தென்றல் மொழியின் கல்யாண வைபோக விழா! இருவரின் காதலும் பூத்தாடும் திருவிழா!
அன்றைய நாள் விடியல் எல்லோருக்கும் புத்துணர்வை அள்ளிக் கொடுக்கும் நாளாக மட்டுமின்றி புன்னகையையும் சந்தோஷத்தையும் கொட்டிக் கொடுக்கும் நாளாகவும் அமையவிருந்தது.
தேவர்களின் வருகைக்கு உகந்த நேரமான பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை வேளையில் அருண்மொழி மற்றும் தென்றல் மீனாவின் திருமணம் நிகழவிருக்க எல்லோரும் மூன்று மணிக்கே தயாராகத் தொடங்கி இருந்தனர்.
பொழுது புலர்ந்திராத நேரம் தான் என்றாலும் சொந்தங்களின் வருகைக்கு குறைவில்லை. ஊரில் உள்ள அத்தனை பேரையும் அழைத்திருந்தார் பத்மநாபன்!
பின்னே? அவர் இல்லத்தின் முதல் பெண் வாரிசின் திருமணமாகிற்றே! சொந்தங்களின் வருகைக்கும் சுற்றார் உற்றாரின் வருகைக்கும் குறைவிருக்கவில்லை.
பாதி சொந்தங்கள் நேற்று நிகழ்ந்த நிச்சய விழாவின் போதே வருகை தந்திருந்தனர். ஆம்! முதல் நாள் நிச்சயம் வைக்க வேண்டும் என அழகம்மை கூறி விட கல்யாணம் நிகழவிருந்த மண்டபத்திலேயே முதல் நாள் நிச்சயம் வைக்கலாம் என முடிவு செய்து நிச்சயத்தை நிகழ்த்தி இருந்தனர்.
அதுவும் கோலாகலம் தான்! நிச்சயத்திற்கு அனுஜா எடுத்துக் கொடுத்த அரக்கு நிறப் புடவையில் அழகுப் பதுமையாய் ஆளை கொல்லும் விதமாய் வந்து நின்ற தென்றலைக் கண்டு முதல் முறையாக சுவாசத்தின் சீர் தப்பியது அருண்மொழிக்கு!
உச்சியில் இருந்து பாதம் வரை ரூபி மற்றும் வைரக் கற்களை தாங்கிய நகைகள் தான் அவளை அலங்கரித்து இருந்தது. பேத்திக்கென பத்மநாபன் அத்தனை நகைகளை குவித்திருக்க அவரோடு இணைந்து குணநாதன், கனிஅமுதன், நிகேதன் முகுந்தன் என எல்லோரும் அவர்கள் வீட்டின் தங்கப் பெண்ணிற்காக அத்தனை நகைகளை பரிசாய் சீராய் கொடுத்திருந்தனர்.
எதை அணிவது.. எதை விடுவது என அவர்களின் ஸ்வர்ண மாளிகையை ஆளும் அவளுக்கே பிடிபடவில்லை. அப்படி இருக்க விசாலாட்சி தயக்கத்துடன் அவள் தயாராகிக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்திருந்தார்.
“வாங்கம்மா” என்றவள் அழைப்பில் கண்கள் சட்டென கலங்கினாலும் அன்றைய நாளின் சந்தோஷத்தை உணர்ந்து சட்டென்று தன்னை சீர் செய்து கொண்டவர் பணியாட்களிடம் கண் காட்ட ஏராளமான நகைப் பெட்டிகளை வந்து அடுக்கி வைத்து விட்டுச் சென்றனர் அவர்கள்.
அழகம்மைக்கே மூச்சு முட்டிப் போனது அவைகளைக் கண்டு. மூத்த மருமகளைக் கண்டவர் “என்னடி விசாலம்? இத்தன பெட்டி?” என்று எதுவாக இருக்கும் என்னும் யூகத்துடனே கேட்க “அது அத்தை… மீனுக்குன்னு அவுங்க ஆசை ஆசையா நம்ம பட்டறைலயே செஞ்ச நகைங்க இதெல்லாம். மீனுக்கிட்ட கொடுக்கலாம்னு வந்தேன்” என்றார் மெதுவான குரலில்.
