தொடர்ந்து வந்த மூன்று மாதங்கள் மிகவும் அழகுடனே கழிந்திருந்தது தென்றல் மொழி இருவருக்கும்.
நாட்கள் நேசத்துடனான பொழுதுகளில் நனைந்தோடி இருக்க இதோ இன்று பத்மநாதன் அழகம்மை தம்பதியினரின் சதாபிஷேக விழா! அழகாபுரத்தில்…
அனுஜாவின் குடும்பம் உட்பட எல்லோரும் அழகாபுரம் வந்திருந்தனர்.
அழகாபுரத்தில் இருக்கும் அவர்களின் பூர்வீக வீட்டில் தான் விழா நிகழவிருந்தது. எல்லோரிடமும் சந்தோஷத்திற்கும் சிரிப்பிற்கும் எக்குறையும் இருக்கவில்லை.
பத்மநாபனின் புதல்வர்களும் புதல்வர்களின் பிள்ளைச் செல்வங்களும் பிள்ளைச் செல்வங்களின் குட்டிச் செல்லங்களுமென அந்தப் பூர்வீக இல்லம் கொண்டாட்டத்தில் இருந்தது.
அவ்வூர் சொந்தங்கள் எல்லோரும் வருகை தந்திருக்க தொழில் ரீதியான ஆட்களும் சென்னையில் அழைத்திருந்த தெரிந்த நபர்களும் என பலர் வந்திருந்தனர்.
வீடு கொள்ளாமல் ஆட்கள் நிரம்பி வழிய எல்லோருக்கும் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் இருக்கைகள் போட்டு அமர வைக்கப் பட்டனர்.
விழா இனிதே தொடங்க வீடெங்கும் ஐயர்கள் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரங்களின் சப்தமும் ஹோம குண்டத்தில் இருந்து வெகுவாய் வெளியேறிக் கொண்டிருந்த புகையும் தான்.
அத்தனை ஹோமங்களும் செய்து முடித்த பின்னர் வீட்டின் முன் பகுதியில் பந்தலுக்கு அடியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் தம்பதிகள் அமர வைக்கப் பட பதினொரு கலசங்களில் இருந்த நீரை தம்பதி சகிதமாக அவர்களின் மீதி ஊற்றினார்கள் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும்.
மனம் நிறைந்த சந்தோஷத்துடன் எல்லோரையும் ஆசீர்வதித்தனர் பத்மநாபனும் அழகம்மையும்.
அவர்கள் கையில் இருந்த தேங்காயை வீட்டில் சுப காரியம் நிகழ வேண்டும் என்றும் தங்களது பிரியமானவர்களுக்கு ஆசீர்வதித்து மனதார வேண்டிக் கொண்டு குடும்பத்தில் இரண்டு நபர்களுக்கு ஐயர் கொடுக்கச் சொல்ல குணநாதன் மற்றும் பார்வதியின் மகன் கௌதமிடம் “நம்ம வீட்ல அடுத்து சீக்கிரம் உனக்கு கல்யாணம் முடியணும்” என்று பத்மநாபன் பேரனை ஆசீர்வதித்து அவன் கையில் மஞ்சள் பூசி இருந்த தேங்காயை கொடுத்தார்.
அழகம்மை கையில் இருந்து தேங்காயை ஒரு முறை பார்த்து விட்டு நிமிர்ந்து தங்கள் முன்னே ஒன்றாய் கூடி இருந்த குடும்பத்தில் வசுந்தரலக்ஷ்மியைப் பார்த்தார்.
“முன்ன வா வசுந்தரா. நீ இந்தத் தேங்காயை வாங்கிக்க” என்று சொன்னதும் யாருமே இதனை எதிர் பார்க்கவில்லை. ஆனால் வீட்டாட்கள் எல்லோரின் முகத்திலும் புன்னகை மட்டுமே.
