அவன் முகத்தில் தென்பட்ட கவலை கண்டு “உனக்கு எதுக்கு இதெல்லாம். கல்யாண மாப்பிள்ளை.. கலகலன்னு இருக்க வேணாம்?” என்று அவன் தோள் தட்டிக் கேட்க,
“என் ஃபேமிலிக்கு எதோ பிராப்ளம்னு தெரிஞ்சு எப்படி மேடி கலகலன்னு இருக்க முடியும்?” என்றதும் மாதவன் அசையாமல் நண்பனை பார்த்தான்.
அவனறிந்து முதல் முறையாக அருண்மொழி இப்படிக் கூறிக் கேட்கிறான். நெஞ்சம் நிறைந்து போனது.
“கண்ணு வேர்க்குது மச்சான்” என்று மாதவன் கலங்கவிருந்த கண்களை சிமிட்டியபடி கூற “முதல்ல என்ன விஷயம்னு சொல்லு” என்றான் அருண்மொழி விடாமல்!
பெரு மூச்சுடன் நண்பனைப் பார்த்தவன், “எல்லாம் என் வீணா போன மாமா மண்டையனால தான் அருண்” என்றதும் அருண்மொழி அதிர்ந்து பரபரப்புடன் அவனைப் பார்க்க,
“ஹ்ம்ம்.. நேத்து நைட் அம்மாக்கு கால் பண்ணி ஒரே ரகளை தான். எப்படி நாங்க எல்லாம் சேர்ந்து உனக்கு முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு. அம்மாவும் இன்னும் நீங்க திருந்தலை தானே. எங்கள ஏன் வாட்ச் பண்ணிட்டே இருக்கீங்கன்னு கோபமா பேசிட்டாங்க. ஒரு கட்டத்துல வாக்குவாதம் முத்தினதும் அப்பா போனை வாங்கி எங்க பையன் நாங்க பண்ணோம். இதுக்கு யாரைக் கேக்கணும்னு சொல்லி உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்கன்னு சொல்லிட்டார். அதுக்கு அந்த ஆள் தன்னோட மினிஸ்ட்ரி பவர் யூஸ் பண்ணி ஃபேக்டரில இன்ஸ்பெக்ஷன் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கான்” என்றதும் அருண்மொழி திகைத்து நண்பனை பார்த்தான்.
அவன் முகத்தில் தென்பட்ட திகைப்பை கண்டு “இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல மச்சான். அந்த ஆள் சும்மா பயம் காட்ட இப்படி பண்ணி வச்சிருக்காரு. பயப்பட என்ன இருக்கு? நம்ம என்ன ஃபேக்டரில இல்லீகலா எதுவும் பண்றோமா? நானும் அப்பாவும் ஸ்ட்ராங்கா தான் இருக்கோம். அம்மா தான் அப்செட் ஆகிட்டாங்க” என்றவன்,
“சரியான குடைச்சல்டா அந்த ஆளு” என்று பல்லைக் கடிக்க, “என்னால தான” என்று அருண்மொழி பெரும் வேதனையுடன் சொன்னதும்,
“எதாவது சொன்ன பல்லைப் பேத்துடுவேன்டா. இது ஒரு பிராப்ளமே இல்ல. எல்லாம் பக்காவா இருக்கு. எவன் வந்து என்ன செக் பண்ணாலும் ஒன்னும் பண்ண முடியாது. அண்ட் அந்த ஆள் மட்டும் தான் பெரிய ஆளா. நமக்கும் பொலிட்டிக்கள் சப்போர்ட் இருக்குன்னு தெரியாம இதெல்லாம் பண்றாரு போல” என்று தெம்பாக சொன்ன மாதவன்,
“நீ இதைப் பத்தி எல்லாம் ஒன்னும் யோசிக்காத மச்சான். கல்யாண மாப்பிள்ளை மாதிரி இரு. பாரு ஃபேஸ் எப்படி ஆகிடுச்சுன்னு” என்றதும் அருண்மொழி அப்படியே நிற்க,
“இதுக்கு தான் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். பெரிய இவன் மாதிரி கையை கட்டிட்டு அமைதியா லுக் விட்டு விஷயத்தை வாங்கிட்டு இப்ப இப்படி மூஞ்சியை பாரு” என்று கோபமாக சொல்ல,
“பெரிய இஷு ஆகுமா மேடி” என்று அருண் பதைபதைப்புடன் கேட்க, “டேய் நீயும் அம்மா மாதிரி ஏன்டா கவல படுற. ஒன்னும் ஆகாது. பாத்துக்கலாம். அந்த ஆள் எல்லை மீறி போனா நானும் அப்பாவும் நெக்ஸ்ட் ஸ்டெப் எடுக்க ரெடியா தான் இருக்கோம். நீ ஏன் இப்படி கவல படுற. ஜஸ்ட் பீ நார்மல் அருண்” என்றான் அவனின் தோள் மேல் கையிட்டு.
