இருவரும் கண் விழிக்கையில் நேரம் மதியம் இரண்டை தொட்டிருந்தது.
“டைம் இஸ் டூடா தென்றல்” என்றதும் அடித்துப் பிடித்து எழுந்தவள் அவன் பார்த்த பார்வையில் வெட்கமாய் முறைக்க, தன்னை கைகளில் அள்ளிக் கொள்ள வந்தவனைத் தள்ளி விட்டு குளியலறை நோக்கிச் சென்றாள் தென்றல் மீனா.
மதிய உணவை அவன் வீட்டிற்கே வாங்கி வந்திருக்க இருவரும் குளித்து உண்டு முடித்ததும் மாலை நான்கு மணிக்கு குண்டாறு அணைக்கு சென்றனர்.
நீள அருவியாய் கொட்டிய நீரைக்காண அத்தனை அழகாய் இருந்தது. முன் மாலைப் பொழுது தான் என்றாலும் ஒன்று திரண்டிருந்த கார்மேகங்கள் பூமிக்கு நீர் வார்க்கத் தயாராக இருக்கிறேன் என்று கட்டியம் கூறியது.
ஆங்காங்கே நின்று இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் இருள் கவிழத் துவங்கியதும் “மழை வரும் போல இருக்கு மொழி. அதுக்குள்ள கோவில் போய்ட்டு வீட்டுக்கு போகலாம்” என தென்றல் கூற இருவரும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சென்றனர்.
கடவுளை தரிசித்து விட்டு வந்து அமர்ந்ததும் இருவரின் மனதிலும் அத்தனை நிறைவு!
தன் கையில் இருந்த குங்குமத்தை மனைவியின் நெற்றி வகுட்டில் வைத்தவன் “அழகுடா தென்றல்” என்று சிலாகித்து கொள்ள “கோவில் மொழி” என்று அதட்டியவள் முகத்திலும் புன்னகை மட்டுமே!
“இங்க நீங்க முன்னாடியே வந்திருக்கீங்ககளா மொழி?”
“ஆமா தென்றல். ஒரு மெடிக்கல் கேம்ப்காக இங்க பக்கத்துல இருக்க ஒரு வில்லேஜ்க்கு வந்திருக்கோம்” என்றவன் பேசிக் கொண்டிருக்க வானில் இடியின் முழக்கம். மழை பெய்யத் துவங்கி இருந்தது.
“மழை வரப் போகுது மொழி. கிளம்பலாம்”
“ஹ்ம்ம்.. சரிடா” என்றவனும் மனைவியுடன் எழுந்து கொண்டான்.
கோவிலை விட்டு வெளியே வருவதற்குள் சாரலாய் பெய்த மழை இருவரையும் கொஞ்சமாய் நனைத்திருந்தது.
மழையால் போக்கு வரத்து நெரிசலும் அதிகமாக இருக்க அவர்கள் வந்திருந்த பாதை முழுவதும் நீரால் நிரம்பி வழிந்தது.
இரண்டு கிலோ மீட்டர் வரை நின்றிருந்த வாகனங்கள் எல்லாம் அப்படியே நிற்க “ட்ராஃபிக் பிளாக் ஆகிடுச்சு மொழி” என்றாள் தென்றல் மீனா முன்னும் பின்னும் தேங்கி நின்ற வானகனங்களை பார்த்துக் கொண்டே.
அரை மணி நேரத்திற்கும் மேல் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருக்க போக்கு வரத்து காவலர்கள் மைக்கில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு விட்டதாகவும் வேறு பாதையில் பயணிக்கும் படி அறிவுறுத்த மூன்று கிலோ மீட்டர் சுற்றி வேறு பாதையில் பயணித்தனர் இருவரும்.