அதிர்ந்த வசுந்தரா “அத்தை… எனக்கு எதுக்கு?..” என்று அவர் மறுக்க வரும் போதே ஐயர் அவரிடம் “அவா பிரியப் பட்டு கொடுக்கிறது.. அதுவும் சதாபிஷேகம் பண்ண தர்ம பத்தினி. ஆயிரம் பிறை கண்டவான்னு சொல்லுவாங்க. அவா ஆசீர்வாதம் பண்ணித் தரது ரொம்ப விஷேசம். மறுக்காதீங்கோ. போய் வாங்கிக்கங்கோ” என்றதும் வெகுவாய் தயங்கிய வசுந்தராவிற்கு கண்கள் உடைப்பெடுத்தது.
“போங்க வசும்மா” என்று தென்றல் மீனா அவரின் தோள் பற்றி முன்னே நகர்த்த ஒரு அடி கூட அவரால் முடியவில்லை.
மாமியாரின் அன்பில் கண்கள் நிறைந்த அதே சமயம் மனம் நடுக்கம் கொண்டது. தனக்கு எதுக்கு? என்னும் கேள்வி தான் அவரிடம்!
மருமகளின் பார்வையும் முகத்தில் தெரிந்த கலக்கமும் உணர்ந்தே அவரின் உணர்வுகளை படித்த அழகம்மை அப்போதும் முறைத்தார்.
மற்ற நேரமாக இருந்திருந்தால் நன்றாக திட்டி இருப்பார். கூடி இருந்த சபை அவரின் வாய்க்கு பூட்டை போட்டிருந்தது!
“வா வசு…” என்று பத்மநாபனைத் தொடர்ந்து வெங்கடேசன் குணநாதன் கனிஅமுதன் தம்பதிகளும் அவரை முன் வரச் சொல்ல நெஞ்சம் அவர்களின் பாசத்தில் கலங்கியது.
எல்லோரும் கூறவும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவர் முன்னே வந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள அவரின் கைகளில் தேங்காயை வைத்த அழகம்மை “இத்தனை வருஷம் எங்களுக்கு மருமகளா இல்லாம மகளா வாழ்ந்து எங்களுக்கு ஒரு பொண்ணு இல்லையேன்ற குறையை தீத்து வச்சிருக்க. எங்க காலம் தாண்டியும் உன்னை அரவணைச்சுக்க இதோ இந்தக் குடும்பம் இருக்கு” என்று எல்லோரையும் பார்த்துச் சொன்னவர்,
“எங்களோட மகளாவே உடல் நல சுகத்தோட மனசுல சந்தோஷத்தோட ஆரோக்கியமா நல்லா இருக்கணும்” என்று கூறி தேங்காயை அவரின் கையில் கொடுத்து ஆசீர்வதிக்க எல்லோருக்கும் கண்ணீர் ததும்பி விட்டது!
வசுந்தரா மாமியாரான தாயின் அன்பில் நனைந்து தேகம் குலுங்க அழுது விட பெண்கள் அவரை அணைத்துக் கொண்டனர். அதுவும் தென்றல் மீனா அவரின் கண்ணைத் துடைத்து விட்டு “வசும்மா குட் வசும்மா தானே? சின்ன பிள்ளை மாதிரி அழறீங்க” என்றாள் சிரிப்புடன் சூழ்நிலையை லகுவாக்கும் பொருட்டு!
அவள் கண்களிலும் கண்ணீரின் ஈரம் தான். ஆனாலும் வெளிக்காட்டினால் இன்னும் அழுவார் என்பதால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டாள் தென்றல் மீனா.
கணவனின் பார்வையும் அவளை சற்று நிதானத்திற்கு கொண்டு வந்திருந்தது என்றால் அது மிகையல்ல!
அழகம்மை வசுந்தராவிடம் தேங்காயை கொடுத்தது பற்றி சுற்றி இருந்த உறவினர்கள் சிலர் முணுமுணுத்தாலும் எதையும் அந்த நொடியில் சொல்லவில்லை. மற்றொன்று வெங்கடேசன் இருக்கும் சமயம் எதையும் கூறி விடவும் முடியாது என்பது மிக முக்கியமான ஒன்று!
