மேலும் நான்கு நாட்கள் தென்காசியில் தேன் நிலவை முடித்துக் கொண்டு சென்னைக்கு திரும்பி இருந்தனர் தென்றலும் மொழியும்.
நாட்கள் இயல்பாக நகர மொழி என்றும் போல் காலை அரசு மருத்துவனைக்கும் மாலை நான்கு மணி நேரம் மட்டும் அனுஜாவின் மருத்துவமனையிலும் பணி புரிந்து விட்டு எட்டு மணி போல் இல்லம் வருவதை வாடிக்கையாக்கி இருந்தான்.
தென்றல் மீனா ஸ்வர்ணம் பேலசிற்கு செல்லாமல் இருக்க தென்காசியில் இருந்து வந்ததும் அவள் கடைக்கு வந்து விடுவாள் என்று எண்ணிய பத்மநாபன் மூன்று மாதங்கள் கடந்தும் கடைப் பக்கம் வராமல் இருக்கவும் மேலும் அது குறித்து எதுவும் சொல்லாமல் இருக்க, என்னவென பேத்தியிடமே கேட்டு விடலாம் என்று இல்லத்திற்கே வந்து விட்டார்.
அன்று அருண்மொழிக்கும் விடுமுறை என்பதால் இல்லத்தில் தான் இருந்தான். பத்மநாபனை மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர் இருவரும்.
“எப்படி இருக்கீங்க தாத்தா? நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க? வேற யாரும் வரலையா? அட்லீஸ்ட் பாட்டியை கூட்டிட்டு வந்திருக்கலாம் தானே” என்று குறை பட்டுக் கொண்டவள்,
“இப்ப தான் கொஞ்ச நேரம் முன்னாடி வசும்மா கிட்ட பேசினேன். அவுங்களும் நீங்க வர்றதா சொல்லவே இல்ல” என்று வரிசையாக அடுக்க,
“என் பேத்தி மூச்சு விடாம பேசக் கேட்டு ரொம்ப நாள் ஆச்சுப்பா அருண்” என்று பத்மநாபன் கிண்டல் செய்ததும் தென்றல் முறைக்க “உட்காருங்க தாத்தா” என்று அவரை அமரச் சொன்னவன் மனைவியை கண்டு புன்னகைத்தான்.
“பட்டறைல சின்ன வேலை மீனு. அப்படியே உன்னையும் பாத்திட்டு போகலாமேன்னு வந்தேன்” என்றவரிடம் கணவன் சற்று நேரத்திற்கு முன்னர் செய்து வைத்திருந்த மோரினை நீட்ட,
“அப்பாடி கொண்டா அதை. வெயில் தாங்கல” என்றபடி அதனை வாங்கிப் பருக, அவரருகில் அமர்ந்து கொண்டவள், “இன்னைக்கு இங்கேயே மதியம் சாப்பிட்டு போங்க தாத்தா. மொழி சூப்பரா சமைப்பார்” என்று கண்ணடித்து சொன்னதும் சற்றே புரையேறி விட்டது பெரியவருக்கு.
“என்னது…” என்று மோரை குடிப்பதை நிறுத்தி விட்டு பேத்தியை ஒரு பார்வை பார்த்தவர் அருணை பார்க்க அவனோ சிரிப்புடன் தலை அசைத்தான்.
“என்ன மீனு? நீ சமைக்கிறது இல்லையா?” என்று கேட்க,
“நான் நம்ம வீட்லயே என்னைக்கு தாத்தா சமைச்சு இருக்கேன்? எதோ கொஞ்சம் தெரியும் தான். ஆனா இங்க கட்டிங் செக்ஷன் மட்டும் தான் நான். குக்கிங் செக்ஷன் மொழி தான்” என்றாள் சிரிப்புடன்.
