அவரின் நிலை உணர்ந்து “நடந்தது எல்லாம் நல்லதுக்கு தான். கலங்க வேண்டாம் சம்மந்தி” என்று கிருஷ்ணமூர்த்தி உறவு முறையுடன் ஆறுதலாக சொன்னதும் இன்னுமே குற்ற உணர்வில் தத்தளித்தவர் சபையில் இருப்பதையும் மறந்து அவரின் கைப் பற்றிக் கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க சம்மந்தி” என்று கண் கலங்கியதும் பதறிப் போனார்கள் இருவரும்.
“ஐயோ என்ன சம்மந்தி இது? எல்லாரும் கூடி இருக்க சபைல இப்படி கண் கலங்கிட்டு? முதல்ல நீங்க கொஞ்சம் நார்மல் ஆகுங்க” என்றவர்,
“நம்ம புள்ளைங்க கல்யாணம்! நம்ம முகம் சந்தோஷத்தோட தான் இருக்கணுமே தவிர்த்து கலங்க வேண்டாமே” என்றதும் வெங்கடேசன் தன்னை மீட்டுக் கொண்டார்.
அடுத்ததாக பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும் நலங்கு வைக்கும் நிகழ்வு!
ஒவ்வொருவராக வந்து சந்தனத்தை இருவரின் கன்னங்களிலும் பூசி விட்டுச் சென்றனர்.
இறுதியாக ஸ்வப்னாவும் பூசி விட, “என் தங்கச்சியே பூசுறா! நான் பூசாம விட்டா தெய்வக் குத்தம் ஆகிப் போய்டும்” என்ற மாதவன் செய்த கலாட்டாவில் எல்லோருக்கும் அப்படி ஒரு சிரிப்பு.
கைகள் நிறைய சந்தனத்தை எடுத்தவன் அருண்மொழியை கிண்டலாகப் பார்க்க “நோ மேடி.. கொஞ்சமா பூசி விடுடா!” என்று மிரட்டல் பாவனையுடன் கெஞ்ச,
“முடியவே முடியாது! என் நண்பன் சந்தனத்துல இன்னைக்கு மணக்கனும்! அதை நான் ரசிக்கணும்” என்றவன் அருண்மொழியின் கன்னங்களின் எல்லா பகுதியிலும் சந்தனத்தால் நிரப்பி விட “ஹோ”வென இளையவர்கள் கூச்சலிட்டனர்.
“போதுமாடா?” என்று அருண்மொழி முறைப்பும் புன்னகையுமாக சொல்ல,
“போதும்டா மச்சான்! இதுக்கு மேல தடவ கன்னத்துல இடம் இல்ல” என்றவனிடம் “அண்ணா உங்க ஃப்ரெண்ட்கு மட்டும் அள்ளி அள்ளி பூசி விடுறீங்க? எனக்கு இல்லையா?” என்று தென்றல் மீனா உரிமையுடன் கேட்க,
“உனக்கு இல்லாததா தங்கச்சி!!” என்றவன் அவளின் கன்னங்களிலும் கொஞ்சமாக பூசி விட புகைப்பட கேமராவிற்குள் அழகாகப் பதிந்தது இந்தக் காட்சி எல்லாம்.
அடுத்ததாக மாப்பிள்ளையை பெண்ணிற்கு பூசி விடச் சொல்ல அருண்மொழி எழுந்து சந்தனத்தை கையில் எடுத்து கொண்டவன் தென்றலின் கன்னங்களில்.. மிக மிக மிருதுவாக அவளின் கண்களை பார்த்துக் கொண்டே பூசி விட அவன் தடவிய சந்தனத்தின் குளுமை அவள் அகமெங்கும்!
சந்தனத்தை பூசி விட்டவன் சந்தனக் கின்னத்தை எடுத்துக் கொண்டு அவளின் முன் மண்டியிட்டு இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி காட்ட எல்லோரும் ‘கொல்’லென சிரித்தனர்.
