வெங்கடேசனிற்கு தம்பியின் பெருமிதமான செயலை எண்ணி உள்ளம் நிறைந்து தழும்பினாலும் ஒரு குழந்தை செல்வத்திற்காக அவன் காத்திருப்பையும் கண்கூடாக பார்த்தவர் ஆகிற்றே!
வேண்டாம் என்று மறுக்க வந்த நேரம் குழந்தையை செவிலியர் அவரிடமே நீட்டி இருக்க கண் முன்னே இருந்த அந்த குட்டித் தாமரை மொட்டினை, அழகுப் பொக்கிஷத்தை கையில் ஏந்த அதற்கு மேல் மறுக்க முடியவில்லை அவரால்.
இரு கைகளால் அணைவாய் பிடித்து குழந்தையை பார்க்க குழந்தையின் உருவத்தை தெளிவாகத் தெரிய விடாமல் செய்தது அவர் கண்களில் தேங்கிய கண்ணீர்.
அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் தான் கண்ணீர் உகுப்பதையும் மறந்து இறுக கண் மூடிக் கொண்டு கண்ணீரை வெளியேற்றியவர் இப்போது கண்ணார குழந்தையை ரசிக்க உதட்டில் மலர்ந்த புன்னகை வெங்கடேசனிடம்.
குழந்தையும் அப்போது தான் கண்களை மெல்ல மெல்ல பிரிக்க “அம்மா.. விசாலம்.. டேய் மெய்யப்ப்பா.. பாருங்களேன்.. பாப்பா கண் முழிக்கிறா.. என்னைப் பாக்குறா. என் தங்கம் என்னைப் பாக்குறா” என சிறு பிள்ளை போல் தன்னையும் மறந்து ஆர்ப்பரித்தார் மனிதர்.
“என் தங்கமே…” என சொல்லி சொல்லி கொஞ்ச உயிரோட்டமாக ஒரு காட்சி அனைவரின் கண் முன்னே!
அந்த நொடியில் இருந்து வெங்கடேசனுக்குள் எதுவோ ஒரு நிறைவு! வெற்றிடமாக இருந்த மனதின் ஓர் பகுதியில் தானாக இடத்தை பிடித்துக் கொண்டாள் மெய்யப்பன் மற்றும் வரலக்ஷ்மியின் மகள் தென்றல் மீனா!
அனைவரிடமும் கண்டிப்பும் அழுத்தமும் நிறைந்த மனிதராக இருந்தாலும் தென்றல் மீனாவிடம் பாசம் நிறைந்த மென்மை கலந்த பெரியப்பாவாகவே இருப்பார்.
ஆனால் நிகேதன் மற்றும் முகுந்தனிடம் அவர் காட்டும் கோபத்தையும் கண்டிப்பையும் கண்டு தென்றல் மீனாவிற்கு பெரியப்பா என்றால் சற்று அச்சமே!
அதுவும் அந்த அச்சம் ஓர் நாள் அவர் முகுந்தன் எதோ கலாட்டா செய்து விட்டதில் அடித்ததை கண்டு இன்னும் பெருகி விட அவரிடம் செல்லவே பயந்து தந்தையோடு ஒட்டிக் கொள்வாள்.
“மெய்ப்பா.. எனக்கு பெரியப்பா பார்த்தா பயமா இருக்கு. முகிண்ணாவை அடிச்சிட்டார்” என்று தந்தையின் மடியில் அமர்ந்து அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டு சொல்ல, “என் செல்ல மீனும்மா ஏன் பயப்படுறாங்க பெரியப்பா பாத்து? முகுந்தன் அண்ணா தப்பு பண்ணான் தானே. அதான் பெரியப்பா அடிச்சாங்க” என்று குழந்தைக்கு புரிய வைக்க,
“ம்ம்… ஆனா முகிண்ணா அழுதாங்க. பாவம்” என்று உடன் பிறவா சகோதரனுக்காக கவலைப்பட,
“அதெல்லாம் சரி ஆகிடும். நீ வேணும்னா பாரேன். பெரியப்பா இன்னைக்கு நைட்டே உன் முகி அண்ணாவை சமாதானம் பண்ணிடுவார்” என்றதும்,
“நிஜமாவா மெய்ப்பா” என்று கண்கள் விரிய புன்னகையுடன் கேட்ட செல்வ மகளை கையில் அள்ளிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தவர்,
“கண்டிப்பாடா மீனும்மா. உன் மெய்ப்பா பொய் சொல்வேனா?” என்று முகம் கொள்ள புன்னகையுடன் சொல்ல, “என் செல்ல மெய்ப்பா” என்று அவரைப் போலவே சொல்லி அவரின் கன்னத்தில் முத்தம் வைத்தாள் குழந்தை தென்றல் மீனா.
