எல்லோரின் நெஞ்சமும் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கி இருந்தது. இனிதாய் திருமணம் நடந்து முடிந்திருக்க மட்டற்ற மகிழ்ச்சி அனைவருக்கும்.
தென்றல் மீனாவால் அந்த நிமிடத்தை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை. இனி தான் மொழியின் மனைவி என்ற நிறைவு ஒரு புறம்! நிகழ்வது கனவோ எனும் பயம் மறு புறம்!
அந்த அழகான நிகழ்வை நம்ப முடியாமல் மீண்டும் குனிந்து மொழி கட்டிய திருமாங்கல்யத்தை வருடியபடி கண்ணில் நீருடன் நிமிர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் கணவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவளுக்கு நிகரான உணர்வில் தத்தளித்தவனும் அவனின் உள்ளங்கையை அழுத்தி பற்றிக் கொண்டு “நிஜம் தான்டா தென்றல்! ரிலாக்ஸ்” என்றான் கரகரத்த குரலில்!
அடுத்து குங்குமத்தை அவள் வகுட்டில் வைக்கச் சொன்னதும் அருண்மொழி தென்றலின் வகுட்டில் மெல்லிய அழுத்தத்துடன் வைத்ததும் அந்த நொடி கனவல்ல நிஜம் தான் என்பதை இருவருமே பூரணமாக உணர்ந்தனர்.
“மிசஸ். மொழி” என்று சொன்னவன் நெஞ்சம் விம்மிக் கொண்டிருந்தது! அவனின் நேசப் பாவையாக இருந்த போது சொன்னதற்கும் இப்போது சொல்வதற்கும் வெவ்வேறு உணர்வுகள்!
உயிரின் உறவாக வந்தவளின் உள்ளங்கையை மேலும் அழுந்த பற்றிக் கொண்டான் உணர்வின் தாக்கத்தில்!
“உங்க தென்றல் உங்க கிட்ட தான் இருக்கேன் மொழி. நீங்களும் நிஜம் தான்னு நம்பனும்” என்றதும் ஆத்மார்த்தமான புன்னகை அவனிடம்.
திருமணம் முடிந்ததும் சடங்குகள் சம்பிரதாயங்கள் என ஒன்று விடாமல் எல்லாம் வரிசையாக வர அம்மி மிதித்து அவள் பாத விரலில் மெல்ல மெட்டியை அணிவித்து நிமிர்ந்தவன் தென்றலைக் கண்டு புன்னகையுடன் நிமிர்ந்தான்.
அந்தப் புன்னகையில் இருந்த காதலும் அன்பும் தென்றலை என்றும் போல் உருகச் செய்தது.
ஒவ்வொரு நொடியும் இருவரையும் ஒரு வித சொல்லொண்ணா உணர்வில் ஆழ்த்த அன்றைய நாளுக்கான நிறைவும் மகிழ்வும் அவர்களிடம் உறைந்தே இருந்தது.
“ஓகே தான தென்றல்” என்று கேட்க, “ஹ்ம்ம்” என்றவளுக்கு அடுத்து வார்த்தைகள் வரவில்லை.
மதியம் வரை இருவரும் உட்காரவில்லை. எல்லோரும் வந்து புடைப்படம் வேறு எடுத்துச் செல்ல கால்கள் கொஞ்சமாக வலியெடுக்க துவங்கியது தென்றல் மீனாவிற்கு.
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்தது வேறு கண்ணைச் சுழற்ற அவளின் சோர்வுணர்ந்து “டயர்டா இருக்கா தென்றல்?” என்று கனிவாக கேட்ட கணவனை சோர்வான புன்னகையுடன் பார்த்தவள் “கொஞ்சம் கால் வலிக்குது மொழி. மூணு மணிக்கு எழுந்திருச்சது கொஞ்சம் தூக்கமும் வருது” என்றாள் களைப்பான குரலில். ஆனாலும் அன்றைய நாளிற்கான சந்தோஷம் அவள் முகத்தில் பூரண நிலவின் ஒளியைக் கொடுத்திருந்தது.
