அரை மணி நேரத்தில் இருவரும் கிளம்பி மதர் கேர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.
உள்ளே வந்ததும் அனுஜாவின் அறைக்கு வந்தவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் அனுஜா.
“என்னடா.. மார்னிங்கே இங்க? அதுவும் மீனாவோட” என்றவர் இருவரும் முகத்தில் இருந்த அளவில்லா ஆனந்தத்தையும் தென்றல் மீனாவின் வெட்கத்தை வைத்தே விஷயத்தை கணித்து விட இன்னுமே மலர்ந்து விட்டது அவரின் முகம்!
எழுந்து வந்து தென்றலை அணைத்துக் கொண்டவர் “ரொம்ப சந்தோஷம்டா மீனா” என்றதும் கண்களை விரித்தவள்,
“நாங்க இன்னும் எதுவுமே சொல்லவே இல்லையே அத்தை…” என்று சிரித்ததில் அவள் கன்னம் வழித்து நெட்டி முறித்தவர் “என் மருமக முகம் மின்னுறதுலயே விஷயம் தெரியுதே” என்றதும் முகம் சிவந்து போனது அவளுக்கு.
மகனை அணைத்துக் கொண்டு அவனுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தவர் “எப்படா செக் பண்ணீங்க? கிட்ல பாத்தாச்சா?” என்று அவனிடம் கேட்டதும் ஆம் என்று தலை அசைத்தவன்,
“த்ரீ மந்த்ஸ் அனும்மா” என்றதும் மெல்லிய திகைப்புடன் இருவரையும் பார்த்தவர், “மூணு மாசம் வரைக்குமா கவனிக்காம இருந்தீங்க?” என்று கேட்க,
“எனக்கு இன்னைக்கும் தெரியல அத்த. மொழி தான் சொன்னார்” என்றாள் சங்கடமும் சந்தோஷமுமாக.
“அடக் கடவுளே..” என்ற அனுஜா அருண்மொழியிடம் “ஸ்கேன் பண்ணிடலாம்டா” என்றதும் சரி என்று தலை அசைத்தான்.
மூவரும் ஸ்கேன் செய்யும் அறைக்குள் வந்ததும் அனுஜா அவள் அணிந்திருந்த சுடிதார் உடையை தளர்த்தும் படி கூறி விட்டு அவளை படுக்க சொல்ல அருண்மொழி ஸ்கேன் செய்யும் இயந்திரத்தை ஆன் செய்து அனைத்தையும் சரி பார்த்தான்.
அனுஜா அவனிடம் ஸ்கேன் செய்யும் மருத்துவ உபகரணத்தை கொடுத்து “நீயே பண்றியா அருண்?” என்று சிரிப்புடன் கேட்க, மனைவியின் ஆசை அது தான் என்பதால் அவன் ஆமோதிப்பாய் தலை அசைத்தான்.
தென்றலின் முகத்தில் அத்தனை வெளிச்சம்! அந்த மானிட்டரையே விடாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இதுல தான் பேபி தெரியுமா மொழி?” என்று கேட்டவள் “ஹார்ட் பீட்டும் கேட்குமா?” என்று கேட்கும் போதே குரல் நெகிழ்ந்து விட்டது.
அனுஜா அவளை புன்னகையுடன் பார்த்து “எல்லாம் தெரியும். காட்டும். நீ நேரா படு” என்றவர் அருண்மொழியிடம் பார்வையை திருப்பி “ஸ்டார்ட் பண்ணுடா” என்றதும் மருத்துவ உபகரணக்தை கொண்டு மனைவியின் வயிற்றில் வைத்து இங்கும் அங்குமாக நகர்த்தும் போதே அவன் கண்கள் திரைக்கும் மனைவிக்கும் பாய்ந்து கொண்டே இருக்க தென்றல் மீனாவும் அதே நிலையில் தான் இருந்தாள்.
“க்கும்… என் பையன் இப்ப ஹஸ்பண்ட் அண்ட் அப்பா ஃபார்ம்ல இருக்கான் மீனா. நானே பண்றேன்! அஸ் அ கப்பில் நீங்க இருங்க” என்றதும் அருண்மொழி மனைவியை பார்க்க,
“நீங்க என் பக்கத்துல வாங்க மொழி” என்றதும் அவனும் மறுக்காமல் எழுந்து கொண்டான்.
அவனால் திரையிலும் முழுமையாய் பார்வையை பதிக்க முடியவில்லை. மனைவியின் முகத்திலும் பார்வையை வைக்க முடியவில்லை.
