மனைவி சொன்னதை கேட்டு ஸ்தம்பித்து நின்றிருந்தார் வெங்கடேசன். “விசாலம்… நிஜமா தான் சொல்றியா?” என்றவர் குரலில் நடுக்கம் வெளிப்படையாய் தெரிந்தது.
“ஆமாங்க. வந்ததுல இருந்தே பிள்ள உங்களை தான் தேடி இருக்கா. இப்ப கேட்டதும் தான் எங்க எல்லாருக்கும் தெரிஞ்சுது. நீங்க வரீங்களா? முக்கியமான வேலை எதுவும் இல்லையே?” என்றதும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை வெங்கடேசனிற்கு!
ஒரு மாதிரி பரபரப்பாக உணர்ந்தவர் “மாப்பிள்ளை?” என்று மனைவியிடம் கேட்க, “மாப்பிள்ளை மீனுவை வந்து கொண்டு வந்து விட்டுட்டு நேரமாச்சுன்னு கிளம்பிட்டாராம்ங்க. மீனு மட்டும் தான் இருக்கா” என்றவர்,
“பிள்ளை முகமும் சரியில்ல. என்னமோ சோர்வாவே தெரியுறா. நீங்க வாங்க” என்று விசாலாட்சி இப்போது அழுத்தி சொல்லி விட,
“இதோ.. இதோ விசாலம். வந்திடுறேன்” என்றவர் படபடப்புடன் கூறி விட்டு அழைப்பை துண்டித்தார்.
விசாலாட்சிக்கு மனம் முழுக்க இருவரும் நன்றாக பேசிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தான் ஓடியது.
கடையில் இருந்து அவசர அவசரமாக கிளம்பிய வெங்கடேசன் எதிரே வந்த தந்தையிடம் “நான் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறேன் ப்பா” என்று அவசரமாக சொன்ன மகனை நிறுத்திய பத்மநாபன்,
“ஹ்ம்ம்.. அழகு போன் பண்ணி சொல்லி இருந்தாடா. மீனு வந்திருக்கதை” என்றதும் வெங்கடேசன் தலை அசைக்க,
“உன்னை தான் கேட்டாளாம்… போ. போய் என்னன்னு பாத்துட்டு வா. பத்திரம்” என்றதும் கண்கள் கலங்க ஆமோதிப்பாய் சிறு பிள்ளை போல் தலை அசைத்து விட்டு கிளம்பினார் வெங்கடேசன்.
அடுத்த அரை மணி நேரத்தில் வெங்கடேசன் இல்லம் வந்துவிட பெண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டவர் உள்ளே நுழைய ஹாலின் மையத்தில் இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த தென்றல் மீனா தந்தையை கண்டதும் கண்கள் விரிய அவரைப் பார்த்தாள்.
எல்லோரும் அவர் வருவதையும் தென்றல் மீனாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து கொள்ள அழகம்மை கண் காட்டியதில் சற்று தொலைவில் அறை வாசலிலும் அடுக்களையும் வாயிலிலும் சென்று நின்று கொண்டனர்.
மகளை நெருங்கிய வெங்கடேசனிற்கு பதட்டத்தில் வியர்த்து கொட்டியது. அதையும் தாண்டி மனைவி சொன்னது மனதில் ஓட “வாடா மீனு.. எப்ப வந்த?” என்று கேட்டவர்,
“எப்படிடா இருக்க?” என்று கேட்கும் போதே குரல் தடுமாறி கலங்கி விட்டிருந்தது.
அவள் அருகே கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்து வெங்கடேசன் பேசிக் கொண்டிருக்க அவரை அசையாமல் பார்த்தாள் தென்றல் மீனா.
தன்னிடம் பேசும் போது தன் தந்தைக்கு இவ்வளவு பதற்றம் உண்டாகுமா? அதுவும் வியர்த்து கொட்டும் அளவிற்கு?
அவரின் மன நிலை கண்டு அத்தனை வருந்தியவள் கண்களில் நீர் கோர்க்க அவரைப் பார்க்க பதறி விட்டார் வெங்கடேசன்.
“என்னடா மீனு? என்ன ஆச்சு? அம்மா சொன்னா. எதையோ நினைச்சு மறுகுறேன்னு.. என்னடா மீனு? அப்பா கிட்ட சொல்ல முடிஞ்சா சொல்லுடா” என்று அவர் பரிதவிப்புடன் சொன்ன விதமும் அவளின் மன அழுத்தத்திற்கான காரணமும் சேர்ந்து கொள்ள வெடித்து விட்டாள் தென்றல் மீனா.
“அப்பா…” என்று மெல்லிய கதறலுடன் அவரின் தோள் சாய்ந்தவளுக்கு அழுகை பெருகியது!
