“Stress is the main cause of infertility டா தென்றல்” என்று கணவன் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது தென்றல் மீனாவிற்கு.
கடந்த மூன்று மாதங்களாக அவள் அடைந்திருந்த மன அழுத்தத்திற்கு அளவில்லை எனலாம்!
அவர்கள் அழகாபுரத்தில் இருந்து வந்து மூன்று மாதம் ஓடிப் போய் இருந்தது. இத்தனை மாதங்களில் தென்றல் மொழியின் அன்பான வாழ்விற்கு எக்குறைவும் இல்லை! ஆனால் குழந்தை செல்வம் இல்லாதது குறையாக உருவகப் படுத்தப் பட்டிருந்தது தென்றல் மீனாவின் மனதில்!
அதன் விளைவு அடிக்கடி மனச் சோர்வும் கவலையும் அவளை ஆட்கொண்டிருக்க சொல்லொண்ணா பாரமும் பயமும் அவளிடம் நிரந்தரமாக தங்கி இருந்தது.
அன்று அந்தப் பெண்மணி பேசியவை அவளுள் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது அருண்மொழிக்கு அத்தனை வருத்தத்தை கொடுத்தது.
கூடவே அன்று தன்னிடம் பரிசோதனை மேற்கொள்ளலாமா எனக் கேட்டதும் அத்தனை அதிருப்தியாய் உணர்ந்தவன் “தென்றல்” என சற்றே அழுத்தி அழைத்து விட்டான் மனைவி கேட்டதை ஏற்க முடியாமல்.
அவன் அப்படி முகம் மாறி அழைத்ததுமே தென்றலின் முகம் கசங்கி விட்டிருந்தது. முதல் முறையாக தென்றல் எனும் அழைப்பில் ஒரு வித மாறுதல்! அதுவும் தன்னாலேயே! தாள முடியாமல் மீண்டும் உடைந்து விட்டாள் தென்றல் மீனா.
அருண்மொழியால் பொறுக்க முடியவில்லை. “ஹே தென்றல்…” என்றவன் அணைத்து ஆறுதல் கூறினாலும் தான் கேட்டதும் அதிகப்படி என்று உணர்ந்தவள் “சாரி மொழி” என்றதும் இன்னும் கஷ்டமாக உணர்ந்தான் அருண்மொழி.
“ஓகே. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் தென்றல். இதைப் பத்தி யோசிக்கக் கூடாது” என்றவன் அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள மனைவி உறங்கியதும் அவளை ஒரு பார்வை பார்த்தவனுக்கு எப்படி இதிலிருந்து மனைவியை மீட்க வேண்டும் என்கிற சிந்தனை தான் ஓடிக் கொண்டிருந்தது!
அழகாபுரத்தில் இருந்து வந்த பின்னாலும் அவளின் முகத்தில் சோர்வை உணர்ந்தவன் அந்த மாதம் அவளின் பீரியட்ஸ் வந்ததும் இன்னும் வேதனை கொண்டவளிடம் “stress is the main cause of infertility டா தென்றல்” என்றிருந்தான் அருண்மொழி.
“நீ இப்படி கவலையா சோர்வா எந்நேரமும் அன்னைக்கு அவுங்க பேசினதையே யோசிச்சு ஏக்டிவ்வா இல்லாம இருக்கிறது உனக்குள்ள negative Feelings, depression, anxiety – யை தான் உருவாக்கும்” என்று தெளிவாக சொல்லியவனிடம்,
“ஆனா சதாபிஷேகம் முன்னாடி வரைக்கும் நான் ஸ்ட்ரெஸ் ல இல்லையே மொழி! ரொம்ப சந்தோஷமா.. சொல்லப் போனா என் மொழி கூட ரொம்ப ரொம்ப நிம்மதியா சந்தோஷமா தான இருந்தேன்” என்றதும் அவனுக்கு மனம் தாளவில்லை.
அவளின் குழந்தை(கள்) ஆசையைப் பற்றி தென்காசியில் அவள் கூறிய போதே அறிந்திருந்தானே!
