சந்தியா தான் கதவைத் தட்டியபடி நின்றாள். அனுஜா இல்லத்திற்கு கிளம்பும் நேரம் நெருங்கி விட தென்றலை தயார் செய்ய வேண்டி அவளை அழைக்க வந்தவள் இருவரும் அறையில் இருப்பதை உணர்ந்து வெளியிருந்த படியே கதவை தட்டினாள்.
அருகே உறக்க கலக்கத்துடன் எழுந்து அமரும் கணவனைக் கண்டு தென்றலின் தூக்கம் விலகி விட “கதவு தட்ராங்க மொழி. டைம் ஆச்சுன்னு நினைக்கிறேன்..” என்றபடி அவள் எழுந்து கதவைத் திறக்க, அவளின் உறக்கம் விலகாத நிலையை கண்டு கனிவுடன் புன்னகைத்த சந்தியா “கிளம்புற நேரம் வந்தாச்சு மீனு” என்க,
“இதோ டென் மினிட்ஸ் அண்ணி” என்றவளிடம் “அனு அத்தை வீட்டுக்கு போய்ட்டு அப்படியே டாக்டர் வீட்டுக்கும் போய் விளக்கேத்தி வைக்கணுமாம். ராத்திரி சடங்கும் அங்கயே தானாம். டாக்டர் தான் அனுஜா மேடம் கிட்ட சொல்லிருப்பார் போல. நீங்க மட்டும் தான் இருக்க மாதிரி இருக்கும். நாங்க வந்ததும் நாளைக்கு காலைல கோவில் போகனும். எல்லாம் கீழ பேசி முடிவு பண்ணிட்டாங்க” என்று சந்தியா மடமடவென சொன்னதும் கேட்டுக் கொண்டவள்,
“இன்னும் என்ன அண்ணி டாக்டர், மேடம்” என்று சிரிப்புடன் கேட்க, “எனக்கு அவுங்களை அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு மீனு. சட்டுன்னு மாத்த வரல” என்று சிரித்த சந்தியா,
“சரி டாக்டர் கீழ வரட்டும். நாங்க வந்து உன்னை ரெடி பண்றோம்” என்று சொல்லி விட்டுச் செல்ல அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் அனுஜாவின் இல்லத்திற்கு கிளம்பி இருந்தனர்.
அங்கு சென்றதும் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்ற அனுஜாவிடம் எல்லையில்லா சந்தோஷம்! தென்றல் மீனாவை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற சொல்ல எல்லோரும் நெகிழ்ந்து பார்த்தனர் அவரை!
அவரின் சொந்த மகன் இருக்கையில் அவனுக்கு மனைவியாக வரப் போகிறவள் செய்ய வேண்டியதை எல்லாம் முதல் முதலாக தங்கள் பெண் அவ்வீட்டில் செய்திருக்க வேறு என்ன வேண்டும் என்பது போல் அவரின் அன்பில் வாயடைத்து நின்றார்கள்.
அங்கேயும் பால் பழம் சாப்பிட்டு செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் முடிந்து அருண்மொழியின் ஃப்ளாட்டிற்கு சென்றனர் எல்லோரும்.
முன்னரே அனுஜாவும் ஸ்வப்னாவும் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்திருக்க கூடவே அவர்கள் இல்லத்தில் பணி புரியும் வேலை ஆளையும் இங்கே வர சொல்லி இருந்தமையால் வந்தவர்களை எந்தக் குறையுமின்றி கவனித்தனர்.
மாலை போல் டீயும் சிற்றுண்டியும் தயாராகி இருக்க எல்லோரும் அருண்மொழி இல்லத்தில்!
அவன் மட்டுமே இருந்த வீட்டில் இன்று அத்தனை சொந்தங்களும்! பார்க்கப் பார்க்கப் நெஞ்சம் நிறைந்தது அவனுக்கு.
சோஃபா போதாமல் கீழே ஜமுக்காளம் விரித்து அதிலும் பெண்கள் ஆண்கள் என அமர்ந்திருக்க பால்கனியில் நின்று எல்லோரையும் பார்த்தவன் முகத்தில் நிறைவான புன்னகை.