“இம்புட்டா?” என்று கன்னத்தில் கை வைத்து போலி ஆச்சர்யத்துடன் கேட்ட அழகம்மை “இம்புட்டயும் போட்டா என் பேத்தி நடக்கவே முடியாதேடி. அப்படியே எடை தாங்காம படுத்திட வேண்டியது தான்” என்று கிண்டல் செய்ய,
“எல்லாம் இல்ல அத்த. மீனுக்கு எது பிடிக்குதோ.. அதையே இன்னைக்கு போட்டுக்கட்டும்..” என்றவர் அரக்கு நிற புடவை உடுத்தி தலை அலங்காரம் முடித்த நிலையில் இருந்த மகளின் அழகில் கண்ணெடுக்காமல் நின்றார் விசாலாட்சி.
அவர் கொண்டு வந்து அடுக்கிய நகைப் பெட்டிகளை ஒரு பார்வை பார்த்தவள் மீண்டும் அவரிடம் பார்வையை கொண்டு வந்து “நீங்களே உங்க கையால உங்களுக்குப் பிடிச்சதை எடுத்துப் போட்டு விடுங்கம்மா” என்றதும் விசாலாட்சியின் கண்களில் அருவியாய் கண்ணீர்.
அத்தனை பயத்துடன் தான் அவை எல்லாவற்றையும் எடுத்து வந்திருந்தார். அதுவும் வெங்கடேசன் இதை எல்லாம் தன்னிடம் கொடுக்கும் பொழுது “மீனுக்குன்னு பாத்துப் பாத்து செஞ்சது விசாலம். நானே என் கையால அவ கிட்ட இதெல்லாம் கொடுக்கணும்னு ஆசை இருந்தாலும் அதை என்னால செய்ய முடியாதே!” என்று கனத்த குரலில் சொன்னவர்,
“நீ கொண்டு போய் கொடு. மீனுக்கு எது பிடிக்குதோ அதைப் போட்டுக்கச் சொல்லி சொல்லு. எல்லாமே அவளுக்குத் தான்” என்றவரிடம்,
“நீங்களும் வாங்களேன்” என்று விசாலாட்சி அழைத்ததற்கு தொண்டைக்குழி ஏறி இறங்க “வேணாம் விசாலம். எனக்கு பயமா இருக்கு. எங்க நான் வந்து மீனு இதை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டா? நான் எதுக்கு? என்னைப் பாத்தா அவ டல் ஆகிடுவா. நீ போய் கொடுத்திட்டு வா” என்று மனைவியிடம் அத்தனை நகைகளையும் கொடுத்தனுப்பி இருந்தார்.
எங்கே மகள் வேண்டாம் என்று கூறி விடுவாளோ என பயத்துடன் வந்திருந்தவருக்கு அவளின் வார்த்தைகளில் அகம் நெகிழ்ந்து போனது.
“மீனு..” என மெல்லிய விசும்பலுடன் அவளை அணைத்துக் கொண்டவரின் கண்ணீர் அவளையும் கலங்க வைக்க,
“இதென்ன நல்ல நாள் அதுவுமா அழறது? முதல்ல கண்ணைத் துடைங்க ரெண்டு பேரும்!” அழகம்மையின் அதட்டலில் மகளை விடுவித்த விசாலாட்சி அவளின் தாடையை பற்றிக் கொண்டு “அம்மா மேல கோபம் இல்லையே?” என்று சிறு பிள்ளையாகக் கேட்க,
“இல்லவே இல்லை” என்றவள் அவரின் கண்களை துடைத்து விட்டு “எனக்கு அம்மா விசாலாட்சியும் தான்” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
மகளின் முகத்தை கண்ணீருடன் பார்த்தவர் “உன் அப்.. அப்பா மேல கோபம் போய்டுச்சு தானே?” என்று பரிதவிப்புடன் கேட்டதும் அவளிடம் ஆழ்ந்த மௌனம்.
அதைக் கண்டு மழுக்கென்று அவரின் கண்கள் கண்ணீரால் நிறைய “அக்கா.. என்ன இது? இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. மீனுவை ரெடி பண்ணி கூட்டிட்டு போகனும். நல்ல நேரத்துக்குள்ள தாம்பூல தட்டு மாத்தி நிச்சயம் முடிக்கணும்” என்று வசுந்தரா கூறவும் தான் விசாலாட்சியும் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“போட்டு விடுங்கம்மா” என்று அவள் மீண்டும் கூறவும் வளையல் பெட்டிகளை திறந்தவர் அவள் புடவைக்கு ஏற்றார் போல் ரூபி கற்கள் நிறைந்த வளையல்களை இரு கைகளிலும் அணிவித்தவர் அடுத்து நெக்லஸ் பெட்டியினை திறந்ததும் “அக்கா.. போதும் போதும்.. எங்க பங்கும் இருக்குல்ல” என்று பார்வதியும் சாந்தியும் அவர்களின் பங்கிற்கு நகைகளை அணிவிக்க எல்லாவற்றையும் அகம் நிறைந்த புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள் தென்றல் மீனா.