விழா இனிதே முடிய மதியம் உணவும் முடிந்ததும் பாதி நபர்கள் கிளம்பி இருக்க உள்ளூர் சொந்தங்கள் மட்டுமே எஞ்சி இருந்தனர்.
வீட்டாட்கள் எல்லோரும் சற்றே ஆசுவாசமாக அமர்ந்திருக்க அருண்மொழி நிகேதன் முகுந்தன் கௌதம் நவீன் பிரவீன் என அவனின் மச்சான் படைகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
“நீங்க ரெஸ்ட் எடுத்துக்ககுறீங்களா மொழி?” என்று கையில் மகிழினியுடன் அங்கே வந்த தென்றல் மீனா மொழியிடம் மட்டும் கேட்க, கணவனிடம் மட்டும் கேட்ட தங்கையை அண்ணன்களும் தம்பிகளும் கிண்டலாய் பார்க்க நாக்கை கடித்துக் கொண்டாள் தென்றல் மீனா.
“எங்களை எல்லாம் பாத்தா ரெஸ்ட் எடுக்க வேண்டியவங்க மாதிரி தெரியலையா மீனுக்கா” என்று நவீன் அவளை வம்பிழுக்க,
“எடுங்க. யாரு வேண்டாம் சொன்னா?” என்று சிரிப்புடன் சொன்னவள் தன் கையில் இருந்த மகிழினியை நிகேதனிடம் கொடுத்து விட்டு “அண்ணி ரொம்ப டயர்ட் அண்ணா. தூங்கிட்டாங்க. பாப்பாவை நான் தூக்கிட்டு வந்துட்டேன்” என்றவள் கணவனை பார்க்க மீண்டும் எல்லோரிடமும் கிண்டல் சிரிப்பு.
பொதுவாக தலை மேல் கை வைத்து கும்பிட்டவள் “எல்லாரும் ரெஸ்ட் எடுக்குறீங்களா.. பாவம் டயர்டாஆஆ இருப்பீங்க!” என்றதும் அண்ணன் தம்பிகள் வெடித்து சிரிக்க கணவனும் சிரிப்பதை கண்டு முறைத்தாள் தென்றல் மீனா.
அப்போது தான் உணவை முடித்து வந்த மாதவன் இங்கே கலகலவென இருப்பதை கண்டு நெருங்க “என்ன என்னை விட்டு சிரிப்பு” என்றவன் தானும் கலந்து கொள்ள கலகலபிற்கு பஞ்சமில்லை அங்கே!
“சரி.. எல்லாரும் ரெஸ்ட் எடுக்கிற மாதிரி தெரியல. நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்” என்றதும் “என் மச்சான் பாவமுங்க தங்கச்சி. பொத்தி பொத்தி வளத்தவன் வேற. அவனை எங்க கிட்ட தனியா விட்டு போறீங்க” என்று மாதவன் கிண்டல் செய்ய,
“மொழி டயர்டா ஃபீல் பண்ணி இருந்தா இந்நேரம் ரெஸ்ட் எடுக்க வந்திருப்பார் அண்ணா. அவருக்கு இப்ப எல்லாரோட பேசிட்டு இருக்கணும்னு ஃபீல் பண்றார். அதான் வரல” என்ற மனைவியை கண்டு அருண்மொழி கண் சிமிட்டி புன்னகைக்க, “ஓஹோ” என்று ஆர்ப்பரித்தனர் மச்சான்மார்கள்!
“நீங்க எல்லாரும் பேசுங்கண்ணா எனக்கு ரெஸ்ட் வேணும்” என்றவள் குரலிலேயே அவளின் சோர்வை எல்லோரும் உணர,
“நீ போய் தூங்குடா தென்றல்” என்றிருந்தான் அருண்மொழி.
எல்லோரும் “ஓஹோ… அப்ப நாங்க” என கோராஸாக ஆரம்பித்து விட சிரிப்புடன் “நாம எல்லாம் பேசிட்டு இருக்கலாம். என் தென்றல் பாவம்” என்றதும் மீண்டும் ஒரு ஓஹோ அங்கே கலகலப்புடன் ஒலித்தது.
