அருண்மொழி வந்திருக்கும் விஷயத்தை விசாலாட்சி சென்று கணவரிடம் சொன்னதும் சாய்விருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தவர் விருட்டென்று எழுந்திருந்தார்.
“இங்கயா விசாலம்! நம்ம வீட்டுக்கா?” என்று நம்ப வியலாத திகைப்புடன் மனைவியிடம் கேட்க,
“ஆமாங்க. இங்க தான். வெளில இருக்கார். நம்.. நம்ம மீனுவை பாக்கணும்னு கேட்டுட்டு இருக்கார் மாமா கிட்ட” என்றதும் முகம் கசங்கியது வெங்கடேசனிற்கு.
அன்று அவனை நேரில் சந்தித்து திடமாக பேசியவரால் இன்று அவனின் முகம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
இங்கு நடந்த அனைத்தும் அவனுக்குத் தெரியுமா? தெரிந்து தான் வந்திருக்கிறானா? இல்லை.. தெரியாதா? தெரியாமல் பின் எதற்காக வந்திருக்கிறான் என ஒன்றும் புரியாத நிலை.
அதே சமயம் அவன் முன்னே சென்று நிற்க தனக்கு இப்போது எந்த தகுதியும் அருகதையும் இல்லை என்றே அவரின் மனசாட்சி இடித்துரைத்தது.
தான் பேசியவை நினைத்து தன் மீதே சுய வெறுப்பு மீண்டும் பெருக தொய்ந்து அமர்ந்து விட்டார் இருக்கையில்.
விசாலாட்சி “என்னாச்சுங்க…” என்று பதறி அவரருகில் வர,
கணவரின் நிலையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை விசாலாட்சியால். பேசிவிட்டு அவர் குற்ற உணர்வில் மறுகி தவிப்பது புரிந்தாலும் அவராலும் கணவர் பேசியதை கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆரம்பத்தில் மகளின் நேசம் மனதை உருத்தி இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல அவளின் விருப்பத்தை மனம் ஏற்றுக் கொண்டது தான். ஆனால் கணவருக்காக அதை அவளிடம் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் அதீத கோபத்தில் எல்லோரின் முன்பும் கணவர் உதிர்த்த வார்த்தைகள் மகளின் உறவை உடைக்கும் அளவிற்கு அல்லவா அமைந்து விட்டது!
அதுவும் ஒரு வாரமாக தென்றல் மீனாவின் நிலை அவரை முற்றிலும் புரட்டி போட்டிருந்தது.
தன் கையால் அவளால் காஃபி குடிக்காமல் இருக்க முடியும் என இந்த ஒரு வார காலமாக தான் அறிந்து கொண்டார். மனதில் அத்தனை பாரம்!
அந்த விபத்தில் மெய்யப்பனும் வரலக்ஷ்மியும் இறந்த பின்னர் “இனி மீனு நம்ம பொண்ணு விசாலம்” என்று கணவர் சொல்லியதும் அவரின் ஆசைக்காகவே ஆறு வயதில் இருந்து ஆசை ஆசையாய் வளர்த்த மகள் இன்று தன்னிடம் பாரா முகம் காட்டியது உயிர் வதையாக இருந்த போதிலும் கணவர் உடைத்த உண்மையும் அத்தனை மனக் கசப்பை உண்டு செய்திருந்தது!
எப்படி இனி மீனுவிடம் பேசுவது என அவர் கலங்கித் தவிக்க கணவரோ அவளிடம் பேசக் கூட இல்லாமல் அவளைப் போலவே அறைக்குள் அடைந்து கிடப்பது இன்னும் வலியை கொடுத்தது.
இப்போது அருண்மொழி நேரிலேயே வந்திருக்க அதுவும் கணவரின் வார்த்தைகளை மீறி வந்திருக்க அதை வந்து சொல்லியும் தளர்ந்து போய் அமர்ந்திருப்பவரின் எண்ணப் போக்கினை கிரகிக்க முடியவில்லை விசாலாட்சியால்!
ஒரு வேளை அவன் வந்தது கோபமோ என கணவரின் முகம் பார்க்க கோபத்திற்கான எந்த வித சுவடும் இல்லை. அதற்கு மாறாக ஒரு வித ஆழ்ந்த அமைதி அவரின் முகத்தில்.
“என்னங்க.. என்ன ஆச்சு?” என்று விசாலாட்சி கணவரை நெருங்க,
“வெளில தாங்க இருக்கார். வாங்க” என்று விசாலாட்சி கணவரை அழைத்தார் சற்றே தெம்பான குரலில்.