கண் முன்னே ஒரு பிரசவத்தை கண்டு நடுங்கியவள் தன்னிடம் பேசும் போது நடுக்கம் ஏதுமின்றி ஆசையும் ஆர்வமுமாய் மூன்று முத்தான குழந்தைகள் வேண்டும் அதிலும் ஒன்று குட்டி மொழி வேண்டும் என்று சொன்னவை எல்லாம் இப்போது எண்ணிப் பார்த்தவனுக்குள் சுழல் ஒன்று உருவானது!
கருத்தரிக்கவில்லை என்று மனைவி கலங்குவதையும் அன்புக் கணவனாய் கண் கொண்டு பார்க்க முடியவில்லை!
மனைவியை அணைத்துக் கொண்டவன் “ப்ளீஸ் தென்றல். இந்த விஷயம்.. எப்படி சொல்றது? Baby is a blessing from God! அந்த ப்லெஸ்ஸிங் நமக்கு கிடைக்காம போகாதுடா தென்றல்” என்றான் அவள் தலை கோதியபடி.
“என்னோட சேர்த்து உங்களையும் கஷ்டப் படுத்துறேன் தானே” என்று அழுகை கூட கேட்டவளின் இதழ்களை மெல்லத் தீண்டியவன்,
“இல்லடா… எனக்கு தென்றல் அவளோட இயல்புல இருந்து மாறினது தான் ரொம்ப வருத்தமே” என்றதும் அவள் கணவனை ஒரு பார்வை பார்க்க,
“நீ இப்படி இல்லடா தென்றல். மை தென்றல் இஸ் ப்ரேவ்! ஸ்வர்ணம் பேலஸ்ல.. அந்த விதார்த்தை ஹாண்டில் பண்ண விதத்துலன்னு எல்லாத்துலயும் என்னோட தென்றல் இப்படி இல்லை! ஆனா இந்த விஷயம்.. உன்னை பிரேக் பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு தென்றல்” என்றவன்,
“எஸ். ஐ க்நோ (know). இந்த விஷயம் ரொம்ப சென்சிடிவ்! பெண்களோட நுண்ணிய உணர்வுகளை ரொம்பவே பாதிக்கக் கூடிய விஷயம்! ‘கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சு.. இன்னுமா குழந்தை இல்லை..? விசேஷம் எப்போ? குட் நியூஸ் எப்ப சொல்வீங்க?’ இப்படி பல கேள்விகளை சொசைட்டில அதிகம் ஃபேஸ் பண்றது ஆண்களை விட பெண்கள் தான்! இப்படி பல கேள்விகளை ஃபேஸ் பண்ண முடியாம ஸ்ட்ரெஸ்ல ஏகப் பட்ட பேர் கவுன்சிலிங்காக ட்ரீட்மெண்ட்காக வரதை நான் பாத்திருக்கேன்! ஏன்.. நிறைய கப்பில்ஸ்க்கு ட்ரீட்மென்ட் பண்ணியும் இருக்கேன்! ஆனா அந்தக் கேள்விகள் உண்டாக்குற மன அழுத்தம் இஸ் க்ரூஷியல் தென்றல்!” என்றவன் சற்று நொடிகள் அமைதி காத்து விட்டு மீண்டும் பொறுமையாக பேசத் துவங்கினான்.
“மன அழுத்தம் பொல்லாத நோய் தென்றல்! நம்மளுக்குள்ள நம்மளை அறியாமையே மெல்ல உருவாகி நமக்குத் தெரியாமயே கொஞ்சம் கொஞ்சமா நம்மளை அழிக்க ஆரம்பிச்சிடும். வெளில இருந்து பாக்குறவங்க சாதாரணமா ஈசியா கேட்டுட்டு போய்டுவாங்க. அவுங்க கேக்குறதை நம்மளுக்குள்ள வளரவிட்டு அந்த வார்த்தையை திரும்ப திரும்ப ரீவைண்ட் பண்ணி பாக்குறது நம்மளை எங்கேயும் நகர விடாம தேங்க வச்சு நம்மளோட பாசிட்டிவிட்டியை அழிக்க ஆரம்பிச்சிடும். எல்லாத்தையும் பூதாகரமாக திங்க் பண்ணி நம்மளுக்குள்ள ஒரு கவலையான உணர்வுகளை உருவாக்கிக்கிறது நமக்கு தான் ஆபத்து” என்றான் மிகத் தெளிவான குரலில்.