புன்னகை தென்றல் மீனா மாடியில் இருக்கும் அறைக்கு செல்ல ஆண்களின் கலகலப்பான பேச்சு தொடர்ந்தது.
அங்கே கூடத்தில் ஒரு பகுதியின் ஓரமாக தான் இவர்கள் அமர்ந்திருந்தனர். மற்றொரு புறம் வீட்டாட்கள் எல்லோரும் இருந்தனர்.
உணவு நேரம் முடிந்திருந்தாலும் உள்ளூர் உறவினர்கள் சிலர் இன்னுமே கிளம்பி இருக்கவில்லை. நடமாட்டம் அங்குமிங்கும் இருக்கத் தான் செய்தது.
அழகம்மையைத் தனியே அழைத்த ஒரு உறவுக்கார பெண்மணி அவரிடம் கேட்ட கேள்வியிலும் சொன்ன விஷயத்திலும் அழகம்மையின் முகம் நன்றாகவே மாறி விட்டிருந்தது!
இதென்ன கேள்வியும் பேச்சும் என்பது போல் அழகம்மை கண்டிப்புடன் ஒரு பார்வையை வீசி “இந்த மாதிரி பேச்சை நீ பேச வேண்டிய அவசியம் இல்லை காமாட்சி. என் மூத்த மகன் காதுல விழுந்தா நீ இங்க நிக்கவே முடியாது” என்று கடுமையாக பேசி விட்டார்.
அழகம்மை மூத்த மகன் எனும் போதே அவர் முகம் பீதியைக் காட்ட “என் கிட்ட பேசினதை வேற யார் கிட்டயும் பேசி வைக்காத. வந்தோமா போனாமான்னு இருந்துக்க. வீணா எதாவது பேசி குடும்பத்துல சங்கடத்தை உண்டு பண்ணிடாத” என்று கடுமை கூடிய குரலில் சொன்னவருக்கு அவர் பேசியதில் மனம் சமன் பட மறுத்தது.
“என் பேத்தி காதுல விழுந்தா துடிச்சி போய்டுவா” என்று துடித்துப் போய் சொன்னவருக்கு மாடிப் படி ஏற வந்த பேத்தி இவை அனைத்தும் கேட்டு உறைந்து நின்றிருப்பது தெரியவில்லை.
படிகளின் பக்கவாட்டில் இருந்த பாதையில் நின்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க மேல் படிகளில் நின்றிருந்த தென்றலின் செவிகளில் அந்தப் பெண்மணி பேசியவை எல்லாம் கேட்டு மொத்தமாய் உடைந்திருந்தாள்.
கண்கள் அவர் கூறிய வார்த்தைகளின் வீரியத்தில் கலங்கி விட உள்ளம் ஐயோ ஐயோ என கதறித் தீர்த்து விட்டது.
கண்ணீர் வெளியேறுவதைக் கூட உணராமல் அவள் ஜடம் போல் நின்றிருக்க எதிரே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த வெங்கடேசனோ விசாலாட்சியோ அவள் கவனத்தில் இல்லை! கவனிக்கும் நிலையிலும் தென்றல் மீனா இல்லை.
கீழே இறங்கி வந்து கொண்டிருந்த இருவரும் மகள் அசைவின்றி அதுவும் கண்ணீருடன் நின்றதை கண்டு பதைபதைத்துப் போனார்கள்.
இருவரும் வேக வேகமாக இறங்கி வந்து “மீனு என்னடா?” என்று பரபரப்புடன் கேட்க, அப்போது தான் தன்னிலை பெற்றாள் தென்றல் மீனா.
எதிரே நின்ற தாய் தந்தையை கண்டு இன்னும் கண்கள் கண்ணீரை சிந்த வெங்கடேசன் கலங்கிப் போனார்.
என்னவாகி இருக்குமோ என்ற பதட்டம் அவர் முகத்தில் அளவுக்கு அதிகமாக தெரிய சற்று நிதானித்தவள் “ஒன்னுமில்ல. காலைல இருந்து புகை, அலைச்சல்.. அதான்” என்று வாய்க்கு வந்ததை நடுங்கும் குரலில் கூறி விட்டு அதற்கு மேல் அவர்களை நேராகப் பார்க்க முடியாமல் அவர்களை கடந்து மாடியேறி சென்று விட்டாள்.