எல்லோரும் பதறி விட அழகம்மை கண்டிப்பாய் பார்த்ததில் யாரும் முன் வரவில்லை!
“மீனாம்மா.. என்னடா? எதுக்கு இந்த அழுகை?” என்று அவர் பேசப் பேச நீண்ட நாட்கள் கழித்து தந்தையின் வார்த்தைகளில் நெகிழ்ந்தவள் சற்று நேரம் வரை அழுவதை நிறுத்தவே இல்லை.
“மீனு.. என்ன விஷயமா இருந்தாலும் சமாளிக்கலாம் மீனு. அதை விட்டுட்டு இப்படி அழுறது என் பொண்ணு கிடையாது” என்று மகளின் தலை வருடி சொன்னதும் தன்னை தேற்றிக் கொண்டவள் நிமிர்ந்து அவரைப் பார்க்க இருவரும் வெகு நாட்கள் கழித்து ஒருவரை ஒருவர் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளும் சூழல்!
வெங்கடேசன் யோசிக்கவே இல்லை. மகளின் இரு கைகளையும் பற்றி அதில் தன் முகத்தை வைத்து குலுங்கி விட்டார்.
“அப்பா.. என்னப்பா நீங்க?” தந்தையின் கண்ணீரில் தன் கவலை மறந்தவள் அவரிடம் இருந்து தன் கைகளை உருவிக் கொள்ள பார்க்க வெங்கடேசன் விடவில்லை.
அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் கண்ணீர் ஆவியாய் வெளியேறியது மகளிடம்!
ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் ஆயிரம் மன்னிப்பினை மகளிடம் யாசிக்க தந்தையின் இந்நிலையை சகிக்க முடியவில்லை தென்றல் மீனாவால்.
“அப்பா ப்ளீஸ்….” என்றவள் தன் கையை பிரித்து அவரின் கண்ணீரை துடைத்து விட “அப்பாவை மன்னிச்சிடு மீனு” என்றார் தாங்கொண்ணா வேதனையுடன்.
“வேண்டாம் ப்பா. நாம அதைப் பத்தி பேசவே வேண்டாம். வாழ்க்கைல சில விஷயம் திரும்பி பார்க்க கூடாது. கடந்து போய்டணும். நாமளும் கடந்து வந்திடலாம் ப்பா” என்றவள் அவர் முகம் இன்னும் கலங்கி இருப்பதை கண்டு,
“எனக்காக. நமக்காக” என்றவள்,
“என் அப்பா மேல மட்டும் முழு தப்பும் இல்லையே. உங்க எதிர்பார்ப்பை பொய்யாக்கும் போது அதனால உண்டான கோபம் தானே எல்லாம்” என்றவள் தொண்டைக் குழி ஏறி இறங்க சொல்லிய விதத்தை கண்டு துடித்தவர்,
“வேண்டாம்டா. நீ சொன்ன மாதிரி இனி இதைப் பத்தி நாம பேச வேண்டாம். கடந்து வந்திடலாம். வந்துட்டேன்” என்று தெளிந்த முகத்துடன் சொன்னவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “சாப்பிட்டியா மீனு” என்று கேட்க அவள் இல்லை என்று தலை அசைத்ததும் மனைவியை எங்கே என்று பார்த்தவர்,
அடுக்களை வாயிலில் கண்ணீருடன் நின்றிருந்த மனைவியை கண்டு முறைத்து “மணி ரெண்டரைக்கு மேல ஆகிப் போச்சு. இன்னும் பிள்ளையை சாப்பிட சொல்லலயா?” என்று கோபமாக கேட்க விசாலாட்சிக்கு கணவரின் கோபத்தில் பழைய கம்பீரத்தை கண்டு மேலும் சந்தோஷக் கண்ணீர் தான்!
“விசாலம்…” என்று அதட்டியதும்..
“இதோங்க.. எடுத்து வைக்கிறேன்” என்றவர் வேக வேகமாக கண்ணீரை துடைத்துக் கொண்டு அகம் நிறைந்த புன்னகையுடன் உணவுகளை எடுத்து வைக்க மகளிடம் திரும்பிய வெங்கடேசன்,
“முதல்ல சாப்பிடு மீனும்மா. அப்புறம் பேசலாம். இவ்வளவு நேரமாவா சாப்பிட்டாம இருக்கிறது” என்று மகளையும் லேசாக அதட்ட அவருடன் எழுந்து கொண்டவள்,
“நான் கடைல சாப்பிட்டேன்டா” என்றவர் “சரி. நானும் கொஞ்சம் சாப்பிடுறேன் உன்னோட” என்று மகளுடன் அமர்ந்து கொள்ள கொஞ்சமாய் மகளுடன் உட்கொண்ட உணவு மனதையும் வயிறையும் நிறைத்தது.