மகள் மற்றும் கணவரின் சம்பாஷனையை கேட்டபடி வந்த வரலக்ஷ்மி “அடியே! எத்தனை தடவை சொல்றது? அப்பான்னு கூப்பிடு. மெய்ப்பா சொல்லாதன்னு” என்று மகளின் கன்னத்தை செல்லமாய் நிமிண்ட,
“போம்மா.. மெய்ப்ப்பாவை மெய்ப்பான்னு தானே எல்லாரும் கூப்பிடுறாங்க. நானும் அப்படி தான் கூப்பிடுவேன்” என்றாள் தாயை முறைத்தபடி.
மகளின் பதிலில் வரலக்ஷ்மி அவளின் தலையில் செல்லமாய் குட்டி “அடியே.. எல்லாரும் உங்க அப்பாவை மெய்யப்பான்னு கூப்பிடுறாங்கன்னா அவரோட பேருடி அது! அதுக்குன்னு நீயும் அப்படியே கூப்பிடுவியா? அப்பானு மரியாதையா கூப்பிடணும்” என்று சிறு கண்டிப்புடன் மகளுக்கு எடுத்துரைக்க,
தாயின் கண்டிப்பில் முகத்தை சுருக்கி தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு “முடியாது போம்மா” என்றாள் தென்றல் மீனா!
“கொழுப்பை பாரு. வீட்ல எல்லாரும் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கோம் தானே! அதான் இப்படி சொல்றதை கேக்க மாட்டேங்குற” என்று சிறு கோபத்துடன் சொல்ல உதடு பிதுங்கத் துவங்கியது குழந்தைக்கு.
அதனை பொறுக்க முடியாமல் “விடு வரு. அவளுக்கு எப்படி இஷ்டமோ அப்படி கூப்பிட்டு போறா” என்றவர் மகளின் முதுகில் தட்டிக் கொடுத்தபடி மகளை சமாதானம் செய்ய,
“ஐயோடா.. மகளுக்கு ஒன்னுண்ணா உடனே நம்ம வாயை அடைச்சிடுறது” என்று நொடித்துக் கொள்பவரும் மகளுக்கு செல்லம் கொடுப்பவர் தான். அதே சமயம் அந்த செல்லத்தில் பயமும் உண்டு. எனவே தான் அவ்வப்போது கண்டிப்பினை காண்பிப்பார். இன்றைய கண்டிப்பிற்கு மகள் உதட்டினை பிதுக்கி விட தந்தைக்கு இதயம் கனிந்து விட்டது.
அவர்களை கண்டபடி அறையை விட்டு வெளியே செல்லப் போனவரை தடுத்து மெய்யப்பன் “எங்க வரு போற? மீனுவ சமாதானம் பண்ணனும் தானே” என்று மனைவியிடம் கேட்க,
“உங்களை…. இது ஒரு திட்டு! இதுக்கு ஒரு சமாதானம் வேறயா! ரொம்ப ஓவரா இருக்கு சொல்லிட்டேன்” என்று கணவரை முறைத்தவர்,
“இது வசுக்கு ஜுஸ் கொடுக்குற நேரம். நான் போய் ஜூஸ் போட்டு அவளுக்கு கொடுக்கணும். அப்பாவும் மகளும் கொஞ்சி சமாதானம் பண்ணுங்க. என்னை ஆளை விடுங்க” என்று அவர் வெளியே செல்ல, வசு என்று அன்னை சொன்னதை கேட்டு தந்தையின் தோளில் இருந்து விருட்டென்று நிமிர்ந்த தென்றல் மீனா,
“நானும் வசும்மாக்கு ஜுஸ் போட வரேன்” என்று உற்சாகமாக சொன்னபடி தந்தையிடம் இருந்து தாவி கீழே இறங்கி அன்னையோடு கை கோர்த்துக் கொள்ள “வசுன்னா என் பொண்ணுக்கு கொள்ளை பிரியம் தான்” என்று மெல்ல சிரித்துக் கொண்டார் மெய்யப்பன்.
பழச்சாறினை தயார் செய்த வரலக்ஷ்மி மகளுடன் வசுந்தரா அறைக்குள் நுழைய அங்கே கண்ட காட்சியில் வரலக்ஷ்மி முகத்தில் அளவில்லா புன்னகை.
தன் ஆறு மாத வயிற்றை பிடித்துக் கொண்டு வசுந்தரா கட்டிலில் அமர்ந்திருக்க அவரின் பாதங்களை சுடு நீர் அடங்கிய டப்பில் வைத்து பிடித்து விட்டுக் கொண்டிருந்தார் நாகப்பன்.