“இன்ஸ்பெக்ஷன் என்னைக்கு?” என்று அருண் கேட்டதும் “இன்னும் ரெண்டு நாள்ல” என்றான் மாதவன்.
அனுஜா இவர்கள் வர முடியாதென ஏன் கூறினார் என்று இப்போது புரிய இன்னும் கவலை கூடிப் போனது!
“மேடி” என்றான் அருண்மொழி தவிப்புடன்.
“டேய்.. எதுவும் ஆகாதுடா. நீ ஏன்டா இப்படி அப்செட் ஆகுற” என்றவன்,
“அந்த ஆள ஒரு நாள் செல்லாக் காசா ஆக்குறேன் பார்” என்று பல்லைக் கடித்து சொன்ன மாதவன் “நீ முதல்ல இதை எல்லாம் விடு. புது மாப்பிள்ளை மோட்க்கு வா” என்று நண்பனை பேசிப் பேசியே இயல்பாக்கி இருந்தான்.
ஆனால் அருணிற்கு மனம் தாள வில்லை. ஆரம்பத்தில் இருந்தே தன்னால் அவர்களின் குடும்பத்தில் சங்கடங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்பதை இந்த நொடி வரை கசப்பாக உணர்ந்தான்.
கணவனின் முக மாறுதலை கண்டு தென்றல் மீனா என்னவென கேட்க “வீட்டுக்கு போய் சொல்றேன்டா” என்றவன் அமைதியாகி விட என்னவோ என கவலையாகி விட்டது அவளுக்கும்.
“நாளைக்கு மறு வீட்டுக்கு ரெண்டு பேரும் வரணும்” என்று அவர்களையும் அனுஜா குடும்பத்தினரயும் சேர்த்தே அழைத்து விட்டு பத்மநாபன் குடும்பம் கிளம்ப இல்லம் வந்ததும் கணவனிடம் “என்ன மொழி ஆச்சு? ஏன் இவ்வளவு டல் ஆகிட்டீங்க?” என்று தென்றல் மீனா கவலையுடன் கேட்க மாதவன் தன்னிடம் சொன்னதை மனைவியிடம் பெரும் கலவையுடன் பகிர்ந்து கொண்டான் அருண்மொழி.
கேட்டவளும் அதிர்ந்து அமர்ந்திருக்க “பயமா இருக்குடா தென்றல். அந்த ஆள் எந்த எக்ஸ்ட்ரீம் வேணாலும் போகக் கூடியவர். அனும்மா ஹாஸ்பிட்டல் கட்டும் போதே அவ்வளவு டார்ச்சர் பண்ணார். இப்ப ஃபேக்டரியை ஃபோக்கஸ் பண்ணி இருக்கார். நினைக்கவே கஷ்டமா இருக்கு தென்றல்” என்றான் வேதனையுடன்.