“சரி தான்” என்று இருவரையும் மாற்றி மாற்றி பார்த்த பத்மநாபனிற்கு அவர்கள் முகத்தில் தெரிந்த ஆத்மார்த்தமான மகிழ்ச்சியே இருவரின் ஆனந்தமான வாழ்வை பற்றி சொல்லாமல் சொல்லியது.
“நீ என்ன பண்ணுவ வீட்ல? புருஷனை சமைக்க விட்டுட்டு இப்படியே வீட்ல இருக்கதா உத்தேசமா? நானும் நீ கடைப் பக்கம் வருவேன்னு பாக்குறேன். வரவே மாட்டேங்குற. உன் கிட்ட முன்னாடியே கேட்டிருப்பேன் ஏன் வர மாட்டேங்குறேன்னு.. உன் அப்பன் தான் விடுங்கப்பா மீனு வரன்னைக்கு வரட்டும். கேட்டு அவளை கஷ்ட படுத்த வேண்டாம்னு சொல்லி என்னையும் உன் அண்ணனுங்க சித்தப்பாங்கன்னு யாரையுமே கேட்க விடல. நானும் விட்டுட்டேன். இப்ப மூணு மாசம் முடியப் போகுது. இன்னும் வராம இருக்க?” என்று பத்மநாபன் சற்றே கோபத்துடன் கேட்க சட்டென்று மௌனமாகி விட்டாள் தென்றல் மீனா.
மனைவியின் முகம் கூம்பியதை தாங்க வியலாமல் “தாத்தா…” என்று அருண் மெல்ல அழைக்க,
“உன் பொண்டாட்டியை தாங்குறது எல்லாம் இப்ப வேலைக்கு ஆகாது அருண். அவ பதில் சொல்லியே ஆகனும். நீ அதுவரை நல்ல பிள்ளையா என் பக்கம் வந்து உட்காரு” என்றவர் கையோடு அவனை எழுப்பி தனக்கு மற்றொரு பக்கம் வந்து அமர வைத்துக் கொள்ள புன்னகையுடன் அமர்ந்தவனும் அமைதியாகி கொண்டான்.
அவனுக்கும் இத்தனை நாட்கள் மனைவி வீட்டில் இருப்பது வருத்தத்தை கொடுத்ததே!
அவன் திருமணம் முடிந்து பணிக்குச் செல்லும் அன்று அவளிடம் கடைக்குச் செல்லவில்லையா என்று கேட்ட போது “இல்ல மொழி” என்று தலை குனிந்து உள்ளே சென்று விட்ட குரலில் பதில் சொன்ன விதமே அவனை மேலும் எதுவும் கேட்க விடவில்லை.
ஏன் என்று தெரிந்தே எப்படி அவளிடம் கேட்க முடியும் என்றவன் அவளே ஒரு முடிவினை எடுத்து தெளியட்டும். எச்சூழ்நிலையிலும் தன்னால் இவ்விஷயத்தில் எதுவும் கூறி அவளை ஒளி இழக்கச் செய்ய முடியாது என எதுவும் கூறாமல் இருந்தான்.
இப்போது பத்மநாபன் நேரிலேயே வந்து என்னவென்று கேட்டது மட்டுமன்றி பேத்தி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று சட்டமாய் அமர்ந்திருக்க, அமைதியாக இருந்த மனைவியின் மீது தான் அவன் பார்வையும்!
“சொல்லு மீனு? என்னத்துக்கு வராம இருக்க? கல்யாணத்துக்கு முன்ன நிறைய விஷயம் நடந்து மனஸ்தாபம். அதனால வரல சரி! இப்ப என்ன? வெளியூர்ல கட்டிக் கொடுத்திருந்தாலும்.. சரி பிள்ளை வேற ஊருக்கு போய்ட்டானு நினைக்கலாம். இந்தா இருக்கு வேளச்சேரி. அங்க உன்னால வர முடியாதா?” என்று சகட்டு மேனிக்கு பேத்தியை வைத்து வாங்க மௌனமே அவளின் பதிலாய் இருந்தது.