அழகம்மையும் பேத்திக்கென கழுத்தை ஒட்டிய ஓர் ஆரத்தை அணிவித்து விட “கழுத்தை கொஞ்சம் அழுத்துது பாட்டி… அடுத்த ஹூக்ல போடுங்க” என்றதும், “அங்க மட்டும் தான்டி இடத்தை விட்டு வச்சிருக்காளுங்க என் மருமவளுங்க. அதான் இந்த ஆரத்தை போடுறேன்” என்றதும் எல்லோரிடமும் சந்தோஷ சிரிப்பு மட்டுமே!
மொத்தமாய் அவரவரின் கை வண்ணத்தில் இதோ பேரழகுடன் அருண்மொழியின் அருகே தென்றல் மீனா!
அவனின் பார்வை உணர்ந்து பாவை கன்னங்களில் வெட்கத்தில் பிரதிபலிப்பாய் மருதாணியின் சிவப்பு!
அவனின் மௌனம் வேறு அவளை என்னவோ செய்ய மெதுவாக நயணங்களை நாயகன் புறம் திருப்பியதும் அந்தப் பார்வையின் எழிலில் மொழியின் முகத்தில் ரசனை சூடிய காதல்!
அவன் பார்வையின் தாக்கத்தை உணர்ந்து நாணம் பிறந்தாலும் தன் புடவைக்கு ஏற்றார் போல் அரக்கு வர்ண பட்டுச் சட்டையும் பட்டு வேஷ்டியும் அணிந்து திவ்ய அழகுடன் இருந்தவனின் அழகில் மயங்கியவள் “அழகா இருக்கீங்க மொழி!” என்றிருந்தாள் சற்றும் யோசிக்காமல்!
அவள் பட்டென சொன்னதும் ஆனந்தமாய் திகைத்தவனின் முகத்தில் வெட்கத்தின் சுவடுகள்!
மொழியின் வெட்கமும் அழகாய்!!!
“மொழிக்கும் ஷை வருதே!” என்று வேறு தலை சாய்த்து அவனைப் போலவே கண் சிமிட்ட “தென்றல்” என்றவன் திணறிப் போனான் முதல் முறையாக!
அவனருகில் இருக்கையை பற்றிக் கொண்டு நின்றிருந்த மாதவன் இந்த அழகான காட்சியை கண்டு “பொத்தி பொத்தி வளத்த புள்ள என்ற டாக்டர் மச்சான்! அதனால இன்னும் வெட்கம் விட்டு போகல!” என்று சொன்னானே பார்க்கலாம்!!
சபையில் அமர்ந்திருப்பதையும் மறந்து குபீரென தென்றல் மீனா சிரித்து விட “டேய் மேடி…” என்ற அருண்மொழி கட்டை விரலால் நெற்றியை நீவியபடி மேலும் சிவந்த முகத்துடன் நண்பனை முறைத்தான்!
“டேய்… நீ மாப்பிள்ளைடா… நீயும் வெட்கப் படலாம் தப்பில்ல! அதனால கூச்சப்படாம வெட்கப் படு” என்று வேறு கமென்ட் அடிக்க தென்றல் மீனாவிடம் இன்னும் சிரிப்பு! அவள் மனம் விட்டு சிரித்ததில் எல்லோரின் மனமும் நிறைந்து போனது.
“மாதவா.. அவனை ரொம்ப கலாட்டா பண்ணாத. மேடைல இருக்கும் போது எல்லாரும் பாப்பாங்க” என்று அனுஜா அதட்டியதற்கு பின்னால் தான் மாதவன் சற்று அடங்கினான்!
வெங்கடேசன் மகளை கண்ணீருடனும் பூரிப்புடனும் பார்த்திருந்தார்! அதுவும் அருண்மொழியின் அருகே அவளின் கண்கள் சிந்தும் ஒளியும் அதரங்கள் சிந்தும் சிரிப்பும் முகத்தில் மின்னும் அழகும் என அத்தனை ஆனந்தமாய் உயிர்ப்பாய் இருந்தவளை காணக்காண மனம் பேருவகை கொண்டாலும் தான் செய்யவிருந்த அனர்த்தம் இந்த சந்தோஷத்தையும் உயிர்ப்பையும் அவளிடம் இருந்து பரித்திருக்குமே என காலம் கடந்த சிந்தனை!