தூக்கமின்மையால் அவளின் கண்கள் சற்றே சிவந்திருக்க “கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். நான் அனும்மா கிட்ட சொல்றேன்” என்றவன் அவரிடம் சொன்னதும் ஜூஸை வரவழைத்து அவர்களுக்கு கொடுத்தவர் சற்று நேரம் கீழே உள்ள இருக்கையில் அவர்களை அமரச் செய்தார்.
இருவரும் அமர்ந்ததும் வசுந்தரா அவர்களை நெருங்கி மகளின் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டு “இன்னொரு ஜுஸ் குடிக்கிறியா மீனு” என்று கேட்க,
“வெள்ளனவே எழுந்தது அப்படி தான் இருக்கும் மீனு. இன்னும் கொஞ்ச நேரத்துல பால் பழம் சாப்பிட வீட்டுக்கு கிளம்பிடுவோம். மதியம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க நீயும் மாப்பிள்ளையும். அப்புறம் சாயங்காலம் சம்மந்தி வீட்டுக்கு போக ரெடியானா போதும்” என்றதும் சரி என தலை அசைத்தாள் தென்றல் மீனா.
அமர்ந்ததும் தான் சற்றே ஆசுவாசமாக இருந்தது. சோர்வை தாண்டிய பூரிப்பும் மகிழ்வும் அவளிடம் இருப்பதை உணர்ந்தவர் தென்றல் மீனாவின் கன்னத்தை வழித்து “இன்னைக்கு எல்லார் கண்ணும் உங்க மேல தான்” என்றார் புன்னகையுடன்.
அதற்கடுத்து மண்டபத்தில் முடிக்க வேண்டிய சடங்குகளை முடித்து மணமக்களை முதலில் பத்மநாபனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பால் பழம் சாப்பிட்டு முடித்ததும் தென்றல் மீனா வசுந்தராவை பார்க்க “நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு மீனு. மாப்பிள்ளையும் உன் ரூம் கூட்டிட்டு போ” என்று சொன்னதும் அவள் எழுந்து கொள்ள,
அழகம்மை பேத்தியிடம் “கொஞ்ச நேரம் இரேன்டி. அனுஜா வீட்டு சொந்தம் எல்லாம் வந்திருக்காங்க. கொஞ்சம் நேரம் கழிச்சு போவியாம்” என்றதும் “பாட்டி.. சுத்தமா முடியல பாட்டி” என்று சோர்வாய் சொன்ன பேத்தியை கண்டு முறைத்தவர்,
“இன்னைக்கு ஒரு நாள் அப்படி தான் இருக்கும். கொஞ்ச நேரம் இரு. எல்லாரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறப்ப நீயும் போவியாம்” என்றதும் வெங்கடேசன் வந்து விட்டார் அங்கே!
மாமியாரும் மகளும் பேசுவதைக் கேட்டிருந்த விசாலாட்சி கணவரிடம் சென்று சொல்லி இருக்க “பாவம்ங்க.. பிள்ளை மூணு மணிக்கே எழுந்துட்டா. வசுவும் மீனுவ போக சொல்லிட்டா. ஆனா அத்தை விட மாட்டேங்குறாங்க. நீங்க கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்” என்றதும் வெங்கடேசன் வந்து விட்டார் தாயருகே.
“மீனு ரெஸ்ட் எடுக்கட்டும் ம்மா. அதான் வந்தவங்களை கவனிக்க இத்தனை பேர் இருக்கோமே. ஏன் அவளை இருக்கச் சொல்றீங்க?” என்று அன்னையிடம் பழைய வெங்கடேசனாக மாறி அதட்டியவர் மகளிடம் திரும்பி “நீ போய் ரெஸ்ட் எடுடா மீனு. மாப்பிள்ளையும் அழைச்சிட்டு போ” என்றதும் அப்படி ஒரு நிம்மதி அவளுக்கு.
தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் பேசத் தயங்கி விட்டு ஆமோதிப்பாய் தலை அசைத்து மொழியுடன் மாடியில் தன் அறைக்கு நகர்ந்தாள்.
மகனை முறைத்த அழகம்மை “ஏன்டா எல்லாரும் இருக்கும் போது அவளும் இருக்கணும்னு தானே சொன்னேன். உடனே வந்து அவளை போகச் சொல்லனுமா?” என்று கடிந்து கொள்ள நீண்ட நாட்கள் கழித்து தாய் தன்னிடம் முன்னர் போல் பேசியதில் மனம் மகிழ்ந்தாலும் அவர் மகளை குறை சொல்வது பிடிக்காமல்,
“இப்ப என்ன? பிரம்ம முகூர்த்த நேரத்துல கல்யாணம் வைக்கணும்னு நீங்க சொன்னதால தான் அப்படியே செஞ்சோம். மூணு மணிக்கே எழுப்பி விட்டுட்டு இப்ப கொஞ்ச நேரம் கூட அவளை ரெஸ்ட் எடுக்க வேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்? மீனுவைப் பாத்தீங்க தானே! எவ்வளவு டயர்ட் ஆகிட்டா?” என்று மகளுக்காக தாயை அதட்டியவர்,
“ரெஸ்ட் எடுக்கட்டும். சம்மந்தி வீட்டுக்கு போற வரை யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நான் விசாலம் கிட்ட சொல்லிடுறேன்” என்றவர் நகர்ந்து விட செல்லும் மகனை முறைத்தாலும் உள்ளுக்குள் நிறைவாய் உணர்ந்தார் அழகம்மை.
இத்தனை நாட்கள் இருவரும் பாரா முகம் காட்டி வந்திருக்க இன்று காலை பேத்தி அவனிடம் பேசியதுமே பாதி துன்பம் நீங்கி இருந்தது அழகம்மைக்கு. இப்போது வெங்கடேசனும் தயங்காமல் மகளுக்காக தன்னிடம் பேசி மகளிடமும் பேசி விட ஒரு வித நிம்மதி. விரைவில் இருவரும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அறைக்குள் நுழைந்ததும் தென்றல் மீனா நேரே சென்று கட்டிலில் அமர்ந்து கொள்ள புன்னகையுடன் அவளருகில் அமர்ந்தவன் அவளைத் தன் தோளில் சாய்த்து கொண்டு “ரொம்ப டல் ஆகிட்ட தென்றல்!” என்றான் அவள் தலை வருடி.
சுகமாய் கண் மூடியவள் அவன் தோளில் இருந்து மார்பிற்கு முகத்தை மாற்றிக் கொண்டு இன்னும் நன்றாக சாய்ந்து கொள்ள மென் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டவனிடம், “தூக்கம் வருது மொழி” என்றாள்.
“ஹ்ம்ம் தூங்குடா!” என்றவன் அவளை விட்டு எழுந்து கொள்ளப் பார்க்க, “ம்ஹும்” என்று அவனை எழ அனுமதிக்காமல் மேலும் அவனை அணைத்துக் கொள்ள மெல்லிய சிரிப்புடன் அவளை மீண்டும் அணைத்தவன் “தென்றல்” என்றான் மெல்லிய குரலில்!
“ஒரு ரெண்டு நிமிஷம் மொழி. இப்படி இருக்கணும்! உங்க மேல சாய்ஞ்சிட்டு” என்றவள் கண்ணைத் திறக்கவில்லை.
“தூக்கம் வருது சொன்னடா?” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தியபடி கேட்க,
“ஹ்ம்ம். வருது. கண்டிப்பா தூங்கனும். அகுக்கு முன்னாடி மொழி கூட சின்ன ரிலாக்ஸ்” என்றவள் அவனுடன் அன்றிலாய் ஒன்றிக் கொண்டாள்.