“தாத்தா… என் தென்றல் பாவம் தாத்தா” என்று அருண்மொழி பாவமாய் பத்மநாபன் கை பற்றிக் கொள்ள,
“சரியா போச்சு போ. என் பொண்டாட்டி சொன்ன மாதிரி நீ இப்படி இருக்கதால தான் என் பேத்திக்கு ரொம்ப கொழுப்பா போச்சு” என்று அவனையும் விட்டு வைக்கவில்லை அவர்.
தங்கள் வீட்டின் செல்வப் பேத்தி அவளின் உரிமையை எடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது அத்தனை வலியை கொடுத்திருக்க அந்த வலியில் தன்னையும் மீறி பேசிக் கொண்டிருந்தார் வெங்கடேசனின் தந்தை!
“பாவம் பாத்தாலாம் என் பேத்தி வாயைத் திறக்க மாட்டா” என்றவர் பேத்தி தலை தாழ்த்தி அமர்ந்திருப்பது கண்டு சற்றே நிதானித்து அவளின் கைப் பற்ற அவரை நிமிர்ந்து பார்த்தவளின் கண்ணில் மெல்லிய நீர்ப் படலம்.
பத்மநாபன் பதறிப் போய் விட மொழியை கேட்கவும் வேண்டுமா? மனம் கனத்து விட்டது அவனுக்கு.
சற்றும் யோசிக்காமல் மனைவியின் புறம் எழுந்து வந்தவன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு “ஹே தென்றல்… தாத்தா தானடா? ஏன் அழுகை” என்று அவள் கண்ணீரை துடைத்து விட கணவனின் செயலில் புன்னகைத்தவள்,
பேத்தியின் முகத்தில் சிரிப்பை கண்டதும் தான் நிதானம் வந்தது அவருக்கு. பேத்தியின் கை பற்றி “என்ன மீனும்மா சட்டுன்னு அழுதுட்ட? தாத்தா ரொம்ப பேசிட்டனா?” என்று தவிப்புடன் கேட்க,
“இல்ல தாத்தா” என்றவள் “எனக்கு தான் கஷ்டமா இருந்தது. அதான் கண்ணுல தண்ணி” என்றவள்,
“ஏன்டா மீனு? என்ன விஷயம்? உங்க அப்பனை நினைச்சு மறுகுறியா?” என்று கேட்டதும் அவளிடம் மீண்டும் மௌனம்!
“அவன் பேசினதை நினைச்சு தான் வராம இருக்கியா?” என்று பத்மநாபன் மெல்லிய திகைப்போடு கேட்க,
“தாத்தா..” என்று ஒரு சேர இருவருமே தவிப்புடன் அழைத்திருந்தனர்.
பத்மநாபன் பாவமாய் அருணை பார்க்க தென்றல் கணவனின் கையை பற்றிக் கொண்டாள்.
மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் பத்மநாபனிடம் “பேசினதை நினைச்செல்லாம் தென்றல் வராம இல்ல தாத்தா.. பேச முடியாம தவிக்கிறதை நினைச்சு தான் வரல” என்றதும் தென்றல் கணவனை அசையாது பார்த்தாள்!
தன் உள்ளத்தை.. உள்ளத்தில் இருப்பதை தன் மொழியால் கணிக்க முடியாமல் போகுமா? தன் ஒவ்வொரு அசைவுகளும் கூட அவனுக்கு அத்துப்படி ஆகிற்றே!
இப்போது அவன் தாத்தாவிடம் கூறிய வார்த்தைகளில் மெல்லிய ஆசுவாசம் அவளுக்குள்.