நண்பனை கண்ட மாதவன் அவனருகில் வந்து அவன் தோளில் கை போட்டு “என்னடா கல்யாண மாப்பிள்ளை? ஒரே ஹேப்பியா?” என்று சந்தோஷமாக கேட்க,
“ரொம்ப ஹேப்பி மேடி! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த வீட்ல நான் மட்டும் இருந்திருக்கேன். அப்பப்ப நீ வந்து ஸ்டே பண்ணுவ! மத்தபடி எப்பவும் நான் தானே? என்னை நானே பாக்கணும். என் கிட்ட நானே பேசிக்கணும். என் குரல் மட்டும் தான் கேக்கும். டி. வி. ஆன் பண்ணா டி.வி சவுண்ட் கேக்கும்! அலெக்ஸா சவுண்ட்! வேற யாரோட பேச்சுக் குரலும் இங்க அதிகமா கேட்டதில்லை தானே! ஆனா இன்னைக்கு இத்தனை பேர்….” என்று நண்பனிடம் சற்றே பனித்த விழிகளுடன் சொன்னவன்,
நண்பனின் உணர்வுகள் புரிந்தது மாதவனுக்கு. அவன் சொல்வதில் இருந்த தனிமையின் சுவடுகள் அவனை எந்த அளவிற்கு தாக்கி உள்ளது என்று புரிந்து ஆதூரமாய் அவனின் தோள் வருடிக் கொடுத்தவன் “உன்னை இப்படி பாக்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சான்!” என்றவன்,
“நீ மிஸ்டர். தென்றல் ஆனதுல நான் ரொம்ப ஹேப்பிடா” என்று சிரிக்க அருண்மொழியும் மனதார சிரித்தான்.
“இத்தனை சொந்தத்துல உனக்கு மச்சானுங்க தான்டா அதிகம்! யாருக்கு கிடைக்கும் அஞ்சு மச்சான்” என்று கேலியாக சொல்ல,
“ஆமா மாதவன்.. அஞ்சு பேரும் நல்ல மச்சானா இருப்போம் எங்க வீட்டு மாப்பிள்ளைக்கு..” என்று நிகேதன் குரல் கேட்டு நண்பர்கள் இருவரும் திரும்ப,
கையில் மகிழினியுடன் பால்கனி பக்கம் வந்து நின்றான் நிகேதன். “சாரி .. சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று மாதவன் சங்கடமாக சொல்ல,
“அட இதுல என்ன இருக்கு மாதவன்?” என்ற நிகேதன் சிரிப்புடன் ஒற்றை கையால் அவன் தோள் தட்டி விட்டு அருண்மொழியை கண்டு புன்னகைக்க, அவன் கையில் இருந்த மகள் அருண்மொழியிடம் தாவினாள்.
“வாங்க வாங்க” என்று அவனும் குழந்தையை கைகளில் அள்ளிக் கொள்ள கட்டை விரலை சப்பிக் கொண்டிருந்த குழந்தை அருண்மொழியை கண்டு அழகாய் சிரித்தது.
அதைக் கண்டு ஆச்சர்யமாய் “பாருடா..” என்ற நிகேதன், “உங்களுக்கு மாமாவை நல்லா தெரியுதா? மாமா தான் நீங்க மம்மி டம்மிக்குள்ள இருந்து வெளிய வர ஹெல்ப் பண்ணாங்க” என்று சொல்ல விரலை எடுத்து விட்டு இன்னும் அழகாய் சிரித்தாள் குழந்தை!
நிகேதன் சொன்னதும் அருண்மொழிக்கு மகிழினி பிறந்த தினம் நினைவில் அலையாய் எழுந்தது!
மறக்க முடியாத நாளாகிற்றே! அவன் தென்றலை முதல் முதலாகக் கண்ட நாள்! பசுமையாய் நெஞ்சில் இன்றும் உறவாடும் அந்த நாளை மீண்டுமொரு முறை நினைத்துப் பார்த்தவன் தாங்கள் சந்திக்க வித்திட்ட குழந்தையின் கன்னத்தில் ஆசையோடு முத்தம் வைக்க கிளுக்கி சிரித்தாள் குழந்தை!
மாதவன் குழந்தையை கை நீட்டி அழைக்க அதுவோ மாட்டேன் என்று அருண்மொழி தோளில் முகத்தை மறைத்துக் கொண்டது.
“உங்க மாமா ப்ரெண்ட் வேணாமா?” என்று மாதவன் பாவமாய் கேட்க, “வேண்டாம் போடா” என்றான் அருண்மொழி கிண்டலுடன் குழந்தையின் தலை வருடியபடி.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அனுஜா மாதவனை அழைக்க “நீங்க பேசிட்டு இருங்க. அம்மா கூப்பிடுறாங்க” என்று அவன் நகர்ந்து செல்ல நிகேதன் அருண்மொழியிடம், “கொஞ்சம் பேசணும் மாப்பிள்ளை” என்றான் தயக்கத்துடன்.
“சொல்லுங்க” என்று அருண்மொழி அவன் பக்கம் திரும்பி நிற்க, “அது.. அப்பா உங்க கிட்ட என்னமோ பேசணும்னு நினைப்பாங்க போல. ரொம்ப நேரமா உங்கள பாக்குறதும் அங்க பேசுறதும்னு இருந்தாங்க. அதான்..” என்றவன் வெகுவாக தயங்கி நிறுத்த,
“நான் என்ன நினைப்பேன்? எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு தயங்குறாங்களா மாமா?” என்றவன் சரியாக கணித்து கேட்டதும் மாமா என்ற அழைப்பும் நிகேதனை நெகிழ வைத்தது.
