நேரம் இரவு பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் ஸ்வர்ணம் பேலஸில் இருந்து யாரும் வெளியேறி இருக்கவில்லை.
ஊழியர்கள் முதல் முதலாளிகள் வரை எல்லோரும் அங்கே தான் இருந்தனர். நடந்துகொண்டிருந்த பரிசோதனையை வெறும் வேடிக்கை மனிதர்களாக நின்று பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
பத்மநாபன் முகத்தில் அத்தனை களைப்பு. காலையில் இருந்து அதே இடத்தில் அமர்ந்திருந்தது உடல் வலியை கொடுத்திருந்தது. அவ்வப்பொழுது அவசரத் தேவைகளுக்கு எழுந்து சென்று வந்தாலும் மீண்டும் அமர்ந்திருந்த இருக்கையில் தான் தஞ்சம்!
வெங்கடேசன் கனிஅமுதன் குணநாதன் நிகேதன் முகுந்தன் தென்றல் மீனா என எல்லோரும் அங்கே தான்! அவர்களின் அறையில் தான் இருந்தனர்.
ஊழியர்கள் எல்லோரும் ஒரு ஓரமாய் அசையைக் கூட இல்லாமல் அதே இடத்தில் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர்.
நகரக் கூட விடவில்லை வந்திருந்த தர நிர்ணய பணியகத்தின் அதிகாரிகள்!
காலையில் கடை திறந்த அரை மணி நேரத்திற்குள்ளையே திபுதிபுவென இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து தங்களின் கடையில் பொய்யான ஹால்மார்க் முத்திரை பதித்து நகைகளை விற்கிறீர்கள் என புகார் வந்திருப்பதாக கூறி கடையில் இருந்த மொத்த நகைகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூற ஒன்று போல் திகைத்தனர் எல்லோரும்.
“கம்ப்ளண்ட் ஃபைல் பண்ணது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று தென்றல் மீனா கேட்டதற்கு அவர் ஒரு காகிதத்தை நீட்ட, வாடிக்கையாளர்களிடம் வந்திருந்தது அந்த கம்ப்ளைன்ட் என்பதை பார்த்தவள் தந்தையிடம் அதை நீட்டினாள்.
அதனை வாங்கிப் பார்த்த வெங்கடேசன் பல்லைக் கடிக்க, “செக் பண்ணியே ஆகனும்” என்ற அதிகாரிகளை கண்டு “நான் நம்ம மினிஸ்டர்க்கு கால் பண்ணி சொல்றேன்” என்ற வெங்கடேசனை தடுத்து விட்டாள் தென்றல் மீனா!
“வேண்டாம் ப்பா. அவுங்க செக் பண்ணட்டும்” என்றதும் ஆண்கள் அவளை ஏன் என்பது போல் பார்க்க,
“பண்ணட்டும். பண்ணினா தான் குடுத்திருக்க கம்ப்ளைன்ட் அவசியம் இல்லாததுன்னு அவுங்களுக்கு தெரியும்” என்றவள் அந்த அதிகாரிகளிடம் “யூ மே ப்ரசீட்..” என்று விட்டாள்.
அவர்களும் காலையில் இருந்து மொத்த கடையையும் பிரித்து எடுத்து விட்டனர். ஒரு குண்டு மணி கூட விடாமல் அதில் ஹால்மார்க் விவரங்களை பற்றி பூதக் கண்ணாடி வைத்து பார்த்துப் பார்த்து கண்கள் ஒரு வழியானது தான் மிச்சம்!
மணி பத்தைக் கடந்தும் அவர்களின் சோதனை தொடர சோர்ந்து தெரிந்த மகளைக் கண்டு “நீ தாத்தா ரூம்ல போய் படுத்துக்கோ மீனு. ரொம்ப சோர்ந்துட்ட” என்றார் வெங்கடேசன் பரிவுடன்.
“இல்லப்பா. அவுங்க முடிக்கட்டும்” என்றவள் சிறிது தண்ணீர் மட்டும் அருந்திக் கொண்டாள். மனம் கணவனிடம் சென்று நின்றது.
காலையில் பரிசோதனை தொடங்கிய பின்னே அலைபேசிகளை அணைத்து வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியதும் அவசர அவசரமாக கணவனுக்கு குறுஞ்செய்தியில் விஷயத்தை சொன்னவள் வர தாமதமாகும் என்றும் கூறி இருந்தாள்.