“ரொம்ப சிரம்மப்பட்டு நடக்காதன்னு சொன்னா கேக்குறியா வசு? பாரு.. கால் எப்படி வீங்கிப் போய் கிடக்குன்னு” என்று மனைவியை அக்கறையாக கடிந்து கொண்டபடி அவர் தன் பணியை தொடர,
“சித்தப்பா… நானும் வசும்மாக்கு அமுக்கி விடுறேன்” என்று தென்றல் மீனா உள்ளே ஓடி வர அவள் குரலில் புன்னகையுடன் திரும்பியவர்கள் வரலக்ஷ்மியும் வாயிலில் நிற்பதை அப்போது தான் பார்த்தனர்.
“உள்ள வாக்கா…” என்று வசுந்தரா எழுந்து கொள்ள பாக்க, “நீ உட்காரு வசு” என்று மனைவியை அதட்டிய நாகப்பன்,
“வாங்க அண்ணி. வசுக்கு கால் வீங்கி இருந்தது. அதான் ஒத்தடம் கொடுத்துட்டு இருந்தேன். நீங்க பேசிட்டு இருங்க. நான் வரேன்” என்று அவர் வெளியேற தங்கையின் அருகே அமர்ந்தார் வரலக்ஷ்மி.
வசுந்தராவின் காலை குனிந்து ஆராய்ச்சியாக பார்த்த தென்றல் மீனா “வசும்மா.. பலூன் மாதிரி கால் புஸ்ஸுன்னு வீங்கி இருக்கு” என்று கன்னத்தை உப்பிக் காட்டியபடி சொல்ல, அவள் சொன்ன அழகில் அவளை தன் மறு பக்கம் அமர்த்தி கட்டிக் கொண்டவர்,
“சரியா போய்டும் மீனு குட்டி” என்றார் வசுந்தரா.
“இந்தா வசு. ஜூஸை குடி” என்று அவரிடம் நீட்ட, “இப்ப வேண்டாம் க்கா. கொஞ்ச நேரம் கழிச்சி குடிச்சிடுறேன்” என்று கூறிய தங்கையை முறைத்தவர்,
“ஒழுங்கா என் கண் முன்னாடியே குடிடி. தினமும் அப்புறம் குடிக்கிறேன் குடிக்கிறேன்னு சொல்லி ஓப்பி அடிச்சு பாதி ஜூசை திருட்டுத்தனமா இந்தக் கழுதைக்கு கொடுத்திடுவ” என்று தங்கை கை வளைவில் இருந்த மகளை முறைத்தபடி சொன்னவர் தங்கையை பார்க்க,
“என்னால முடியல அக்கா. குடிக்கலேன்னா நீ திட்டுவ” என்று பாவமாய் சொன்னவர்,
“ஜுஸ் தானே விடுக்கா.. நம்ம மீனுக்கு கொடுக்காம வேற யாருக்கு கொடுப்பேன்” என்று பாசத்துடன் அவளின் தலையை வருடிக் கொடுத்தார் வசுந்தரலக்ஷ்மி.
தன் மகளின் மீதான தங்கையின் பாசத்தை கண்டு வரலக்ஷ்மி பிரம்மிக்காத நாளில்லை!
தன்னை நான்கு ஆண்டுகளாக குழந்தை செல்வத்திற்கு காத்திருக்க வைத்த கடவுள் தன் இரட்டை சகோதரிக்கு பத்து ஆண்டுகள் கழித்தே அவ்வரத்தினை கொடுத்திருக்க அந்த பத்து ஆண்டுகளும் வசுந்தராவை நம்பிக்கையின்றி தளர்ந்து போகாமல் உயிர்ப்போடு இருக்க வைத்த ஜீவன் தன் மகள் தான் என எண்ணும் போதே பேருவகையும் பெரும் வலியும் உண்டானது.
அதுவும் தென்றல் மீனாவிற்கு தன் அன்னையின் முகத்தை அப்படியே கொண்டிருக்கும் வசுந்தராவை அத்தனை பிடிக்கும்.
விவரம் தெரிந்ததும் வசுந்தராவை “சித்தி” என உறவு முறையை அவளுக்கு சொல்லிக் கொடுத்த போது “உன்னை மாதிரியே இருக்காங்க அம்மா. நான் ஏன் என் அம்மாவை சித்தி சொல்லணும்” என்று கேட்டவள்,
“நான் சித்தி சொல்ல மாட்டேன். அம்மா தான்” என்று பிடிவாதமாக சொல்லி அப்படியே அழைக்க சில சமயங்களில் இவள் யாரை அழைக்கிறாள் என்று தெரியாமல் தாயுள்ளங்கள் குழம்பி விட, அதன் பின் மெய்யப்பன் “வசும்மான்னு கூப்பிடுடா மீனு. உன் அம்மாங்களுக்கு கன்பியூஷன் இருக்காது” என ஐடியா கொடுத்திருக்க தந்தையின் சொல் படி வசும்மா என அழைக்கத் துவங்கி விட்டாள். வீட்டினருக்கும் அது பழக்கமாகி விட அதுவே இயல்பாகி விட்டது.