அவர் கேட்ட விதமும் அவர் முகத்தில் தெரிந்த அமைதியும் சொல்லாமல் சொல்லியது அவர் மனம் மாறி விட்டதென. ஆனாலும் இத்தனை ரணங்கள் உண்டான பின்பா இந்த மாற்றம் வர வேண்டும் என்று இதயம் கனத்தது.
வெங்கடேசன் வெளியே வந்ததும் அருண்மொழியின் வேகம் குறைய அசையாது அவரைப் பார்த்தவனிடம் “தம்பி…” என்று ஆரம்பிக்கும் போதே வசுந்தரா இடை புகுந்து விட்டார்.
“என்ன.. என்ன பேசணும்? இனியும் என்ன பேச போறீங்க?” என்று ஆத்திரத்துடன் கேட்டவருக்குள் கோபம் குறையாமல் இருந்தது! அதுவும் அருண்மொழியிடம் அவர் பேச வருவதை கண்டு இன்னும் அவரின் கோபம் கூடிப் போய் விட்டது.
“ஓ… நான் அவ்வளவு தூரம் என் பொண்ணை பாக்காதீங்க. பேசாதீங்கன்னு சொல்லியும் எப்படி வீடு வரைக்கும் வரலாம்னு கேட்க போறீங்களா?” என்று எள்ளலுடன் கேட்டவர்,
“அதைக் கேக்குறதுக்கான தகுதி இப்ப உங்க கிட்ட கொஞ்சம் கூட கிடையாது. ஏன்னா அவர் உங்க பொண்ணை பாக்க வரல. எங்க அக்கா அத்தானோட பொண்ண தான் பாக்க வந்திருக்கார்! நீங்க தான் அவளை என் பொண்ணே இல்லைன்னு பேசிட்டீங்களே! இனிமேல் நீங்க அவ வாழ்க்கைல எந்த வித முடிவையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று தணியாத கோபத்துடன் முகத்தில் அடித்தார் போல் பட்டென்று சொல்லி விட வெங்கடேசனின் கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.
அதை எல்லாம் பொருபடுத்தும் நிலையில் வசுந்தரா இல்லை! அவருக்கு அவரின் செல்ல மகள் மீனு சரியாக வேண்டும்! பழையபடி நடமாட வேண்டும்! வசும்மா என அவரின் மடி சாய வேண்டும்! மொத்தத்தில் அவளிடம் உயிரோட்டம் வேண்டும்! அதற்காக யாரையும் எதிர்த்து பேசும் நிலையில் இருந்தார் அந்தத் தாய்!
“நான் தான் அருண் தம்பியை வர சொன்னேன். எல்லா விஷயத்தையும் சொல்லி தான் வர சொன்னேன்! நேத்து நைட் நான் சொன்ன அடுத்த நிமிஷம் மீனுக்காக ஓடி வந்து இங்க நிக்கிறார்! அவரை இங்க யாரும் தடுக்க முடியாது! அதுக்கு நான் விடவும் மாட்டேன்” அத்தனை கோபத்துடன் மூச்சு வாங்க பேசியவரிடம்,
“வசு.. அவரு தம்பி கிட்ட பேசணும்னு தான் வெளிய வந்தாரு. வேற எதுவும் தப்பா இல்ல” என்று விசாலாட்சி கசங்கிய முகத்துடன் விளக்கம் கொடுக்க,
“இல்லக்கா… வேண்டாம். எதுவும் பேச வேண்டாம். உங்க வீட்டுக்காரர் பேசினது போதும். அவர் மகளாவே இருந்து என் அக்கா மக அனுபவிச்சதும் போதும்!” என்று தழுதழுத்த குரலில் சொன்னவர்,
வெங்கடேசன் புறம் திரும்பி “உங்களுக்குத் தெரியுமா? உங்களை எந்த நிலையிலும் காயப்படுத்திட கூடாதுன்றதுக்காக நீங்க அவளை பெத்த அப்பா இல்லைன்னு அவளுக்கு வரப் போற வாழ்க்கை துணை கிட்ட கூட அவ சொல்ல நினைச்சது இல்ல. ஆனா அருணை விரும்ப ஆரம்பிச்ச பின்ன அவருகிட்ட சொல்ல முடியாம தவிச்சா. நீங்க தான் அவளோட சொந்த அப்பா இல்லேன்ற விஷயத்தை சொல்ல நினைக்கும் போதெல்லாம் உங்களுக்காகவே யோசிச்சு அவ சொல்லாம இருந்து என் கிட்ட அப்படி அழுவா. அவ்வளவு ஏன் அக்காவைப் பத்தியும் அத்தான் பத்தியும் கூட சொன்னதில்லை! ஏன்னா நீங்க ஆசைப் பட்ட மாதிரி எல்லாருமே மீனுவ உங்க பொண்ணா தான் பாக்கணும்றதை அவளும் மாத்த நினைச்சதில்ல. அந்த அளவுக்கு உங்க மேல அவளுக்கு பாசமும் அன்பும் இருக்கு” என்று அழுகையுடன் ஆவேசமாக சொன்னவர்,
அருண்மொழியை பெருமையாக நெகிழ்வாக பார்த்தபடி “சொல்லலாம்னு முயற்சி பண்ணப்ப கூட உன்னை கஷ்டப் படுத்தி நீ என் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்னு அருண் தம்பி சொல்லி இருக்கார். அப்படி புரிஞ்சு வச்சிருக்கார் நம்ம மீனுவை!”