திக்கென்று இருந்தது இருவருக்கும். இப்படி தடுமாறி நடுங்கி பேச முடியாமல் தங்களை கடந்து செல்லும் மகளை கண்டு நெஞ்சம் விண்டே போனது அவர்களுக்கு.
வெங்கடேசன் துடித்துப் போனார். “என்ன விசாலம்.. மீனு கதி கலங்கிப் போய் இருக்கா?” என்று கலக்கமாக சற்றே பயத்துடன் கூற,
“எனக்கும் புரியலேங்க. சாப்பிடும் போது கூட நல்லா தான் இருந்தா” என்றவருக்கும் கணவனுக்கு குறையாத கலக்கம்.
அப்போது தான் பக்கவாட்டில் பேச்சுக் குரல் கேட்க இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டு வேகத்துடன் கீழே இறங்கினார்.
“நான் என்ன இல்லாததயா அழகத்தை சொன்னேன்.. உங்க பேத்திக்கு கல்யாணம் முடிஞ்சு ஏழு மாசம் ஆகப் போகுது. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல. நீங்க உங்க மருமகளுக்கு அந்த தேங்காயை கொடுத்ததுக்கு உங்க பேத்திக்கு புள்ள பொறக்கணும்னு சொல்லி கொடுத்து இருக்கலாம். உங்க மருமகளுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவ வாழ்ந்து முடிச்சிட்டா.. விதவை வேற. அவளுக்கு போய் கொடுத்து இருக்கீங்க. அது வேண்டாமேன்னு தான் சொன்னேன். அப்புறம் நான் சொன்னதுலயும் தப்பில்ல தானே…”
“உங்க ரெட்ட மருமகளுக அவ்வளவு சீக்கிரத்தில உண்டாகலயே. ஒருத்தி நாலு வருஷம் கழிச்சு புள்ள பெத்தா. அதுவும் பொட்ட புள்ள. இன்னொருத்தி பத்து வருஷம் கழிச்சு மாசமானா.. அது அந்த விபத்துல வயித்துலயே கரைஞ்சு போச்சு. அதே மாதிரி உங்க பேத்தியும் வருஷங் கழிச்சு உண்டாகிட கூடாதுன்னு தான் தேங்காயை அவ கையில கொடுத்து இருக்கலாமேன்னு…….”
“போதும் நிறுத்துங்க…..” என்று வெங்கடேசன் வீடே அதிர கத்தியதில் அப்பெண்மணி உடல் உதற திரும்பிப் பார்க்க உக்கிர முகத்துடன் நின்றிருந்தார் வெங்கடேசன்.
கண்கள் ரத்தமென சிவந்து போய் கிடந்தது. தூக்கி வாரிப் போட்டது அப்பெண்மணிக்கு. இவர் முன்னிலையில் பேசினால் தன் கதி அவ்வளவு தான் என்று தானே அழகம்மையிடம் வந்து தனியே பேசியது! இவர் வருவார் என்று தெரிந்திருந்தால் உண்டதும் கிளம்பி இருக்கலாமே!
“எங்க வந்து என்ன பேச்சு பேசுறீங்க? அதுவும் என் பொண்ணைப் பத்தி! இந்த வீட்டு மருமகங்க பத்தி!” என்று வார்த்தைகளை ஆவேசத்துடன் வீசியவர்,
“கொன்னு புதைச்சிடுவேன்” என்று சீறியதில் வெடவெடத்து விட்டது அப்பெண்மணிக்கு.
எல்லோரும் அவரின் சத்தத்தில் அங்கே கூடி விட அழகம்மைக்கு படபடவென வந்து விட்டது. அதுவும் மகன் இறுதியாக கூறிய வரியும் விட்டால் அடித்து நொறுக்கி விடுவேன் என்று நின்றிருந்த விதமும் அவரை அச்சமூட்டியது.
