வசுந்தராவை இல்லத்தில் வைத்து பார்ப்பதற்கான நிலையில் அவரின் உடல் நிலை இல்லாததால் அவரை மருத்துவமனையிலேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயம்!
எனவே கண் விழிக்கும் வரை அவரின் வாசம் மருத்துவமனை என்றாகி விட தினம் அழகம்மையுடன் தென்றல் மீனாவும் வந்து விடுவாள் அவரைக் காண.
‘எப்போ வசும்மா கண்ணை திறப்பாங்க’ என்று வீட்டில் எல்லோரிடமும் தென்றல் மீனா அழுகையுடன் கேட்கும் போது அவர்களும் பதில் அறியாமல் அழுது விடுவார்கள் அவளை அணைத்துக் கொண்டு.
வெங்கடேசன் மட்டும் தான் “என் தங்கப் பொண்ணோட வசும்மா சீக்கிரம் கண்ணு முழிப்பாங்க. நீ சாமி கிட்ட வேண்டிக்கிட்டே இருடா” என்பார் அவளிடம்.
அவர் சொன்னதை கெட்டியாக பிடித்துக் கொண்டு தினம் பூஜை அறையில் அரை மணி நேரம் மேல் மண்டியிட்டு கடவுளிடமும் கடவுளிடம் சென்று சேர்ந்த அன்னை தந்தையரிடமும் சித்தப்பாவிடமும் வேண்டுதலை வைக்கத் தொடங்கி இருந்தாள்.
நித்தம் நித்தம் அன்னை தந்தையை நினைத்து அழுபவளை கண்டு பொறுக்காமல் ஓர் நாள் அனைவரின் முன்பும் “அழக் கூடாது மீனும்மா.. இனி நான் தான் உனக்கு அப்பா. இதோ விசாலாட்சி… இனி இவ தான் உனக்கு அம்மா… சரியா?” என்று ஆவலும் ஆசையுமாய் கேட்க,
“ம்ம்ஹும்… பெரியப்பா… என்னோட மெய்ப்பா தான் வேணும்… அம்மா வேணும்” என்று அவள் அழுததும்,
“அப்ப இந்த அப்பாவும் அம்மாவும் இனி உனக்கு வேண்டாமா” எனப் பாவமாய் வாடி விட்ட முகத்துடன் கேட்க,
அவர் வாடிய முகத்தை கண்டு பொறுக்காமல் “நோ பெரியப்பா.. நோ சேட் (sad) நான் அப்பா அம்மா கூப்பிடுறேன்” என்று அவர் தாடையை பற்றி சொன்னவள், அந்த நொடியே “அ…. ப்பா” என்று தயங்கி தயங்கி குழந்தை அழைத்து விட ஜென்ம சாபல்யம் அடைந்த உணர்வு வெங்கடேசனிற்கு.
சந்தோஷத்தில் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு மேலே தூக்கிப் போட்டு பிடித்து கண்ணில் நீருடன் சிரித்தவர்,
“இன்னொரு முறை சொல்லுடா” என்று கேட்க, “அப்ப்பா…” என்றாள் இந்த முறை சற்றே அழுத்தி உச்சரித்து.
நெஞ்சோடு பெறா மகளை அணைத்துக் கொண்டவர் அன்றிலிருந்து தான் பெற்ற மகளாகவே அவளை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தினார். ஒன்றிரண்டு தெரிந்த நபர்கள் கேட்ட போதும் “இனி மீனு என் பொண்ணு தான். நான் தான் அவ அப்பா. விசாலம் அவ அம்மா” என்று விட்டார் உறுதியாக!
வீட்டினர் அனைவருக்கும் தென்றல் மீனா வெங்கடேசனையும் விசாலாட்சியையும் அப்பா அம்மா என்றழைப்பது மகிழ்ச்சியை தான் கொடுத்தது.
அவர்களுக்கும் வெங்கடேசனின் பெண் பிள்ளைக்கான ஏக்கமும் ஆசையும் தெரியுமே! அதுவும் தென்றல் மீனா பிறந்ததில் இருந்து அவருக்குள் ஒரு வித நிறைவை விசாலாட்சியும் உணர்ந்திருக்க கணவரின் ஆசைப்படி அவளுக்கு மற்றொரு தாயாகிப் போனார் விசாலாட்சி.