“ஆனா நீங்க.. நீங்க சொல்ற மாப்பிள்ளையை அவ கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலன்னு எல்லார் முன்னாடியும் நீ தான் என் பொண்ணே இல்லையேன்னு சொல்லி கொஞ்சம் கூட அவளை புரிஞ்சிக்காம நோகடிச்சு இருக்கீங்க!” என்றார் ஆத்திரம் பொங்க!
வசுந்தரா ஒவ்வொன்றாய் சொல்லச்சொல்ல வெங்கடேசனின் மனம் எரிதழலாய் மாறி அவரையே சுட்டுப் பொசுக்கியது.
தனக்காகவே தன் மகளாய் வாழ்ந்து வந்தவளை தானே நோகடித்து விட்டோம் என லட்சமாவது முறையாக தன்னையே வெறுத்து விட்டார்!
இந்த ஒரு வார காலமும் அன்று தன் மகள் தன்னைப் பார்த்த அந்த உயிரற்ற பார்வையிலேயே உழன்று ஜடமாக மாறி விட்டிருந்தவரின் நிலை இன்று வசுந்தாரவின் வார்த்தைகளில் இன்னும் மோசமாக உருமாறி இருந்தது.
மௌனமாக தலை கவிழ்ந்து நின்றவரின் நிலையை கண்டு அதற்கு மேல் வசுந்தரா பேசவில்லை.
அருண்மொழியிடம் “நீங்க போங்க தம்பி. மேல இடது பக்கம் ரெண்டாவது ரூம் மீனுவோடது” என்றதும் வெங்கடேசனை ஒரு முறை பார்த்தவனின் கண்களில் அளவு கடந்த வருத்தமும் கவலையும்!
ஆனாலும் இப்போது தன்னவளைக் காண வேண்டும் என்கிற எண்ணமே அவனுள் உயர்ந்தோங்கி இருக்க மீண்டும் விறுவிறுவென படிகளில் ஏறினான்.
எல்லோரும் இருந்த அந்தக் குடும்ப புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை கண்ணில் நிறைத்துக் கொண்டு சுவற்றில் மாட்டியவள் கதவு திறக்கப் படும் சப்தத்தில் வசுந்தரா தான் என நினைத்து திரும்ப நிச்சயம் அங்கே அவளின் மொழியை எதிர் பார்க்கவில்லை!!!!!
அவன் தானா! இல்லை அவனின் நிழலுருவமா என மனம் நிலைகொள்ளாமல் தவிக்க “மொழி..” என மெல்ல முணுமுணுத்தவளின் அழைப்பு அவனின் இதயத்தை வலியுடன் தீண்டியது.
“மொழி.. நீங்க தானா? நீங்க தானா மொழி?” என்று தன் கண்களையே நம்பவியலாமல் அவள் கேட்டது உயிரைப் பிசைய,
“மொழி தான்டா தென்றல். உன்னோட மொழி தான் வந்திருக்கேன்” என்றவன் கண்கள் நனைய அவளிருந்த கோலம் கண்டு தாங்கவியலாமல்
“போதும்டா. வந்திடு என் கிட்ட!!” என கைகளை விரித்ததும் அடுத்த நொடி தடுமாறிய பாதங்கள் அவன் காதல் அழைப்பில் வலுப்பெற்று அவனை நோக்கி விரைந்திருந்தது!
“மொழி” எனக் கதறியபடி ஓடிச் சென்று தன் உயிரன்பனின் கைகளுக்குள் தஞ்சமடைந்திருந்தாள் தென்றல் மீனா!!!