அதனையும் கவனித்த ஒரு அதிகாரி அவள் என்ன குறுஞ்செய்தி அனுப்பினாள்.. அதுவும் யாருக்கு என எல்லாவற்றையும் செக் செய்த பின்னர் தான் விட்டார்.
இதோ இரவு பத்தை தாண்டி இருக்க ஒரு சிறு துறும்பில் கூட பொய்யான முத்திரை இருந்த எந்த நகைகளும் கிடைக்காமல் வந்திருந்த அதிகாரிகள் “சாரி சார். எல்லாமே பியூர் கோல்ட் ஜ்வெல்ஸ்! ஆல் வெரிஃபைட்” என்று விட,
“பிராப்பரா டேக்ஸ் பே பண்ணி ஒழுங்கா நியாயமா மனசாட்சியோட தான் ஜ்வெல்ஸ் சேல்ஸ் பண்றோம். செய்கூலி சேதாரம் கூட அப்படி தான். இருந்தும் யாரோ கம்ப்ளைன்ட் கொடுத்து அத வச்சு ரெயிட்?” என்று தென்றல் மீனா அவர்களை நோக்கி கேட்க,
“சாரி மேடம். இட்ஸ் அவர் டியூட்டி” என்றனர் சங்கடத்துடன்.
“ஓகே. செக் பண்ணி முடிச்சாச்சு தானே. நீங்க சீஸ் பண்ணி கொண்டு போற அளவுக்கு கூட இங்க எதுவும் இருக்காது! ரைட்!” என்றவள் கேட்டதும் தலை அசைத்தவர்கள் மீண்டும் மன்னிப்பை கோரி விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
அவர்கள் வெளியேறும் போது தான் ஷட்டரை திறந்தனர். அவ்வளவு நேரமும் வெளிக் காற்று கூட இல்லை!
பெரு மூச்சுடன் ஊழியர்களை ஒரு பார்வை பார்த்தவள் சூப்பர்வைசர்களுடன் சிலரை மட்டும் இருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை கிளம்பும் படி பணித்து விட்டு முருகேசனிடம் “எல்லாத்தையும் வெயிட் செக் பண்ணி லாக்கர்ல வச்சிடுங்க முருகேசன்” என்று இதர வேலைகளையும் கூறி விட்டு அறைக்குள் வந்தவள் அலைபேசியை உயிர்ப்பித்தாள்.
கணவனிடம் இருந்து அரை மணி நேரத்திற்கு முன்னர் இரண்டு குறுஞ்செய்திகள் வந்திருந்தது.
புன்னகையுடன் அவனுக்கு அழைக்க “சொல்லுடா தென்றல். எல்லாம் ஓகே தான?” என்றவன் குரலைக் கேட்டதும் தான் புத்துணர்ச்சி வந்தது அவளிடம்.
“நான் வெளில தான் வெயிட் பண்றேன் தென்றல்” என்றான் அருண்மொழி சிரிப்புடன்.
கண்களை விரித்தவள் “எப்ப வந்தீங்க?” என்று கேட்டு விட்டு “உள்ள வாங்க மொழி” என்றபடி அழைப்பை துண்டித்தவள் கணவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
எல்லோரும் அவனை புன்னகையுடன் வரவேற்று அன்று நடந்த நிகழ்வை குறித்து பேசிக் கொண்டிருக்க முருகேசன் லாக்கர் சாவிகளை கொண்டு வந்து கொடுத்ததும் எல்லோரும் கிளம்பினர்.
“நீங்களே ட்ரைவ் பண்ணுங்க மொழி” என்றவள் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொள்ள “டயர்ட் ஆகிட்டடா தென்றல்” என்றவன் காரைக் கிளப்ப “வீட்டுக்கு போய் ஹாட் பேத் எடுத்துட்டு தூங்கனும் மொழி. ரொம்ப டயர்ட்” என்றவள் சொன்னது போலவே வந்ததும் உணவைக் கூட உண்ணாமல் “ஜுஸ் போதும் மொழி. ரொம்ப லேட் ஆச்சு” என்று குளித்து வந்ததும் பழச்சாறினை அருந்தி விட்டு உறங்கினாள்.
மறு நாளும் சோர்வு நீங்காமல் கடைக்கு வரவில்லை என தந்தைக்கு அழைத்து கூறியவள் அவர் பதறியதும் “ஜஸ்ட் டயர்ட் ப்பா. நேத்து ஃபுல்லா உட்கார்ந்தே இருந்தது.. ஒரு மாதிரி இருக்கு. நாளைக்கு வரேன்” என்றதும் வெங்கடேசன் சமாதானம் அடைந்து அழைப்பை துண்டித்தார்.
