தாங்கள் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த தென்றலின் விழிகளில் அத்தனை ரசனை! ஆச்சர்யம்! பரவசம்! கூடவே சிலாகிப்பும்!
சற்று தொலைவில் பச்சை பசேலென்று ஈரப்பதத்துடன் தெரிந்த மேற்கு தொடர்ச்சி மலையின் முகடுகளை முத்தமிட்டுச் செல்லும் மேகங்களை கண்டு கண்கள் விரித்தவளுக்கு தொடர்ந்து எண்ணற்ற பஞ்சுப்பொதியான மேகங்கள் மலையின் உச்சியை தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் என கடந்து செல்வதைக் கண்டு தானும் அந்த மேகமாகிவிட மாட்டோமா எனும் பேராசை உண்டானது!
மேலும் தன்னை சூழ்ந்திருந்த ஈரமான தென்றல் காற்றும் அவளை சிலிர்க்க வைக்க கூடவே காதோரம் கணவன் சொன்ன வார்த்தைகளும் அவளை மேலும் சிலிர்த்து சிவக்க வைத்தது.
“தென்றலோட தென்றலா இருக்கணும்டா தென்றல்! என்னைச் சுத்தி கண்ணுக்குத் தெரியாத தென்றலும் என் கண்ணை நிரைக்குற தென்றலும் வேணும். வார்ம் (warm) தென்றல் அண்ட் சில் தென்றல்!” என்று ரசனையாய் சில்லாகிப்பாய் அவன் சொன்னதை இந்த நொடி வரை மனதிற்குள் அசை போட்டு முகம் சிவந்து லயித்து நின்றாள்.
குளிருக்கு இதமாக ஒரு ஷால்வையை போர்த்தி இருந்தவள் அந்த அதிகாலை நேரத்தின் குளிர் தாங்காமல் இன்னும் இழுத்துப் போர்த்திக் கொள்ள ஷால்வை தந்த கதகதப்பு போதாமல் இன்னுமின்னும் கதகதப்புத் தரக் கூடிய கணவனின் இதமான அணைப்பு வேண்டும் என்று அடம் பிடித்தது மனம்!
“மொழி…” என்று குளிரில் நடுங்கும் இதழ்களுடன் முணுமுணுத்தவளுக்குள் மொழியின் வாசம்!
அவனின் மெல்லிய காலடித் தடங்கள் கூட அவளுக்கு பழகி இருக்க அவன் பின்னே தன்னை நெருங்குவதை உணர்ந்தும் திரும்பாமல் நின்றாள்.
“தென்றல்” என்றவன் மனைவியை பின்னால் இருந்து இதமாக அணைத்துக் கொண்டு “அதுக்குள்ள எழுந்துட்ட? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமேடா. டிராவல் டயர்ட் வேற” என்றதும் அவன் இதழ் பிரித்து மொழிந்த மொழிகளின் வெம்மை செவியைத் தீண்டியதும் கதகதப்பாய் உணர்ந்தவள் பின்னால் சாய்ந்து இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டு “குளிருது மொழி” என்றாள் கண்கள் மூடியபடி.
“ஹ்ம்ம். இன்னும் கொஞ்சம் நேரம் மழை வந்திரும்டா. கீழ போகலாமா” என்றதும் திரும்பியவள் அப்போது தான் அவன் எதையும் போர்த்தாமல் லகுவான அதுவும் கை இல்லா டி ஷர்ட் ஒன்றுடன் வந்து நிற்பது புரிந்து சட்டென்று தான் போர்த்தி இருந்த ஷால்வையை சிறகாய் விரித்து தன்னோடு சேர்த்து அவனையும் ஷால்வைக்குள் கொண்டு வந்தவள்,
“எப்படி குளிருது? நீங்க ஸ்லீவ் லெஸ் ஷர்ட்ல வந்து நிக்குறீங்க” என்றபடி இன்னும் அவனை நெருக்கிக் கொள்ள, நெருக்கத்தில் நெரிசலில் சுகமாய் கரைந்தது மொழியின் உணர்வுகள்!
பார்வை மையலாக மாறி இருக்க தென்றல் கொடுத்த இருக்கத்தில் அவனைத் தழுவத் தொடங்கிய ஜில்லான தென்றல் காற்றும் வெம்மையாக மாறியதான மாயை!