பத்மநாபன் பேத்தியை பார்க்க மெல்ல தலை அசைத்து கணவன் சொன்னதை ஆமோதித்தவள் “அப்பா என்னைப் பாக்கும் போது அந்தப் பார்வைலயும் முகத்திலயும் இருக்க குற்ற உணர்ச்சியை தாங்க முடியல தாத்தா. அதே சமயம் என்னால பேசவும் முடியல தாத்தா” என்று கண்ணில் நீர் தேங்க சொன்னவள்,
“பேசாம இருந்திடுவேனோன்னு பயமாவும் இருக்கு. அதுவே என்னை எந்த முடிவும் எடுக்க முடியாம பண்ணுது. இப்போதைக்கு எனக்கு என் மொழி கூட இருக்கணும் தாத்தா. ஒரு ஆறு மாசம் போகட்டுமே. நான் வரேன். எனக்கு கொஞ்ச நாள் டைம் வேணும். பிளீஸ் தாத்தா” என்றதும் உருகி விட்டது பத்மநாபனிற்கு.
“என்ன மீனும்மா நீ?” என்று ஆதூரமாய் சொன்னவர், “உன் தவிப்பு புரியாம நானும் கோபப் பட்டுட்டேன் பாரு. மனசுல வச்சுக்காத” என்றதும் சின்ன சிரிப்புடன் தலை அசைத்தாள் தென்றல் மீனா.
“உங்கப்பனுக்கும் இது புரிஞ்சதால தான் எங்க யாரையும் கேட்க விடாம நிப்பாட்டி வச்சிருந்தான் போல” என்று சிரித்துக் கொண்டவர்,
“உன் புருஷனும் தான்” என்று அருணின் தோளை பெருமையுடன் தட்டிக் கொடுத்தார்.
புன்னகையுடன் அவரைப் பார்த்தவள் ஆம் என்பதாக தலை அசைத்து விட்டு “சாப்பிட்டு தான் போகனும் நீங்க” என்றவள் கணவனுடன் இணைந்து மதிய உணவை தயாரிக்கத் துவங்க, இருவரும் புன்னகையுடன் பேசியபடி வேலை செய்யும் அழகை கண்டு கண்ணோடு மனதும் நிறைந்து போனது பத்மநாபனிற்கு!
இந்த அன்பான வாழ்விற்கு தானே அத்தனை போராட்டங்களும் என்று இந்த நொடியிலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நிறைந்த மனதுடன் பேத்தியும் அவள் கணவனும் செய்திருந்த மதிய உணவை முடித்துக் கொண்டு அவர் கிளம்ப எத்தனிக்கும் சமயம் “தாத்தா கேக்கணும்னு இருந்தேன்… நீங்க பேச ஆரம்பிச்சதும் நான் கேக்க வந்தது மறந்து போச்சு. வசும்மா இன்னைக்கு பேசும் போது சொல்லிட்டு இருந்தாங்க” என்றவள்,
“உங்களுக்கு இன்னும் மூணு மாசத்துல எம்பது வயசு வரப் போகுது தானே. சதாபிஷேகம் பண்ணலாம்னு எல்லாரும் உங்க கிட்ட கேட்டா நீங்களும் பாட்டியும் பாக்கலாம்னு சொல்லிட்டு அதுக்கு அப்புறம் அதைப் பத்தி பேசவே இல்லையாமே” என்று கேட்க,
“ஆமா மீனு. பிறந்த நாள் பேச்சு வார்த்தை எடுத்ததே நம்ம சந்தியா தான். அவ டக்குன்னு சொன்னதும் உன் அப்பன் சித்தப்னுங்க எல்லாம் சதாபிஷேகம் பண்ணலாம்னு சொன்னாங்க. சரின்னு தான் இருந்தோம். ஆனா எனக்கு உன் பாட்டிக்கும் தான் டிஷ்யூம் டிஷ்யூம் ஆகிடுச்சு. அதான் அந்தப் பேச்சை எடுக்கவே இல்ல. அழகு வேற ரெண்டு நாளா முறுக்கிட்டு திரியிறா” என்றதும் கணவன் மனைவி இருவரின் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு.