பார்த்திருந்த எல்லோருக்கும் மனம் நிறைந்து போனது. அழகம்மை கணவனிடம் எல்லாவற்றையும் சொல்லி மகிழ்ந்து கொண்டார்.
உண்டு முடித்ததும் “வெளில போகலாமா ப்பா. கூட்டிட்டு போறீங்களா?” என்று சிறு பிள்ளை போல் கேட்க, “சரிடா வா போகலாம்” என்றவர் எங்க என்ன என்று கேட்கவில்லை. மகள் கேட்டதும் மறு பேச்சின்றி அவளுடன் காரில் கிளம்பி விட்டார்.
அவர்கள் சென்றதும் விசாலாட்சி வசுந்தராவிடம் “ஏன் வசு மீனு வரும் போது ரொம்ப டல்லா இருந்தா?” என்று கேட்டு விட வசுந்தரா கூறியதும் எல்லோருக்கும் வருத்தம் உண்டானது.
“பைத்தியக்காரி.. எதை எல்லாம் நினைச்சு கவலைப் பட்டுக்கிட்டு இருந்திருக்கா… நல்லதை நினைச்சு சந்தோஷமா ஆரோக்கியமா மனசுல தெளிவோடு இருக்கணும். அதை விட்டுட்டு இப்படி பயந்து.. பதறிட்டு இருந்தா எங்குட்டு உண்டாகுறது?வரட்டும் நல்லா திட்டி விடுறேன்.” என்று அழகம்மை தன் போக்கிற்கு பேத்திக்கு வசை மாரி பொழிந்தார்.
காரில் சென்று கொண்டிருந்த வெங்கடேசன் “எங்கடா மீனு போறது?” என்று மகளிடமே கேட்க,
“லாங் ட்ரைவ் போகலாம் ப்பா” என்றாள் இருக்கையில் சாய்ந்து கொண்டு.
“சரி டா” என்றவர் காரினை செலுத்த மகளிடம் நிலவிய அமைதியை கண்டு “என்னடா மீனும்மா.. எதை நினைச்சு இப்படி போட்டு உன்னை நீயே வருத்திக்கிற” என்று கேட்டதும் ஒரு நொடி அமைதியாய் இருந்தவள் தலையை குனிந்தபடி,
“என்னை மட்டும் இல்லப்பா. மொழியையும் சேர்த்து கஷ்டப் படுத்திறேன்” என்று அழுது விட காரை சாலையோரம் கட்டி விட்டார் வெங்கடேசன்.
திகைப்புடன் மகளைப் பார்த்து “என்னடா மீனு? என்ன சொல்ற? மாப்பிள்ளையை எதுவும் பேசிட்டியா?” என்று அவரே கேட்டு விட்டு,
“இல்லையே.. நீ கோபம்னாலும் அப்படி எல்லாம் மாப்பிள்ளையை பேசிட மாட்டியே. மாப்பிள்ளையும் உன் மேல உயிரே வச்சிருக்கார்..” என்று அவரே சொல்லிக் கொள்ள தந்தையின் புரிதலில் மெல்லிய புன்னகை அவளிடம்.
“ஆமா ப்பா. ஆனா.. இது வேற..” என்றவள் சதாபிஷேகத்தின் போது நிகழ்ந்ததை எண்ணி தான் வருந்தி மன அழுத்தத்துடன் இருந்ததை சொல்லி கண்ணீருடன் “குழந்தை வராததை நினைச்சு நானும் கஷ்டப் பட்டு அவுங்களையும் கஷ்டப் படுத்திறேன் ப்பா” என்றதும் வெங்கடேசன் ஒரு நிமிடம் அமைதியாய் மகளைப் பார்த்தார்.
“யாரோ என்னமோ சொன்னாங்கன்னு இத்தனை மாசமும் அதை நினைச்சு வருத்தப் படுறது ரொம்ப தப்பு மீனு. அந்தப் பொம்பளை அன்னைக்கு பேசினதுக்காக என் பொண்ணு இப்படி கலங்கி உட்காருறவ கிடையாது” என்றவர்,
“என் பொண்ணுக்கு அந்தக் கடவுள் கொடுக்க வேண்டிய நேரத்துல கண்டிப்பா எல்லா வரத்தையும் கொடுத்திடுவான்டா. கொடுக்காம விட்ருவாரா என்ன? அதையும் பாப்போம்” மகளுக்காக சவால் போல் கடவுளிடம் சொல்லிக் கொள்ள புன்னகை விரிந்தது தென்றல் மீனாவின் முகத்தில்.