“நீ இதையே நினைக்கிறதும் பீரியட்ஸ் ஆன உடனே அழுறதும்.. நோ.. இட்ஸ் நாட் மை தென்றல்! என்னால என் தென்றலை இப்படி பாக்க முடியலை. பாக்குறதுக்கான வலுவும் இல்ல. என் தென்றல் இப்படிக் கிடையாது” என்று அவன் சொல்லச் சொல்ல தன்னால் கணவனும் எந்த அளவிற்கு வேதனைக்கு உள்ளாகி இருக்கான் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியது அவனின் வலி மிகுந்த வார்த்தைகள்.
இந்த மூன்று மாதங்களில் அவன் மருத்துவமனை கிளம்பி சென்றதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து பேசியதும் தன்னை குறித்து கவலை கொண்டதும் தன்னை இன்னும் கூடுதலாக கவனித்துக் கொண்டதும் என ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து தான் இருக்கும் நிலமை தங்களின் மகிழ்வை குறைக்கிறது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டவளால் தாங்க முடியவில்லை.
மொழியை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை! “சாரி மொழி.. சாரி மொழி..” என்று விடமால் அவள் மொழிய “தென்றல்.. இதுல சாரி கேக்குறதுக்கான அவசியம் என்ன?” என்று அரவணைப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“என்னமோ எனக்கு தெரியல மொழி. ரொம்ப டவுனா ஃபீல் ஆகுது…” என்றவளுக்குள் சொல்லொண்ணா தவிப்பும் பாரமும்.
மொத்த வலுவும் இழந்ததை போலொரு தோற்றம்! மனம் எதற்கோ ஏங்கித் தவித்தது! கணவன் கூறிய “மை தென்றல் இஸ் பிரேவ்’ எனும் நிலையை இந்த விஷயத்தில் அடைந்து விட வேண்டும் என்று தோன்றியது.
தான் கஷ்டம் கொண்டு கணவனையும் கவலைக்கு உள்ளாக்கி என அவளால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை.
“தென்றல்…” என்று மனைவியின் முகம் பற்றி நிமிர்த்தியவன் “மாமா கிட்ட பேசுறியா?” என்றதும் இமை சிமிட்டக் கூட மறந்தவளாக கணவனைப் பார்த்தாள் தென்றல் மீனா!
“நீ உன் அப்பாவை தேடுறன்னு தான் தோணுது தென்றல். மாமாவைப் பாரு. பேசு. இப்படி வீட்லயே இருக்காத! எனக்கு என் தென்றல இப்படி பாக்க முடியல” என்றதும் பாய்ந்து அவனை கட்டிக் கொண்டவள் முகம் முழுவதும் முத்தமிட்டு இதழ்களில் சரணடைந்தாள்.
இமை மீறிய கண்ணீர்த் துளிகள் தன்னை தனக்கே புரிய வைத்த கணவனுக்கு ஆயிரம் கதைகள் சொன்னது!
“தென்றல்” என்றவன் மூச்சிரைக்க அழைக்க “மொழி.. நீங்க ஹாஸ்பிட்டல் போகும் போது என்னை வீட்ல விட்டுட்டு போறீங்களா” என்று தெளிந்த முகத்துடன் கேட்டதும் அவள் முகத்தை கையில் ஏந்திக் கொண்டவன்,
“மாமாக்கு கால் பண்ணவா?”
“இல்ல.. வேண்டாம் மொழி. நேர்ல பார்த்து பேசுறேன்” என்றவள் அவனுக்கு நன்றி கூறும் விதமாய் மீண்டும் ஒரு முத்தத்தை அழுத்தி கொடுத்து விட்டு “ரெடியாகிட்டு வரேன் மொழி. ஃபைவ் மினிட்ஸ்” என்றவள் முகம் கழுவி உடை மாற்றி கிளம்பி வந்திருந்தாள்.