வெங்கடேசனின் ஈடில்லாத அன்பிலும் குடும்பத்தினரின் அரவணைப்பிலும் தென்றல் மீனா அவரின் மகளாகவே வளர்ந்தாள். அவ்வப்போது அவளின் மெய்ப்பா மட்டும் அம்மாவின் நினைவுகள் வரும் போதெல்லாம் அவரின் கைகளுக்குள் புகுந்து கொண்டு “அப்பா” என்றபடி கண்ணை மூடிக் கொள்வாள்.
அவளின் தவிப்பை உணர்ந்து “அப்பா இருக்கேன்டா மீனும்மா” என்று அவளை ஆறுதல் படுத்துவார் வெங்கடேசன்.
கண்ணுக்குத் தெரியாத அழகானதொரு அப்பா மகள் பாசப் பிணைப்பு அவர்களை ஒரு தனி உலகில் கட்டிப் போட்டு விட அந்த உலகில் இருந்து தென்றல் மீனா வர விரும்பவில்லை!
இரண்டு ஆண்டுகள் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஓடி விட வசுந்தரா கோமாவில் இருந்து வெளிவந்து சுய நினைவை அடைந்திருந்தார்.
எல்லோரும் மருத்துவமனை வந்துவிட அனைவரையும் கண்ட வசுந்தராவின் பார்வை இறுதியாக தென்றல் மீனாவிடம் வந்து நின்றது.
தான் பார்த்த போதிருந்த தோற்றத்தில் இருந்து சற்றே உயரமாய் வளர்ந்து இருந்த தன் அக்கா மகளை கண்டதும் கண்கள் கண்ணீரில் நிறைந்து போனது அவருக்கு.
“அவுங்களுக்கு நினைவு திரும்பிடுச்சு. கண் முழிச்சுட்டாங்க. ஆனா நார்மலா நடமாட இன்னும் கொஞ்சம் நாள் எடுக்கும். கோமால இருந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தான் குணமடஞ்சு நார்மல் ஆகும். அதுக்கப்புறம் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்” என்று மருத்துவர் சொல்லி விட்டு வெளியேற, மருமகளை நெருங்கிய அழகம்மை அவளின் கையை பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்த, வசுந்தராவால் எதையும் பேச முடியவில்லை.
இரண்டு ஆண்டுகளாக அசைவற்று கிடந்த உடல் எதற்கும் ஒத்துழைக்கவில்லை. அந்த வாரம் முழுவதும் கண் விழிப்பதும் மூடுவதமாக மட்டுமே இருந்தவர் ஒரு சில நேரம் மட்டும் தென்றல் மீனாவை கண்ணால் அழைத்து அவள் அருகே அமர்ந்ததும் அவள் கையை பற்றியபடி உறங்கி விடுவார்.
மருத்துவரோ “அவுங்க கான்ஷியஸ் வந்த பின்னாடி இன்னும் அதே நாள்ல இருக்கோம்னு நினைக்கிறாங்க. கோமால இருந்த விஷயம் அவுங்களுக்கு தெரியல. அண்ட் அவுங்க கொஞ்சம் நார்மல் ஆனதுக்கு அப்புறம் எல்லா விஷயத்தையும் சொல்லுங்க. ரொம்ப அதிர்ச்சி தரக் கூடிய விஷயங்களை சொல்ல வேண்டாம்” என்று சொல்லி விட எல்லோருக்கும் நெஞ்சை அடைத்தது.
அவரிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் அதிர்ச்சி தருபவையான விஷயங்கள் என்பதை விட அவரின் உயிரை வேரோடு பிடுங்கி எறியக் கூடிய விஷயங்கள் அல்லவா?
குழந்தையை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று நினைக்கையிலேயே குலை நடுங்கியது. குழந்தை இறந்த செய்தியைக் கேட்டாலே அவரின் உயிர்க்கூட்டில் சுவாசம் நின்று விடுமே! இதனோடு கணவன் எங்கே எனக் கேட்கும் போது அதற்கான பதிலை கூறும் சக்தி யாரிடமும் இல்லை.
இரண்டு வாரங்கள் கழித்து தான் வசுந்தராவால் பேசவே முடிந்தது. எதிர்பார்த்ததை போலவே அவர் கேட்ட முதல் கேள்வியிலேயே எல்லோருக்கும் மூச்சு முட்டியது.