“அண்ணா என்ன சொன்னாங்க?” என்று தென்றல் மீனாவும் கவலையுடன் கேட்க, “அவன் ரொம்ப ஸ்ட்ராங்கா பேசுறான் தான். ஆனா எனக்கு பயமா இருக்கு தென்றல். அந்த ஃபேக்டரி அப்பாவோட ரொம்ப வருஷ உழைப்பு. இப்ப மேடி டேக் ஓவர் பண்ணதும் இன்னொரு யூனிட் ஸ்டார்ட் பண்ணி ரொம்பவே சக்சஸ்ஃபுல்லா கொண்டு போய்ட்டு இருக்காங்க. இந்த நேரத்துல இன்ஸ்பெக்ஷன் வர ஏற்பாடு பண்ணி இருக்கார் அவுங்க மாமா” என்றான் தாங்க முடியாமல்.
“நான் தாத்தா கிட்ட சொல்லவா மொழி? தாத்தாக்கும் கட்சி ஆளுங்கள தெரியும்” என்றவள்,
“அப்பாவுக்கும் நல்லாவே தெரியும். ஜுவல்லரி பிஸ்னஸ் லைன்ல இருக்கும் போது அவுங்களை சமாளிக்க வேண்டியது வரும் அடிக்கடி. அப்பா தான் அவுங்களை எல்லாம் ஹாண்டில் பண்ணுவாங்க” என்று தயங்கியபடி கூற,
ஒரு நொடி யோசித்தவன் “வேண்டாம்டா தென்றல். நாம எதாவது செய்யப்போய் அது இன்னும் மோசமான விளைவுகளை உருவாக்கிட்டா ரொம்ப கஷ்டம். ரெண்டு நாள் போகட்டும். இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சதும் மேடி கிட்ட பேசினதுக்கு அப்புறம் என்னன்னு பாக்கலாம்” என்றவனுக்கு எந்த ஒரு பெரிய பிரச்சனையும் வந்து விடக் கூடாது என அத்தனை பயம் உருவாகி இருந்தது.
மறு நாள் மறு வீடு முடிந்து அதற்கடுத்து அழகாபுரம் கிளம்பி சென்று என எல்லாவற்றிலும் புன்னகையுடன் கலந்து கொண்டாலும் மனதிற்குள் என்னவாகி இருக்குமோ என அருண்மொழிக்கு பயம் இருக்கவே செய்தது.
மாலை போல் மாதவனுக்கு அழைத்தவன் அவன் அழைப்பை ஏற்றதும் “மேடி என்னடா ஆச்சு? எல்லாம் ஓகே தான” என்று படபடப்புடன் கேட்க, மாதவன் திகைத்தான்.
“டேய்.. என்னடா நீ? இதையேவா நினைச்சிட்டு இருந்த? உன்னை அடி வெளுக்க போறேன் பாரு” என்று மாதவன் அவனின் படபடப்பில் நண்பனை திட்ட,
“நீ அப்புறம் திட்டு. அடி. என்ன வேணாலும் பண்ணு. முதல்ல இன்ஸ்பெக்ஷன் என்ன ஆச்சு? அதை முதல்ல சொல்லு” என்றதும் மாதவனுக்கு வருத்தமாக இருந்தது.
அவனிடம் சொல்லியே இருக்கக் கூடாது என்று மனம் நூறாவது முறையாக தன்னையே நிந்திக்க “மேடி.. இருக்கியா” என அருண்மொழி கேட்டதும்,
“இருக்கேன்டா” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னவன்,
“நீ எங்க இருக்க? அழகாபுரம்ல இருந்து கிளம்பியாச்சா?” என்று மாதவன் கேட்க,
“இன்னும் இல்ல மேடி. நைட் தான் கிளம்புவோம். சென்னை ரீச் ஆக மார்னிங் ஆகிடும்” என்றவனை நன்றாக வறுத்து எடுத்து விட்டான் மாதவன்.