“இல்லேங்க.. நான் தப்பா எதுவும்…” என்று அப்பெண்மணி நடுக்கத்துடன் ஆரம்பித்ததுமே “ஒரு வார்த்தை வந்துச்சு……” என்று வெங்கடேசன் வார்த்தையால் வெட்டியதில் சர்வமும் ஒடுங்கிப் போனது அவருக்கு.
“வெங்கடேசா.. அவ கூறு கெட்டவ.. எதுவோ அறிவில்லாம பேசுறா..” என்று அழகம்மை மகனை சமாளிக்க பார்க்க தாயிடமும் அதே உக்கிரப் பார்வையை வீசியவர்,
“பேசினா… நாலு அப்பு விட வேண்டாம்? அதை விட்டுட்டு கண்டிச்சிட்டு மட்டும் நின்னுட்டு இருக்கீங்க?” என்றதும் அப்பெண்மணி அங்கிருந்த நகரப் பார்க்க,
“நில்லுங்க” என்று வெங்கடேசன் மிரட்டியதில் சுவரோடு ஒட்டியபடி நின்று கொண்டார்.
எஞ்சி நின்ற சொந்தங்கள் என்ன என்பது போல் பார்க்க வீட்டினர் மொத்தமும் தவிப்புடன் நின்றிருந்தனர்.
என்னவோ பேசி இருக்கிறார். இல்லை என்றால் வெங்கடேசன் இந்த அளவிற்கு கோபம் கொள்ள மாட்டார் என்று அனைவரும் யூகித்து விட அருண்மொழி ஒரு படி மேலே சென்று அவரின் கோபத்தை உணர்ந்து பாட்டியிடம் “தென்றலை பத்திப் பேசுனாங்களா பாட்டி” என்று தவிப்புடன் கேட்டு விட கலங்கி விட்டார் அழகம்மை.
அவனின் கேள்வியில் தான் வெங்கடேசன் நிதானித்திற்கே வந்தார். சுற்றி நின்ற குடும்பமும் அப்போது தான் உரைக்க அப்பெண்மணியிடம் பார்வையை திருப்பியவர்,
“இனி இந்த வீட்டுக்குள்ள நீங்க வரக் கூடாது! சொந்தம் கொண்டாடுறது இருக்கக் கூடாது! இது தான் நீங்க வந்துட்டு போற கடைசி விஷேஷமா இருக்கணும்! உங்க கண் பார்வை இனி எங்க குடும்பத்து மேல விழக் கூடாது” என்று ஆவேசமும் ஆத்திரமுமாய் அத்தனையையும் கட்டளையுடன் சொன்னவர்,
“வெளிய போங்க” என்று விரட்டுவது போல் கையை வீசிச் சொன்னதும் அவரின் முகம் கருத்து விட்டது. விரட்டி அடிக்காத குறையாக சொன்னதும் அதற்கு மேல் அங்கே நின்றால் அடித்து விரட்டி விடுவாரோ என அவர் வாயை மூடிக் கொண்டு அகன்று விட்டார்.
பேரமைதி நிலவியது சில நிமிடங்கள்!
பத்மநாபன் மனைவியிடம் வந்து “என்ன அழகு ஆச்சு? காமாட்சி என்னத்த பேசிட்டு போனா” என்றதும் அழகம்மை தொண்டைக் குழி ஏறி இறங்கியது. அருண்மொழியை எண்ணி அவர் வாயைத் திறக்கவில்லை.
மனைவி குறித்து தான் பேச்சு என்று உணர்ந்தவனால் அங்கே நிற்க முடியவில்லை.
அப்போது தான் அழகம்மை மெதுவாக “மீனுக்கு தெரிஞ்சா துடிச்சிடுவாங்க” என்று வாய் பொத்தி அழுது விட என்னவோ என இன்னும் மனம் அடித்துக் கொண்டது அருண்மொழிக்கு.