இரு புறமும் அவனின் குழந்தையும் மனைவியும் மாறி மாறி அவனை இழுக்க அவன் சதிராடியதில் அனுஜா தானே செய்வதாக கூறியதும் புன்னகையுடன் எழுந்து மனைவியின் அருகே சென்று நின்று கொண்டவன் அவளின் கையினை பற்றிக் கொண்டான்.
அனுஜா ஸ்கேன் செய்யத் துவங்க தென்றல் மொழியின் பார்வை முழுவதும் திரையில் தான். திரையில் கருவின் உருவம் வந்ததும் அனுஜா கூர்மையுடன் அதனை பார்த்து விட்டு சட்டென்று திரும்பி அருண்மொழியைப் பார்த்தார்.
அவனும் திகைப்பினோடு தான் பார்வையிட்டு கொண்டிருந்தான். கண்களில் மின்னலின் ஒளி!
இருவரும் இன்ப அதிர்வுடன் ஒருவரை ஒருவர் நோக்கி “அருண்..” “அனும்மா…” என ஒரே நேரத்தில் அழைத்திருக்க தென்றல் மீனாவிற்கு என்ன ஆகியது என்று புரியவில்லை.
“என்ன அத்தை? என்ன ஆச்சு?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டவள் கணவனின் புறம் திரும்பி “என்ன மொழி? ஏன் ரெண்டு பேரும் இப்படி ஷாக் ஆகுறீங்க?” என்று என்னவோ என கலக்கத்துடன் கேட்க,
“தென்றல்…” என்றவன் நெகிழ்ந்து மலர்ந்து உட்ச பட்ச சந்தோஷத்துடன் மனைவியின் நெற்றியில் இதழ் ஒற்ற கணவன் செய்கையில் அவள் அனுஜாவை பார்க்க,
புன்னகையுடன் திரையை சுட்டிக் காட்டியவர் அருணிடம் நீயே சொல்லு என்பது போல் கண்ணை காண்பிக்க, மனைவியின் விரல்களை பற்றிக் கொண்டு சொல்ல வருவதற்கு முன்னர் தென்றல் மீனா மெல்லிய படபடப்போடு “பேபி ஓகே தானே மொழி? சொல்லுங்களேன்…” என்று பரிதவிப்பாய் கேட்டதும்,
அவளின் முகத்தை கையில் ஏந்திக் கொண்டவன் “பேபீஸ் ஆர் ஃபைன் தென்றல்” என்றதும் ஆசுவாசமாய் பெரு மூச்சினை விட்டவள் அப்போது தான் கணவன் சொன்ன கூற்றினை சரியாக கவனித்தாள்!
“மொழி…” என்றவள் கண்கள் கலங்க ஆனந்த பேரதிர்வுடன் கணவனின் கை பற்ற, அவள் பற்றிய கையினை விடாமல் திரையில் இருக்கும் இரண்டு கருவின் உருவங்களை இடது கை ஆட்காட்டி விரலால் தொட்டுக் காட்டி “நம்ம குட்டி குட்டீஸ்” என்றான் அருண்மொழி விண்ணில் பறக்கும் உணர்வோடு!
“ரெண்டு பேரோட சந்தோஷத்தை பார்க்க கண் போதாம இருக்கு” என்ற அனுஜா,
“ஹார்ட் பீட் பாத்திடுடா” என்றவர் “நீங்க வாங்க. நான் முன்னாடி போறேன்” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றார்.
அவர் சென்றதும் மனைவியை காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக அணைத்துக் கொண்டான் அருண்மொழி!
அவளின் மென்மையானவனிடம் இருந்து முதல் முறையாக வலிமை பொருந்திய அணைப்பு! அதுவே அவனின் உள்ளத்தை பற்றி சொல்லி விட “மொழி…” என்றவளுக்கும் வார்த்தைகள் வரவில்லை.
“நம்ம பேபீஸ்.. குட்டி குட்டீஸ்…” என்று கணவன் சொன்னது போலவே சொன்னவள் அவள் இதழில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தாள்.
சிகைக்குள் நுழைந்த கரம் ஆதூரமாய் வருடியதில் தன் மார்பில் பொங்கிப் பெருகும் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தான் அருண்மொழி.
அந்த பொக்கிஷத் தருணங்களை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை இருவராலும்!
“ஹார்ட் பீட் கேக்கணும் மொழி?”
“இதோ.. கேட்கலாம்” என்றவனின் இதயத் துடிப்பின் தாளங்கள் சந்தோஷத்தில் கூடிக் கொண்டே போனது.