“அவர் எங்க அத்தை….” வறண்டு போய் கிடந்த தொண்டையுடன் திக்கித் திணறி அவர் கேட்டதும் எல்லோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதே தினத்தில் வந்து நின்று விட்ட உணர்வு.
யாரும் பதில் சொல்லவில்லை என்றதும் கண்ணீருடன் தென்றல் மீனாவை பார்க்க அவளோ தேம்பிய நிலையில் வெங்கடேசன் கைவளைவில் இருந்தாள்.
தன் வயிற்றில் இருந்த கனமான உணர்வினை உணர முடியாமல் நடுங்கும் நெஞ்சத்துடன் குனிந்து தன் வயிற்றை பார்த்த வசுந்தரா “குழந்தை… குழந்தை அத்த…..” என்று பதறி துடிக்க, “ஐயோ…” என்று அவள் கைகளை விட்டு விட்டு வாய் பொத்தி கதறி அழுதார் அழகம்மை.
அவரின் அழுகை நெஞ்சை அடைக்க எல்லோரையும் பார்த்தவர் “குழந்தை என்ன ஆச்சு? அவுங்க எங்க? அக்கா எங்க? மாமாக்கு என்னாச்சு? எல்லாரும் நல்லா இருக்காங்க தானே……?” என்று விடாது கேட்க யாரிடமும் பதில் சொல்லும் திடம் இல்லை.
“யாராவது சொல்லுங்களேன்….” என்று தன் சக்தியை திரட்டி அவர் பலமாய் கத்த, “இவ்வளவு ஸ்ட்ரெஸ் பண்ணி பேசாதீங்க” என்று மருத்துவர் கூற, வசுந்தராவிற்கு தலை வெடிப்பது போல் இருந்தது.
சுற்றி இருந்த தன் குடும்பத்தில் தன் கணவன், அக்கா, அத்தான் இல்லை என்றதும் நெஞ்சம் நடுங்க உயிர் துடிக்க அவர்கள் இருக்க வேண்டுமே எனும் கலக்கத்துடன் மீண்டும் மீண்டும் கத்தி குழந்தை எங்கே எனக் கேட்டு கதறியதில் வேறு வழியின்றி மருத்துவரே பெரு மூச்சுடன் அனைத்தையும் அவரிடம் சொல்லி விட அசைவின்றி அனைவரையும் பார்த்தவர் அடுத்த நொடி வெடித்து அழுதார்.
படாது பாடு பட்டு அவரை சமாதானம் செய்து மருந்தின் உபயத்தில் மீண்டும் உறங்க வைத்தனர். அன்று மாலையே விஷயம் அறிந்து வசுந்தராவின் பெற்றோரும் வந்து விட கண் விழித்ததும் பெற்றோரை கண்டு ஒரு உணர்வுப் போராட்டம் மீண்டும்!
அதற்கடுத்து வந்த நாட்களில் கண்ணீரில் மூழ்கி தன்னையே மறந்து வேதனையில் தவித்தவரை ஒரு வழியாக தேற்றி ஆறுதல் படுத்தினார்கள் அனைவரும்.
தென்றல் மீனா அவரோடே இருக்க அவளின் அருகில் கொஞ்சம் கொஞ்சமாக தன் வேதனையை மறைத்துக் கொண்டார் வசுந்தரா.
ஒரு வழியாக முப்பது நாட்கள் கழித்து அவரை இல்லம் அழைத்து வந்ததும் “நாங்க எங்க பொண்ணை எங்க கூடவே கூட்டிட்டு போறோம்” என்று அறிவித்த வசுந்தராவின் பெற்றோர்,
“இனி அவ இங்க இருந்து என்ன செய்யப் போறா சம்மந்தி! மாப்பிள்ளையும் இல்ல. வருவும் இல்ல” என்று அழுதவர்களின் முடிவைக் கேட்டு அனைவரின் நெஞ்சமும் கனத்தது.