வெங்கடேசனும் கலங்கியவாறு “அந்தப் பொம்பளை பேசிட்டு போனதை கேட்டு தான்மா மீனு மேல போனா. பிள்ளை முகமே செத்துப் போச்சு” என்றதும் அதற்கு மேல் அருண்மொழி ஒரு நொடி கூட நிற்கவில்லை. என்னவென்றும் கேட்கவில்லை யாரிடமும்.. மனைவியைக் காண பட்டென்று படிகளில் தாவி ஏறி இருந்தான்.
செல்லும் அவனைக் கண்டு வெங்கடேசன் பெரு மூச்சுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு அதிர்ந்து நின்ற தாயிடம் கண்ட நடுக்கத்தில் “நீங்க உட்காருங்க முதல்ல” என்றவர்,
“விசாலம் தண்ணி கொண்டு வா” என்றார் கலங்கி நின்றிருந்த மனைவியிடமும். கூடி நின்ற ஆட்கள் என்னவென கேட்க, “குடும்ப விஷயம். அதே சமயம் தேவை இல்லாத விஷயம்” என்று வெங்கடேசன் கடுகடுத்த முகமாய் சொன்னதும் எல்லோரும் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பியும் விட அழகம்மை உள்ளடங்கிய குரலில் விஷயத்தை சொன்னதும் எல்லோரும் அதிர்ந்து விட்டனர்.
கோபமும் ஆத்திரமும் தான் வந்தது. நெஞ்சில் கை ஐத்து நின்று விட்ட பத்மநாபன் “வெங்கடேசன் சொன்ன மாதிரி காதோட நாலு அப்பு விட்டிருக்கணும் நீ” என்று மனைவியை ஏகத்திற்கும் கடிந்து கொள்ள எல்லோரும் அழகம்மை வாயேத் திறக்கவில்லை. நீண்ட ஆண்டுகள் கழித்து கணவரின் கோபத்தை காண்கிறார். அதுவும் அவர்களது என்பதாவது திருமண விழாவில்.
கலங்கி விட்டனர் அனைவரும். எத்தனை விசேஷமான நாள்! இப்படியா சங்கடம் ஏற்பட்டிருக்க வேண்டும் என எண்ணாமல் இருக்க முடியவில்லை.
அதுவும் தங்கள் வீட்டுப் பெண் காதிலும் இது விழுந்திருக்க இன்னும் கலங்கிப் போயினர் எல்லோரும். அனுஜா வீட்டினரும் வேதனையுடன் நின்றிருக்க கலங்கிப் போய் இருந்த குடும்பத்தை கண்டு அனுஜா தான் முதலில் தெளிந்தார்.
“யாரோ என்னமோ பேசிட்டு போனாங்கன்றதுக்காக நாம உடைஞ்சு போய்ட கூடாது” என்று பொதுவாக சொன்னவர், “அவுங்க பேசிட்டு போயாச்சு. நாமளும் அதையே நினைச்சு ஃபீல் பண்ணிட்டு இருக்க வேணாமே?”என்றவரிடம் பத்மநாபன் மாடியை ஒரு முறை பார்த்து விட்டு,
“மீனு…” என்று தொண்டை அடைக்கக் கூற, “அருண் பாத்துப்பான் அவளை. நீங்க வருத்தப் படாதீங்க” என்றவர் அழுது கொண்டிருந்த வசுந்தராவை நெருங்கி “என்ன இது? இப்படி அழுதுட்டு” என்று உரிமையுடன் கடிந்து கொண்டவரின் வார்த்தையில் வசுந்தரா தன்னை சமாளித்துக் கொண்டாலும் மகளை எண்ணி மறுகியது மனம்!
இங்கே அறைக்குள் வந்த அருண்மொழி கண்டது கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்த மனைவியை தான். அவளிடம் தெரிந்த அசைவே அவள் உறங்கவில்லை என்பதை கூற மெல்ல மனைவியை நெருங்கினான்.
அவன் வரும் ஓசை உணர்ந்தும் தென்றல் மீனா அசையவில்லை. கண்ணீரை கட்டுப் படுத்தவும் முடியவில்லை. எங்கே கணவனைக் கண்டால் இன்னும் அழுகை கூடுமோ எனப் பயந்து கண்களை இறுக மூடிக் கொண்தடளின் உடல் இறுகியதில் உள்ளம் நைந்து போனது அருண்மொழிக்கு.
