ஒரு வழியாக இரண்டு கார்களில் எல்லோரும் கிளம்ப முடிவு செய்திருக்க பெரியவர்கள் ஒரு காரிலும் தென்றல் மீனாவுடன் இளையவர்கள் நால்வரும் ஒரு காரிலும் அன்றைய நாள் காலையில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
காரில் செல்லும் போது வசுந்தராவின் புறம் மட்டும் பார்வையை பதித்து அவரிடம் மட்டும் வளவளத்துக் கொண்டு வந்தாள் தென்றல் மீனா.
வரலக்ஷ்மி மகளின் கையைப் பிடிக்க, “மீனு கோபம் இன்னும் போகல” என்று அன்னையின் கரத்தினை பட்டென்று தட்டி விட்டாள்.
மகளை அடித்து விட்டது வலித்திருக்க இப்போது அவள் தன்னிடம் பேசாமல் இருப்பது இன்னுமே வலித்தது வரலக்ஷ்மிக்கு.
அதுவும் நேற்று அழகம்மை தனியாக அவரை அழைத்து கடிந்து கொண்டிருந்தார்.
“அவ இப்படி பிடிவாதம் பிடிக்கிறது தப்பு தான்டி. இல்லேங்கள. அதுக்காக நீ அடிச்சதையும் தப்பு சொல்ல மாட்டேன். புள்ளைங்க வீணா அடம் பண்றப்ப கண்டிக்கிறது பெத்தவ கடமை தான். ஆனா கூடக் கூட அடிச்ச பாரு. அதான் தப்பு. ஒரு அடி நீ வச்சப்பவே அவ வசு மேல இருந்து கையை எடுத்திட்டா. அதுக்கு அப்புறமும் என்னத்துக்கு பிள்ளையை போட்டு அடிச்ச. தோள் பட்டை சிவந்து போற அளவுக்கு” என்று கோபமாய் சொன்னவர்,
“நல்ல வேளை வெங்கடேசன் ரொம்ப பேசல. புள்ளயை தூக்கிட்டு வெளிய போய்ட்டான்” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டவர் “இனி இப்படி பண்ணாத” என மருமகளை கண்டித்து அனுப்பி இருந்தார்.
இப்போதும் நேற்றைய நிகழ்வை எண்ணி மனம் சோர்ந்து போக ஓயாமல் தன்னோடு பேசி சிரித்து வளவளக்கும் மகளும் நீண்ட நேரம் வரை தன்னோடு பேசாமல் இருக்க என்னவோ போல் இருந்தது வரலக்ஷ்மிக்கு.
“இதெல்லாம் அநியாயம்டி. உங்க அப்பா கூட மட்டும் சமாதானம் ஆகிட்ட. என் கிட்ட மட்டும் இன்னும் என்னடி கோபம்” தூக்கி மடியில் அமர்த்திக் கொள்ள பார்க்க,
“அடிச்சேன். தப்பு தான். சாரி. சாரி. சாரிடி” என்று வரலக்ஷ்மி கெஞ்ச சிறியவள் மிஞ்ச என தாய்க்கும் மகளுக்கும் இடையே நடக்கும் அந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ரசித்தபடி மற்ற மூவரும் இருக்க,
முன்னால் காரை செலுத்திக் கொண்டிருந்த மெய்யப்பன் இவர்களை ஒரு முறை சிரிப்புடன் திரும்பி பார்த்து விட்டு சாலையில் கவனத்தை வைக்க,
“அண்ணா.. லாரி..” என்று அவர் அருகே அமர்ந்திருந்த நாகப்பனின் பதட்டமான குரல் மட்டுமே இறுதியாக காரினுள் ஒலித்திருக்க கண் மூடித் திறக்கும் அந்த ஒரு நொடியில் எல்லாம் அலங்கோலமாக நடந்தேறி இருந்தது.
அந்த சாலையின் இடது பக்கவாட்டில் இருந்து வந்த லாரி ஒன்று நேராக வந்து கொண்டிருந்த இவர்களின் காரை கவனிக்காமல் சாலையை கடக்க முயற்சித்திருக்க மெய்யப்பன் லாரியை கவனித்து காரை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாலும் அந்த லாரி இவர்களின் காரில் பலமாக மோதி இருந்தது.
மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாடின்றி அந்த தார் சாலையில் பிரண்டு விழுந்திருந்தது.
இமைக்கும் நொடியில் ஒரு கொடிய விபத்து!
சுற்றி இருந்த ஆட்கள் கூட்டத்தை சேர்த்து ஆம்புலன்சிற்கு அழைத்து என எல்லாம் நடக்க, இவர்களுக்கு பின்னே டிரைவருடன் வந்து கொண்டிருந்த வசுந்தரா மற்றும் வரலக்ஷ்மியின் பெற்றோர் அந்தப் பகுதியை கடக்கும் போது எதோ விபத்து என அதை சாதாரணமாக எட்டிப் பார்க்க, அது தங்களின் மருமகன் ஓட்டிக் கொண்டு வந்த கார் என்று உணர்ந்ததும் பதைபதைப்போடு அவர்களை நெருங்கினர்.