மெச்சுதலாய் அவனைப் பார்த்தவன், “அப்படி தான் போல மாப்பிள்ளை” என்றான்.
பெரு மூச்சுடன் அவனைப் பார்த்தவன் “நடந்தது எல்லாம் வருத்தம் தான். அதுக்காக அதையே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்க முடியாது இல்லையா? அடுத்த கட்டம் நோக்கி நகரனும் தானே. இல்லேன்னா வாழ்க்கை தேங்கிடும்!” என்றவன்,
“அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்து நான் மாமா கிட்ட அவ்வளவு பேசினதும் தென்றல் அழுததை தாங்கிக்க முடியாம தான். மத்தபடி இந்த நிமிஷம் எனக்கு அவுங்க மேல எந்த மனக் குறையும் இல்ல. நானே பேசுறேன் மாமா கிட்ட” என்றான் புன்னகையுடன்.
“ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை” என்று அவன் கரங்களை பற்றிக் கொண்டவன்,
“உண்மையாவே என் தங்கச்சிக்கு கிடைச்ச வரம் நீங்க” என்று உவகையுடன் கூறி விட்டு குழந்தையை வாங்கிக் கொண்டு நகர புன்னகையுடன் நின்றிருந்தான் அருண்மொழி.
நேரம் மாலையை தாண்டி இரவை நெருங்கி இருக்க தென்றலை பெண்கள் எல்லோரும் இரவு முஹூர்தத்திற்கு தயார் செய்தனர்.
கிளம்பும் சமயம் அனுஜா தென்றலிடம் “சாந்தி முகூர்த்தம் உங்க வீட்ல வைக்கிற வழக்கம் இல்லேன்னு பாட்டி சொன்னாங்கடா. அதான் நம்ம வீட்ல வைக்கலாமான்னு கேட்டதுக்கு அருண் வேணாம் இங்கேயே ஏற்பாடு பண்ணிடுங்க அனும்மான்னு சொல்லிட்டான். அதான் எல்லாம் இங்கேயே பண்ணிட்டோம்” என்றவர்,
“நாங்க இருந்தா உங்களுக்கு சங்கடமா இருக்குமோ என்னமோன்னு தான் கிளம்புறோம்” என்று அவள் கன்னம் வருடிக் கொடுக்க,
“என்ன அத்தை நீங்க? எனக்குப் புரியாதா?” என்று அவரின் கைப் பற்றிக் கொள்ள,
“சரிடா. பாத்துக்கோங்க. பால் கிட்சன்ல இருக்கு. எடுத்துக்கோ. பத்திரம். காலைல நாங்களும் வந்திடுவோம். உங்க வீட்லயும் எல்லாரும் வந்துடுவாங்க. நீங்க ரெடியாகி இருங்க. கோவிலுக்கு போகலாம்” என்றதும் சரி என்றவள் புன்னகையுடன் தலை அசைக்க அனுஜாவின் குடும்பம் முதலில் விடை பெற அதற்கடுத்து தென்றல் மீனாவின் குடும்பமும் கிளம்பியது.
அழகம்மை பேத்திக்கு அத்தனை அறிவுரை வழங்கி ஒரு வழி ஆக்கி விட நான்கு மருமகள்களும் அவரை இழுத்துச் செல்லாத குறை தான்!
அறிவுரையோடு இல்லாமல் “இப்ப நாங்க கிளம்புறப்ப நீ ரூம்குள்ளயே இரு. அருண் மட்டும் கீழ வரட்டும்” என்று வேறு மிரட்ட, “பாட்டி சத்தியமா இந்த இடத்த விட்டு நான் நகரல. இதுக்கு மேல எதாவது சொன்னீங்க.. என் காது ரெண்டையும் கழட்டி உங்க கிட்ட கொடுத்திடுவேன்” என்றாள் அவரின் பேச்சுக்களை தாங்க முடியாமல்.
“கொடுப்ப கொடுப்ப..” என்று நொடித்த அழகம்மை, “ஒழுங்கா சொன்னத கேட்டுக்க” என்றார் பெரியவராய்.
“விடுங்க அத்தை. போதும்” என்று வசுந்தரா மாமியாரிடம் சொல்லி விட்டு அவர் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் தென்றல் மீனாவின் கன்னம் வருடி “பத்திரம்டா மீனு. நாங்க காலைல வரோம்” என்றதும் அவரை அணைத்துக் கொண்டவள் சற்று நொடிகள் கண் கலங்கி நின்றாள்!