“என்ன மொழி இவ்வளவு ட்ராஃபிக்? பிளாக் ஆகுற அளவுக்கு?” என்று தென்றல் மீனா புலம்ப,
“ஹ்ம்ம். டூரிஸ்ட் ஸ்பாட் வேற. சோ எப்பவும் இந்த ரோட் பிஸியா தான் இருக்கும் தென்றல்” என்றவன்,
“இப்ப நாம போறது கொஞ்சம் அவுட்டர் ஏரியா. மூணு கிலோ மீட்டர் சுத்தி தான் போகணும்டா தென்றல்” என்றவன் அப்போது தான் சற்று தொலைவில் தாங்கள் வந்து கொண்டிருந்த பாதையில் யாரோ ஒரு காவல் அதிகாரி நிற்பதைப் பார்க்க கணவனின் பார்வையை தொடர்ந்து தானும் பார்த்தாள். ஸ்டார்ட் ஆகாத தனது பைக்கை உயிர்ப்பிக்க போராடி உதைத்துக் கொண்டிருந்தார் அவர்.
இவர்கள் காரைக் கண்டதும் வேக வேகமாக அருண்மொழி அமர்ந்திருக்கும் பக்கம் வந்தவர் “சார் என் ஒயிஃப்க்கு டெலிவரி பெயின் வந்திடுச்சு சார். என் பைக் வேற ஸ்டார்ட் ஆகல. இட்ஸ் எமர்ஜென்சி சார். பக்கத்துல தான் போலீஸ் குவாட்ரஸ்” என்று பதட்டமும் பயமுமாக கூற திகைத்தனர் இருவரும்.
“சார் பிளீஸ். ஐ நீட் ஹெல்ப். டைம் ரொம்ப இல்ல. பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்” என்று கெஞ்சியவர் அவர்கள் தன்னை நம்பவில்லையோ என்று தன் ஐடி கார்டை எடுக்க அவர் உடல் மொழியில் தெரிந்த உண்மையில் “கெட்டின் சார்” என்றிருந்தான் அருண்மொழி.
கை கூப்பி அவனுக்கு நன்றி தெரிவித்தவர் காரில் ஏறிக் கொள்ள அரை மணி நேரத்த்தில் வந்திருந்தனர் அந்த குடியிருப்பிற்கு.
அதற்குள்ளாகவே அவர் மனைவியிடம் இருந்து அத்தனை அழைப்புகள்! இவர் பதட்டத்துடன் தான் வந்து கொண்டிருக்கிறேன் பயப்பட வேண்டாம் என்று சமாதனமாய் கூறிக் கொண்டே வர, அவரிடம் தானும் மகப்பேறு மருத்துவன் என்பதை சொல்லிய அருண்மொழி, “பேனிக் ஆக வேண்டாம் சார். போய்டலாம்” என்று கூறினான்.
வீட்டிற்குள் நுழையும் போதே அப்பெண்ணின் அலறல் குரல் தென்றல் மீனாவை நடுங்க வைத்தது. அருண்மொழி அப்பெண்ணின் வயிற்றை பார்த்தே இன்னும் சற்று நேரத்தில் குழந்தை வெளிய வரப் போகிறது என்பதை கணித்தவன் “ஓ காட்…” என்றபடி அப்பெண்ணை நெருங்கினான்.
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்டலாம் டாக்டர்” என்று அந்தக் காவல் அதிகாரி மனைவி வலியில் துடிப்பது பொறுக்காமல் படபடக்க,
“நோ சார். ஹாஸ்பிட்டல் போற வரைக்கும் தாங்க மாட்டாங்க. குழந்தை தலை கீழ இறங்கிடுச்சு. பேபி இஸ் ரெடி டூ கம் அவுட்” என்றவன் அவர் உறைந்து போய் பயத்துடன் தன்னைப் பார்ப்பதை கண்டு,
“பேச நேரம் இல்ல சார். கீழ ஒரு காட்டன் பெட் ஷீட் ஸ்ப்ரெட் பண்ணுங்க. ரெண்டு மூணு காட்டன் டவல் இல்லேன்னா காட்டன் சேரி எடுத்திட்டு வாங்க. அப்படியே பக்கெட்ல ஹாட் வாட்டர். ஒரு நைஃப்! எல்லாம் வேணும். குவிக் சார்” என்றவன் வேக வேகமாக சொல்ல படபடப்புடன் பெட் ஷீட்டை கீழே விரித்தவர் மனைவியை அருண்மொழியின் உதவியுடன் அதில் கிடத்தினார்.