அந்த அல்ட்ரா சவுண்ட்டில் குழந்தைகளின் இருதயத் துடிப்பை கேட்கும் போது கண்கள் பனித்து விட்டன தென்றல் மீனாவிற்கு.
அந்த இதமான இதயத் துடிப்பின் சங்கீதங்கள் சந்தோஷ விதைகளை விதைக்க லப் டப் லப் டப் என வேகமாய் லயமாய் துடித்த அந்த பிஞ்சுகளின் உயிர்த் துடிப்பு சுகமாய் வருடியது தென்றல் மொழியை! நிறுத்தத் தோன்றாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர்.
“எத்தனையோ பாட்டு கேட்டிருப்பேன் தென்றல். ஆனா.. இந்த நிமிஷம் நம்ம பேபீஸ்சோட ஹார்ட் பீட் தான் த பெஸ்ட் மியூசிக் இன் த வேர்ல்ட்டா தென்றல்” என்றான் தழுதழுத்த குரலில்!
தன்னை விட கணவன் மிகவும் உணர்ச்சி வசமான தருணத்தில் இருக்கிறான் என்பதை புரிந்து அவனை அருகே வரச் சொல்லி அவன் கன்னம் வருடி “ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி” என்றாள் நிறைவான குரலில்!
“ஹ்ம்ம்..” என்றவன் “டிவின்ஸ்… நாட் ஈசிடா தென்றல்” என்று மருத்துவனாய் கூற, “என் மொழி இருக்கும் போது எல்லாம் ஈஸி தான்” என்றவள் அவனை அணைத்துக் கொண்டு அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
புன்னகை விரிந்தது அருண்மொழிக்கு. மிருதுவாக மணி வயிற்றை வருடிக் கொடுத்தவன் “நம்மளோட.. நமக்கான புது உறவு தென்றல்.. அதுவும் ட்வின்ஸ்… எப்படி சொல்லன்னு தெரியல..” என்றவன் மனைவியின் கழுத்து வளைவில் முகம் புதைத்து,
“அம்மாவும்.. யாழினியும் திரும்ப கிடைச்ச ஃபீல் தென்றல்” என்றான் கண்ணீருடன்.
“மொழி…” என்றவள் குரல் கலங்கிப் போனது.
சிறிது நொடிகளில் நிமிர்ந்தவன் “ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன்” என்றான் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.
மீண்டும் திரையை பார்த்தவள் குறும்பாக கணவனை பார்த்து “லிஸ்ட்ல மூணு குழந்தை வச்சிருந்தேன். ஃபர்ஸ்ட் ரெண்டு குழந்தை வந்தாச்சு. இன்னும் ஒன்னு தான்” என்று கண் சிமிட்டிச் சொல்ல பட்டென்று சிரித்து விட்டான் அருண்மொழி.
இருவரின் நெஞ்சங்களும் நிறைந்து தழும்பியது. புன்னகையுடன் அனுஜா அறைக்கு வந்தவர்கள் ரிப்போர்ட் வந்ததும் அதனை ஒரு முறை அனுஜா பார்த்து விட்டு அருணிடம் கொடுக்க அனைத்தும் திருப்தி!
இரு குழந்தைகளின் இதயத் துடிப்பு முதல் எல்லாமே சீராக இருக்க அருண்மொழி புன்னகையுடன் மனைவியை பார்த்தான்.
“ஏன் அனு அத்தை எனக்கு வாமிட் வரவே இல்ல? சந்தியா அண்ணிக்கு எல்லாம் வாமிட் வந்தது” என்று கேட்க,
“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிம்ப்டம்ஸ் காட்டும் மீனா. உனக்கு வாமிட் இல்லேன்னா வேற சிம்ப்டம்ஸ் காட்டி இருக்கும்” என்றவர் அவளை செல்லமாக முறைத்து,
“நீ தான் பீரியட்ஸ் ஸ்கிப் ஆனது கூட தெரியாம இருக்கியே…!” என்று கூற அருண்மொழி சிரித்து “மார்னிங் சிக்னஸ் இருந்தது அனும்மா” என்றான்.
