ஒரு வார காலமும் யாரிடமும் பேசாமல் திக் பிரம்மை பிடித்தவள் போல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கும் பேத்தியை கண்டு பத்மநாபனுக்கும் அழகம்மைக்கும் அளவு கடந்த பயம் உண்டானது.
வீட்டில் எல்லோரும் வசுந்தராவிடமும் தன்னிடமும் வந்து அவளைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் ஆதங்கம் அதிகரித்தது அழகம்மைக்கு.
அத்தோடு நில்லாமல் வசுந்தராவும் இந்த ஒரு வார காலமாக இறுகிப் போயிருக்க அவரையும் யாராலும் நெருங்க முடியவில்லை.
விசாலாட்சி கண்ணீருடன் பேச வந்தால் கூட முகம் கொடுக்காமல் அந்த இடத்தில் இருந்து அகன்று விடுவார்.
எல்லாவற்றிற்கும் மேல் பேத்தியை போலவே வெங்கடேசனும் மௌனமாக அறைக்குள்ளேயே அடைந்திருப்பது தான் மனதை முள்ளாய் தைத்தது.
ஆத்திரத்திலும், மகள் வாழ்வில் தன்னை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டு விடுமோ எனும் பயத்திலும் அவர் வார்த்தைகளை விட்டிருந்தாலும் அடுத்த நொடியே ஜடமாக மாறி வசுந்தரா பேசியதற்கு கூட எதிர் வினை ஆற்றாமல் தளர்ந்த நடையுடன் அறைக்குள் சென்று மறைந்தவர் தான்.
அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. மூத்த மகனின் மேலிருந்த கோபத்திலும் அதிருப்தியிலும் பத்மநாபன் தம்பதியினரும் அவரை கவனிக்க எண்ணவில்லை!
ஒரே அறையில் அவரோடு இருக்கும் விசாலாட்சியால் கூட கணவரின் மன நிலையைக் கணிக்க முடியவில்லை.
அமைதியான பார்வையுடன் கண்ணீர் ததும்பும் கண்களுடன் சாய்வு நாற்காலியில் ஜன்னலை வெறித்துக் கொண்டும் சில நேரம் தொண்டைக் குழி ஏறி இறங்க நடந்தவற்றை எண்ணி தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டும் அவர் வேதனைப் படும் போதெல்லாம் தள்ளி நின்று கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது அவரால்.
கணவரை நெருங்கினால் “தனியா விடு விசாலம்” என்கிற மரத்துப் போன வார்த்தைகள் மட்டுமே அவரிடம் இருந்து வெளிவரும்.
தன் கணவரின் குரலா இது என்று எண்ணும் வகையில் வெங்கடேசன் முற்றும் முழுதாக உருக்குலைந்து போய்க் கிடந்தார்.
மனம் மகளைப் பற்றியும் அவள் மனதில் தான் ஏற்படுத்திய ஆற்ற முடியாத காயத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, அவரின் மனதை பற்றி அறிய யாரும் முன் வந்திருக்கவில்லை.
அவர் பேசிய வார்த்தைகளும் வெளிப்படையாய் உயிராய் வளர்த்த மகளை தன் மகள் அல்ல என அவர் சொல்லியவையும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பான உண்மையாக இருந்தது.
அதுவும் இப்போது சந்தியா, மயூரி, நவீன் பிரவீன் எல்லோருக்கும் இனி மறைக்க ஒன்றும் இல்லை என மெய்யப்பன் வரலக்ஷ்மி குறித்து அனைத்தும் தெரியப் படுத்தப் பட்டிருந்தது.
“பூஜை அறையில கூட அவுங்க போட்டோ இருந்தது கிடையாதேங்க..” என்று சந்தியா கணவனிடம் கனத்த மனதுடன் கேட்க,
“இருந்தது சந்தியா. ஆனா மீனு சாமி கும்பிடும் போதெல்லாம் மெய்ப்பா அம்மான்னு சொல்லி சொல்லி அழுதா. அப்படி ஒரு நாள் ரொம்ப அழுது மயக்கம் ஆகிட்டா. அதுல இருந்து அப்பாவுக்கு பயம் ஆகிடுச்சு. அதனால பூஜை அறைல போட்டோ வைக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. மீனுவும் அப்பாவுக்காக அவரோட பயத்தை புரிஞ்சிக்கிட்டு அடுத்து போட்டோ வைங்கன்னு கேட்கல” என்றவன்,
“அவ அப்பாவை அப்பான்னு நினைக்கல சந்தியா! அப்பா தான் உலகம்னு வாழ்ந்தா! அவரை மீறணும்னு எப்பவும் மீனா நினைச்சது இல்ல. அதுக்கு விதார்த்தோட மேரேஜ் அக்செப்ட் பண்ணதே அவளோட அப்பா பாசத்தை சொல்லிடும். அவளையும் மீறி இயல்பா நடந்த விஷயம் தான் அருண் டாக்டர் மேல வந்த காதல்! அதை அப்பாவால ஏத்துக்க முடியாம இவ்வளவு பிரச்சனை” என்றவன்,
“அப்பா சொல்லி தான் அவ என் கூட பிறந்த தங்கச்சி இல்லேன்னு எனக்கே நியாபகம் வந்தது சந்தியா” என்றான் தொண்டை அடைக்க!
