வசுந்தரலக்ஷ்மியின் வளைகாப்பு மிகவும் கோலாகலமாக பத்மநாபனின் இல்லத்தில் நடைபெற்றிருக்க மதியம் போல் வசுந்தரா அவர்களின் பெற்றோருடன் ஊருக்கு கிளம்புவதாக இருந்த நிலையில் தென்றல் மீனா அவரை விடவே இல்லை.
பைகளில் எடுத்து வைத்திருந்த உடைமைகளை எல்லாம் திசைக்கொரு பக்கம் கலைத்து போட்டது மட்டுமல்லாமல் வசுந்தராவின் கால்களை கட்டிக் கொண்டு போகவே கூடாது என அத்தனை பிடிவாதம்! அத்தனை அழுகை!
யாராலும் அவளை சமாதானம் செய்ய முடியவில்லை. வரலக்ஷ்மி திட்டித் தீர்த்த பின்னரும் அவளின் நிலையில் மாற்றம் இல்லாமல் இருக்க, மெய்யப்பனுக்கும் மகளின் பிடிவாதத்தை ஏற்க முடியாமல் “மீனா…” என்று அதட்டலாய் அழைக்க அவ்வளவு தான் பெருங்குரலெடுத்து அழுக ஆரம்பித்து விட்டாள் தென்றல் மீனா.
வசுந்தரா பரிதவுப்புடன் அவளை பிடித்துக் கொண்டு மெய்யப்பனிடம் “அவ சின்ன பொண்ணு மாமா. நீங்க ஏன் அதட்டுறீங்க?” என்று தன் கால்களை கட்டிக் கொண்டு அழும் குழந்தையை கண்டு கவலையுடன் சொன்னவர்,
“நல்ல கதையா இருக்கே இது? இந்த வாண்டு காலை கட்டிட்டு இப்படி ஓரியாட்டம் பண்ணும். நீங்க எல்லாம் அவளை கண்டுக்காம வேடிக்கை பாக்குறீங்க? செல்லம் கொடுக்கிறதா இருந்தாலும் ஒரு அளவு தான் கொடுக்கணும். இதென்ன? இப்படி வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்டுக்கு போற பொண்ணை இப்படி கட்டிட்டு விடவே மாட்டேன்னு தடங்கலா நிக்கிறது?” என வந்திருந்த ஒரு உறவுக்கார கிழவி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அவர்கள் வீட்டின் செல்ல பிள்ளையை பேசி விட,
மெய்யப்பன் கோபமாய் பதில் சொல்வதற்கு முன்னர் வெங்கடேசன் நெற்றிக் கண்ணை திறந்து விட்டிருந்தார்.
“என்ன ஆத்தா? வந்தாச்சு.. விஷேசமும் முடிஞ்சாச்சு.. இன்னமும் கிளம்பாம இங்கன இருந்து எங்க வீட்டில நடக்குறத பத்தி ஏன் மெல்லுறீங்க! எங்க பொண்ணை எப்படி சமாளிக்கணுமோ அதை நாங்க பாத்துக்குறோம். நீங்க அவளை பேச வேணாம். பேசவும் கூடாது. இருக்கிறதா இருந்தா அமைதியா இருக்கணும். இல்லையா மூட்டை முடிச்சை கட்டிட்டு கிளம்பனும். அதை விட்டுட்டு அனாவசியமா எங்க தங்கத்தை பத்திப் பேசினா நான் பொல்லாதவனா மாற வேண்டியது வரும்” என்று தென்றல் மீனாவை அவர் தடங்கல் எனக் கூறியதை பொறுக்க முடியாமல் வெடித்து விட்டார் வெங்கடேசன்.