மெல்ல அவளருகில் சாய்ந்தவன் மனைவியின் கண்ணீர்த் தடத்தை கண்டு யோசிக்காமல் அவளை தன் மார்பில் இடம் மாற்றிக் கொள்ள சப்தமில்லாமல் மௌனமாய் ஒரு அழுகை அவனின் மார்பில்!
வார்த்தைகள் வெளி வரவில்லை! காயம் கொண்டு அழுகும் மனைவியின் கண்ணீர் மார்பையும் சேர்த்து அவனையுடம் சுட “தேவை இல்லாத வார்த்தைகளுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லடா தென்றல்” என்றான் அருண்மொழி வெகு நிதானமாக.
அவளிடம் பதிலில்லை. ஆனால் அழுகை குறைந்து விசும்பல் மட்டுமே வந்திருந்தது.
சற்று நொடிகளில் அவன் முகம் பார்க்க மொத்தமாய் சிவந்து கண் மடல்கள் வீங்கி இருந்தது. பார்த்தவன் முகம் மாறாமல் இருக்க வெகு சிரமப் பட்டான்.
அதை உணர்ந்து எழுந்து சென்று முகம் கழுவி வந்தவளை கண்டு அவன் புன்னகைத்து கை விரித்து தலை அசைக்க மீண்டும் அவனிடம் தஞ்சம்!
“அப்பா பேசிட்டு இருந்தாங்க…” என்று மெல்ல கணவனிடம் கேட்க,
“ஹ்ம்ம்.. ரொம்ப கோபப் பட்டாங்க. அதை வச்சு தான் உன்னைப் பேசுனாங்கன்னு புரிஞ்சது” என்றவனிடம் மெல்ல அவர் சொன்னவற்றை கூறியவள்,
“நான்.. ஏன்.. அது.. உங்களுக்குத் தெரியும் தானே மொழி? ஏன் இன்னும் நமக்கு குழந்தை வரல..” எனக் கேட்டவள் குரலில் கவலை ஏக்கம் தவிப்பு ஏமாற்றம் என எல்லா உணர்ச்சிகளும் கொட்டிக் கிடந்தது.
“சொல்லுங்க மொழி” என்று தவிப்புடன் கேட்டவளுக்குள் அந்தப் பெண்மணி பேசியது அளவுக்கு அதிகமான பயத்தையும் வேதனையையும் உண்டு செய்து விட்டது என்பதை உணர்ந்தவன் நெஞ்சத்தில் பாரம் ஏறியது.
இனி தென்றலுக்குள் இந்த உணர்வுகள் ஒரு வித மன அழுத்தத்தை கொடுக்கும் என்று அவனின் மருத்துவ அனுபவத்தில் கணித்தவன் மனைவியை தன் மேல் சாய்த்துக் கொண்டு,
“எதுக்குடா இவ்வளவு தவிப்பு.. டென்ஷன் எல்லாம்? ரிலாக்ஸ் தென்றல்” என்றதும் அவள் மன நிலை சீராகவில்லை. அதுவும் தன் இரு அன்னைகளையும் வைத்துப் பேசியதைக் கேட்டு இன்னுமே வேதனையாக இருந்தது.
அதன் விளைவு கணவிடம் அவள் “உங்களுக்கு தெரியும் தானே மொழி? ஏன்….சொல்லுங்களேன்” என்று தவிப்புடன் அச்சத்துடன் அலைபாய்ந்த கண்களுடன் கேட்டவள்,
அவன் பேச வருவதற்கு முன்னே “சென்னைக்கு போனதும் எனக்கு டெஸ்ட் பண்ணிடாலாமா மொழி? ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறீங்களா” என்று கூறியதில் அதிருப்தியுடன் அதிர்ந்து “தென்றல்…” என முதல் முறையாக அழுத்தி அழைத்திருந்தான் அருண்மொழி!