தொடர்ந்து வந்த நாட்களிலும் அவளிடம் ஒரு வித சோர்வை கண்டவன் மனைவியை இன்னும் நன்றாக கவனித்தான்.
அன்றும் காலையில் எட்டு மணியாகியும் இன்னும் எழும்பாமல் இருந்தவளை கண்டு புருவச் சுழிப்புடன் மனைவியைப் பார்த்தான். அவளின் மாற்றத்தை அவள் உணராத போதிலும் மொழி உணர்ந்திருந்தான்!
எதற்கும் உறுதியாக நம்ப முடியாமல் அவளின் கப்போர்டை திறந்து பார்த்தான். கடந்து இரண்டு மாதங்களாக அவள் உபயோகிக்காத நேப்கின் கவர்கள் இருந்தன. மனதின் துடிப்பு சொல்லொண்ணா உணர்வில் இரட்டிப்பாகி இருந்தது.
மெய்யாக இருக்க வேண்டும் என்றும் கனவாகி விடக் கூடாதே என்னும் ஓர் தவிப்பும் துடிப்பும்!
“தென்றல்….” என்றவன் கரகரத்த குரலில் தனக்குள்ளேயே கூறிக் கொள்ள நெஞ்சம் விம்மித் தணிந்தது. வேக மூச்சுக்கள் வேகமாய் வெளியேற கப்போர்டை சாற்றி விட்டு உறங்கும் மனைவியை ஒரு பார்வை பார்த்தான்.
அவளுக்குள் நிகழ்ந்த மாற்றங்களை எதையும் கண்டறியாமல் நிர்மலமாய் நிம்மதியாய் ஒரு உறக்கத்தில் அவனின் தென்றல்!
“மார்னிங் சிக்நஸ்” என்று மெல்ல முணுமுணுத்தன அந்த மகப்பேறு மருத்துவனின் இதழ்கள்.
கடந்த நான்கு மாதங்களாகவே கடைக்கு செல்லத் துவங்கியதிலிருந்து தென்றல் மீனாவிடம் முன்னர் போன்ற அழுத்தமோ கவலையோ இல்லை! சதாபிஷேகத்தில் நிகழ்ந்த நிகழ்வை மீண்டும் எண்ணிப் பார்க்க அவளுக்கு நேரம் இல்லை என்பது தான் மெய்யாகும்!
கடையில் அத்தனை நாட்கள் வராமல் இருந்தவள் வந்ததும் ஸ்வர்ணம் மாளிகையில் மீண்டும் தென்றல் மீனாவின் ஆளுகை தொடர்ந்தது.
அவளுக்கான வேலைகள் வரிசையாக இருந்தன. மற்ற நேரங்களில் தாத்தா அப்பா அண்ணன்கள் என எல்லோரும் அவளை பார்த்துக் கொள்ளவென அருகிலேயே இருக்க இல்லம் வந்ததும் அவளின் மொழியுடன் இருக்கும் பொழுதுகள் என அவளை வேறு சிந்தனைகள் ஆட்கொள்ளவில்லை.
சொல்லப் போனால் அவளின் மாதவிடாய் வராததைக் கூட அவள் கவனத்தில் கொண்டிருக்கவில்லை. புன்னகை விரிந்தது அருண்மொழிக்கு.
அவளின் முகத்தில் தெரிந்த புதுப் பொழிவும் உடல் எடையில் தெரிந்த மாற்றமும் என மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக அவதானித்தவனின் நெஞ்சில் புத்தம் புதிய நேசத் துளிகளின் ஓசை மலர்ந்தது.
மெல்ல அவளை நெருங்கி அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொள்ள அந்த அசைவுகளில் விழித்து விட்டாள் தென்றல்.
முயன்று கண்களை பிரித்தவள் கணவன் தன் கையை எடுத்து கன்னத்தில் வைத்திருப்பதை கண்டு மெல்ல புன்னகைத்தாள்.
எழுந்து அமரப் பார்த்தவள் லேசாக தலை சுற்றுவது போலிருந்ததில் அவளை அணைவாகப் பிடித்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அருண்மொழி.