ஆம்புலன்ஸ் வந்ததும் போலீசும் வந்து விட எல்லாம் கை மீறிப் போய் இருந்தது.
மெய்யப்பனும் நாகப்பனும் விபத்து நடந்த போதே உயிரை விட்டிருக்க மற்ற மூவரிடமும் சுவாசம் இருப்பதை உணர்ந்து விரைவாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்மந்தி போன் செய்து கூறிய விஷயத்தை கேட்டு பத்மநாபன் குடும்பம் இடிந்து போனார்கள்.
எல்லோரும் கிளம்பி அந்த விபத்து நடந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்திருக்க பிணமாய் கிடந்த இரட்டை மகன்களை கண்டு அனைவரும் கதறித் துடித்தனர். நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகும் பத்மநாபனையும் அழகம்மையையும் யாராலும் தடுக்க முடியவில்லை.
அவர்களின் வேதனையை மேலும் அதிகரிப்பது போல் வந்து இடியாய் விழுந்தது மருமகள்களை குறித்த செய்தி.
“வரலக்ஷ்மிங்குறவங்களுக்கு தலைல பலமான அடி. ஹெவி பிளட் லாஸ் வேற” என்ற மருத்துவர்,
“நாற்பத்தி எட்டு மணி நேரம் கழிச்சி தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும். எங்களால முடிஞ்சதை பண்ணிட்டோம். இனி கடவுள் மனசு வச்சா தான் உண்டு” என்று சொல்லி விட நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் வரலக்ஷ்மி பிழைக்க வேண்டும் என மொத்த குடும்பமும் கண்ணீருடன் மனம் கலங்கி நிற்க,
அவருக்கு அடுத்ததாய் வந்து நின்ற மருத்துவர் வசுந்தரலக்ஷ்மியைக் குறித்து சொன்னதும் ஸ்தம்பித்து போயினர்.
“குழந்தை வயித்திலேயே இறந்திடுச்சு. செவன் மந்த் பேபி வேற. ஆப்பரேட் பண்ணி தான் வெளிய எடுக்கணும். வேற ஆப்ஷன் இல்ல. அண்ட்…” என்ற மருத்துவர் தயங்கியபடி நிறுத்த இன்னும் என்ன? என்ற ரீதியில் தன்னைப் பார்த்த குடும்பத்தைக் கண்டு அந்த மருத்துவருக்கே வருத்தம் மேலோங்கியது.
ஆனால் அவரின் நிலையை இவர்களிடம் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து பெரு மூச்சுடன் கூறலானார்.
“அவுங்களுக்கு பிரைன்ல பலமான இஞ்சுரி. கான்ஷியஸ் இல்ல. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்” என்றதும் நிலை குத்திய பார்வை தான் அனைவரிடமும்.
வரலக்ஷ்மிக்கு உயிர் பிரியும் நிலை! வசுந்தரலக்ஷ்மிக்கு உயிர் இருந்தும் இல்லாத நிலை! இதை விட வேறு எந்த ஒரு பெரிய வேதனையையும் கடவுள் தங்களுக்கு அளித்து விட முடியாது என விரக்தியின் விளிம்பில் நிற்கும் நொடிகள் அனைவருக்கும்!
அதுவும் குழந்தை இறந்த செய்தியை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. கண்ணீரின் உச்சத்தில் நின்றிருந்தனர் மொத்த வீடும்!
பத்தாண்டு கால காத்திருப்பு! ஒரே நொடியில்… ஒரு சாலை விபத்தில்… இல்லை என்றாகி விட்டது! யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! அந்தப் பிஞ்சின் உயிரைக் கூட விட்டு வைக்காமல் கடவுள் தங்களை இந்த நிலைக்கு தள்ளி இருக்க வெறுத்தே விட்டது அனைவருக்கும்.
அதுவும் அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் கூறி விட அந்த மணித்துளிகள் எல்லாம் நரகத்தில் நிற்பது போலிருந்தது.
அதற்குப் பின் வந்த ஒவ்வொரு நொடிகளும் ரண வேதனைக்கு உட்பட்டவை தாம்!
“குழந்தையை எடுத்தாச்சு. அவுங்க இஞ்சுரீஸ்க்கும் ட்ரீட்மெண்ட் பண்ணியாச்சு. கான்ஷியஸ் எப்போ வரும்னு சொல்ல முடியாது. சில வாரம் ஆகலாம். சில மாசம் ஆகலாம். சில வருஷம் ஆகலாம். வராமையும் போகலாம். நடந்ததை மறக்குறதுக்கான வாய்ப்புகள் கூட இருக்கு. அவுங்க கண்ணு முழிக்கிறதுக்கு இனி கடவுளை தான் நம்பனும் நீங்க” என்று சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் கூறி விட்டுச் சென்ற செய்தியைக் கேட்டு கிஞ்சுத்தும் எல்லோரும் கதி கலங்கிப் போனார்கள்.