“உனக்கு என்னடா நினைப்பு? கல்யாணம் ஆகி நாலு நாள் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி அப்செட்டா இருக்க. அதுவும் இந்த உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு. அங்கையும் போய் இப்படி தான் இருந்தியா” என்று பல்லைக் கடித்தவன்,
“நீ கேட்டதும் சொன்னேன் பாரு. என்னைச் சொல்லணும்” என தன் தலையிலேயே அடித்துக் கொண்டு “ஒரு பிரச்சனையும் இல்லை. வந்தாங்க. போய்ட்டாங்க” என்றான் மாதவன் திருக்குறளை விட மோசமாக இரண்டே வார்த்தைகளில்.
“வேற எதுவும் பிரச்சனை இல்லையே” என்று அருண்மொழி படபடப்பு குறையாமல் கேட்க,
“வந்தேன்னு வை. உன்னை ஒரு வழி ஆக்கிடுவேன் அருண்!” அத்தனை கோபத்துடன் மாதவன் சொல்ல அருண்மொழி சட்டென்று மௌனமானான்.
“ஏன்டா இப்படி பண்ற? நானும் அப்பாவும் கூட இப்படி டென்ஷன் ஆகல. ஏன் அம்மா அங்க தானே இருக்காங்க. அவுங்க கூட இந்த ரெண்டு நாள்ல நார்மல் ஆகிட்டாங்க. நீ இருக்க பாரு” என்றவன்,
“வந்த ஆஃபிசர்ஸ் எல்லாம் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச ஆளுங்க. அவங்களே “சாரி சார். இன்ஸ்பெக்ட் பண்ண சொல்லி ஆர்டர். அதான் பண்ண வேண்டிய கட்டாயம்னு தர்ம சங்கடமா சொல்லிட்டு பேருக்கு செக் பண்ணிட்டு போனானுங்க” என்றதும் தான் ஆசுவாசமாக உணர்ந்தான் அருண்மொழி.
“ஓகே மேடி. இப்ப தான் கொஞ்சம் ரிலீஃபா இருக்கு” என்றவன் குரலில் மாதவன் அத்தனை வருத்தம்.
“முதல்ல போய் அங்க எல்லாரையும் பாரு. சும்மா இதையே நினைக்காத. நாளைக்கு இங்க வருவ தானே. வாடா.. உனக்கு இருக்கு!” என்று கடுப்பாக சொன்னவன் அழைப்பை துண்டித்து விட நண்பனின் அக்கறை கலந்த கடுப்பில் புன்னகையுடன் நின்றிருந்தான் அருண்மொழி.
அழகாபுரத்தில் அவர்களின் குல தெய்வக் கோவிலில் இருந்தனர் எல்லோரும். கோவிலை விட்டு வெளியே வந்தவன் அருகே இருந்த குளத்தின் படிகளில் நின்று பேசிக் கொண்டிருக்க அவன் பேசி முடித்ததும் கணவனை நெருங்கினாள் தென்றல் மீனா!
“என்னாச்சு மொழி? எல்லாம் ஓகே தான” என்று அவன் முகத்தில் இருந்த புன்னகையை உணர்ந்தே கேட்க,
“ஹ்ம்ம்டா தென்றல்” என்றவன் மாதவன் சொன்னதை பகிர்ந்து கொண்டு “ரொம்ப திட்டிட்டான். நான் இதே நினைப்பா டென்ஷனா இருந்தேன்னு” என்றான் புன்னகையுடன்.
“இப்ப மொழி நார்மல் தானே?” என்று சிரிப்புடன் கேட்டவள் சற்று நேரத்திற்கு முன்னர் சாமிக்கு படைத்த பொங்கலை தொன்னையில் எடுத்து வந்திருக்க அதைக் கணவனிடம் நீட்டி “இந்தாங்க. சூடா ஸ்வீட் பொங்கல்!” என்று அவனிடம் நீட்ட அதை ஒரு பார்வை பார்த்தவன், அவள் கைப் பற்றி குளத்தின் படிகளில் அமர்ந்து விட்டு அவளையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்.