அவரின் கோப ஆவேசத்தை கண்டு அதற்கு மேல் அந்தக் கிழவி வாயை மூடிய படி கிளம்பியும் விட,
“இதென்னடா வெங்கடேசா? வீட்டு விஷேஷத்துக்கு வந்த பெரியவங்களை இப்படி தான் பேசி அனுப்புறதா?” என்று பத்மநாபன் அதிருப்தியுடன் மூத்த மகனை கண்டிக்க,
“அவ குழந்தை. வசு கிளம்புறதை தாங்கிக்க முடியாம புரியாம அடம் பண்றா. அதான் இத்தனை பேர் இருந்து சமாளிச்சி அவளை சமாதானம் பண்ணிட்டு இருக்கோம்ல. குறுக்கால இவுங்க ஏன் வந்து பேசணும்” என்று கோபம் தணியாமல் சொல்ல பத்மநாபன் அமைதியாகி விட்டார்.
நீண்ட நேரமாக வசுந்தரா நின்று கொண்டிருக்க, தங்கையின் கால்கள் வீக்கம் கொண்டு விடுமே எனப் பயந்து “முதல்ல வசுவை விடு மீனு. கொஞ்சம் உட்காரட்டும். இல்லேன்னா அவ கால் வீங்கிக்கும்” என்று வரலக்ஷ்மி மகளை தங்கையிடம் இருந்து இழுக்கப் பார்க்க, அழுது கொண்டே மாட்டேன் என்பதாய் ஒரு தலை அசைப்பு அவளிடம்.
வரலக்ஷ்மியின் பொறுமை பறிபோய் விட்டது. பெரியவர்கள் பேசி, அதற்கு மூத்தவர் பதில் பேசி, மாமனார் அதிருப்தி கொண்டு மகனைப் பேசி என எல்லாம் ஆகிய பின்னர் மகள் தங்கையை அமரக் கூட விடாமல் ஒட்டிக் கொண்டு நின்றதில் கோபம் தலைக்கேற சுள்ளென்று ஒரு அடி வைத்தார் தென்றல் மீனாவின் முதுகில்.
அவள் வீலென்று அழுததையும், வீட்டினர் பதறியதையும் பொருட் படுத்தாமல் மேலும் இரண்டு அடிகளை சட் சட்டென்று வைத்து விட அடித் தொண்டையில் இருந்து அழுக ஆரம்பித்து விட்டாள் தென்றல் மீனா.
தாய் அடித்த அடியில் முதுகும் மேல் தோள் பட்டையும் எரிந்தது குழந்தைக்கு. அந்த வலியில் அவள் கைகள் தாமாக வசுந்தராவிடம் இருந்து தளர்ந்து விட அழுகை பன்மடங்காக பெருகியது.
வீட்டினர் எல்லோரும் பதறித் தான் போனார்கள்.
“என்ன வரு? குழந்தையை இப்படியா அடிப்ப?” என்று மெய்யப்பன் பதறிக் கொண்டு மகளை கைகளில் அள்ளிக் கொள்ள,
“ஏன் க்கா மீனுவை அடிச்ச?” என்று வசுந்தராவும் கண்ணில் நீருடன் அக்காவிடம் கோபமாய் கேட்க பெரியவர்களும் மருமகளை கண்டிக்க வரலக்ஷ்மிக்கு அப்போது தான் நிதானம் கொள்ளவே முடிந்தது.
கணவரின் கைகளில் அழுது கரையும் மகளை கண்டு மனம் உருகி விட அடித்து விட்டோமே எனப் பதறி மறுகிப் போனார்.
“மீனு..” என்று தவிப்புடன் மகளை நெருங்க தென்றல் மீனாவோ அந்த அழுகையிலும் தந்தையின் கைகளில் இருந்து துள்ளி கீழே இறங்கப் பார்த்தாள்!
பின்னே! அவளின் செல்ல மெய்ப்பாவும் மீனா என அவளை அதட்டி விட்டாரே!! அந்தக் கோபமும் இருக்க துள்ளி திமிறினாள் அவரின் கைகளில்.