அவன் துரிதமாக செயல் பட அப்பெண்ணுடன் துணைக்கென இருந்த பக்கத்து வீட்டு பெண்ணும் அருண்மொழி கேட்டவற்றை எல்லாம் எடுத்து வைத்து ஹீட்டரை போட்டு சுடு தண்ணீரை பக்கெட்டில் கொண்டு வந்து வைத்தார்.
“நல்லா அழுத்தமா புஷ் பண்ணுங்க. குழந்தை தலை கீழ இறங்கியாச்சு” என்று அருண்மொழி கூற,
“முடியல. ரொம்ப வலிக்குது. ஹாஸ்லிட்டல் போகலாம். எனக்கு ‘சி’ செக்ஷன் பண்ணிடுங்க டாக்டர். என்னால முடியல. வலி தாங்க முடியல. செத்திடுவேன் போல. ம்ஹும்… என்னால முடியல” என்று அப்பெண் கதற,
அந்தக் காவல் அதிகாரி கண்ணீருடன் பாவமாய் மனைவியையும் அருண்மொழியையும் பார்த்தார்.
அவனோ வெகு நிதானமாக “ஹாஸ்பிடல் போகலாம். ஆனா உங்க குழந்தையோட. இப்ப புஷ் பண்ணுங்க. குழந்தை தலை வெளில வர ஆரம்பிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நேரம் தான். உங்க குழந்தை உங்க கைல இருக்கும். சீக்கிரம்” என்று அருண்மொழி பேச்சுக் கொடுத்தபடியே குழந்தையின் தலை வெளிய வர காத்திருக்க எல்லாவற்றையும் பெரும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல் மீனா!
அவளின் வாழ்நாளில் முதல் முதலாக கண்ணெதிரே பார்க்கும் ஒரு பிரசவம்! அதுவும் தன் கணவன் மேற்கொண்டிருக்கும் பிரசவம்! நெஞ்சம் பயத்திலும் சொல்லொண்ணா உணர்விலும் விம்மினாலும் அவள் முகம் இரத்தப் பசையை இழந்திருந்தது.
கணவன் சொல்வதையும் செய்வதையும் என ஒவ்வொன்றையும் பார்த்தவள் பயத்துடன் தான் நின்றிருந்தாள்.
அதுவும் அப்பெண்ணின் அலறலும் அறுவை சிகிச்சை செய்து விடுங்கள் என்று விடாமல் கத்தியதும் குழந்தை தலை தெரிந்ததை கண்டதும் என எல்லாம் அவளை இன்னும் அச்சம் கொள்ளவே வைத்தது.
“இன்னும் கொஞ்ச நேரத்துல பேபியை புஷ் பண்ணியே ஆகனும். இல்லேன்னா சிக்கல் ஆகிடும். புஷ் பண்ணுங்க! ” என்றவன் கூறக் கூற அப்பெண் கணவனின் கையை உடையும் அளவிற்கு இறுக பற்றிக் கொண்டு அழுத்தத்துடன் முகத்தில் ஒட்டு மொத்த இரத்தமும் பாய்ந்து மூச்சை இழுத்துப் பிடித்து முக்கித் தள்ள குழந்தையின் தலை வெளியே துருத்தியதும் “அவ்வளவு தான். வந்தாச்சு. இன்னும் கொஞ்சம் புஷ் பண்ணுங்க” என்றவன் குழந்தை தலை வெளியே வந்ததும் தலையை பிடித்து குழந்தையை வெளியே எடுத்திருந்தான் அருண்மொழி!
இரத்தக் கரையுடன் கணவன் கையில் இருந்து குழந்தையை கண்டு தென்றல் மீனாவின் மனதில் பெரும் ஆசுவாசம்!
தாயும் சேயும் உயிருடன் பிரிந்திருந்தனர்! இயற்கையின் நியதியை எண்ணி ஒரு நொடி பூரித்து சிலிர்த்தாள் தென்றல் மீனா.