இனி அவரை நினைத்த நேரத்தில் எல்லாம் பார்க்க முடியாதே! தனக்காகவே புகுந்த வீட்டில் வாழ்ந்த ஜீவன்! இப்போது தான் இல்லாமல் அவர் மட்டும். நினைக்கவே நெஞ்சம் பாரமாகியது.
அவள் கண்ணீரைக் கண்டு “இதென்ன நல்ல நேரத்துல அழுதுகிட்டு” என்று செல்லமாய் கண்டித்தவர்,
“போன் பண்ணா உன் வசும்மா ஓடி வரப் போறேன். அப்புறம் என்ன?” என்று அவளை சமாதானம் செய்து விட்டு கிளம்பினார்.
முதல் காரில் அழகம்மை பத்நாபன் குழந்தையுடன் சந்தியா மற்றும் பெண்கள் சிலர் கிளம்ப, அடுத்ததாய் குணநாதன் கனி அமுதன் என பிள்ளைகளுடன் அவர்களும் இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப, இறுதியாக வெங்கடேசன் கிளம்பும் கார் தயாராக இருந்த நிலையில் தயங்கியபடி அருண்மொழியிடம் வந்தார்.
கீழ் வரை அவர்களை வழி அனுப்ப வந்திருந்தவன் அவரின் பார்வையும் தயகத்தையும் உணர்ந்து அவரை நெருங்கி “சொல்லுங்க மாமா. என்ன பேசணும்?” என்று வெகு இயல்பாக அமரிக்கையான புன்னகையுடன் அவன் கேட்டு விட வெங்கடேசனிற்கு தான் வார்த்தைகள் தந்தி அடித்தது. கூடவே அவனின் மாமா என்ற அழைப்பில் மனம் குளிர்ந்து போனது.
“அது மாப்பிள்ளை…” என்றவர் அவனின் முகம் பார்க்க, “சொல்லுங்க மாமா. என்ன விஷயம்” என்றான் அப்போதும் சாதாரணமாகவே.
அவனின் இயல்பில் தைரியம் வரப் பெற்றவராய் “ரொம்ப சந்தோஷமா இருக்கு மாப்பிள்ளை. மீனு முகத்துல இருக்க சந்தோஷம்..” என்றவர் கலங்கிய கண்களை சிமிட்டிக் கொண்டு,
“நான் தான் புரிஞ்சிக்கல. கூடவே என்னன்னமோ பண்ணப் பாத்துட்டேன்”
“அதெல்லாம் எதுக்கு மாமா இப்ப?” என்று அவரைத் தடுத்தவன்,
“மறந்திடலாமே” என்றான் தலை அசைத்து வேண்டாமே என்பது போல்.
“ஹ்ம்ம்…. நிறைய பேசணும்னு இருக்கு மாப்பிள்ளை. ஆனா என்ன பேசன்னு தெரியல. மீனு சந்தோஷம் நீங்க தான். நல்லா இருக்கணும் ரெண்டு பேரும்” என்றவர்,
“முகூர்த்த நேரம் முன்னாடி எங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்தப்ப என் பொண்ணு என் கிட்ட கேட்டா.. பேசினா” என்று நெகிழ்ந்து போய் நடுக்கமான குரலில் சொல்லொண்ணா சந்தோஷத்தில் அவர் படபடக்க,
“என்ன பேசினா? என்ன கேட்டா?” என்றான் அருண்மொழி தலை சாய்த்து புன்னகையுடன்.
சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு அவர் மகள் கேட்டதை சொன்னவர் “அந்த நிமிஷத்துல கூட எனக்கு வருத்தமான்னு கேட்டா மாப்பிள்ளை. அப்ப என் பொண்ணுக்கு நான் எந்த அளவுக்கு முக்கியம்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. முன்ன மாதிரி பேசுறதில்லைனாலும் எனக்கு இன்னைக்கு மனசு நிறைஞ்சு போச்சு மாப்பிள்ளை. என் பொண்ணு பேசாம இருந்தாலும் இனி நான் பேசாம இருக்க மாட்டேன். அவ என்னை மன்னிக்க முடிஞ்ச அன்னைக்கு பேசட்டும்” என்று உணர்ச்சி மிகுதியில் கண்கள் நிறைய அவர் பேச,
அவரின் பேச்சில் பளிச்சென்ற புன்னகையுடம் அவரின் கை பற்றிக் கொண்டவன் அவர் கண் கலங்குவதை கண்டு “ரிலாக்ஸ் மாமா” என்றான் கனிவாக.
“ஹ்ம்ம். சரி மாப்பிள்ளை. நேரம் ஆச்சு. கிளம்புறோம். நாளைக்கு பாக்கலாம்” என்று அவர் காரில் ஏறி புறப்படும் வரை நின்றவன் புன்னகையுடன் லிஃப்ட்டின் மூலம் மேலே வந்தான்.