திருமணப் பத்திரிக்கை வாசிக்கத் துவங்கியதும் எல்லோரின் கவனமும் அங்கே செல்ல வாசித்து முடித்ததும் ஐயர் “பொண்ணு மாப்பிள்ளை பெத்தவா தட்டை மாத்திக்கங்கோ” என்றதும் அருண்மொழி மற்றும் தென்றல் மீனா இருவரின் மனதிலும் ஒரே வகையான உணர்வுகள்!
தானாக இருவரின் விரல்களும் கோர்த்துக் கொள்ள தொண்டைக் குழி ஏறி இறங்கியது இழப்பின் வலியில்!
“மாப்பிள்ளையோட அம்மா அப்பா எழுந்து முன்ன வாங்கோ” என்று ஐயர் சொன்னதும் அனுஜாவும் கிருஷ்ணமூர்த்தியும் சற்றும் தயங்காமல் தாம்பூலத் தட்டுடன் எழுந்து முன்னே வர அடுத்ததாய் பெண்ணின் தாய் தந்தையரை ஐயர் அழைத்ததும் தென்றல் மீனாவின் பார்வை சட்டென வெங்கடேசனைத் தொட அத்தனை நாட்களும் அவரின் மடிந்திருந்த ஜீவன் மீண்டிருந்தது மகளின் பார்வையில். அந்த நொடி அவர் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை!
என்னவோ பிறவிப் பயனை அடைந்து விட்ட ஒரு முழுமையான நிம்மதி! பெண்ணின் தாய் தந்தையர் என்றதும் மகளின் பார்வை தன்னிடம் வந்ததை எண்ணி நெகிழ்ந்து உருகிப் போனார் வெங்கடேசன்.
அதீத உணர்வின் பிடியில் கைகளின் நடுக்கத்தை குறைக்கவென பற்றி இருந்த தாம்பூலத் தட்டினை மேலும் கெட்டியாக பற்றிக் கொண்டவரின் செயலில் தென்றல் மீனாவின் முகத்தை அத்தனை பரிவு.
அவரிடம் பேசவில்லை தான்! பேசவும் முடியவில்லை தான்! நெருஞ்சி முள்ளென அவர் பேசியவை இதயத்தை இரும்புக் கம்பியால் இறுகப் பற்றுவதை போல் வலியைக் கொடுத்தாலும் அவரை இப்படி பார்க்கவும் முடியவில்லை.
நீர் நிறைந்த கண்களை தாழ்த்திக் கொண்டவள் மொழியின் விரல்களை அழுந்த பற்றிக் கொள்ள “ரிலாக்ஸ்டா தென்றல்” என அவளின் விரல்களை ஆதவராய் பற்றிக் கொண்டான் அருண்மொழி.
தாம்பூலத் தட்டினை முகம் மலர அனுஜாவும் கிருஷ்ணமூர்த்தியும் அவர்களின் கையில் கொடுக்க, நெகிழ்ந்து சந்தோஷத்தில் கலங்கி ஆனந்தக் கண்ணீருடன் அதனை வாங்கிக் கொண்டு தங்களின் தட்டினை மாற்றிக் கொண்டனர் வெங்கடேசனும் விசாலாட்சியும்!
“உங்க வீட்டு பொண்ணை நாங்களும் சரி.. எங்க பையனும் சரி.. ரொம்ப நல்லா பாத்துப்போம்! அதுவும் எங்க பையன்” என்றவர் அருண்மொழியிடம் பார்வையை திருப்பி நெகிழ்வாய் அவனைப் பார்த்து “என் பையன் உங்க பொண்ணை அவனோட உயிரா பாத்துப்பான்” என்றார் அனுஜா புன்னகையுடன்!
அவரின் பேச்சையும் முகத்திலும் இருந்த புன்னகையையும் கண்டு வெங்கடேசனுக்கு ஆனந்தம் ஒரு பக்கம்! குற்ற உணர்வு மறு பக்கம்!
அன்று இல்லத்தில் வந்து அவர்கள் பெறா மகனிற்காக பெண் கேட்டவர்களிடம் தான் அத்தனை மோசமாக பேசி இருக்க ஆனால் அதை எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் அவர்களின் குணத்திற்கு முன்னாள் குன்றிப் போனார் வெங்கடேசன்.