குழந்தையை கண்டு புன்னகைத்த அருண்மொழி “வெல்கம் டூ திஸ் பியூட்டிஃபுல் வேர்ல்ட் சேம்ப்!” என்றவன் அப்பெண் கண்ணில் நீருடன் தன்னைப் பார்த்து காய்ந்து போன இதழ்களை பிரித்து “என்ன குழந்தை?” என்று கேட்டதை கண்டு புன்னகைத்து,
“ஆண் குழந்தை” என்றவன் அவரின் மார்பில் குழந்தையை வைத்தான்.
“பேபி டெம்ப்பரேச்சர் சீராகும். அண்ட் உங்க ஹார்ட்பீட் பேபிக்கு கேட்டா ரிலாக்ஸ்ஸா இருக்கும்” என்றவன் கூறியதும் கண்ணீருடன் குழந்தையை தொட்டுப் பார்த்தாள் அப்பெண்.
சற்று நேரத்தில் குழந்தையை எடுத்தவன் அந்த காட்டன் புடவையில் குழந்தையை கிடத்தினான். தாயை விட்டு கீழே கிடத்தியதும் குழந்தை அழுகத் துவங்க கத்தியை பக்கெட்டில் இருந்த சுடு நீரில் கழுவி விட்டு தொப்புள் கொடியை வெட்டியவன் அடுத்தடுத்து செய்த ஒவ்வொன்றிலும் கணவனுள் இருந்த பொறுப்பான ஒரு மருத்துவனை, அவனின் கடமையைக் கண்டாள் தென்றல் மீனா!
அப்பெண்ணை முற்றிலும் சுத்தப் படுத்தியதும் அவள் மயங்கி இருக்க “பெட்ல படுக்க வச்சு கனமான போர்வை இல்லேன்னா கம்பிளியால போர்த்தி விடுங்க சார்” என்றவன் அங்கு நின்றிருந்த பக்கத்து வீட்டு பெண்ணிடம் இன்னொரு பக்கெட்டில் சுடு நீர் கொண்டு வரச் சொன்னான்.
பின்னர் குழந்தையை அந்த சுத்தமாக காட்டன் டவல் வைத்து வெகு ஜாக்கிரதையாக துடைத்தவன் அந்தக் குட்டி கண்கள் மூக்கு வாய் என ஒவ்வொன்றாய் பொறுமையாக நிதானமாக துடைத்து குழந்தையின் உடல் மேல் இருந்த இரத்தப் பிசுபிசுப்புகள் அனைத்தும் நீங்கியதும் மற்றொரு காட்டன் டவலில் குழந்தையை சுருட்டி கையில் ஏந்தி எழுந்து கொண்டான்.
குழந்தை இரத்தச் சிவப்பாய் இருக்க நாக்கை வெளியே நீட்டியபடி கண்களை பிரிப்பதும் மூடுவதுமாய் இருந்ததைக் கண்டு புன்னகைத்தவன் அந்த காவல் அதிகாரி வந்ததும் அவரிடம் குழந்தையை நீட்டினான்.
குழந்தையை வாங்குவதற்கு முன் கண்ணீருடன் அவனிடம் கை கூப்பி ஆயிரம் நன்றிகளை சொன்னவர் மிகவும் உடைந்திருந்தார்.
“ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். நீங்க இல்லேன்னா இந்த மழையில என்ன செய்றதுன்னு கூட எனக்கு தெரிஞ்சிருக்காது. கடவுளா பாத்து உங்களை அனுப்பி வச்சிருக்கான். நீங்க நல்லா இருக்கணும்” என்று உள்ளம் நிறைந்து பெரும் நன்றிப் பெருக்குடன் சொன்னவரைக் கண்டு புன்னகைத்தவன் குழந்தையை அவரிடம் கொடுத்தான்.
குழந்தையை வாங்கிக் கொண்டவர் “அவுங்க அம்மா மாதிரி தான் இருக்கான்” என்று சொல்லி கண்ணில் நீருடன் பூரித்துக் கொண்டார்.
அருண்மொழி அங்கிருந்த வாஷ் பேஷினில் கை முகம் கழுவி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவன் அப்போது தான் மனைவியை கவனித்தான்.