“அட்லீஸ்ட் ஸ்வெட்டர் எடுத்து போட்டு வர வேண்டியது தானே மொழி” என்றவள் கடிந்து கொள்ள தன்னை அவளுள் பொத்தி வைத்தார் போல் அணைத்துப் பிடித்து நின்ற மனைவியின் அருகாமை அவனை வெகுவாக சோதிக்கத் துவங்கியது.
“தென்றல்..” என்றவன் அழைப்பின் மாற்றத்தை உணர்ந்து சுதாரித்தவள் தாங்கள் இருக்கும் சூழ்நிலையும் இருந்த இடமும் கண்டு குளிரை எண்ணி விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் அவஸ்தை கொண்டு நெளிந்தபடி நின்றாள்.
ஒரு பக்கமாக தலை சாய்த்து மனைவியின் முக பாவனைகளை ரசித்தவன் “தென்றல் லேசா விலகிடுச்சே” என்றான் தங்களுக்குள் முளைத்திருந்த இடைவெளியை சுட்டிக் காட்டி கண் சிமிட்டி!
“மொழி…” என்றவள் கன்னங்கள் சூடாக குளிருக்கு இன்னும் சிவந்து போனது தென்றலின் முகமெல்லாம்!
“கிட்ட வாடா” என்றவன் அவளை அணைத்துக் கொள்ள “கீழ போகலாம். இங்க மொட்டை மாடி. யாராவது பாத்திட போறாங்க” என்று மெல்லிய குரலில் சொன்னதும் “யாரும் இல்லடா” என்றவன் அணைப்பின் அழுத்தத்தை கூட்டியதும் வெட்கமும் அவஸ்தையும் கூடியது தென்றலுக்கு!
தென்றல் சூழ்ந்த தென்காசி! தென்றல் நிறைந்த தென்காசி!
இயற்கை எழில் மிகுந்த தென்காசிக்கு வந்திருந்தனர் தென்றலும் மொழியும்!
தேன்நிலவிற்கு எங்கே செல்லலாம் எனும் பேச்சு வார்த்தை வரும் பொழுது “உங்களுக்கு என்ன சாய்ஸ்சோ அதுவே எனக்கு ஓகே மொழி” என்று விட்டாள் தென்றல் மீனா.
மனைவி சொன்னதும் மறு நொடி யோசிக்காமல் “தென்காசி போலாமாடா தென்றல்” என்று அவன் சொன்னதும் கண்கள் விரிய “தென்காசியா?” என்று அவள் ஆச்சர்யமாகவும் ஏன் அங்கே என்பது போலவும் அவனைப் பார்க்க,
“செம்ம நேட்சர் ஸ்பாட்டா! சில் க்ளைமேட்” என்றவன் மனைவியை அணைத்துக் கொண்டு அவள் காதருகே குனிந்து “தென்றலோட தென்றலா இருக்கணும்டா தென்றல்! என்னைச் சுத்தி கண்ணுக்குத் தெரியாத தென்றலும் என் கண்ணை நிரைக்குற தென்றலும் வேணும். வார்ம் (warm) தென்றல் அண்ட் சில் தென்றல் ரெண்டையும் ஃபீல் பண்ணனும்! அதான் அங்க உன்னைக் கூட்டிட்டு போகனும்னு தோணுச்சு” என்று அவன் சொன்னதும் கணவனின் கூற்றில் தென்றலின் காற்றலையில் சாரல் மழையின் குளுமை!
தென்றலோடு தென்றலாக இருக்க விரும்பும் கணவனின் விருப்பம் அவளை பிரம்மிக்கவே வைத்தது.
திருமணத்திற்கென்று அவன் எடுத்திருந்த பத்து நாட்கள் விடுமுறையில் இன்னும் ஐந்து தினங்கள் மீதமிருக்க இதோ நேற்று மாலை போல் தான் இருவரும் தென்காசிக்கு வந்திருந்தனர்.
கணவன் சொன்ன கூற்று பொய் இல்ல என்பதை போல் தென்காசியில் எங்கும் தென்றல்! எதிலும் தென்றல்!
நேற்று மாலையும் சரி இன்று அதிகாலையும் சரி குளுமையாக வீசிய தென்றல் காற்றும் அவ்வப்போது பெய்த சாரல் மழையும் அவர்களை அழகாய் தழுவிக் கொண்டது!
தென்காசிக்கு செல்லலாம் என்று முடிவு செய்ததும் தென்றல் மீனா வசுந்தராவிடம் தான் முதலில் கூறி இருக்க “சரிடா பாத்து போய்ட்டு வாங்க” என்று மகிழ்ச்சியுடன் சொன்னவரின் மூலம் அழகம்மை தொட்டு அனைவருக்கும் விஷயம் தெரிய வந்தது.