இப்போதும் மீனுவை அணைத்தபடி வசுந்தரா சிரித்துக் கொண்டிருக்க சிறியவளோ அவரின் வயிற்றில் தன் குட்டி விரல்களை வைத்து மென்மையாய் தடவிக் கொடுத்தபடி எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.
இருவரும் அவர்களுக்கான உலகத்தில் உள்ளிருக்கும் குழந்தையோடு லயித்து விட அவர்களை ரசித்தபடி ஆதூரமாய் வசுந்தராவின் தலையை வருடிக் கொடுத்தார் வரலக்ஷ்மி.
அக்காவின் செய்கையில் அவர் புறம் திரும்பியவர் அவர் முகம் நெகிழ்ந்து இருப்பதை கண்டு “என்னக்கா?” என்று கேட்க,
“அடுத்த மாசம் வளைகாப்பு முடிஞ்சு இங்கேயே உனக்கு பிரசவம் பாக்கலாம்னா அம்மாவும் அப்பாவும் பிடிவாதமா உன்னை ஊருக்கு வர சொல்லிட்டாங்க. இங்க இருந்து உன்னை அனுப்ப யாருக்கும் மனசே இல்ல” என்று கவலையுடன் சொல்ல, அக்காவின் கரத்தை ஆதூரத்துடன் பற்றிக் கொண்ட வசுந்தரா,
“அவுங்க ஆசையும் தப்பில்ல தானே க்கா. மீனு உன் வயித்துல இருக்கப்ப டாக்டர் உன்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாங்க. அதனால உனக்கும் இங்க தான் பிரசவம் ஆச்சு. உன்னை பாக்க முடியாத வருத்தமே இப்ப வரைக்கும் அம்மா அப்பாக்கு இருக்கு. இதுல எனக்கும் இங்கேயே பிரசவம் பாக்கலாம்னு சொன்னப்ப ரெண்டு பேருமே ஒத்துக்கல. அப்பாவும் அம்மாவும் பாவம் தானே க்கா. அதான் நானும் அவுங்க ஆசையா கேட்டதும் வர ஒத்துக்கிட்டேன்” என்று தங்கை சொன்னதும் நியாயம் தான் என்பதால் ஆமோதிப்பாய் தலை அசைத்தார்.
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தென்றல் மீனா சித்தியின் தாடையை பற்றி தன் புறமாக திருப்பி “வசும்மா.. அப்போ பாப்பா இங்க பிறக்க மாட்டாளா? தாத்தா பாட்டி கூட போய்டுவீங்களா நீங்க?” என்று கேட்கும் போதே அவளின் முகம் கூம்பி விட குரலில் அத்தனை கவலை.
“அச்சோ என் தங்கம் ஏன் கவல படுறீங்க? அடுத்த மாசம் தான்டா சித்தி கிளம்புறேன். பாப்பா பிறந்ததும் கொஞ்ச நாள்ல வந்திடுவேன்” என்று அவளை அணைத்து சமாதானமாக கூற,
“அப்போ பாப்பா இங்க பிறக்க மாட்டாளா? நான் பாப்பாவை ஃபர்ஸ்ட் தூக்கணும்னு ஆசையா இருந்தேன்” என்றவள், சட்டென்று அவரை அணைத்துக் கொண்டு
“அதெல்லாம் நீங்க போகவேணாம் வசும்மா இங்கேயே இருங்க. நான் உங்களையும் பாப்பாவையும் விட மாட்டேன்” என்று பிடிவாதமாக சொல்ல, அவளின் பாசத்தில் வசுந்தரா நெகிழ்ந்து அவளை அணைத்துக் கொள்ள,
“மீனு.. அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. வசு போய்ட்டு கொஞ்ச நாள்ல வந்திடுவா. பாப்பா பிறக்கும் போது நாம போய் பாக்கலாம்” மகளின் பிடிவாதம் அறிந்து வரலக்ஷ்மி அவளை தாஜா செய்ய முயற்சிக்க,
“அதெல்லாம் முடியாது. நான் வசும்மாவை அனுப்ப மாட்டேன்” என்று அவரை எங்கும் அனுப்ப முடியாது என்பது போல் இறுக்கமாய் அணைத்துக் கொள்ள வசுந்தரலக்ஷ்மிக்கு புன்னகையுடன் பாசமும் ஊற்றாய் பெருகியது அக்கா மகளின் மேல்.
“சும்மா பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கக் கூடாது மீனு” என்று மகளை கண்டித்த வரலக்ஷ்மி அடுத்த மாதம் வளைகாப்பு நாள் வரை மகளின் பிடிவாதம் தளரவில்லை என்றுணர்ந்து அவள் செய்த அழிச்சாட்டியத்தில் பொறுமை பறந்து அடித்தே விட்டார் அவளை.