ஸ்தம்பித்த நிலை மாறாமல் நின்றவளை நெருங்கியவன் “தென்றல்….” என்றவள் தோள் தொட பட்டென்று அவனை அணைத்துக் கொண்டாள் தென்றல் மீனா. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஹே தென்றல்…” என்றவன் மனைவியை ஒரு கையால் அணைத்துக் கொள்ள, “ஷிவரிங்கா இருக்கு மொழி” என்றவள் குரலும் நடுங்கியது.
அவளின் உணர்வுகள் புரிந்தது அருண்மொழிக்கு. முதல் முறையாக அவளுக்கு நேர்ந்த அனுபவம்! அதுவும் நேரில் காணும் பிரசவம் அல்லவா!
ஆதரவாய் அவள் தோள் தட்டிக் கொடுத்தவன் “நத்திங்டா” என்றவன், “ரொம்ப பயந்திட்டயா” என்று பரிவுடன் கேட்க,
“ஹ்ம்ம்…” என்றவள் சற்று நேரம் கழித்து இருக்கும் இடம் உணர்ந்து அவனிடம் இருந்து பிரிந்தாள்.
அந்தக் காவல் அதிகாரி இவர்களை புன்னகையுடன் பார்த்திருக்க “என் ஒயிஃப்” என்று அறிமுகம் செய்து வைத்தவன் அவர் குழந்தையை தென்றல் மீனாவின் நீட்டியதும் “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வாங்குடா தென்றல்” என்றான் புன்னகையுடன்.
அவன் சொன்னது போல் கைகளை சுத்தப் படுத்திக் கொண்டு வாங்கியவளுக்கு முதன் முதலாக மகிழினியை கணவன் ஏந்திக் கொள்ள சொல்லித் தந்த தினம் நினைவில் எழுந்தது!
வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத நாள்! தென்றல் அவளின் மொழியை கண்ட நாள்! அன்று யாரோ ஒரு மருத்துவன் என்ற நிலையில் அறிமுகமாகி இன்று தன் வாழ்வின் மொத்தமும் அவன் தான் எனும் நிலைக்கு மாறி இருக்கும் உயிரான அன்பை எண்ணி அழகான புன்னகை அவளிடம்!
குழந்தையை வாங்கி ஆசை ஆசையாய் பார்த்தவளின் நெஞ்சத்திற்குள் அருண்மொழியின் சாயலில் தன்னுள் ஒரு குழந்தை என்று நினைக்கும் போதே சிலிர்த்தடங்கியது தேகம்!
சற்று நிமிடங்களுக்கு முன்னர் கண் முன்னர் கண்ட பிரசவ நேரத்தின் திக் திக் நிமிடங்களை மறந்தவளாக குழந்தையின் கன்னத்தை ஒற்றை விரலால் நிமிண்டி சிரித்துக் கொண்டாள்.
மனைவியின் செய்கையை பார்த்தவன் “தென்றலும் மொழியும் பார்த்த நாள் நியாபகம்!” என்றதும் மலர்ந்தது அவளின் புன்னகை!
அப்பெண்ணின் தாய் வீட்டு உறவினர்கள் வந்ததும் அவர்களின் நன்றியையும் வாழ்த்தையும் நல்லாசியையும் பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள் இருவரும். வீட்டிற்கு வரும் போது நேரம் ஒன்பதைக் கடந்திருந்தது.
வரும் வழியில் இரவு உணவை வாங்கி வந்திருந்தனர். இருவரும் குளித்து உண்டு முடித்ததும் ஆசுவாசமாக அமர கணவனின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டவள்,
“எனக்கு இன்னும் அந்த ஷிவரிங் போகல மொழி” என்றதும் புன்னகைத்தவன், “வெளில போய் இருக்கலாமேடா…” என்று கேட்க,
“அந்த நிமிஷம் டோட்டல் ஷாக் தான் எனக்கு.. ஒரு பக்கம் நீங்க எந்த ஒரு ஹெசிடேஷனும் இல்லாம, தடுமாறாம, அதே சமயம் வேக வேகமாக செயல் பட்டது… இன்னொரு பக்கம் நீங்க எப்படியாவது ரெண்டு பேரையும் காப்பத்திடனும்னு இருந்தது. வீட்லயே டெலிவரி.. நார்மல் டெலிவரி தான்னாலும் கொஞ்சம் பயம் இருந்தது. அண்ட் நீங்க பண்ணது எல்லாம்…” என்றவள் எழுந்து அமர்ந்து,
“ரியல்லி பிரவுட் ஆஃப் யூ மொழி. என் ஹஸ்பண்ட்! டாக்டர்… கைணக்காலஜிஸ்ட் அருண்மொழி” என்று பூரிப்பாய் பெருமையை சொல்லிக் கொள்ள மனைவியின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டி சிரித்தான் அருண்மொழி.