உடனே வெங்கடேசன் தந்தையிடம் “எப்ப போறாங்க ப்பா?” என்று கேட்டவர்,
“தென்காசின்னா என் ஃப்ரெண்ட் ஒருத்தன் வீடு சும்மா தான் இருக்குப்பா. அவன் வெளியூர்ல தான் இருக்கான். வீடு பூட்டி தான் இருக்கும். ஆளுங்கள விட்டு ரெடி பண்ணி வைக்க சொல்லலாம். அங்க தங்க ஏற்பாடு பண்ணட்டுமான்னு மாப்பிள்ளை கிட்ட கேளுங்கப்பா” என்று வெங்கடேசன் கூறி இருக்க,
பத்மநாபன் அருணிடம் கேட்ட போது “தென்றலைக் கேக்கணும் தாத்தா” என்றதும் சிரித்தவர்,
“நானாவது அறுவது வயசுக்கு மேல தான் என் பொண்டாட்டியே சரணம்னு விழுந்தேன். நீ இப்ப இருந்தே என் பேத்தி தான் எல்லாம்னு இருக்கியே” என்று கிண்டல் செய்தாலும் அவர் குரலில் சந்தோஷம் தான் மிதமிஞ்சி இருந்தது.
அவர் சொன்னதில் சிரித்தவன் “என்னோட எல்லாமுமே தென்றல் தான் தாத்தா. தென்றலில்லாம மொழி என்னைக்கும் இல்ல” என்றான் புன்னகையுடன்.
பத்மநாபன் அகமகிழ்ந்து போனார் என்றால் அவரருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த வெங்கடேசனின் உள்ளம் சந்தோஷத்தில் விம்மித் துடித்தது!
“சரி ப்பா. தென்றல் கிட்ட கேட்டு சொல்லு” என்றவர் வைத்ததும் “மாப்பிள்ளைக்கு நம்ம மீனுன்னா கொள்ளை பிரியம் தான்” என்று வெங்கடேசன் தன்னை மறந்து சொல்லி விட பத்மநாபன் கண்கள் அகல மகனைப் பார்த்தாலும் ஆமோதிப்பாய் தலை அசைத்து புன்னகைத்தார்.
அருண்மொழி தென்றலிடம் விஷயத்தை சொன்னதும் “அப்பா சொன்னாங்களா மொழி” என்று கேட்க,
“ஆமா தென்றல். மாமா சொன்னதா தான் தாத்தா சொன்னாங்க” என்றான் அருண்மொழி.
சட்டென்று மௌனமானவளின் முகம் என்னவோ செய்ய “என்னடா ஆச்சு? தென்றல் டல் ஆயிடுச்சு?” என கனிவுடன் கேட்டவன்,
“வேண்டாம்னா சொல்லிடலாம்டா. மாமா தப்பா எதுவும் எடுக்க மாட்டாங்க” என்றதும் புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“உங்களுக்கும் அப்பாக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வந்திடுச்சு தானே” என்று கேட்டவள், பின்னர் இல்லை என்பது போல் தலை அசைத்து “என்னோட மொழி தான் என் அப்பாவை நல்லா புரிஞ்சு வச்சிருக்கார்” என்றாள் உணர்ச்சி வசமாக.
“ஹ்ம்ம்.. ஓரளவு” என்றவன், “என்னடா சொல்லட்டும்” என்று அவளிடம் மீண்டும் கேட்க, “உங்களுக்கு ஓகேவா மொழி?” என்று அவள் அவனிடம் கேட்க, இருவருமே சிரித்து விட்டனர்.
“அங்கேயே ஸ்டே பண்ணிக்கலாம் மொழி” என்றதும் வெங்கடேசனுக்கே அழைத்து அவன் சரி என்று சொல்லி விட “சரிங்க மாப்பிள்ளை” என்றவர் வெகு தயக்கத்துடன்,
“மீனு.. மீனுக்கு சம்மதம் தானே மாப்பிள்ளை” என்றதும் தன் கை வளைவில் மௌனமாய் தோள் சாய்ந்து அமர்ந்தவாறு இருந்த மனைவியைக் கண்டவன் “ஹ்ம்ம் மாமா” என்றான் அருண்மொழி.