அத்தனை நாட்களும் வைராக்கியத்துடன் வெளியேற்றாமல் சேமித்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம் அவன் மார்பில் அடைமழையென கொட்டித் தீர்த்தாள்.
ஒரு வாரமாக அவளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த உணர்வுகளும் தவிப்புகளும் இன்று அவனிடம் கண்ணீராக வெளிப்பட தேகம் குலுங்க உதடுகள் நடுங்க ஓர் அழுகை!
கைகள் அவன் கழுத்தை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவன் மார்பில் ஆழப் புதைந்து குரல் உடைய கதறியவளின் அழுகையை கண்டு பயந்து போனான் அருண்மொழி!
“தென்றல்.. இங்க பாருடா.. பிளீஸ்… ஐயோ.. தென்றல் போதும்மா.. அழுகாதடா.. தென்றல் என்னைப் பாரேன்” என்று அவனின் எந்த வார்த்தைகளுக்கும் அவள் தலை நிமிரவில்லை.
அழுகையை நிறுத்தவும் இல்லை. விம்மி தேம்பி மூச்சு வாங்கி என அவளின் விழிச்சிப்பிகள் உடைந்து கண்ணீர் முத்துக்கள் வெடித்து சிதறியது அவனிடத்தில்.
வீட்டில் யாரிடமும் கண்ணீரை கொட்டாதவள், வசுந்தராவிடம் ஆறுதல் தேடி கண்ணீரை சிந்தினால் அவரும் மிகவும் காயம் கொள்வாரே எனப் பயந்து அவரிடமும் கண்ணீரை கட்டுப் படுத்திக் கொண்டு உணர்ச்சியற்ற பொம்மை போல் ஒரு வார காலமும் வாழ்ந்தவள் அவளின் மொழியைக் கண்டதும் தங்கு தடையின்றி பாய்ந்தோடும் வெள்ளமென அவனிடம் மாறி இருந்தாள்.
அவனின் எந்த விதமான சமாதானங்களும் அவளை நிறுத்தவில்லை. அவளின் இந்த தொடர் அழுகையே அவளின் உள்மனக் காயத்தை பறைசாற்ற துடித்துப் போனவனாய் அவளை இறுக அணைத்துக் கொண்டு தலை வருடிக் கொடுத்தவனுக்கும் கண்ணில் நீர் பொங்கியது.
உயிரானவளின் உயிர் கொல்லும் வேதனை அவனையும் கொல்ல “தென்றல்…” என்று கரகரத்த குரலில் அழைத்தவனால் அவளின் கண்ணீரைத் தாள முடியவில்லை.
தென்றலின் கண்ணீர் சுட அந்த சூட்டில் உள்ள வேதனைகளை உணர்ந்து வலுக்கட்டாயமாக அவளின் முகத்தை தன் மார்பில் இருந்து பிரித்தெடுக்க முயல இடமும் வலமும் தலையசைத்து பெரும் அழுகையுடன் மீண்டும் அவன் மார்பில் புதைந்தாள்.
பயந்து பதறிப் போனான் அருண்மொழி. இந்த அளவு அவளின் அழுகையை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறியவனுக்கு அவள் ஒரு வார காலமாக அடக்கி வைத்திருந்த கண்ணீரைப் பற்றி தெரியாதே!
தன்னை விடாது பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுப்பவளின் ரணம் தன் மார்பில் தான் தீருமென்றால் வேறு வழி இல்லை என அவளை இன்னும் தன்னுள் புதைத்து சற்று நேரம் வார்த்தைகளற்று அவளின் முதுகை மட்டும் வருடிக் கொடுத்தான்.
அரை மணி நேரத்திற்கும் மேல் விடாது அழுதவள் விசும்பிக் கொண்டிருக்க “என்னைப் பாரேன் தென்றல்” என்றான் மென்மையாக கரகரத்த குரலில்!
அந்தக் குரலை மறுக்க முடியாமல் நிமிர்ந்து கலங்கிய விழிகளுடன் அவனின் கலங்கிய விழிகளை நோக்க கண்ணீர் கண்களின் சங்கமத்தில் மீண்டும் புதிதாய் கண்ணீரை உற்பத்தி செய்தது இருவரின் கண்களும்!
நீண்ட நாட்கள் கழித்த பார்வை ஸ்பரிசங்கள் இருவரையுமே தவிப்புடன் தத்தளிக்க வைத்தது!