சிலர் என்ன இது? மாப்பிள்ளை இப்படி பண்றாரு? என தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள பலர் இதெல்லாம் இந்த காலத்துல சகஜம் தானே என்கிற ரீதியில் சாதாரணமாக வேடிக்கை பார்த்தனர்.
அவனின் செயலில் செய்யச் சொன்னதில் தென்றலின் கண்கள் அகல “மொழி” என்று சிணுங்களாய் கொஞ்சலாய் கெஞ்சலாய் நாணமாய் அழைக்க “இதெல்லாம் நியாயம் இல்லடா தென்றல்.. நான் உனக்கு பூசி விட்டேன் தானே! அப்ப நீயும் பூசி விடணும் தானே” என்று கண் சிமிட்டி கேட்க,
அத்தனை பேர் கூடி இருக்கும் நிறைந்த சபையில் தன் முன்னே மண்டியிட்டு தனக்கு சந்தனத்தை பூசி விடும் படி அவன் கேட்பது வெட்கத்தையும் மீறிய ஒரு உணர்வை கொடுக்க அவனையே வைத்த விழி வாங்காமல் பார்த்தவள் அவனின் கன்னங்களை பார்த்து,
“அதான் மாதவண்ணா நல்லா பூசி விட்டாங்களே..” என்று சிரிக்க,
“அடியே.. சீக்கிரம் பூசி விடுடி.. எம்புட்டு நேரம் மாப்பிள்ளை உன் முன்னாடி முட்டி போட்டுட்டு இருப்பாரு” என்று அழகம்மை வேறு எல்லோரும் பார்க்கிறார்களே என பேத்தியை அதட்டியவர் அருகே அமர்ந்திருந்த கணவரிடம்,
“அவன் பூசிக்காம எழ மாட்டான் போல. இவ பூசாம அவனைப் பாத்திட்டு இருக்கா? இதை ஊரே வேற பாக்குது” என்று வேறு புலம்ப பத்மநாபனோ “ஏன் அழகு.. சின்னஞ்சிருக.. விடேன்” என்று சொல்ல,
“என் பேத்தியை எந்தக் கண்ணும் ஒன்னும் பண்ணாது. நீ டென்ஷன் ஆகாத. நிச்சயம் முடிஞ்சதும் சுத்தி போட்டுடலாம்” என்றார் மனைவியிடம்.
“என்னமோ.. சும்மாவே அருணை பத்தி ஒன்னு ரெண்டு பேர் தெரிஞ்சிட்டு வந்து விசாரிக்கிறதே சரியில்லை. நம்ம வெங்கடேசன் பாத்த பார்வைக்கு பயந்து வாயை மூடிட்டு போறாங்க. இல்லேன்னா இன்னும் பேசுவாங்க” என்று அழகம்மை மேலும் புலம்ப,
“அதெல்லாம் இருக்கத் தான் செய்யும். ஊர் பேசலேன்னா தான் அழகு ஆச்சர்யம்! பேசினா ஆச்சர்ய படுறதுக்கில்ல..! நீ அதெல்லாம் கண்டுக்காத” என்று மனைவியை சமாதானம் செய்தார் பத்மநாபன்.
“சீக்கிரம்டி… எம்புட்டு நேரம்?” என்ற அழகம்மையை கண்டு செல்லமாய் முறைத்தவள் மொழியிடம் பார்வையை கொண்டு வர அவனோ பூசினால் தான் விடுவேன் என்ற நிலையில் மயக்கும் புன்னகையுடன் தலை சாய்த்து அவளையே பார்த்திருக்க அவன் நீட்டிக் கொண்டிருந்த சந்தன கின்னத்தில் இருந்து மோதிர விரலால் சிறிதளவு சந்தனத்தை எடுத்தவள் அவனின் கேசங்கள் உறவாடாத நெற்றியில் கீற்றாய் பூசி விட அவளின் செயலில் கண்கள் விரிய இதழ் பிரியா புன்னகையுடன் அவளைப் பார்த்தான் அருண்மொழி!