“மீனு எப்படி மாப்பிள்ளை இருக்கா!” என்று அவர் அடுத்துக் கேட்டதும், அருண்மொழியின் தோளில் இன்னும் அழுத்தமாய் முகம் புதைத்தாள் தென்றல் மீனா.
அழகாபுரத்தில் இருந்து வந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்கே மகளைப் பார்க்காத ஏக்கத்துடன் தாங்க முடியாமல் வெங்கடேசன் அவனிடம் கேட்க, கேட்டுக் கொண்டிருந்த தென்றல் மீனாவிற்கு தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“நல்லா இருக்கா மாமா” என்றவன் தென்றலின் தலை கோதியபடி அவளிடம் அலைபேசியை எடுத்து காண்பித்து பேசுறியா? என்று மௌனமாக இதழசைத்துக் கேட்க, பலமாக மறுத்தவள் அவன் மடியில் தலை வைத்துக் கொண்டு கண் மூடி விட்டாள்.
“சரிங்க மாப்பிள்ளை” என்ற வெங்கடேசன், அவர்கள் எப்போது கிளம்புறாகிரார்கள் என விசாரித்துக் கொண்டு “நீங்க போறப்ப வீடு ரெடியா இருக்கும் மாப்பிள்ளை. சமையலுக்கு வேணும்னாலும் ஆள் ஏற்பாடு பண்ண சொல்லிடலாம்” என்றதும் மறுத்துவிட்டான் அருண்மொழி.
“சரி மாப்பிள்ளை..” என்றவர் மீனுவிடம் பேச வேண்டும் போல் இருக்கிறது என்று கேட்க வந்து பின் வேண்டாம் என முடிவு செய்து “நான் வச்சிடுறேன் மாப்பிள்ளை. பாத்துக்கங்க” என்றதும் அழைப்பை துண்டித்தவன் மடி சாய்ந்த மனைவியை ஒரு பார்வை பார்த்தான்.
முகம் கசங்க தொண்டைக் குழி ஏறி இறங்க எதையோ நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள்.
“தென்றல்” என்றவன் அவளின் தலை வருட பட்டென்று கண்களை திறந்தவள், “பேசிட்டீங்களா?” என்றதும் ஆம் என்பதாக தலை அசைத்தான்.
அவள் பார்வையால் தவிப்புடன் அவனையே பார்க்க “என்னடா” என்றதும் தாமதமின்றி அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவள்,
“என்னால அப்பா கிட்ட பேச முடியல மொழி” என்றாள் விசும்பலுடன்.
மௌனமாய் அவளின் முதுகை வருடிக் கொடுத்தவன் அவளிடம் எதையும் கூறவில்லை. பேச முடியாது தவிப்பவளுக்குள் காயத்தின் ரணம் இன்னும் அணையாத கங்காய் இருப்பது புரிந்தது.
“எப்ப பேசுவேன் தெரியல. ஆனா ஒரு பக்கம் நான் பேசாம அப்பாவுக்கும் கஷ்டம் தானேன்னு இருக்கு” என்றாள் அழுகையுடன்.
“இல்லடா” என்றவன், “மாமா எதுவும் கஷ்டமா நினைக்க மாட்டாங்க” என்றதும் அவனை நிமிர்ந்து பார்க்க திருமணத்தன்று இரவு அவர் தன்னிடம் பேசியதை சொல்ல மெல்லிய திகைப்போடு கணவனைப் பார்த்தவள் மனம் சற்றே கனிந்தது.
“கொஞ்சம் டைம் அண்ட் ஸ்பேஸ் எடுத்திக்கிறதுல தப்பில்லடா தென்றல்” கணவன் கூறியதைக் கேட்டு மனம் சமன் பட மகிழ்வுடன் அவனோடு தென்காசிக்கு வந்திருந்தாள்.
அவளின் காரில் தான் வந்திருந்தனர். அவ்வளவு தூரம் இருவரும் மாற்றி மாற்றி காரை செலுத்திக் கொண்டு வந்தது அத்தனை அசதியை கொடுத்திருக்க எட்டு மணி அளவில் பயணம் கொடுத்த அசதியில் நன்றாக உறங்கி விட்டனர்.
விரைவாக உறங்கியது விரைவாகவே விழிப்பையும் கொடுத்திருந்தது.