பத்மநாபன் இல்லத்தில் அவளை இறக்கி விட்டவன் “ஈவ்னிங் வந்து உன்னை கூட்டி போறேன்டா தென்றல்” என்க,
“இப்ப வரலையா நீங்க? நீங்களும் வந்துட்டு போங்க மொழி. நான் மட்டும் எப்படி அப்பா கிட்ட பேசுறது” என்று கேட்ட மனைவியை புன்னகையுடன் பார்த்தவன்,
மனைவியின் கை பற்றி “தென்றல்.. அவர் உன்னோட அப்பாடா. நீ பயப்பட தேவையே இல்லை. எதுக்கு நெர்வஸ்ஸா இருக்க? ரிலாக்ஸ் தென்றல்” என்றவன் “நீ போய் பேசு. மாமா கிட்ட பேசினா இன்னும் பெட்டரா ஃபீல் பண்ணுவேன்னு தோணுது. எனக்கு டியூட்டி டைம் ஆகிடுச்சு. ஈவ்னிங் கண்டிப்பா வரேன் தென்றல்” என்றவன் விடை பெற வீட்டிற்குள் வந்தாள்.
முன் தோட்டத்தில் மகிழினியுடன் விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் அத்தையை கண்டதும் அவளிடம் ஓடி வர மகிழினியும் மெல்ல நடையிட்டு வேகமாக “த்தை…” என்று இவளிடம் வர குழந்தைகளை கண்டதும் முகம் மலர்ந்து போனது தென்றல் மீனாவிற்கு.
கீழே மண்டியிட்டு இருவரையும் அணைத்துக் கொண்டவள் “நீங்க மட்டும் தான் விளையாடுறீங்களா” என்று கேட்க, அர்ஜுன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சந்தியாவும் மயூரியும் வெளியே வந்திருந்தனர்.
தென்றல் மீனாவைக் கண்டதும் முகம் மலர வரவேற்றவர்கள் பிள்ளைகளை தூக்கிக் கொள்ள அவர்களோடு உள்ளே வந்தவளை எல்லோரும் வரவேற்று அருண்மொழி எங்கே எனக் கேட்க,
“அவுங்களுக்கு டியூட்டி டைம். ஈவ்னிங் வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க” என்று பொதுவாக சொன்னவளின் கண்கள் மொத்த வீட்டையும் ஒரு பார்வை பார்த்தது.
தந்தையைக் காணாமல் மனம் சுணங்க அழகம்மை அவளிடம் “வந்து சாப்பிடுடி முதல்ல” என்க,
“வேண்டாம் பாட்டி சாப்பிட்டு தான் வந்தேன்” என்றவள் விசாலாட்சியை கண்டு “ஒரு காஃபி தாங்கமா” என்றதும் முகம் பூவாய் மலர்ந்து விட்டது அவருக்கு.
எத்தனை நாட்கள் ஆகி விட்டது மகள் இவ்வாறு உரிமையாக கேட்டு என்று உருகிப் போனவர், “இதோ இப்ப கொண்டு வரேன் மீனு. நீ உட்காரு” என்றவர் பரபரப்புடன் அடுக்களைக்குள் செல்ல, செல்லும் அவரைக் கண்டு புன்னகைத்தவள் ஹாலில் சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டாள்.
பத்மநாபன், வெங்கடேசன், குணநாதன், கனிஅமுதன் என யாரையும் காணவில்லை.
“அது.. எங்க வசும்மா? தாத்தா..? யாரையும் காணோம்?” என்று தடுமாறி கேட்க,
“இன்னைக்கு வெள்ளனவே எல்லாரும் கடைக்கு கிளம்பிட்டாங்க மீனு. புதுசா வந்த நகைங்க எல்லாம் செக் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தாங்க. நிகேதனும் முகுந்தன் மட்டும் தான் இருக்காங்க. அவுங்களும் அர்ஜுனை கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு இப்ப கிளம்பிடுவாங்க” என்றதும் அமைதியாய் கேட்டுக் கொண்டவள் விசாலாட்சி கொண்டு வந்து கொடுத்த காஃபியை பருகினாள்.
எல்லோரும் அமர்ந்து அவளிடம் பேசிக் கொண்டிருக்க நிகேதன் முகுந்தன் தங்கையை வரவேற்று விட்டு சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினார்கள்.
செல்லும் முன்னர் இருவரும் அவளிடம் கடைக்கு வருகிறாயா என்று கேட்டதற்கு மறுத்து விட்டவள் தன் அறைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுப்பதாக கூறி விட எல்லோரும் தென்றல் மீனாவை ஒரு பார்வை பார்த்தனர்.
ஆனால் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளின் முகம் காட்டிய எதோ ஒரு வித சோர்வு அவள் மனம் தடுமாற்றத்தில் இருப்பதை உணர்த்தியது.