இருவரின் விழிகளிலும் அத்தனை வலி! மெல்ல அவளை நடத்தி வந்து அங்கிருந்த பீன் பேகில் அமர வைத்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கண்ணீரை துடைத்து விட, அவனின் செய்கையில் இன்னொரு முறை உடைந்தாள் தென்றல் மீனா.
இரு கரங்களால் முகத்தை மூடிக் கொண்டு மீண்டும் அவன் மார்பில் விழுந்தவள்,
“மொழி.. இங்க வேண்டாம்.. வேண்டாம்.. எனக்கு இங்க இருக்க வேண்டாம். என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய்டுங்க. இங்க இருந்தா மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. எனக்கு.. எனக்கு… வேண்டாம்…” என்று உணர்ச்சிப் பெருக்கில் கதற, மெல்ல அவள் கைகளை பிரித்தவன் அவள் தேம்பியபடி தன்னை நோக்கும் போதே அவளின் கன்னங்களை கைகளில் ஏந்தி “தென்றல்” என்று உயிர் உருக அழைத்தபடி அவளின் கண்ணீரைக் காண சகிக்காமல் அவளின் துடிக்கும் இதழ்களில் தன் இதழ்களை பதித்தான்!
இருவரின் கண்ணீர் முத்துக்களை ஏந்திய முதல் முத்தம்!
இருவரின் தவிப்புகளை உள்ளடக்கிய முத்தம்!
இருவரின் தவிப்புகளை உள்வாங்கிய முத்தம்!
இருவரின் துக்கத்தை கரைத்த முத்தம்!
இருவரின் ஆழ்ந்த நேசத்தை பரை சாற்றும் முத்தம்!
இருவரின் காத்திருப்பை நிறைத்த முத்தம்!
முத்தம் ஆறுதலானது!
முத்தம் ஆதூரமானது!
முத்தம் அருமருந்தானது!
இருவரையும் முத்தம் அவரணைத்து ஆற்றுப்படுத்தியது!!!
இருவரின் மூடிய விழிகளிலிருந்தும் கண்ணீர் கோடாய் வழிய கன்னங்களை பற்றியிருந்த விரல்களின் மூலம் தங்கள் இணையின் கண்ணீரை உணர்ந்ததும் இன்னும் ஆழமாய் தங்களை இதழால் ஆற்றுப் படுத்தினர்.
முத்தங்களின் ஈரத்தோடு கண்ணீரின் ஈரமும் இருவரையும் கலங்கடித்தது.
நொடிகள் கடந்து இருவரும் விலகிய போது அவர்களின் கண்ணீர் கரைந்து காணாமல் போய் இருந்தன.
சஞ்சலங்களும் காயங்களும் பின்னே தள்ளப்பட கண்ணோடு கண் நோக்கியவர்களின் மனதில் தற்காலிகமான ஓர் பேரமைதி!
அவனை நெருங்கி மடிக்கு இடம் மாறி அவன் மார்பில் சாய்ந்தவள் கண்களை மூடிக் கொண்டு “எனக்குத் தூங்கனும் மொழி. கொஞ்ச நேரம். பிளீஸ்…” என்றதும் அகத்தில் தோன்றிய வலியை முகத்தில் காட்டாமல் “தூங்குடா” என்றான் அவளை அணைத்துக் கொண்டு கட்டிலின் கீழ் பகுதியில் சாய்ந்தபடி!
அவன் கை வலைவிற்குள் அவளையும் மறந்து அனைத்தையும் மறந்து ஒரு உறக்கம்! இத்தனை நாட்கள் கண்களை மூட முடியாமல் தவித்தவள் இன்று அவன் மார்பில் நிம்மதியுடன் கண்ணயர்ந்திருந்தாள்!
அவள் நன்றாக உறங்கியதை உணர்ந்து அவளின் கலைந்த கூந்தலை வருடி அவளின் முகத்தைப் பார்த்தவனின் முகம் கசங்கிப் போனது.
பாதி இளைத்து முகம் வாடி கண்ணிற்கு கீழ் கருவளையம் கொண்டு வீங்கி தடித்த இமைகளும் காய்ந்த அதரங்களுமாய் அவளின் நிலையை கண்டவன் “தென்றல்…” என்று தவித்துப் போனான்!
“என் கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமேடா… அப்பவே வந்திருப்பேனே! இவ்வளவு நாள் கஷ்டப் பட்டு அழுது.. இவ்வளவு வலியோட…” என ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளின் கன்னம் வருடியபடி நெஞ்சம் வலிக்க அவளோடு பேசியவன்,