புன்னகையுடன் கண் மூடியவளும் “எனக்கும்… நமக்கும்… நீங்க தான் டெலிவரி பாக்கணும். மூணு குழந்தைங்க பெத்துக்கலாம். அதுல ஒரு குட்டி மொழி வேணும்” என்று சொன்னதும் அருண்மொழியின் உணர்வுகள் ஆர்ப்பரித்தது.
கண்ணெதிரே ஒரு பிரசவப் போராட்டத்தை கண்ட மனைவி! சற்றும் பயமின்றி தயக்கமின்றி மூன்று குழந்தைகள் என்று கேட்டதை கண்டு தாங்கொண்ணா நேசம் இதயத்தை சூழ்ந்தது.
“தென்றல்…” என்றவன் உணர்ச்சி மிகுதியில் அவளை அணைத்துக் கொள்ள,
“பயமும் இருக்கு மொழி. ஆனா என் மொழி இருக்கும் போது ஏன் பயம்? நீங்களே நம்ம மூணு குழந்தைகளையும் இந்த மாதிரி உலகத்துக்கு கொண்டு வரணும். நானும் உங்க கிட்ட கேட்பேன் தானே… என்ன பேபி மொழின்னு” என்று அவள் தன் மனதில் தோன்றிய எதிர் பார்ப்புகள் ஒவ்வொன்றையும் கூறக் கூற அருண்மொழி நெஞ்சம் அவளின் ஆசையிலும் நேசத்திலும் தத்தளித்தது.
அவள் சொல்வதற்கு எல்லாம் “ஹ்ம்ம்” என்றான் கரகரத்த குரலில். அது மட்டுமே அவனின் எதிரொலியாக இருந்தது. ஆனால் உள்ளம் மனைவியின் வார்த்தைகளில் மனதினுள் ஓடிக் கொண்டிருந்த கனவுக் காட்சிகளில் லயித்து சிறகின்றி பறந்து கொண்டிருந்தது.
அப்போது தான் அவன் அமைதியை கவனித்தவள் “என்ன மொழி? சைலண்ட் ஆகிட்டீங்க?” என்று கேட்க,
“தென்றல் பேசுறதை எல்லாம் கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்குடா. அதான் சைலண்ட். ரொம்ப ஆசையா ஆர்வமா நீ சொல்லும் போது எனக்கு கேட்க மட்டும் தான் தோணுது” என்றவன் மனைவி தன் கன்னம் வருடியதும்,
“அம்மாடி…” என்று மெல்ல அலற “மூணு கண்ஃபார்ம்! அதுல எந்த மாற்றமும் இல்ல” என்றதும் அவளின் புருவங்களை விரலால் வருடியவன் “பிரக்னன்சி இஸ் நாட் ஈஸிடா தென்றல்” என்றான் இறங்கிய குரலில்.
“ஹ்ம்ம். தெரியும். பாத்தனே.. இன்னைக்கு நேர்ல” என்றவள்,
“ஆனா என் மொழி இருக்கும் போது பயம் செக்கன்ட்ரி தான்” என்றபடி அவன் மார்பில் சுகமாய் கண் மூடிக் கொண்டாள்.
இதை விட என்ன வேண்டும் வாழ்வில் என்பதை போல் மார்பில் தென்றலை தாங்கியவன் சுகமாக கண்களை மூடிக் கொண்டான். மூடிய விழிகளுக்குள் தென்றலும் அவளின் ஆசைப்படி மூன்று குட்டி செல்வக் குழந்தைகளும் ஆனந்தமாய் உலா வந்தனர்.