அதுவும் சதாபிஷேகம் முடிந்து வந்ததும் எல்லோரும் அவளிடம் ஆறுதலாக பேசி இருக்க யாரும் அதற்கடுத்து அது குறித்து அவளிடம் வாயைத் திறந்திருக்கவில்லை!
மொழியுடனான திருமணத்திற்கு பின்னர் அவள் பிறந்து வீட்டிற்கு வருவதும் மிக அரிது தான் என்பதால் எதையும் கேட்காமல் இயல்பாக சந்தோஷமாக இருந்தனர்.
தன் அறைக்கு வந்தவள் சிறிது நேரம் உறங்கி விட வசுந்தரா வந்ததும் தான் கண் விழித்தாள்.
“என்ன மீனு? எதோ டல்லா இருக்க மாதிரி இருக்கு” என்று அவள் தலை வருடிக் கேட்க, அவள் மடியில் படுத்துக் கொண்டவள் “அப்பா கிட்ட பேசணும் போல இருக்கு வசும்மா..” என்றதும் வசுந்தரா “பேச வேண்டியது தானே” என்க பட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டாள் தென்றல் மீனா.
அவரிடம் இருந்து அதுவும் இத்தனை விரைவாக எந்த ஒரு தடையுமின்றி மௌனமுமின்றி வந்த பதிலை அவள் எதிர் பார்க்கவில்லை.
“வசும்மா” என்று திகைப்பு நீங்காமல் அவள் அழைக்க, “உன்னைப் பேசினாலும் உனக்கு அவர் அப்பா தான்! அவருக்கு நீ என்னைக்கும் உசத்தி தான்! அதை மாத்த முடியாது மீனாம்மா! அவர் பேசினதுல வருத்தம் இருக்க தான் செய்யுது. ஆனாலும் நீ பேசணும்னு சொன்னதும் எனக்கு சந்தோஷம் தான்” என்றவர் அவளின் கண்ணீரைக் கண்டு பதறி என்னவென கேட்க, இன்று காலை கணவன் கூறியது தன் பயம் என அனைத்தையும் சொல்லியவள் “ரொம்பவே பயந்துட்டேன் வசும்மா” என்றதும் திகைத்து விட்டார் வசுந்தரலக்ஷ்மி!
“என்ன மீனு? அவுங்க பேசினதைப் போய்..” என்று மறுக, “இல்ல இப்ப அதை நினைச்சு ஃபீல் பண்ணல. ஆனா அப்பா கிட்ட பேசணும்” என்றதும் அவர் புன்னகைக்க, அவளின் முகத்திலும் புன்னகையே!
“சரி. வா கீழ போகலாம்” என்றதும் இருவரும் கீழே வந்தனர்.
விசாலாட்சி மகள் வந்ததும் உணவை எடுத்து வைக்க “இப்ப வேண்டாம்மா. கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றவள் வாசலைப் பார்க்க,
“என்னடி வந்ததுல இருந்த யாரோயோ தேடுறாப்புல இருக்கு?” என்று அழகம்மை கேட்க, “இல்ல பாட்டி…” என்றவளுக்கு தந்தையைக் காண வேண்டும் என்கிற எண்ணம் நொடிக்கு நொடி வளர்ந்து கொண்டே போக உள்ளத்தை மறைக்க முடியாமல் “அப்பா இன்னும் வரலயே பாட்டி” என்று கேட்டு விட பெண்கள் எல்லோரும் மெல்லிய அதிர்வுடன் அவளை நோக்கினர்!
“ஆத்தாடி..” என்று அழகம்மையும் வாய் பிளந்துவிட ஒரு மாதிரி உணர்ந்தவள் மௌனமாகி விட்டாள்.
“அப்பா இப்ப வர மாட்டாங்களே மீனு. மதிய சாப்பாடும் கடைக்கு கொடுத்து விட்டாச்சு” என்றதும் கண்ணீரே வரும் போல் இருந்தது அவளுக்கு.
விசாலாட்சி மகள் முகம் கவனித்து அதற்கு மேல் ஒரு நொடி கூட தாமதிக்காமல் அறைக்குள் சென்று அலைபேசியை எடுத்து கணவனிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி விட்டார்.