“பொங்கல்” என்றவள் நீட்ட கொஞ்சமாக எடுத்துக் கொண்டவன் “நீயும் எடுத்துக்கோடா” என்க,
“ஒரு பிளேட் சாப்பிட்டாச்சு மொழி. ஐயம் ஃபுல்” என்றதும் சிரிப்புடன் மனைவியை பார்த்தவனின் முகம் தெளிந்திருந்தது.
“ஹப்பா இப்ப தான் மொழி மொழியா இருக்கார். ரெண்டு நாளா கொஞ்சம் டென்ஷனா இருந்தீங்க” என்று சொல்லவும் அவளின் கைப் பற்றி கொண்டவன் “சாரி தென்றல். கொஞ்சம் பதட்டமாவே இருந்தது” என்றதும் “இதுக்கு எதுக்கு சாரி” என்றாள் கணவனை முறைத்தபடி.
“இல்லடா… பிரச்சனை என்னால தான். ஆனா பாதிப்பு அவுங்களுக்கு தானே. என்னால நிறையவே கஷ்டப் பட்டுட்டாங்கடா தென்றல். இப்பவும் மேடி வரைக்கும் அது தொடரவும் தான் கஷ்டமா இருந்தது. மேடி சொன்ன மாதிரி அவர் பயம் காட்ட தான் இப்படி எல்லாம் பண்ணி இருக்கார். ஆனா அவருக்கு மேடி பத்தி முழுசா தெரியலன்னு நினைக்கிறேன். நிச்சயம் அவரை ஒரு வழியாக்காம விட மாட்டான்” என்றான் நண்பனை அறிந்து வைத்தவனாக.
இருவரும் பேசிக் கொண்டிருக்க அவனுக்காக எடுத்து வந்திருந்த பொங்கலை பேசியபடியே முழுதாக உண்டிருந்தாள் தென்றல் மீனா.
அருண்மொழி சிரிப்புடன் தொன்னையை சுட்டிக் காட்டி “எனக்கு பொங்கல் எங்கடா?” என்று கேட்க,
“அச்சோ. பேசிட்டே சாப்பிட்டது தெரியல மொழி” என்றவள் “இருங்க. நான் போய் உங்களுக்கு எடுத்திட்டு வரேன்” என்றவள் எழப் பார்க்க,
“வேண்டாம்டா. போதும்” என்றவன், “அவ்வளவு பிடிக்குமா” என்று பொங்கலைக் கேட்க, அவளோ கணவனை குறும்பாக பார்த்து கண் சிமிட்டி “பிடிக்குமே…. ரொம்ப ரொம்ப பிடிக்குமே” என்றாள் பூரிப்பான புன்னகையுடன்.
அவள் சொன்னதில் சொன்ன விதத்தில் என பனியாய் கரைந்தவன் “நான் பொங்கலை கேட்டேன்டா தென்றல்” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.
“நான் மொழியை சொன்னேன் மொழி” என்றாள் அவளும் நமட்டுச் சிரிப்புடன்.
“பொங்கல் ஸ்வீட் தான். ஆனா என்னோட மொழி ரொம்ப ஸ்வீட். சாஃப்ட் ஸ்வீட். ஸ்வீட் ஸ்வீட்” என்றாள் இனிக்கும் குரலில்!
மனைவியின் கூற்றில் “ஹே தென்றல்..” என்று அட்டகாசமாய் சிரித்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டு உச்சியில் இதழ் பதிக்க கண் மூடி கணவனின் தோள் சாய்ந்தவள் மனம் என்றும் போல் இன்றும் மொழியின் வசம் சாய்ந்திருந்தது அகம் கொள்ளா காதலுடன்!
எதிரே இருந்த குளத்தில் மிதமாய் அசைந்தாடிக் கொண்டிருந்த நீரில் இருவரின் பிம்பமும் லயத்துடன் அசைந்தாடியது காதலின் அழகியலாய்!