உச்சியில் இதழ் பதித்தவன் அவளை அணைத்துக் கொண்டு தானும் கண் மூடியபடி அவளின் தலை மேல் தன் தலையை சாய்த்துக் கொண்டான்.
பெருங்காதலுடனான பேரமைதி இருவரிடத்திலும்!
கண் மூடி இருந்தவள் மெல்ல கண் மலர்ந்து அவனை நிமிர்ந்து நோக்க தென்றலின் அசைவில் அவனும் கண்களை திறந்து கொண்டான்.
“தூங்குடா தென்றல். நான் இருக்கேன்” என்றதும் ஆமோதிப்பாய் தலை அசைத்து எழுந்தவள் அதிகப்படியான நகைகளை டிரெஸ்ஸிங் டேபிலின் முன்பு அமர்ந்து அகற்றத் துவங்க அவளின் செய்களை ஒவ்வொன்றையும் அமைதியாய் பார்த்திருந்த மொழியின் கண்களில் அத்தனை ரசனை!
அவன் பார்வையை உணர்ந்து அவனிடம் திரும்பாமல் தன் வேலையில் கவனம் செலுத்தியபடி “நீங்க தூங்குறதுன்னா தூங்குங்க மொழி” என்று சொல்ல “ஹ்ம்ம்.. தூங்கலாம். தென்றலோட” என்றவன் எழுந்து அவளின் பின்னே வந்து நின்றான்.
அவன் நெருங்கி வந்ததும் இவள் நெஞ்சில் குறுகுறுப்பு அதிகமாக புதிதாய் பூத்த வெட்கம் வேறு இம்சையை கொடுத்தது.
அவளின் பின்னர் வந்து நின்றவன் அமர்ந்திருந்த அவளின் முகத்தை கண்ணாடியில் பார்த்தபடி அவளருகே குனிய தென்றலின் இமைகள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தது!
அதிகப்படியான நகைகளை கழற்றி அளவான நகைகளோடு அவன் கட்டிய மஞ்சள் தாலியோடு உச்சி வகிட்டில் அவனிட்ட குங்குமத்தின் வாசத்துடனும் கல்யாண அலங்காரம் கலையாமல் பொழிவான முகத்துடன் இருந்தவளின் மேலிருந்து பார்வையை அகற்ற முடியாது போனது தென்றலின் மொழியால்!
மொழியின் பார்வை ஸ்பரிசத்தில் மூச்சை இழுத்துப் பிடித்தாள் தென்றல் மீனா! கணவன் மனைவியென அவர்களுக்கான முதல் பிரத்யேக தனிமை நிமிடங்கள்!
நாணம் கூடியது தென்றலுக்கு. மாப்பிள்ளை கோலம் மாறாமல் மயக்கும் புன்னகையுடன் தன் இடப் பக்க தோள் வளைவில் உரசும் வகையில் நின்றிருந்தவனின் உருவத்தை கண்ணாடியில் கண்டவள் நயனங்களை தாழ்த்த கைகளை அவளின் இரு பக்க தோளிலும் வைத்தவன் தாடையை அவள் தோளோடு உறவாட விட்டான்!
அடி வயிற்றில் என்னவோ செய்தது அவளுக்கு! தூக்கம் தூரப் போய் இருக்க மயக்கம் வந்திருந்தது மங்கையிடம்!
“உன்னை.. என்னை..நம்மை.. நிமிர்ந்து கண்ணாடில பாரேன்” என்றான் ஒவ்வொரு வார்த்தைகளையும் மென்மையாய் உச்சரித்து. கூடவே அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை அழுத்திக் கொள்ள தென்றலால் முடியவில்லை.
அவன் குரலில் இருந்த அந்த புது வித மயக்கம் அவளுக்குள் கிறக்கத்தை கொடுக்க கண்களை இறுக மூடிக் கொண்டு மாட்டேன் என்பது போல் பலகீனமான தலை அசைப்பு தென்றலிடம்.