தென்றல் மீனாவிற்கு வசுந்தராவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்று விடுவார்கள் என்பது மட்டும் நன்றாக விளங்க தன் அன்னையின் முகத்தை கொண்ட தன் இன்னொரு அன்னை தன்னை விட்டு பிரிந்து விடுவாரோ எனும் அச்சத்தில் அன்று போல் இன்றும் அவரின் முன்னே மண்டியிட்டு அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டு,
“இங்கே இருந்து போகாதீங்க வசும்மா. என் கூடயே இருங்க வசும்மா” என்று அழத் துவங்க, அடுத்த நொடி வசுந்தராவின் அன்னை சற்றும் யோசிக்காமல் “முதல்ல அவளை விடுடி. எல்லாம் உன்னால தான். அன்னைக்கும் இப்படித் தான் அவளை எங்க கூட வர விடாம காலைக் கட்டிக்கிட்டு அட்டகாசம் பண்ண. இன்னைக்கும் அவளை எங்க கூட வர விடாம அவளை இங்கேயே இருக்க சொல்ற!” என்று ஆவேசத்துடன் சொன்னவர்,
“நீ பண்ண கலாட்டால தான் அந்த விபத்து நடந்து என் மகளும் மாப்பிள்ளைங்களும் போய் சேர்ந்தாங்க. இல்லேன்னா முதல் நாளே நாங்க மட்டும் வசுவை கூட்டிட்டு கிளம்பி இருப்போம். எல்லாம் உன்னால தான்” என்று ஆக்ரோஷத்துடன் முடிக்க வசுந்தராவின் மடியில் தலை சாய்த்திருந்த எட்டு வயது தென்றல் மீனா தன் தாய் வழிப் பாட்டியின் ஆக்ரோஷமான வார்த்தைகளில் பயந்து அவர் சொன்னதன் அர்த்தம் உணர்ந்து தேம்பி அழ அனைவருமே பேரதிர்ச்சியுடன் நின்று விட்டனர்.
வசுந்தரா அன்னையை கோபமாய் பார்த்து எதோ சொல்ல வருவதற்கு முன்பு “பேசாத வசு. முதல்ல உன்னோட துணிமணி எல்லாம் எடுத்திட்டு வா. கிளம்பலாம். இல்லேன்னா உன்னை இங்கேயே இருக்க சொல்லி உன் உசுரையும் குடிச்சிட போறா இந்த…” என்று அதற்கு மேல் என்ன சொல்ல வந்தாரோ…
“போதும் நிறுத்துங்க” என்று வெங்கடேசன் வீடே அதிர கர்ஜித்ததில் அவரின் வாய் அப்படியே பசை போட்டதை போல் அதிர்வுடன் ஒட்டிக் கொண்டது.
மகனின் கோபம் உணர்ந்து பத்மநாபன் அவரைத் தடுக்க பார்க்க, தந்தையை ஒற்றை பார்வையில் அடக்கியவர், “இன்னொரு வார்த்தை என் பொண்ணை பத்தி பேசினீங்கன்னா மரியாதை கெட்டிடும்” என்று அத்தனை கோபத்துடன் அழுத்தமாய் சொன்னவர்,
“உங்களுக்கு உங்க பொண்ணை இங்க இருந்து கூட்டிட்டு போகனும்னா அதைப் பத்தி மட்டும் அவுங்க கிட்ட பேசினா போதும்! அதை விட்டுட்டு என் பொண்ணை பத்தி பேச வேண்டிய எந்த ஒரு அவசியமும் உங்களுக்கு இல்ல! பேசவும் கூடாது! பேசவும் விட மாட்டேன்!” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவர்,
பாட்டியின் வார்த்தைகளில் துடித்து விம்மி அழுத மகளை கைகளில் அள்ளிக் கொண்டு வசுந்தராவை ஒரு பார்வை பார்த்தவர்,
“நீ இங்க இருக்கிறது மீனுவோட விருப்பம். அவ சின்ன பொண்ணு. எதோ உன் மேல இருக்க பாசத்துல இப்படி சொல்றா. ஆனா உன் முடிவு என்னவோ அதை இங்க எல்லாரும் ஏத்துக்குவோம். என் பொண்ணும் அதை ஏத்துக்குவா” என்று கையில் இருந்த மகளைப் பெருமிதமாய் பார்த்துச் சொன்னவர்,
“இங்க நீ இருந்தாலும் சரி. உன் அம்மா அப்பாவோட கிளம்பினாலும் சரி. உன்னை யாரும் எதுவும் சொல்லப் போறதில்ல. முடிவு எடுக்க வேண்டியது உன் கைல. யாரும் உன்ன கட்டாயப் படுத்த மாட்டோம். என் பொண்ணு உட்பட” என்று தெளிவாக அழுத்தம் திருத்தமாக சொன்னவர் வசுந்தராவின் அன்னையை அதே அழுத்தத்துடன் பார்த்து விட்டு மகளுடன் வெளியே சென்று விட்டார்.