தங்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலையை கொடுத்த கடவுளை சபிக்க மட்டுமே முடிந்தது.
தென்றல் மீனா கண் விழிக்காமல் இருக்க அவளைக் குறித்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேட்ட போது “குழந்தைக்கு முழங்கால்ல தான் பலமான அடி. சின்ன மைனர் சர்ஜரி பண்ணி இருக்கோம். நடக்க ஒரு மாசம் ஆகும். மத்தபடி ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல” என்று கூறினார்கள் மருத்துவர்கள்.
இறந்து போன இரட்டையர்கள்! உயிருக்கு போராடும் நிலையில் வரலக்ஷ்மி! குழந்தை பறிபோய் சுய நினைவை இழந்த நிலையில் வசுந்தரலக்ஷ்மி. காலில் ஆப்ரேஷன் செய்த நிலையில் இருக்கும் ஆறு வயது தென்றல் மீனா!
எல்லோரும் அல்லாடி திண்டாடி தளர்ந்து நொந்து போயினர். ரண வேதனை மட்டுமே அவர்களின் மனதில் வியாபித்து இருந்தது.
மறு நாள் காலை வரை இதே நிலை நீடிக்க மெய்யப்பன் மற்றும் நாகப்பனின் சடலங்கள் பிரேத பரிசோதனை முடிந்து வந்திருந்தது.
மீண்டும் ஒரு கதறல்! கண்ணீர்ப் போராட்டம்! அந்தக் கண்ணீர்ப் போராட்டத்தை கூட்டுவது போல் வந்தது வரலக்ஷ்மியின் மரணச் செய்தி!
“சாரி எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணோம். பட் அவுங்களை காப்பாத்த முடியல” என்று கூறி விட இழப்பிற்கு மேல் இழப்பு! எதையும் தாங்கும் திடம் யாரிடமும் இல்லை!
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மட்டுமே விஞ்சி இருந்தது அனைவரின் முகத்திலும். எதற்குமே கலங்காத வெங்கடேசன் கூட இரண்டு நாட்களாக உடைந்து போய் கண்ணீர் தடத்துடன் இருந்தார்.
பத்மநாபன் தம்பதியினர் ஓய்ந்து பாதி உயிராகிப் போனார்கள். அடுத்தடுத்த காரியங்களை செய்ய வேண்டும் என மூத்த மகனாய் வெங்கடேசன் தான் அனைத்தையும் பார்த்தாக வேண்டி இருந்தது.
மொத்த குடும்பமும் இழப்பின் வலியில் இருளில் மூழ்கியிருந்த நேரம் ஒற்றை ஜோதியாய் அந்த இருளுக்கு வெளிச்சமூட்டும் விதமாய் வந்து சேர்ந்தது தென்றல் மீனா கண் விழித்த செய்தி.
அனைவரும் அவளைக் காண விரைய கண் முழித்தவளுக்கோ தான் இறுதியாக கண்ட, தன் கண் முன்னே நிகழ்ந்த அந்த கோர விபத்தே நியாபகம் வர கூடவே காரினுள் இரத்த வெள்ளமாகக் கிடந்த அன்னை தந்தையரின் முகமும் குழந்தையை பயம் கொள்ள வைக்க பெருங்குரலில் அழுக ஆரம்பித்து விட்டாள்.
தன் வீட்டினர் அனைவரையும் கண்டதும் இன்னும் அழுதவளை வாரி அணைத்துக் கொண்டார் வெங்கடேசன்.
“ஒன்னுமில்ல டா.. அதான் எல்லாரும் வந்துட்டோம்ல…” என்று அவள் உச்சந்தலையில் தவிப்புடன் தடவிக் கொடுத்தவரிடம்,
“லாரி கார்ல மோதிடுச்சு பெரியப்பா. மெய்ப்பா முகம் எல்லாம் ரெட் கலர்ல ஆகிடுச்சு. எல்லாரும் பயந்து கத்தினோம். அம்மா என்னை அப்படியே கட்டிப் பிடிச்சு அவுங்க கைக்குள்ள வச்சுட்டாங்க. வசும்மா பாப்பாவை பிடிச்சிட்டு சீட்ல மோதி கார் விண்டோ அவுங்க தலைல மோதிச்சு.. நான் நான்.. அம்மாவை இறுக்க கட்டிப் பிடிச்சு கண்ணை மூடிக்கிட்டேன். அப்புறம் கால்ல என்னமோ உடையுற மாதிரி தெரிஞ்சது.. அப்புறம்.. அப்புறம்….” என்று பயத்தில் அழுகை குறையாமல் ஒவ்வொன்றாய் சொல்ல, கேட்டவர்களுக்கு உயிர் வதை!