நெற்றியில் சந்தனத்துடன் இன்னும் அழகனாய் தெரிந்தவனின் திவ்ய எழிலில் மயங்கி “இப்ப இன்னும் ரொம்ப அழகா இருக்கீங்க மொழி!” என்றவள் கன்னம் சிவக்க சொல்லி விட இளைஞர்கள் எல்லோரும் ஒரே கூச்சல் தான்! அத்தனை ஆரவாரம் செய்தனர்!
நெற்றியில் அவளிட்ட சந்தனத்தின் குளிர்ச்சி அவனின் நெஞ்சம் வரை ஊடுருவ “தென்றலும் கொள்ளை அழகா இருக்கே” என்றவன் செல்லமாய் அவளின் கன்னம் தட்டி விட்டு எழுந்து கொண்டான்.
அத்தித்திப்பான ஒவ்வொரு நிகழ்வுகளும் அசைவுகள் மாறாமல் புகைப்படமென சேமிக்கப் பட்டது.
ஒரு வழியாக நிச்சயம் இனிதே மன நிறைவுடன் அழகாய் முடிந்திருக்க இதோ இன்றைய அதிகாலைப் பொழுதில் இருவரின் திருமணமும் பிரம்மாண்டமாய் நிகழவிருக்கிறது.
மூன்றரை மணியளவில் இருந்து பெண்கள் தென்றல் மீனாவை தயார் செய்திருந்தனர்.
மணக் கோலத்தில் அக்கா மகளைக் கண்ட வசுந்தரா கண்ணில் ஆனந்தக் கண்ணீருடன் அவளை ஆரத் தழுவிக் கொண்டார். “சந்தோஷமா இருக்கணும் மீனு” என்றார் உளமார!
முகூர்த்த நேரம் நெருங்கி விட பெண்கள் எல்லோரும் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர். வெங்கடேசன் மகளைக் கண்டு பூரித்து நெகிழ்ந்து நின்றார்.
அவள் ஆசைப் பட்டதைப் போலவே வரலக்ஷ்மியின் மரகத பச்சை வர்ண பட்டுப் புடவை அவளைப் பாந்தமாய் தழுவி இருந்தது. அதற்கேற்றார் போல் தங்கத்தில் பச்சைக்கல் வைத்த நகைகளும் வைரமும் அவளை மேலும் அழகாகக் காட்ட ஸ்வர்ணச் சிலையென தென்றல் மீனா ஜொலித்தாள்!
அனைவரிடமும் ஆசி பெற்று வந்தவள் வெங்கடேசனிடம் வந்ததும் அவரின் முகம் பார்க்காமல் மௌனமாக ஆசி பெற்றுக் கொள்ள வெங்கடேசனிற்கு சுருக்கென்று இருந்தாலும் மகளின் தலையை அன்போடு வருடிக் கொடுத்து “நல்லா தீர்க்காய்சோட மாப்பிள்ளையும் நீயும் சந்தோஷமா இருக்கணும்டா மீனு” என்றார் பாசம் வழியும் குரலில்.
பதிலேலும் பேசாமல் அவரை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கண்ணீரால் நிறைய வெங்கடேசனும் கலங்கி விட்டார். எத்தனை நாட்கள் கழித்து நேருக்கு நேராக அவரைப் பார்க்கிறாள்?
வசுந்தரா தென்றல் மீனாவின் கை பற்றப் போக அழகம்மை தடுத்து விட்டார் வேண்டாம் என்பதாக தலை அசைத்து. வசுந்தராவும் பெரு மூச்சுடன் அமைதியாய் அவர்களைப் பார்த்தார்.
இருவருமே இருவேறு உணர்வுகளில் வார்த்தைகளை கோர்க்க முடியாமல் தொண்டைக் குழி ஏறி இறங்க ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருக்க மகளின் கண்கள் தன்னைக் கண்டதும் கண்ணீரால் நிறைவதைக் கண்டு அந்த நொடி மிகவுமே உடைந்து விட்டார் வெங்கடேசன்.