மீண்டும் சுகமாய் கண்களை மூடிக் கொண்டவள் “தூக்கம் தூக்கமா வருது மொழி” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்றவன் குரல் மெல்ல மிக மெல்ல வந்ததில் கணவனின் புறம் திரும்பியவள் அவன் முகம் வெகுவாக நெகிழ்ந்திருப்பதை கண்டு “என்ன ஆச்சு மொழி?” என்று புன்னகை நீங்காமல் கேட்க,
“ஹ்ம்ம்.. சொல்றேன்டா” என்றவன் சொன்ன விதம் அவளை புருவம் சுருக்க வைத்தது.
அப்போது தான் நேரத்தை பார்த்தவள் “மணி எட்டாக போகுதா? இவ்வளவு நேரமாவா தூங்கினேன்” என்று வேறு அலற சின்ன சிரிப்பு அவனிடம்.
“என்ன மொழி சிரிக்கிறீங்க?” என்று தென்றல் முகத்தை சுருக்க அவளின் வலது கையை தன் கைக்குள் கொண்டு வந்தவன் நாடித் துடிப்பை உணர தென்றல் சிரித்தபடி அவனை பார்த்தாலும் அவன் செய்கையை பெரிதாய் எடுக்கவில்லை.
கணவன் கைப் பற்றியது போலவே அவளுக்குத் தோன்ற மெல்லிய சிரிப்புடன் திரும்பி அவன் மேல் சாய்ந்து அமர்ந்தவள் அவன் கைகளை தன்னை சுற்றி போட்டுக் கொண்டாள்.
மெல்ல அவளின் கரங்களில் இருந்த கைகள் மனைவியின் மணி வயிற்றை நோக்கி நகர “மொழி… கிளம்ப…” என்றவள் வார்த்தைகள் கணவன் கொடுத்த அழுத்தத்தில் அப்படியே உறைந்தன.
வலது கையால் மனைவியின் வயிற்றில் மெல்லிய அழுத்தம் கொடுத்தவன் மனைவியின் காதிற்குள் “நம்ம ரெண்டு பேரோட உலகத்தில இன்னொரு குட்டி உயிர் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன் தென்றல்” என்றதும் ஆனந்தத் திகைப்பு நீங்காமல் அந்த நொடியை உள்வாங்கினாள்.
இதயத்தின் ‘லப் டப்’ சத்தம் அவளுக்கே கேட்டது! கண்கள் பெரிதாய் விரிய அவர்களின் உலகமும் விரிவடைய போகிறது என்று கணவன் சொன்னதை முழுதாய் உள்வாங்கி அவன் அழுத்தி வைத்திருந்த கரத்தின் மேல் தனது நடுங்கும் கரத்தை வைத்தவளுக்கு கண்ணீர் கோடாய் கன்னத்தில் இறங்கியது.
“நிஜமாவா மொழி” என்று வேக வேகமாக சிந்தித்தவளுக்கு அப்போது தான் கடந்து இரண்டு மாதங்களாக தனது மாதாந்திர சுழற்சி வராமல் இருப்பதே உரைத்தது. அதுவும் இன்றைய தேதியை வைத்து கணக்குப் பார்க்க இந்த மாதமும் அவளுக்கு மாதாந்திர சுழற்சி வந்து முடிந்திருக்க வேண்டும்! ஆனால் வரவில்லையே!
விக்கித்து போனவள் கணவனை திரும்பிப் பார்க்க அவள் நெற்றியில் முட்டியவன் இன்னுமே விரல்களால் அழுத்தம் கொடுத்து “ஐ கேன் ஃபீல் அவர் பேபி தென்றல்” என்றதும்,
“மொழி” என்றவளுக்கு என்ன சொல்வதென்றே புரியாத சந்தோஷத் திகைப்பு! வார்த்தைகள் சொல்லாத சந்தோஷத்தினை அவளின் கண்கள் சொல்லி விட கலங்கிய கண்கள் கண்டு அதை துடைத்து விட்டவன் “என்னடா?” என்று கேட்க,
“என்ன பயம்? எதுக்கு பயம்? உன் மொழி இருக்கேன் தானே” என்றவன் எழுந்து சென்று தன்னிடம் இருந்த கிட்டை அவளிடம் கொடுத்து “போய் செக் பண்ணிட்டு வாடா” என்றதும் அதனை இறுக பற்றிக் கொண்டவள் அலைபாயும் கண்களுடன் அவனை நோக்கினாள்.