“மீனும்மா” என்று மெய்யப்பன் சமாதானங்கள் குழந்தையிடம் எடுபடாமல் போக, திமிறிய குழந்தையை தம்பியிடம் இருந்து வெங்கடேசன் தூக்கிக் கொள்ள மறுக்காமல் பெரியப்பாவின் கைகளுக்கு சென்றவள் அவரின் தோளில் சாய்ந்து கொண்டு அழுகையை தொடர்ந்தாள்.
வரலக்ஷ்மியின் பக்கம் கோபமான பார்வையை வீசிய வெங்கடேசன் மெய்யப்பனிடம் “குழந்தை மேல கை வைக்கிறது நல்லதில்ல மெய்யப்பா. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இதென்ன கை நீட்டுற பழக்கம்?” என்று தென்றல் மீனாவின் முதுகை தட்டிக் கொடுத்தபடி பெரும் கோபத்தை உள்ளடக்கிய குரலில் சொன்னவர்,
“ஒன்னுமில்ல மீனு தங்கம். வாங்க பெரியப்பா வெளில கூட்டிட்டு போறேன். நாம கார்ல ரவுண்ட் போகலாம்” என்று அழைக்க அப்போதும் அவர் கழுத்து வளைவில் இருந்து நிமிர்ந்தவளின் பார்வை வசுந்தராவை தொட,
“உன் வசும்மா இங்க தான் இருப்பாங்க. நீ வா. நாம போகலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் வெளியே தோட்டப் பகுதிக்கு வந்து விட்டார்.
அவர்கள் சென்றதும் வீட்டிற்குள் புயல் வீசி ஓய்ந்தது போல் இருந்தது. சத்தியமாக தென்றல் மீனா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்வாள் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை.
வீண் பிடிவாதம் என்று யோசிக்கத் தோன்றினாலும் குழந்தையின் பிடிவாதத்தை அப்படி நினைத்து அவள் மேல் கோபத்தையும் முழுதாக காட்ட முடியவில்லை! முடியவும் முடியாதே!
வரலக்ஷ்மி அடித்ததும் வெங்கடேசன் முகம் மாறியதை அனைவருமே கண்டனரே! அழகம்மை வரலக்ஷ்மி மற்றும் வசுந்தராவின் பெற்றோரிடம் “இன்னைக்கு கிளம்ப வேண்டாமே. நாளைக்கு கூட காலைல வெள்ளன கிளம்புங்க. அவ தூங்கிட்டு இருப்பா. நீங்க வசுவை அழைச்சிட்டு போக வசதியா இருக்கும். நிச்சயம் அவ முழிச்சிருக்க நேரம் வசுவ விட மாட்டா” என்று பேத்தியின் பிடிவாதம் அறிந்து சொல்ல, அவர்களும் தங்கள் பேத்தியின் அழுகையில் கலங்கி நின்றவர்கள் சம்மந்தி கூறியதற்கு சரி என ஒப்புக் கொண்டனர்.
ஒரு வழியாக வீட்டிற்குள் அனைவரும் பேசி முடித்து வெளியே வர வெங்கடேசனின் தோளில் அழுகை குறைந்து தேம்பிய நிலையில் சாய்ந்திருந்தாள் தென்றல் மீனா.
வெங்கடேசனிம் தோள் பட்டை சட்டை முழுவதும் அவளின் கண்ணீர் தடம். தேம்பிக் கொண்டிருக்கும் தங்கள் மகளிடம் வெங்கடேசன் சமாதானமாக எதையோ கூறிக் கொண்டிருக்க அவளும் அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
அழுதழுது தேம்பிக் கொண்டிருந்தவளை காண பெற்ற உள்ளங்களுக்கு வலித்தது. அதுவும் அவர்கள் செல்ல மகள் வேறு!