இருவரும் அந்த வீட்டின் மொட்டை மாடியில் அணைத்தபடி நின்றிருந்தனர். மெல்லிய சாரல் தீண்டியதில் “மழை வர மாதிரி இருக்குடா தென்றல். கீழ போகலாம் வா” என்று மனைவியை அழைத்துக் கொண்டு கீழே வந்தவன் அறைக்குள் நுழைந்ததும் அவளை ஆரத் தழுவிக் கொண்டான்.
“இப்ப குளிராது தென்றல்” என்றவன் ரகசியமாய் சொன்ன விதத்தில் “மொழி…” என்று சிணுங்கியவள் “இட்ஸ் ஏர்லி மார்னிங் மொழி” என்றாள் வெட்கமாய்!
“ஹ்ம்ம். தெரியும்டா” என்றவன், “நைட் மட்டும் தான் தென்றல் என்னைத் தழுவுமா? அதிகாலைல தழுவாத?” என்று அவன் கேட்ட விதத்தில் சொக்கித் தான் போனாள் மொழியின் தென்றல் மொழியாள்!
“வார்ம் தென்றல் வேணும்டா” என்றவன் இதழ் தீண்டலில் தென்றல் உருகத் துவங்கியது!
நேசம் பூத்த நெஞ்சங்களுக்கு இடையே கூடலின் இன்பங்கள் மெல்ல மெல்ல சப்தங்கள் எழுப்ப வெட்கங்கள் இருவருக்கும் பொதுவாகிப் போனதோடு தீண்டல்களின் ஆதிக்கம் சம உரிமை பெற்றது!
“மொழி” என்றவள் அழைப்பை மீண்டும் மீண்டும் கேட்டவனுக்குள் தென்றலின் ஸ்பரிசம் மீளாத சுழலுக்குள் தள்ளி விட்டதைப் போல் தென்றலாய் தென்றலை தீண்டி தூண்டி கொண்டாடினான்.
கலந்து கரைந்து களைத்த பின்னரும் கண்ணோர மயக்கங்கள் பூத்துக் கிடக்க தீராத மயக்கம் மீண்டும் தீராத தேடலைத் தொடங்க வைத்தது.
ரகசியமான முறையில் மீண்டும் மீண்டும் ஓர் மெய் தீண்டலுக்கு வித்திட்டது இருவரின் மௌனப் பரிபாஷைகளும்!
நெருக்கத்தில் ஆசைகள் இன்னும் கூடிப் போக கூடிப் போன ஆசைகள் கூடலுக்கே பாதை வகுக்க பேரன்பின் மெய் ஆதிக்கத்தில் காணாமல் போயினர் இருவருமே!!
உயிரோடு உயிர் கலந்து மெய்யோடு மெய் கலந்து மொழியோடு தென்றல் கலந்து கரைந்திருந்தது!
அவனின் மார்பில் கண் மூடி சாய்ந்திருந்தவள் “ஒன்னு கேக்கணும் மொழி உங்க கிட்ட” என்றதும் அணைப்பை இறுக்கியவன் “கேளுடா தென்றல்” என்றான் அருண்மொழியும் கண்களைத் திறவாமல்!
ஆனால் அவள் கேட்டதும் அவனின் கண்கள் பட்டென்று திறந்திருக்க தென்றலின் அசையாத பார்வையும் மொழியின் முகத்தை தான் அவதானித்துக் கொண்டிருந்தது!
“தென்றல்…” என்றவன் மனைவி கேட்டதில் தவிப்புடன் அழைக்க “ம்ம் சொல்லுங்க. உங்களுக்கு எப்பத் தெரியும்?” என்று அவள் மீண்டும் கேட்க மொழியின் அணைப்பு இன்னுமின்னும் வலிமை கொண்டது.
“சொல்லுங்க மொழி. உங்களுக்கு என்னோட சொந்த அப்பா அம்மா பத்தி முன்னமே தெரிஞ்சிருக்கு தானே” என்றதும் மௌனமாய் ஒரு தலை அசைப்பை மட்டும் கொடுத்தான்.
ஆனால் உள்ளம் பொங்கும் அலைகடலென சதிராடியது.
“மொழி…” என்றவள் அவனின் கன்னம் வருட கண்களைத் திறக்காமல் அவளின் கையை பற்றிக் கொண்டவன்,
“வசு அத்தை சொன்னாங்களா தென்றல்?” என்றதும் “ஹ்ம்ம்” என்று கரகரத்த குரலில் சொல்லியவள்,
“எப்ப மொழி தெரியும்? தெரிஞ்சும் ஏன் கேக்கல” என்றவள் கண்ணில் கண்ணீர் திரண்டு நின்றது.