“இதை நினைச்சு நீ இப்படி கலங்கிறது சரி கிடையாது” என்ற வெங்கடேசன்,
“ஒவ்வொரு நாளும் மாப்பிள்ளை கிளம்பி போனதுக்கு அப்புறம் இதையே நினைச்சுட்டு இருந்தியா?” என்று சிறு கண்டிப்போடு கேட்க தென்றல் மீனா அவர் கேட்பதில் இருந்த உண்மை புரிந்து மௌனம் காத்தாள்.
மகளை முறைத்தவர் “முதல்ல நீ கடைக்கு வா. வீட்டுக்குள்ளயே இருக்காத. கண்டதையும் யோசிச்சு இப்படி கண்ணைக் கசக்கிறது என்ன பழக்கம்? என் பொண்ணு இப்படி இல்ல. அவ ரொம்ப தைரியசாலி” என்றதும் தென்றல் மீனா மனம் நன்றாகவே தெளிந்திருந்தது.
“நாளைல இருந்து வரேன் ப்பா” என்றவளிடம் “சரி. இப்போ நீ ட்ரைவ் பண்ணு” என்று வெங்கடேசன் இறங்கிக் கொள்ள எத்தனிக்க,
“அப்பா.. நீங்களே..”
“இல்ல மீனு. நீ பண்ணு. டிரைவிங் பண்ணும் போது கவனம் இங்க தான் இருக்கும். வேற எதையும் யோசிக்க மாட்ட. அதான் சொல்றேன். இறங்கி வா” என்றதும் அவளுக்கு தந்தை காரோட்ட கற்றுக் கொடுத்த நாட்களின் நியாபகம்!
சிறு வயதில் நடந்த விபத்தை எண்ணி வளர்ந்த பின்னரும் காரை தொடவே மாட்டேன். ஓட்டவே மாட்டேன் என்று அடம் பிடித்தவளை “நானிருக்கும் போது என்ன பயம்? அப்பா இருக்கேன் பக்கத்துல. ஓட்டு மீனு” என்று தைரியம் கொடுத்து அவளுக்கு கற்றுக் கொடுத்தவர் வெங்கடேசன் தான்.
இப்போது அவர் கூறியதும் மறுக்காமல் இறங்கி ட்ரைவர் சீட்டில் வந்து அமர்ந்தவள் காரினை செலுத்த மனம் சஞ்சலம் நீங்கி தெளிந்திருந்தது.
நீண்ட நாட்கள் கழித்து இருவரும் மனம் விட்டு பேசியபடி ஒரு பயணத்தை மேற்கொண்டனர். காரினை செலுத்திக் கொண்டிருக்கும் போதே கணவனிடம் இருந்து அழைப்பு வர “அவர் தான் ப்பா” என்றவள்,
“நீங்க பேசுங்கப்பா” என்றதும் வெங்கடேசன் தான் அழைப்பை ஏற்றார்.
“தென்றல்… சாப்பிட்டியாடா? மாமா கிட்ட பேசியாச்சா?” என்று அவன் கேட்க அந்தக் குரலில் நேசம் மட்டுமே!
“உங்க தென்றல் அவ அப்பா கிட்ட பேசிட்டா மாப்பிள்ளை” என்று சிறு பிள்ளை போல் அவனிடம் சொல்லி மகிழ்ந்து கொண்டார்.
“ரொம்ப சந்தோஷம் மாமா” என்றவனிடம் அவள் நாளையிலிருந்து கடைக்கு வருவதை பற்றி கூற புன்னகையுடன் கேட்டுக் கொண்டவன் “தென்றல் ஓகே தானே மாமா” என்று அவரிடம் கேட்க,
“நல்லா இருக்கா மாப்பிள்ளை. நீங்க அவளை நினைச்சு வருத்தப் படாதீங்க. மீனு சரியாகிட்டா”
“இல்ல மாமா. இப்ப எனக்கு எந்த வருத்தமும் இல்ல. உங்க கிட்ட பேசினதும் இன்னும் சந்தோஷம்” என்றான் மனதார.
இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டிக்க தந்தை மட்டும் கணவன் பேசியதை கேட்டு தென்றல் மீனாவின் முகத்தில் ஒளியுடன் கூடிய புன்னகை!
அப்புன்னகை தொடர்ந்து வந்த நாட்களிலும் அவளிடம் ஜனித்திருக்க புது உறவின் வரவை கணவன் உணர்த்திய நாளன்று புன்னகையுடன் கண்ணில் நீர் முத்துக்களும் நட்சத்திரமாய் மின்னியது!