மகளின் கைகளை பற்றி முகத்தில் வைத்துக் கொண்டவர் “அப்பாவை மன்னிச்சிடு மீனு” என்று குலுங்கி குலுங்கி அழுக “என்னடா இது?” என்று பத்மநாபன் மகனின் தோள் தொட, கலங்கி இருந்த கண்களை சிமிட்டியபடி தன் கையை பற்றி இருந்தவரின் கண்களை தானும் பற்றிக் கொண்டவள்,
“உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்” என்றதும் வெங்கடேசன் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். அந்தக் கண்களில் அவளின் அப்பா எனும் அழைப்பு காணாமல் போனதற்கான வலி அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது.
“சொல்லுடா மீனு..” என்று வெங்கடேசன் நடுங்கும் குரலில் கேட்க, “உங்களுக்கு வருத்தம் இல்ல தானே.. இந்தக் கல்யாணத்துல” என்று இப்போதும் சற்று பயத்துடன் பரிதவிப்புடன் கண்கள் அலைபாய்ந்தபடி அவள் கேட்ட விதமும் கேட்ட கேள்வியும் எரிதழலென அவரைச் சுட்டுப் பொசுக்கியது.
எத்தனை தவித்து துடித்துப் போயிருந்தால் இந்த சூழ்நிைலையில் இப்படி ஒரு கேள்வியை கேட்பாள் மகள் என மனம் அவரையே கேள்விகளால் கொல்ல அவரின் மௌனம் கலக்கத்தை கொடுத்தது தென்றல் மீனாவிற்கு!
சுற்றியிருந்த வீட்டாட்கள் எல்லோரும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே மாறி விட “வருத்தம் இல்ல தானே..” என்று மீண்டும் கூடிப் போன தவிப்புடன் அவரிடம் கேட்டவளின் நிலை எல்லோரையும் கலங்க வைத்தது.
“இல்லடா… அப்பாக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல. என் மேல தான் வருத்தம் கோபம் ஆத்திரம் வெறுப்பு எல்லாம்” என்றவர் அவள் அதிர்ச்சியாய் தன்னைப் பார்த்ததும்,
“அதெல்லாம் எதுக்கிப்ப? என் பொண்ணு கல்யாணம் இன்னைக்கு. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றவர் கண்களை துடைத்துக் கொண்டு, “அருமையான மாப்பிள்ளை கைல உன்னை சேர்க்கப் போறோம். எதுக்கு வருத்தம்?”முயன்று சாதாரண குரலில் பேசியவர்,
“முகூர்த்த நேரம் நெருங்குது பாருங்க. கூட்டிட்டு போங்க” என்று பெண்கள் கூட்டத்தை கண்டு சொன்னவர் தன் கைக் குட்டையை எடுத்து தென்றல் மீனாவின் இடது கண்ணில் வழிந்திருந்த கண்ணீரை மெல்ல ஒற்றி எடுத்து விட்டு “இப்ப போடா மீனு!” என்றதும் நெஞ்சுக்குள் என்னவோ செய்தது அவளுக்கு.
நேரம் ஆகி விட்டதை உணர்ந்து பெண்களை அவளை அழைத்துச் செல்ல மணமேடையை நெருங்க நெருங்க மனம் சற்றே அமைதி கண்டது.
அதோ.. அவளின் மொழி.. மணமேடையில் மாப்பிள்ளையாக! இன்னும் சற்று நொடியில் அவளின் மணாளனாக!
நினைக்க நினைக்க சொல்லொண்ணா மகிழ்வும் நெகிழ்வும் அவளை ஆட்கொண்டது.
மனமெங்கும் மொழி நாமம் கோலோட்ச கண்களோடு சேர்த்து உள்ளத்தையும் நிறைத்தான் அந்தப் புன்னகை மன்னன்!
சிவப்பு ரோஜா இதழ்களால் தொடுக்கப்பட்ட பூமாலை அவன் தோள்களில்! நெற்றியில் நேற்று அவளிட்டதை போலவே சந்தனம் கீற்றாய்! ஐயர் சொல்வதை செய்து கொண்டிருந்தவன் அவள் வருகை உணர்ந்து நிமிர்ந்து நோக்கினான்.