வெங்கடேசனின் பேச்சினால் எல்லோருமே காயம் கொண்டிருந்தனர். பேசியவரும் காயம் கொண்டிருந்தார். பேசியதை கேட்டவர்களும் காயப் பட்டுப் போய்க் கிடந்தனர்!
பெரியவர்கள் பேத்தியின் நிலை குறித்து தவித்து பயந்து கிடக்க அழகம்மை இதற்கு மேல் தாமதிக்க முடியாதென்று அருண்மொழிக்கு அழைக்க சொல்லி விட்டார் கணவரிடம்!
“அருணுக்கு போன் போட்டு வர சொல்லுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. ஒரு வாரமா பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கா. மனசு படபடன்னு இருக்கு. அவன் வந்தா தான் இவ சரியாவா” என்றார் முடிவாக.
மனைவிக்கு குறையாத பயம் பத்மநாபனிடத்தில்! பேத்தியை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவரால். அதே சமயம் மூத்த மகனை எண்ணி ஆத்திரம் எல்லை கடந்தது.
“வெங்கடேசன் இப்படி சிதறு தேங்காய் மாதிரி பொட்டுன்னு இவ்வளவு பெரிய விஷயத்தை நடு வீட்டில வச்சு உடைப்பான்னு நான் நினைக்கவே இல்ல அழகு” என்று நூறாவது முறையாக மனைவியிடம் நொந்து போய் சொன்னார் பத்மநாபன்.
அழகம்மைக்கும் மகன் பேசியது குறித்து கோபம் இருந்தது தான். ஆனால் பேசினாலும் எல்லோரையும் விட இப்போது நரக வேதனையை அனுபவிப்பது தன் மூத்த மகன் தான் என அத்தாயுள்ளம் உணர்ந்து தவித்தது.
தவித்தாலும் அவரிடம் சென்று பேச வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. மனம் இன்னும் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்தது.
“அவன் பேசினது பேசிட்டான். இனியும் அதையே நினைச்சி எல்லாரும் இப்படியே இருந்தா சரியாகிடுமா? நாம தான் இனி எல்லாத்தையும் சரி பண்ணனும். நீங்க அருணுக்கு போன் பண்ணுங்க முதல்ல” என்று அழகம்மை முடிவாகக் கூற,
“நானும் இங்க பிரச்சனை நடந்த மறு நாளே அவனுக்கு கூப்பிடலாம்னு தான் இருந்தேன் அழகு. மீனு தான் வேண்டாம்னு சொல்லிட்டா” என்றதும் கணவரை முறைத்தவர்,
“எப்ப கேட்டீங்க அவ கிட்ட?” என்று கேட்க,
“வெங்கடேசன் பேசின அன்னைக்கே நைட் கேட்டேன். வேண்டாம் தாத்தான்னு கூட சொல்லாம தலை மட்டும் தான் இல்லைன்னு அசைச்சா. அதுக்கு மேல நான் வற்புறுத்தி கேட்டதுக்கு பதில் பேசாம கண்ணை மூடிக்கிட்டா. நானும் அவளை கஷ்ட படுத்த வேண்டாமேன்னு விட்டுட்டேன். ஆனா இப்ப அருண் கிட்ட சொல்லி இருக்கலாமோன்னு தோணுது அழகு” என்றார் குரலடைக்க.
“அவ சொன்னா நீங்க அப்படியே கேட்பீங்களா? நீங்க முதல்ல அவனை வர சொல்லுங்க. அவன் வராம இவ சரியாக மாட்டா” என்றார் பேத்தியை பற்றி நன்கு அறிந்தவராக.
“டெல்லில இருப்பான் அழகு. சொன்னாலும் நாளைக்கு தான் வர முடியும்” என்றவர்,
“என்னன்னு சொல்ல அவன் கிட்ட? இங்க நடந்தது எல்லாம் தெரிஞ்சா தாங்க மாட்டான் அழகு” என்றார் நெஞ்சை நீவிக் கொண்டு!
கணவரின் கூற்றில் அழகம்மைக்கும் கண்கள் கலங்கியது. உண்மை தான்! இங்கே நிகழ்ந்தவை பற்றி தெரிந்தால் அவனும் காயம் கொள்வான் தான்.