வரலக்ஷ்மி கை நீட்டி அடிக்க வேறு செய்திருக்க மனம் குத்தியது. மீனு என அவர் மகளை நெருங்க வெங்கடேசனின் கழுத்து வளைவில் நன்றாக முகத்தை மறைத்துக் கொண்டவள்,
“நான் யாரையும் பாக்க மாட்டேன். மீனு கோபம்! மெய்ப்ப்பா , அம்மா மேல ரொம்ப கோபம்” என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டு பெரியப்பனை கட்டிக் கொண்டது அந்த ஆறு வயது பிடிவாத வாண்டு!
“அவ கோபமா இருக்கா. இப்ப தான் கொஞ்சம் அழுகை குறைஞ்சு இருக்கு. நீங்க போங்க. நான் சமாதானம் பண்ணி கூட்டி வரேன்” என்ற வெங்கடேசன் வரலக்ஷ்மியின் மீது கண்டிப்பான பார்வையை வீச,
தலை குனிந்தவாறு “ரொம்ப அடம் பண்ணா. அதான் கோபத்துல…” என்றார் முடிக்காமல்.
“கோபம்னாலும் இப்படி தான் பிள்ளை தோல் சிவக்குற அளவுக்கு அடிக்கிறதா?” என்று கோபம் குறையாமல் தென்றல் மீனாவின் சிவந்து கிடந்த வலது பக்க தோள் பட்டையை சுட்டிக் காட்டி சொன்னவர்,
“குழந்தையை இனி மேல் கை நீட்ட கூடாது” என்று அவரிடம் சொல்லி விட்டு தம்பியிடம்,
“நீ என்னடா.. உன் வீட்டுக்காரம்மா குழந்தை கிட்ட கோபம் காட்டுனா நீயும் கோபமா புள்ளையை அதட்டுறதா? பாரு.. எப்படி அழுது முகமே வீங்கிப் போச்சுன்னு” என்று தாங்க முடியாமல் சொன்னவர், இருவரும் குற்றம் செய்தவர்கள் போல் பரிதவுப்புடன் நிற்பதை கண்டு அதற்கு மேல் கோபம் காட்ட முடியாமல்,
“கொஞ்ச நேரம் ஆகும் அவ சமாதானம் ஆக. நீங்க போங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தவர் அடுத்த இரண்டு மணி நேரங்கள் தென்றல் மீனாவுடன் தான் செலவிட்டார்.
காரில் அவளை அழைத்துச் சென்று அவளை உற்சாகமாக மாற்றி அவள் பழைய நிலைக்கு வந்த பின்னர் தான் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க வந்ததும் அவளின் கண்கள் தன்னைப் போல வசுந்தராவை தேடியது.
“அடக் கழுதை…” என்று பேத்தியின் பார்வையை கண்டு சொன்ன அழகம்மை,
“ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணு தான். வந்ததும் வராததும் வசு இருக்காளா இல்லையான்னு தேடுறா பாருடா மெய்யப்பா உன் பொண்ணு” என்று மகனிடம் நொடிக்க,
அவரோ மகளிடம் விரைய அவள் வேக வேகமாக தந்தையிடம் முகத்தை திருப்பிக் கொண்டு “நான் மெய்ப்பாவோட கோபம்” என்று சொல்லி விட்டு முகத்தை திருப்ப மகளின் செய்கையில் புன்னகைக்க மட்டுமே முடிந்தது அந்த அன்புத் தந்தையால்.
குழந்தையின் அரவம் கேட்டு வசுந்தரா அறையை விட்டு வெளியே வர, அவர் வந்ததும் அவரிடம் விரைந்தவள் “வசும்மா சாரி” என்று அவரின் கால்களை கட்டிக் கொள்ள குனிந்து அவளின் முகத்தை வருடிக் கொடுத்தவர்,
“எதுக்கு சாரி மீனு. சித்தியும் சாரி. சித்தினால தான் நீங்க அடி வாங்குனீங்க” என்றார் கவலையாக!