வெங்கடேசனிற்கு வசுந்தரா இங்கேயே இருப்பது எந்த வித பிரச்சனையும் இல்லை. அதே சமயம் அவரின் அன்னை தென்றல் மீனாவை பேசியதையும் பொறுக்க முடியவில்லை. எனவே தான் நீ என்ன முடிவெடுத்தாலும் உன்னை யாரும் கட்டுப் படுத்த மாட்டோம். என் மகள் உட்பட என தெளிவாக சொல்லி சென்று விட்டார்.
அவர் கைகளில் இருந்த தன் சகோதரியின் மகளை கவலையுடன் பார்த்த வசுந்தரா அன்னையிடம் கோபமாக “இனி மீனுவை இப்படி பேசாதீங்கம்மா. இப்படி பேசுறதா இருந்தா எங்க வீட்டுக்கு வராதீங்க” என்று கோபமாக சொன்னவர் தன் முடிவையும் அதில் சேர்த்தே சொல்லி விட,
“வசு…..” என்று அவரின் அன்னை எதோ கூற வர அவரைப் பேச வேண்டாம் என்று தடுத்தவர்,
“மீனு நம்ம வரூ பொண்ணுமா. என் பொண்ணும் தான். அவளை விட்டு நானும் இங்க இருந்து வர மாட்டேன். என்னை இங்க தானே கல்யாணம் பண்ணிக் கொடுத்தீங்க! செத்தா நாகப்பன் மனைவியா பத்மநாபன் அழகம்மை மருமகளா என்.. மீ.. மீனுக்குட்டியோட வசும்மாவா இங்கேயே இருந்து சாகுறேன். என்னைய கூப்பிடாதீங்க” என்று விட்டார் முடிவாக.
மகளின் உறுதியை அவர்களால் மறுக்க முடியவில்லை. அதற்கடுத்து வந்த நாட்களில் அவ்வப்போது வந்து மகளை பார்த்து விட்டுச் செல்லும் போதெல்லாம் தென்றல் மீனாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அத்தனை தவிக்க வெங்கடேசன் அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவில்லை.
“அவசியம் இல்ல. என் பொண்ணை நீங்க பேசினதும், என் பொண்ணு கிட்ட நீங்க பேசினதும் அதுவே கடைசி தடவையா இருக்கட்டும்” என்று விட்டார் பிடிவாதமாக.
“அவ எங்களுக்கும் பேத்தி தான்” என்று உரிமையாக உணர்ச்சி வசப்படும் போது “அப்படி உங்க பேத்தின்னு நினைச்சு தான் அன்னைக்கு அப்படி ஒரு பேச்சு பேசுனீங்களா?” என்று சூடாக கேட்டவர்,
“அவ உங்க பேத்தின்ற விஷயத்தை நானும் மறுக்கல. அதே சமயம் அவ இனி வெங்கடேசனோட மக! என் சொத்து! இந்த வீட்டோட குல தெய்வம்! எங்க மொத்த வீடும் கொண்டாடுற தேவதை! அவளை நீங்க பேசினதை என்னைக்கா இருந்தாலும் என்னால மறக்க முடியாது” என்றவரின் அதி தீவிரமான பாசத்தில் வாயடைத்து போனார்கள் பெரியவர்கள். அதற்கு மேல் அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை.
மகளை மட்டும் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுச் சென்று கொள்வதோடு நிறுத்திக் கொண்டனர். வருடங்கள் ஓடிய பின்னர் அவர்களும் உடல் நலக் குறைவினால் இயற்கை எய்திவிட வசுந்தராவின் மொத்தமும் பத்மநாபன் குடும்பம் தான் என்றாகிப் போனது.
இடையில் ஒரு முறை பத்மநாபனும் அழகம்மையும் கூட அவரிடம் மற்றொரு திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேட்டதற்கு பலமாக மறுத்து விட்டவர்,
“பத்து வருஷமா உங்க மகன் கூட உயிரா வாழ்ந்திருக்கேன். என்னால இன்னொரு வாழ்க்கையை நிச்சயம் ஏத்துக்க முடியாது அத்தை!” என்றவர் அன்னை தந்தையிடம் சொன்னது போலவே “என் காலம் முடியிற வரைக்கும் நாகப்பன் மனைவியா உங்க மருமகளா மீனுக்கு அம்மாவா மட்டும் இருக்க ஆசைப் படுறேன். என்னை வேற எதுக்கும் கட்டாயப் படுத்தாதீங்க” என்று கை கூப்பி கெஞ்சி அழுது விட்டதில் அதற்கடுத்து அவர்கள் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை!
