிக்கும் கௌதம் பிறந்திருந்தான்.
இருவரில் ஒருவருக்காகவாவது பெண் பிள்ளையாக இருந்திருக்கக் கூடாதா என நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொண்டனர்.
விசாலாட்சிக்கும் அதற்கடுத்து கரு தங்கவில்லை. முகுந்தனுக்கு அடுத்ததாக தனக்கு மகள் இனி இல்லை என்பதை ஜீரணித்துக் கொள்ளவே வெங்கடேசனிற்கு பல நாட்கள் தேவைப் பட்டது.
முகுந்தனும் கௌதமும் பிறந்து ஓராண்டு காலம் முடிந்த பின்னர் தான் வரலக்ஷ்மி கருவுற்று இருந்தார். வீட்டினர் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சி. நான்கு ஆண்டு ஆசை! ஏக்கம்! கண்ணீர்!
எத்தனை பரிகாரங்கள்? எத்தனை பூஜைகள்? எத்தனை மருந்து உட்கொள்ளல்? அனைத்திற்கும் பலனாய் அவரின் கருவில் ஒரு உயிர்!
மெய்யாகவே அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதை தாண்டி ஒரு வித வேதனை அகன்ற நிலை! அதுவும் வசுந்தரா தானே கருவுற்றது போல் அகமகிழ்ந்து போனார். இருவரில் ஒருவர் குழந்தை பெற்றாலும் அதுவும் தங்கள் குழந்தை தானே என்று மனதார எண்ணியிராத நாளில்லை சகோதரிகள் இருவருமே.
வசுந்தரா தன் சகோதரியை அன்புடன் பார்த்துக் கொண்டார். அதுவும் ஐந்தாம் மாதத்தில் இருந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் கூறி விட பிரசவத்திற்கு புகுந்த வீட்டிலேயே இருந்து விட்டார் வரலக்ஷ்மி.
பிரசவ வலி வந்ததும் உடனே மருத்துவமனையில் அவரை அனுமதித்திருக்க அதிசயத்திலும் அதிசயமாய் அக்குடும்பத்தின் நீண்ட ஆண்டு கால எதிர்பார்ப்பு வரலக்ஷ்மியின் மூலம் பூர்த்தி அடைந்திருந்தது.
பிறந்திருந்தது பெண் குழந்தை! மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது பத்மநாபனின் குடும்பத்தில்.
அதுவும் வெங்கடேசன்!! செவிலியர் வந்து பெண் குழந்தை என்று தகவல் சொல்வதற்கு முன்னர் வரை ஒரு ஓரமாக வெறும் பார்வையாளராக இருந்தவர், “பொண் குழந்தை பிறந்திருக்கு” என்று சொல்லி சென்றதும் ஒரு வித பரபரப்புடன் அனைவரோடும் வந்து நின்றார்.
அவர் வருவதை கண்ட அழகம்மை அகம் நிறைத்த புன்னகையுடன் “டேய் பெரியவனே… பொம்பளை பிள்ளைடா.. நம்ம வீட்டு குலசாமி வந்தாச்சு” என்று ஆர்ப்பரிக்க அன்னையிடம் ஆமாம் என்று பூரிப்புடன் தலை அசைத்தவர் ஆவலாய் பிரசவ அறை வாயிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.
மெய்யப்பனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது எனும் அலாதி இன்பத்துடன் அண்ணனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டு நெகிழ்ந்து போனார்.
இதுவரை அண்ணன் இப்படி எல்லாம் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல என்று அவருக்கு நன்கு தெரியுமே! வீட்டிற்கு மூத்தவர் எனும் முறையில் மிகவும் பொறுப்பாக இருப்பவர் கண்டிப்பிலும் பொறுப்பாகவே இருப்பார். எப்போதும் இறுக்கமும் சிடுசிடுப்பும் நிறைந்த முகமும் தோற்றம் தான் அவரிடம்!
ஒற்றை பெண் பிள்ளைக்காக எத்தனை ஏக்கம் கொண்டிருப்பவர் என அவருக்கும் தான் தெரியுமே!
அதுவும் சிறு வயதில் தம்பிகள் குணநாதனும் கனிஅமுதனும் பிறக்கும் போது கூட பெண் குழந்தையாக தங்கை வேண்டும் என ஆசையில் இருந்தவரை கண்டவர்கள் தானே இரட்டையர்கள் இருவரும்!
அண்ணனை கண்டு நெகிழ்ந்து நாகப்பனிடம் கண்ணை காண்பிக்க “எவ்ளோ ஆசையா வெயிட் பண்றாரு பாரேன் பாப்பாவை பாக்க? நம்ம அண்ணனா இது?” என்று நாகப்பன் சிரிப்புடன் கூற அதே எண்ணம் தான் அனைவருக்கும்.
வெள்ளைத் துவாலையில் அந்தப் பிஞ்சு தாமரை மொட்டினை செவிலியர் வந்து அழகம்மையிடம் கொடுக்க அவரோ மெய்யப்பனை பார்த்து “இந்த செல்ல சிட்டுக்காக எவ்வளவு நாள் காத்திருந்தீங்க. உங்க ஏக்கத்தையும் கஷ்டத்தயும் நீக்கி உங்களுக்கும் நம்ம குடும்பத்துக்கும் வரமா வந்தவடா இந்த தேவதை. நீயே முதல்ல வாங்கு மெய்யப்பா” என்றார் மனதார.
அன்னையின் சொல்லில் நெகிழ்ந்தவர் கண்கள் பனிக்க இல்லை என்பதாக தலை அசைத்து செவிலியரிடம் வெங்கடேசனை சுட்டிக் காட்டி “எங்க அண்ணா கிட்ட கொடுங்க” என்றதும் அனைவருமே கண்கள் விரிய ஆச்சர்யமாய் பார்த்தனர் அவரை. வெங்கடேசன் உட்பட!
“மெய்யப்ப்பா” என்று வெங்கடேசன் தடுமாறி தழுதழுத்த குரலில் தம்பியை அழைக்க,