இல்லை என்பதாய் வேக வேகமாக தலை அசைத்தவள் அவர் நின்றாள் கால் வீங்கிக் கொள்ளும் என அன்னை சொன்னதை நினைவு கூர்ந்து அவரின் கைப் பற்றி அழைத்து வந்து சோஃபாவில் அமர வைத்து அவர் காலடியில் மண்டியிட்டு அவரின் பெரிய வயிற்றில் இரண்டு முத்தங்களை பதித்து விட்டு,
“நீங்க பாட்டி தாத்தா கூட ஊருக்குப் போனா தான் பாப்பா பத்திரமா இருக்குமாம். பாப்பா பத்திரமா வளருமாம். பாட்டியும் தாத்தாவும் உங்களை நல்லா பாத்துக்குவாங்களாம். அதனால நீங்க ஊருக்கு போக நான் நோ சொன்னது தப்பு சொன்னாங்க?” என்று கதை போல் அவரிடம் சொல்ல குழந்தை பேசியதைக் கேட்டு வசுந்தரா அவளை மார்போடு அணைத்தபடி,
“யார் சொன்னாங்க?” என்று சிரிப்புடன் கேட்க “வெங்கி பெரியப்பா தான் கார்ல ரவுண்ட் போகும் போது சொன்னாங்க” என்றவள்,
“சாரி வசும்மா” என்று அவரை கட்டிக் கொள்ள,
“அச்சோ வேண்டாம்டா மீனு குட்டி” என்றார் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து. வீட்டில் அனைவரும் அவள் பேசுவதைக் கேட்டு லகுவாகி இருக்க வெங்கடேசனை நன்றிப் பார்வை பார்த்தார்கள் மெய்யப்பனும் வரலக்ஷ்மியும்.
மெல்ல மகளை நெருங்கிய வரலக்ஷ்மி அவளை தொட, வெடுக்கென்று அன்னையின் கையை தட்டி விட்டவள் “வசும்மா நான் கோபமா இருக்கேன். பேச மாட்டேன் சொல்லிடுங்க” என்றவள் வீம்பாக முகத்தை திருப்பிக் கொள்ள,
“ஏண்ணே வசுந்தரா கிளம்ப அவளை சரி கட்டின மாதிரி எங்களுக்கும் எதாவது வழி பண்ணிருக்க வேண்டியது தானே” என்று மெய்யப்பன் அண்ணனிடம் பாவமாக கேட்க,
“அதெல்லாம் நான் சொன்னாலும் மீனு நோ பெரியப்பா மீனு கோபம் தான் சொல்லிட்டா. நானும் அவளை மறுபடியும் மலை ஏத்த விரும்பல. ரெண்டு பேரும் என்னவாவது பண்ணி அவளை சரி கட்டிக்கங்க” என்று லகுவான புன்னகையுடன் தம்பியிடம் சொல்லி விட்டார் வெங்கடேசன்.
பெரு மூச்சுடன் மகளை நெருங்க “நோ மெய்ப்பா. மீனு கோபம்” என்றவளின் கோபம் மறு நாள் வசுந்தரா கிளம்பும் வரையிலும் இருக்க,
“அப்பாவும் அம்மாவும் உன் வசும்மாவையும் பாப்பாவையும் ஊர் வரைக்கும் போய் பத்திரமா விட்டுட்டு வர போறோம். மீனு குட்டி வரீங்களா?” என்று மெய்யப்பன் கேட்டதும் தான் அவளின் கோபம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருந்தது.
“நிஜமாவா மெய்ப்பா..” என்று கண்கள் விரித்து நம்ப முடியாமல் கேட்க, “நிஜமா தான்டா மீனு குட்டி. உனக்கும் ரெண்டு நாள் ஸ்கூல் லீவ் தானே. போய்ட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்” என்றதும் குஷி ஆகி விட்டாள் குழந்தை.