அவளின் முகமே எந்த அளவிற்குப் பயந்து பதட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறாள் என்பதை உணர்த்த மனைவியை இதமாக அணைத்துக் கொண்டவன் “டென்ஷன் ஆக வேண்டாம் தென்றல். ரிலாக்ஸ்” என்றவன் சில நொடிகள் அவளின் தலையை வருடிக் கொடுத்தபடி மௌனமாக இருக்க,
“போய் பார்த்திட்டு வரேன்” என்றவள் எழுந்து ஓய்வறைக்குள் சென்றாள்.
பத்து நிமிடங்கள் மேலாக அவள் வராமல் இருக்கவும் பதட்டம் கூடியது மொழிக்கு.
“தென்றல்” என்று அழைத்துக் பதிலில்லாமல் போக பயந்தவன் யோசிக்காமல் லேசாக மூடி இருந்த கதவை திறந்து உள்ளே வர அங்கே மனைவி கையில் இருந்த கிட்டை பார்த்து உதட்டில் புன்னகையும் கண்ணில் கண்ணீருமாக நிற்பதை கண்டு அவளை நெருங்க கணவனின் கைகளில் அதனை கொடுத்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு “வீ ஆர் ப்ரெக்னன்ட் மொழி” என்றாள் ஆனந்தமாய்..
இரண்டு சிவப்புக் கோடுகள் இருப்பதை கண்டவனின் கண்களும் கலங்கி இருந்தன.
“தென்றல்..” என்றவன் தேகத்தில் புதிதாய் ஒரு நடுக்கம். தன்னுள் இருந்து உதிர்க்கப் போகும் ஜீவன்! அதுவும் அவன் ஜீவனை ஆகர்ஷித்தவள் கருவில்!
தன் முன் வாழ்க்கையை உறவின்றி அமைத்த கடவுள் இப்போது உறவாக.. உறவுக்குள் உயிராக.. தந்திருக்கும் வரத்தை கண்டு நெகிழ்ந்தது நெஞ்சம்! இருவருமே வெகுவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தனர்.
அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கட்டிலில் அவளை அமர வைக்க கணவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள் “நீங்க எப்படி கண்டு பிடிச்சீங்க மொழி? எனக்கே தெரியல. பீரியட்ஸ் வராததை கூட கவனிக்கல பாருங்களேன்” என்று வெட்கத்துடன் அசடு வழிய சொன்னாள் தென்றல் மீனா.
“அந்த அளவு நீ ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருந்திருக்கடா தென்றல்” என்றவன் அவளின் முகம் நிமிர்த்தி ஆட்காட்டி விரலால் புருவம் கண் இமை என வருடிக் கொண்டே “கொஞ்ச நாளாவே என்னோட தென்றல் ஃபேஸ்ல ஒரு தனி க்லோ! அண்ட் மார்னிங் நீ எழுந்துக்க முடியாம இழுத்து போர்த்திட்டு தூங்குறதை பார்த்து கொஞ்சம் டவுட் இருந்தது. இன்னைக்கு உனக்கு பீரியட்ஸ் முடிஞ்சு இருக்க வேண்டியது. ஆனா இல்ல. ஆல்ரெடி ரெண்டு மாசம் நீ பீரியட்ஸ் ஆகல” என்றவன் சொல்லிக் கொண்டே போக கேட்டுக் கொண்டே இருந்தவள் சிரிப்புடன் அவனைப் பார்த்து “டாக்டர் எல்லாத்தையும் கவனிச்சு இருக்கீங்க” என்றதும் மனைவியின் நெற்றி முட்டி ஆமோதிப்பாய் தலை அசைத்தவன்,
“நான் ஜி. ஹச். லீவ் சொல்லிடுறேன்டா. அனும்மா ஹாஸ்பிட்டல் போய் செக் பண்ணிட்டு வந்திடலாம்” என்றவன்,
“நீங்க தானே பண்ணுவீங்க மொழி” என்று கண்கள் விரிய ஆர்வத்துடன் கேட்டவளின் கன்னங்களை ஏந்திக் கொண்டவன் “தென்றலுக்கு மொழி தான் பண்ணனுமா?” என்று கேட்டு அவள் மேலும் கீழும் வேக வேகமாக தலை அசைத்ததில் புன்னகைத்து “சரி பண்ணிடலாம்” என்றவன் மனைவியின் இதழ்களில் ஆசையுடன் அழுத்தி முத்தமிட்டான்.