தோளில் இருந்த கைகள் கை வழி இறங்கி இடையருகே வந்திருக்க இரு கரத்தாலும் பற்றிக் கொண்டான் அருண்மொழி!
முதல் முறையாக கணவனாய் அவனின் நெருக்கம்! கன்னம் உரசியதிலேயே தென்றல் மீனாவிற்கு தீப் பற்றிக் கொண்டது போலிருக்க இப்போது அவன் கரங்கள் தன்னிடையை வளைத்துக் கொண்டதும் பெரும் அவஸ்தை உண்டானது அவளுக்கு.
“அச்சோ மொழி” என்றவள் இதழ்கள் மெல்ல முணுமுணுக்க “அச்சோவை அச்சச்சோ ஆக்கிடலாமா?” என்றான் அவன் மயங்க வைக்கும் குரலில்!
“மொழி” என்றவள் திணற “ரொம்ப ஃபுல் பில்டா ஃபீல் பண்றேன் தென்றல். அதனாலயோ என்னமோ.. உன்னை விட்டு விலகி இருக்க முடியல” என்றவன், பற்றி இருந்த அவளின் கையை இழுத்து அவளை தன் மார்போடு கட்டிக் கொண்டு “விலகி இருக்க விடாம டிஸ்டர்ப் செய்யுது கண்ணுக்கு குளிரான என்னோட தென்றல்” என்றான் அவள் கண்களில் முத்தம் வைத்து.
மெல்ல கண் மூடிக் கொண்டவள் அவன் முத்தத்தை ரசித்து அமைதியாய் நிற்க, “தூக்கம் போயாச்சாமா தென்றலுக்கு” என்றவன் அவளை பதில் மொழிய விடாமல் அவளது நாசிக்கும் மேலிதழிற்கும் இடையே ஆன சின்ன இடைவெளியில் மீசையால் உரச “மொழி” என்றவள் தாள முடியாமல் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளின் முகம் நிமிர்த்தியவன் அவள் கண் திறவாமல் இருப்பதைக் கண்டு ரகசிய புன்னகையுடன் அவள் முகத்தை மேல் நோக்கி நகர்த்தி சங்கு கழுத்தில் அடுத்த முத்தம் வைக்க தென்றல் மீனாவின் உணர்வுகள் தீப்பொறி பட்ட காடாய் எரியத் துவங்கியது.
“மொழி” என்றவள் அழைப்பு அவளுக்கே கேட்கவில்லை. அவள் நிலை உணர்ந்து அவளின் முகத்தை கையில் ஏந்தியவன் “என்னைப் பாருடா தென்றல்” என்றான் தென்றலான குரலில்!
மெல்ல மெல்ல அவள் இமைக்களை பிரிக்க அதிலிருந்த மயக்கம் கண்டு தானும் மயங்கியவன் “ஃபர்ஸ்ட் கிஸ் சால்ட் கிஸ்ஸா போச்சுடா தென்றல்! இப்ப தென்றலுக்கு ஸ்வீட் கிஸ் கொடுத்திடலாமா” என்று கண் சிமிட்டி கேட்டதும் கண்கள் விரிய அவனை நோக்கியவள் இரு கரங்களாலும் முகத்தை மூடிக் கொண்டு “மொழி” என பேரவஸ்த்தையுடன் மொழிய,
“அன்னைக்கு வீட்டுக்கு வந்திருந்தப்ப என்ன ஸ்வீட் வேணும்னு கேட்டப்ப நீ இதை தான பாத்த” என்று கள்ளச் சிரிப்போடு தன் அதரங்களை சுட்டிக் காட்டி சொல்ல,
“அது நீங்க பண்ண வேலையால தான்” பட்டென்று கைகளை விலக்கிக் கொண்டு அவள் வேக வேகமாக சொன்னதும் அவள் முகத்தில் மீதமிருந்த அளவில்லாத வெட்கத்தின் நிறத்தை கண்டு “வெட்கத்துல கூட தென்றல் மூக்கு சிவக்குதே” என்றவன் நாசியையும் விட்டு வைக்கவில்லை.