ஆனால் காயம் கொண்டவளின் ரணத்தை ஆற்றுப் படுத்த அவனால் மட்டுமே முடியும் என்கையில் அவனை இங்கே வர சொல்லித் தான் ஆக வேண்டும் என்று உறுதியாக எண்ணினார் அழகம்மை.
அதன் பொருட்டு கணவரிடம் மீண்டும் வலியுறுத்தி சொல்ல அவர் அலைபேசியை எடுக்கும் போதே நிகேதன் மூச்சு வாங்க அவர்களின் அறைக்குள் வந்து நின்றான்.
“என்னடா நிகேதா?” என்று பெரியவர்கள் அவன் வந்த வேகத்தில் ஒன்றும் புரியாமல் யாருக்கு என்னவோ எனப் பதற,
“தாத்தா.. பாட்டி.. அருண் வந்திருக்கார்..” என்றதும் இருவரும் அதிர்வுடன் எழுந்து நின்று விட்டனர்!
“அருணா… நம்ம வீட்லையா?” என்று பத்மநாபன் பேரனை நெருங்கியபடி கேட்க,
அவனது உயிர்த் தவிப்பான கேள்வியில் பத்மநாபனிற்கு தொண்டை அடைத்துக் கொண்டது!
என்னவென்று கூறுவது என இப்போதும் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஒரு புறம் அவன் இல்லத்திற்கே வந்து நின்றது அதிர்வென்றால் மற்றொரு புறம் அவன் வந்து விட்டான்! அதுவே போதும்! இனி பேத்தியை அவன் பார்த்துக் கொள்வான் எனும் ஆசுவாசமும் நிம்மதியும்!
அவன் வருகை தெரிந்த அனைவரும் ஹாலில் வந்து சேர்ந்தனர். வெங்கடேசன் தென்றல் மீனாவைத் தவிர்த்து!
வசுந்தரா அவனை வரவேற்றதும் ஒவ்வொருவராக அவனை வரவேற்க அவர்கள் யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் அவனில்லை.
உள்ளமெங்கும் உரியவளின் நினைவும் வலியும் வேதனையுமே பிரதானமாக ஆட்கொண்டிருக்க தென்றல் தென்றல் என மனம் அவளைக் காணத் துடித்தது!
பெரியவர்களை கண்டதும் அவர்களிடம் விரைந்தவன்,
“பிளீஸ் தாத்தா.. நான் முதல்ல தென்றலை பாக்கணும்” என்றான் பெரும் பரிதவிப்புடன்.
“மேல இருக்காப்பா. அவ ரூம்ல” என்றவர்,
“நீ எப்படிப்பா வந்த? யாரு சொன்னா” என்று கேட்டு விட “நான் தான் வர சொன்னேன் மாமா” என்றார் வசுந்தரா!
மருமகளை ஆச்சர்யமாய் பார்க்க எல்லோரின் கவனமும் வசுந்தராவிடம் குவிந்தது.
“நான் தான் நேத்து நைட் போன் பண்ணி வர சொன்னேன். நீங்க வந்தா மட்டும் தான் அவளை எங்களால மீட்க முடியும்னு சொன்னேன். இதோ.. நம்ம மீனுக்காக அவரோட தென்றலுக்காக இன்னைக்கு காலைல வந்து இங்க நிக்கிறாரு” என்றவர்,
“போங்க தம்பி. நீங்க போய் அவளைப் பாத்து பேசுங்க. இப்படியே விட்டா என்ன ஆவாளோன்னு எனக்கு பயமா இருக்கு” என்றார் கண்கள் நனைய.
எல்லோருக்கும் மனம் கனத்தது. ஒரு வாரமாக அவர்களும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்! தென்றல் மீனா அறையை விட்டு வெளியே வந்தால் கூட போதும் என்ற நிலையில் இருந்தனர் அனைவரும்.
வசுந்தரா கூறியதும் அழகம்மை அருணிடம் “ஒரு வாரமும் சரியா சாப்பிடல அருண். ரூம்குள்ளயே கிடக்கா. எவ்வளவு கெஞ்சியும் வெளில வரல. யாரையும் பாத்து பேசல. வசுவும், நானும் இவரும் தான் அப்பப்ப போய் பாலும் ஜூசும் கொடுத்திட்டு வரோம். எங்க கிட்ட கூட பேசவே இல்ல. நீ போய் பாரு அவளை” என்றதும் விறுவிறுவென மாடிப் படியை நோக்கி கால்களை எட்டிப் போட்டவனின் வேகம் படிகளின் அருகே இருந்த அறையில் தளர்ந்த நடையுடன் வெளிய வந்த வெங்கடேசனைக் கண்டதும் அப்படியே தேங்கி நின்றது.