“பிளீஸ் தென்றல். அழுக கூடாது” என்றவன் குரலை செருமிக் கொண்டு சொல்லத் துவங்கினான்.
“முதல் முதல்ல உன்னை பாக்க வந்தப்ப தான் உன் அப்பா அம்மாவையும் பாத்தேன்டா” என்றதும் கண்கள் விரிய அவனைப் பார்த்தவள்,
“கடைலயா” என்றவளுக்குள் மின்னல் வெட்டியது.
“ஹ்ம்ம்… நீ ஃபேஸ் வாஷ் பண்ண போயிருந்தப்ப ஜஸ்ட் உன் ரூமை பாத்திட்டு இருந்தேன். அப்ப டேபிள் மேல ரெண்டு ஃப்ரேம் இருந்தது…” என்றதும் தென்றலிடம் மெல்லிய விசும்பல்!
“ஷ்ஷ்.. அழக் கூடாது தென்றல்” என்று அவள் முதுகை தட்டிக் கொடுத்தவன் தொடர்ந்தான்.
“ஒரு ஃப்ரேம்ல நீயும் உன் வெங்கடேசன் அப்பாவும் இருந்தீங்க” என சற்று இடைவெளி விட்டு “இன்னொரு ஃப்ரேம்ல ….” முடிக்காமல் நிறுத்தியவன் தொண்டைக் குழி ஏறி இறங்க,
அன்று அவன் வசுந்தராவை ஒரு நொடிக்கு மேல் அதிர்வாகப் பார்த்ததை கண்டு அவளுக்கும் என்னவோ என அன்றைக்கே தோன்றியதே!
“ஹ்ம்ம்… அன்னைக்கு அந்த ஃப்ரேம்ல பாத்த அதே முகம்! என் எதிர்ல. ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன். நீ சித்தின்னு சொன்னதை வச்சு ரெண்டு பேரும் டிவின்ஸ்னு புரிஞ்சுது. ஆனா பெரிய ஷாக் எனக்கு” என்றான் வலியுடன்.
“ஏன் மொழி.. ஏன்? என் கிட்ட கேட்டு இருந்திருக்கலாமே!” என்று அவள் பெரும் வேதனையுடன் கேட்டதும் அவளின் கன்னம் பற்றி நிமிர்த்தி தன் முகம் காண வைத்தவன்,
“எப்படிடா கேட்பேன்? கேட்டா என் தென்றலுக்கு வலிக்கும்னு தெரிஞ்சே எப்படிக் கேட்பேன்? அதே வலியை நானும் உணர்ந்திருக்கேனே? எப்படி இருக்கும்னு தெரிஞ்சே அந்த வலியை என் தென்றலுக்கு கொடுப்பேனா? நிச்சயம் உன் மொழியால முடியாதுடா தென்றல்” என்றான் குரல் கமற.
காதல் கடலலையென பிரவாகமாய் எழும்பியது கணவன் மீது! இருவரும் கட்டிலின் விளிம்பில் சாய்ந்த நிலையில் அணைத்தவாறு பேசிக் கொண்டிருக்க அவன் முகம் பற்றி தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இதழில் இளைப்பாரினாள் சிறிது நொடிகள்!
தென்றலின் முதல் தீண்டல்… மனம் கனம் குறைந்து கரைந்திருந்தது.
இருவருமே சிறிது நொடிகளில் தங்களை மீட்டுக் கொண்டிருந்தனர்.
அவனை விட்டுப் பிரிந்தவள் சற்றும் யோசிக்காமல் “தென்றல் மொழியாகணும்” என்றதும் “ஹே தென்றல்…” என்று அட்டகாசமாய் சிரித்தவன் பரிவுடன் அவளின் கன்னம் தடவி “தூங்குடா. ரெஸ்ட் எடுக்கணும் தானே” என்றதும் அவனின் கழுத்தில் கைகளை மாலையாக்கியவள் “எடுக்கலாம்.. மொழி கூட” என்றாள் கண் சிமிட்டி அவனைப் போலவே!
“தென்றல்….”
“மொழி…”
“தூங்குடா தென்றல்”
அவன் கண்களை அசையாமல் நோக்கியவள், “இப்ப இந்த நிமிஷம்… தென்றலுக்கு மொழி வேணுமாம்! மொத்தமா வேணுமாம்!” என்றாள் ராகமாய்.. நாணமாய்..