“எல்லாம் சரி ஆகிடும் மீனும்மா” என்றார் வெங்கடேசன் கமறிய குரலில்.
எல்லோரும் அவளை அணைத்து கன்னத்தை வருடி அன்பொழுக உபசரிக்க குழந்தையின் மனம் அன்னையை தேடியது.
“மெய்ப்ப்பா? வசும்மா? சித்தப்பா?” என குழந்தை மழலையில் பயத்துடன் மிளற்ற வெடித்துச் சிதறி விடும் போல் இருந்த நெஞ்சை அழுத்திக் கொண்டவர் மற்றொரு கையால் குழந்தையை தன் மார்பில் சாய்த்துக் கொண்டு அமைதியாக கண்ணீர் சிந்தினார்.
தன் பெரியப்பாவா கண்ணீர் சிந்துவது என்று குழந்தைக்கு நம்ப முடியாத திகைப்பு. தாய் தந்தையை பற்றிக் கேட்டதும் அவர் குலுங்கி அழுததும் இன்னும் கண்கள் விரிய பார்த்தவள் சட்டென்று என்ன தோன்றியதோ அவரின் கண்ணீரை வேக வேகமாக துடைத்து விட்டு “அழுகாதீங்க பெரியப்பா” என்றதும் இன்னும் உடைந்து போனார் வெங்கடேசன்.
எல்லோரும் உடல் குலுங்க அழுக ஓய்ந்து போய் மிகவும் சோர்ந்த முகத்தை வைத்துக் கொண்டு நின்ற பாட்டி தாத்தாவை கண்டவள் அப்படியே எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் வெங்கடேசனிடம் பார்வையை கொண்டு வந்து “பெரியப்பா… கால் வலிக்குது…” என்று அழுகையுடன் முகத்தை சுருக்க நெஞ்சில் வலியுடன் அவளின் கட்டுப் போட்டிருந்த இடது முழங்காலினை கண்டு “சரி ஆகிடும்டா மீனும்மா” என்றார் கரகரத்த குரலில்!
“அம்மா எங்க?” உதடுகளை பிதிக்கியபடி மீண்டும் கேள்வி எழுப்பினாள் சிறியவள்.
எல்லோரும் என்ன சொல்வதென தெரியாமல் கண்ணீரில் மூழ்கி இருக்க வெங்கடேசன் அவளின் காயம் கொண்டிருந்த குட்டி கைகளை தன் கைகளில் வைத்துக் கொண்டு மருந்து பூசப் பட்டிருந்த அந்த காயங்களை வேதனையுடன் பார்த்தபடி “உன் அம்மா.. மெய்ப்பா.. சித்தப்பா எல்லாரும் இனி எப்பவும் உன்னோட தான் இருப்பாங்கடா மீனும்மா. நாம கும்பிடுற சாமி மாதிரி. கண்ணுக்கு தெரியாம உன் கூடவே தான் இருக்க போறாங்க” ஒவ்வொரு வார்த்தையாக திடமாக அழுத்தி சொல்ல முயன்றும் முடியாமல் அந்தக் குழந்தை உள்ளம் இதை எப்படித் தாங்குமோ எனும் பதைபதைப்புடன் தடுமாறிய குரலில் அவர் சொல்லி முடித்ததும் குழந்தை புரியாமல் விழித்தபடி,
“எனக்கு சாமி மாதிரி வேண்டாம். நான் பாக்கணும். அம்மாவை.. வசும்மாவை.. மெய் ப்பாவை… சித்தப்பாவை.. எல்லாரையும் பாக்கணும்” என்றதும் நெஞ்சில் இரத்தம் வடிந்தது அனைவருக்கும்.
“பாக்கலாம்டா மீனும்மா. வீட்டுக்கு போய் பாக்கலாம்” என்று மட்டும் அப்போதைக்கு சமாளிப்பாய் பதில் சொன்னவரால் இல்லத்தில் அவர்களின் உயிரில்லாத உடலை வரிசையாக பெட்டியில் கொண்டு வந்து வைத்திருந்ததை கண்டு தென்றல் மீனா விம்மி விம்மி அழுத அழுகையை இந்த நொடி வரை மறக்க முடியாது!
வசுந்தராவின் நிலையையும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டதையும் அவளுக்குப் புரியும் படி சொல்லியதும் பாப்பா வேணும்.. பாப்பா வேணும் பெரியப்பா என்று அழுது அழுது அவள் ஓய்ந்து தன் கைகளிலேயே உறங்கியதும் வேதனை மாறா சுவடுகளாய்!!!