“தாத்தாக்கும் பாட்டிக்கும் சண்டையா..!!” என்று தென்றல் மீனா ராகமாய் இழுக்க, சிரித்த பத்மநாபன்,
“நான் இங்கேயே நம்ம வீட்லயே சிம்பிளா பண்ணலாம்னு சொன்னேன். உன் பாட்டி ஊர்ல நம்ம வீட்ல தான் வைக்கணும்னு சொல்லிட்டா. அதுவும் எல்லாரையும் கூப்பிட்டு வைக்கணுமாம். இல்லேன்னா வேணாமாம். அதான் அப்படியே அந்த பேச்சு வார்த்தையை எடுக்கல” என்றதும் தாத்தாவை முறைத்தவள்,
“ஏன் தாத்தா? இதுக்கு ஒரு சண்டையா? பாட்டி சொல்ற மாதிரி ஊர்ல வச்சா தான தாத்தா நல்லா இருக்கும். சதாபிஷேகம் எவ்வளவு பெரிய நல்ல விஷயம் நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியுமா? வசும்மா சொல்லும் போது தான் தெரியும் எனக்கும். ஊர்ல பண்ணலாம் தாத்தா. ப்ளீஸ்… உங்க அழகு கிட்ட ஓகே சொல்லுங்க தாத்தா” என்று பேத்தி கேட்டதும் சிரித்தவர்,
“எனக்கும் அவ முறுக்கிட்டு ரெண்டு நாள் பேசாம இருக்கவும் சரின்னு சொல்லனும்னு தான் தோணுச்சு. இப்ப என் பேத்தியும் சொல்லிட்டா? இனி என்ன சொல்றது? உங்க எல்லாரோட ஆசைப் படி ஏற்பாடு பண்ண வேண்டியது தான்” என்றதும் அவ்வளவு சந்தோஷம் தென்றல் மீனாவிற்கு.
அவர் கிளம்பியதும் அழகம்மைக்கே அழைத்து விஷயத்தை சொல்லியவள், “பாத்தீங்களா பாட்டி.. நான் தாத்தாவை பேசி கன்வின்ஸ் பண்ணிட்டேன்” என்று வேறு ஜம்பமாக தம்பட்டம் அடித்துக் கொள்ள,
“க்கும்.. நீ என்னடி அவரை சரி கட்டுறது? நான் ரெண்டு நாள் பேசாம இருந்தப்பவே என் புருஷன் மனசு மாறிடுச்சுன்னு தெரியும்? என்ன.. இப்ப நீ கேட்டதும் உன் மனசும் நோகக் கூடாதுன்னு சரி சொல்லிட்டு வந்திருப்பார்” என்றதும் ஆவென வாயைப் பிளந்தாள் தென்றல் மீனா.
“போடி போடி… எனக்கா தெரியாது உன் தாத்தனைப் பத்தி” என்று அழகம்மை அசால்ட்டாக சொல்லி விட்டு அழைப்பை துண்டிக்க சிரிப்புடன் கணவனிடம் விஷயத்தை சொன்னவள்,
“ரெண்டு பேரும் கேடி கப்பில்ஸ் மொழி” என்று வேறு கூற,
“தாத்தா பாட்டி ஆவ்சம் கப்பில்ஸ்டா தென்றல்” என்றான் அவன் புன்னகையுடன்.
“ஹ்ம்ம். உண்மை தான்” என்றவள் “நம்மளை மாதிரி தானே” என்று அவள் கண் சிமிட்டி கண்ணில் மின்னலுடன் மனைவி கேட்டதும் புன்னகையுடன் மனைவியை கையில் அள்ளிக் கொண்டவன் அவன் ஒற்றை படுக்கை இருக்கும் அறைக்கு செல்வதை கண்டு நாணத்துடன் அவன் மார்பில் கண் மூடிக் கொண்டவள்,
“பகல் நேரம் மொழி..” என்றவள் அவன் என்ன பதில் கூறுவான் என்று அறிந்தே தான் முந்திக் கொண்டாள்.