காலங்கள் ஓடிய நிலையில் தென்றல் மீனா வெங்கடேசன் விசாலாட்சியின் மகளாக அவர்களின் உயிரான அன்பில் வளர்ந்து விட அந்த அழகான அன்பின் நிலைப்பாடை யாரும் குலைக்கவில்லை.
அதுவும் வெங்கடேசன் அவளின் மேல் வைத்திருக்கும் அளவில்லாத அன்பை கண்டு வசுந்தரா உட்பட அவர்களின் பாசப் பிணைப்பை மனதார ஏற்றுக் கொண்டார்.
அவ்வபோது மனதில் அக்காவின் நினைவு எழும் போதெல்லாம் மனம் பாரமாகி விடும். ஆனால் அதனை ஒரு நாளும் தென்றல் மீனாவிடம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.
அன்று தன் அன்னை உன்னால் தான் அவர்கள் இறந்து போனார்கள் என்று கூறியதும் அவள் துடித்து அழுததும் அதற்கடுத்து வந்த நாட்களில் அதையே சொல்லி சொல்லி வெங்கடேசனின் மார்பில் சாய்ந்து அழுத அழுகையும் கண்டு யாரும் அவளிடம் மெய்யப்பன் வரலக்ஷ்மி குறித்த பேச்சினை எடுக்கவே பயந்து போயினர்.
வசுந்தராவும் அவள் வருத்தம் கொள்ளக் கூடாதென தன் கவலைகளையும் மனக்கிடங்கினையும் மானசீகமாக இறைவனடி சேர்ந்த கணவரிடம் மட்டும் சொல்லி விட்டு தன் கண்ணீரை வெளிக் காட்டாமல் தன்னுள்ளே மறைத்துக் கொள்வார்.
தென்றல் மீனாவின் மகிழ்விற்கு முன்பு வேறு எதுவும் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை.
அன்பின் அஸ்திவாரத்தில் இத்தனை ஆண்டு காலம் வெங்கடேசனின் மகளாக வாழ்ந்து வந்தவள் இன்று அவர் பழைய ரணங்களை அனுபவிக்கும் வகையில் நீ நான் பெற்ற மகளே இல்லை என்று சொன்னதும் காய்ந்த சருகாகி இதோ தன்னைப் பெற்ற அன்னை தந்தையரின் நினைவில் துடித்து தவித்து அந்தப் புகைப்படத்தை பாரம் நிறைந்த நெஞ்சத்துடன் மீண்டும் சுவற்றில் மாட்ட எத்தனிக்க கதவு திறக்கப்படும் சப்தம்!
வசுந்தரா தான் வருகிறார் என நினைத்து அவள் மெதுவாக திரும்ப அங்கே வந்து நின்றவனைக் கண்டு அவளின் வற்றியிருந்த கண்கள் கடலாய் விரிந்தது! உள்ளம் வேகமாக துடித்தது! கால்கள் நிலை பெறாமல் தள்ளாடியது!
உதடுகள் நடுங்க உயிர் கதற “மொழி” என்றவளின் உயிரோட்டமான உச்சரிப்பு அவனின் உள்ளாழம் வரை சென்று அவனின் உயிரை மீட்டெடுக்க “மொழி” என அவள் மீண்டும் அதிர்வு நீங்காமல் கண்ணீருடன் அழைத்ததும்,
“போதும்டா தென்றல்! வந்திடு என்கிட்ட!!!” என குரல் தழுதழுக்க கண்ணில் நீருடன் அவன் கைகளை விரித்ததும் அடுத்த நொடி தடுமாறிய பாதங்கள் அவன் காதல் அழைப்பில் வலுப்பெற்று அவனை நோக்கி விரைந்திருந்தது!
“மொழி” எனக் கதறியபடி ஓடிச் சென்று தன் உயிரன்பனின் கைகளுக்குள் தஞ்சமடைந்திருந்தாள் தென்றல் மீனா!!!