அழுத்தமாய் முத்தம் வைத்ததும் தென்றல் மீனாவால் தாங்க முடியவில்லை. அவனின் சட்டை காலரை இறுக்கமாக பற்றிக் கொண்டு மீண்டும் கண் மூடி அவள் நிற்க “சொல்லுடா உன் மொழி ஸ்வீட்டா இல்லையான்னு நீ தெரிஞ்சிக்கணும் தானே” என்று காதருகே கிசுகிசுப்பாக அவன் கேட்டதும்,
தன் சம்மதம் வேண்டி தான் கணவன் இதனை கேட்கிறான் என்று புரிந்து கண் திறந்து கண்ணோடு கண் நோக்கியவள் “என்கிட்ட நீங்க கேட்க வேண்டாம் மொழி! தென்றல் மொழியோட உரிமை! என்னை எடுத்துக்க நீங்க என் கிட்ட கேட்கணும்னு அவசியம் இல்ல. மொழிக்கு நான் நோ சொல்ல மாட்டேன்” என்று அவன் தாடையில் முத்தம் வைத்து சொன்னவள் அவன் விழிகள் விரிய தன்னைப் பார்ப்பதை கண்டு,
“ஸ்வீட் கிஸ் தரேன்னு சொல்லிட்டு இதென்ன சும்மா நிக்குறது?” என்று கண் சிமிட்டி கேட்க,
“மொத்தமா ஃபிளாட் தென்றல்” என்றவன் அவள் கன்னங்களை பற்றி இதழோடு தன் இதழ் சேர்த்தான்!
இதழ்தொடுகை இதழாக்கத்தில் வந்து நிற்க கரைந்து மறைந்த நொடிகள் முத்தத்தால் முழுமை பெற்றிருந்தது.
நெஞ்சினோரம் சுவை கூட்டும் விதமாய் ஓர் இதழாக்கம்!
சுவாசத்திற்கான தவிப்புணர்ந்து இருவரும் விலக ஏறி இறங்கிய மூச்சுக்காற்றின் வெப்பம் இருவரிடமும் அனல் மூட்டியது.
“மொழி” என்றவள் மொழிவதற்குள் மீண்டும் அவளிதழை நனைத்திருந்தான் அருண்மொழி! மென்மையான முறையில் இதழ் போரை துவக்கி வைத்திருந்தனர் இருவரும்!
சீர் தப்பிய சுவாசத்தினை விலகிக் கொண்டு சீர் செய்ததும் மீண்டும் மீண்டும் ஓர் இதழணைப்பு!
எல்லை மீரும் அழகான விபத்தொன்று நெருங்க சுதாரித்து அவளை விலக்கியவன் “ஃபர்ஸ்ட் நைட்டை விட்டுட்டு இப்பவே ஃபர்ஸ்ட் ஆஃப்டர்நூன் கொண்டாடிடுவோம் போலடா தென்றல்” என்றதும் செல்லமாய் அவனை முறைத்தவள் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு “எல்லாம் உங்களால தான்! தூங்கனும்னு வந்துட்டு இப்ப என்னை தூங்க விடாம செஞ்சது மட்டுமில்லாம ஃபர்ஸ்ட் ஆஃப்டர்நூன் வேறயா” என்று கேட்க,
“ஓகே ஓகே. நீ தூங்குடா” என்றவன் அவளிடம் இருந்து விலக, “நீங்க?” என்று கேட்டதற்கு, “ம்ஹும்.. தென்றல் கொடுத்த ஸ்வீட்ல தூக்கம் எல்லாம் போச்சு. நீ தூங்குடா” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அவள் உறங்கியதும் அருகே அமர்ந்து அவளை ரசித்தவன் சிறிது நொடிகளில் கண்கள் சொக்கியதும் தானும் அவளருகே படுத்து உறங்கி விட கதவு தட்டப்படும் சப்தத்தில் தான் கண் விழித்தனர் இருவரும்!