அவள் அருகே வந்து அமரும் நொடி வரை ஒரு வித மாயவலை அவனைச் சுற்றி!
“இந்த மாலையை பொண்ணோட கழுத்துல போடுங்கோ” என்று ஐயர் சொன்னதும் தான் பார்வையை திருப்பியவன் அவர் கைகளில் இருந்த மற்றொரு மாலையை வாங்கி அவளுக்கு உயிர் நிறைந்த காதலுடன் மனம் நிறைந்த வேண்டுதலுடன் தென்றலிற்கு மாலையை அணிவித்தான்.
இந்த நாளிற்காக தான் எத்தனை எத்தனை போராட்டங்கள்! வேதனைகள்! வலிகள்! கண்ணீர்த் துளிகள்!
இறுதியில் இன்று இருவரின் மனம் நிறைந்த மணவிழா! இருவரின் கண்களிலும் காதலின் தீபம் பிரகாசமாய் ஒளிர்ந்தது.
அருண்மொழியின் நெஞ்சம் அடைந்த மகிழ்விற்கு ஈடு இணையே இல்லை! சுற்றி ஒரு பார்வை பார்த்தான்!
மண்டபம் எங்கும் சொந்தங்களின் வெள்ளம்! இவர்கள் எல்லோரும் யார் என்ன என்று அவனுக்குத் தெரியாத போதிலும் அனுஜாவின் சொந்தங்களும் தென்றல் மீனாவின் சொந்தங்களும் நிறைந்த சபை அவனுக்கு ஏனோ அகம் நிறையச் செய்தது.
மேடையில் கிருஷ்ணமூர்த்தி அனுஜா உயிர் நண்பன் மற்றும் தங்கை ஸ்வப்னா! இவர்களோடு தென்றல் மீனாவின் மொத்த குடும்பமும்!
இத்தனை பேரின் மத்தியில் தன் திருமணம்! நினைத்தே பார்த்திராத அளவில் மிக பிரம்மாண்டமாய்! அதுவும் தன் மனதைற்கினியவளுடன்! நெஞ்சம் விம்மியது!
தென்றல் அவனின் உணர்வுகளை உணர்ந்து அவன் கையோடு தன் கை கோர்த்துக் கொள்ள பளிச்சென்ற புன்னகை அவனிடம்.
“ஸ்மைல் பண்ணா தான் மொழி இன்னும் அழகா இருக்கீங்க” என்றாள் தென்றல் அவனை ரசித்தவாரே!
“தென்றல் பக்கத்துல இருக்கும் போது ஸ்மைல் பண்ணாம…” என்றவன் கண் சிமிட்டி தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டான்.
நேரம் நெருங்கி விட சந்தியா கீழே இருந்த அனைவரிடமும் திருமாங்கல்யத் தட்டை கொண்டு சென்று அட்சதையை கொடுத்து விட்டு அவர்களின் ஆசிகளோடு அதனை மீண்டும் மேடைக்கு எடுத்து வந்தாள்.
மேடையில் இருந்த இருவரின் குடும்பமும் அட்சதை எடுத்துக் கொள்ள எல்லோரும் பூரிப்புடன் மகிழ்ச்சி ததும்பும் முகத்துடன் மணமக்ககளை பார்த்திருந்தார்கள்!
குறித்திருந்த முகூர்த்த நேரத்தில் உற்றத்தார் சுற்றத்தாரின் வாழ்த்துடனும் இருவரையும் போற்றி வளர்த்த குடும்பங்களின் நல்லாசியுடனும் அட்சதை பூக்களை அவர்களின் மேல் வான்மழையென பொழிய சந்தோஷம் ததும்பும் நெஞ்சத்துடன் திருமாங்கல்யத்தை அவளின் கழுத்தில் மூன்று முடிச்சுகளிட்டு தென்றலை தன் உயிரின் நிறைவாக்கிக் கொண்டான் அருண்மொழி!
தென்றல் திருமதி மொழியாக! மொழி தென்றலின் முழுமையாக! இருவரின் சந்தோஷங்கள் தித்திக்கும் தேனாக!