தென்றல் கணவனை பார்க்க “ஹ்ம்ம்.. மார்னிங் எழுந்துக்க முடியாம இருந்தது தானே கொஞ்ச நாள்?” என்று புருவம் உயர்த்திக் கேட்டதும் ஆம் என்பது போல் விழிகள் விரிய தலை அசைத்தவள் அனுஜாவிடம்,
“இந்த நாலு மாசம்.. எப்படி சொல்ல அத்தை? ரொம்ப நார்மலா ஃபீல் பண்ணேன். எதுவும் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்கல. சந்தோஷமா இருந்தேன். அதனாலயோ என்னமோ.. நான் கவனிக்கவே இல்ல” என்றாள் தென்றல் மீனா.
அவள் சொன்னதில் அனுஜாவிற்கு புன்னகை கிளம்பியது. கணவரிடம் அழைத்து விஷயத்தை சொல்ல கிருஷ்ணமூர்த்தி இருவரையும் மனதார வாழ்த்தினார்.
மாதவனுக்கு அழைக்கப் போனவரை தடுத்தவன் “நான் கூப்பிடுறேன் அனும்மா அவனுக்கு” என்றதும் அனுஜா புன்னகையுடன் சரி என்று தலை அசைத்தார்.
அதற்குள் தென்றல் மீனாவிற்கு வெங்கடேசனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“அப்பா மொழி” என்றவள் அழைப்பை ஏற்றாள்.
“மீனு.. என்னடா? மணி பத்தாக போகுது. இன்னும் வரல நீ? உடம்பு முடியலையா? கொஞ்ச நாளாவே நீ சரி இல்லையே? என்னடா பண்ணுது?” என்று சிறு தவிப்புடன் அக்கறையுடன் அவர் கேட்டதும் ஏனோ கண்கள் நிறைந்து போனது அவளுக்கு.
அவர் தான் தன்னை முதல் முதலாக கைகளில் வாங்கியவர் என்று தந்தை சொல்லியே கேட்டிருக்கிறாள். இப்போது தன் குழந்தைகளை பற்றி சொன்னதும் என்ன கூறுவார்? என்று ஒரு வித குழந்தையின் ஆர்வம் அவளுக்குள் தொற்றிக் கொள்ள,
“அப்பா… நான் பிறந்ததும் என்னை நீங்க தானே முதல்ல கைல வாங்குனீங்க?” என்று அவள் தழுதழுத்த குரலில் கேட்க வெங்கடேசன் ஒரு நொடி மௌனமாகி விட்டார்.
இப்போது ஏன் மகள் இதனை கேட்கிறாள் என்று புரியா விட்டாலும் அவள் கேட்ட கேள்வி அவள் பிறந்த தினத்திற்கு அவரை இழுத்துச் செல்ல, இதழ்களில் மெல்லிய புன்னகை!
“ஆமாடா மீனு. அப்பா தான் என் குட்டித் தங்கத்தை முதல்ல வாங்கினேன். நீ அந்தக் குட்டி கண்ணை முழிச்சு முழிச்சு பார்த்த. உன் அப்பா ரொம்ப சந்தோஷமா கண்ணீரோட சிரிச்ச நாள் அன்னைக்கு தான்” என்றதும் தென்றலிடமும் அமைதி!
அவள் மொபைலை ஸ்பீக்கரில் போட்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த மொழி மற்றும் அனுஜாவின் முகத்தில் அழகான புன்னகை.
மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டவன், அடுத்துச் சொல்லும் படி கண்ணசைக்க சரி என்று தலை அசைத்தவள் “அப்பா…” என்றதும்,
“என்னடா? ஏன் இதைக் கேட்ட?” என்றார் வெங்கடேசன்.
“ஹ்ம்ம்… என்னைத் தூக்கின மாதிரி என் குழந்தைகளை தூக்குவீங்க தானே! ஒண்ணில்ல.. ரெண்டு கையும் வேணும்! ரெண்டு பேரக் குழந்தைங்க வரப் போறாங்க உங்களுக்கு” என்றதும் “மீனாம்மா” என்றவர் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனார்!
“ரொம்ப சந்தோஷம்டா தங்கம்! நான் சொன்னேன் தானே.. என் பொண்ணுக்கு கடவுள் கொடுக்க வேண்டியதை கொடுத்திடுவான்னு.. பாத்தியா.. உன்னை கொஞ்ச நாள் கவல பட வச்சதுக்கு ரெண்டு வரத்தை கொடுத்திருக்கான்…” என்று மகிழ்வுடன் சொன்னவர்,
“மனசு நிறைஞ்சு போச்சு மீனு. இப்ப தான் உன்னை கைல வாங்குன மாதிரி இருக்கு… இப்ப என் பொண்ணுக்கு குழந்தை…” என்றவர்,
தென்றல் மீனா வசுந்தராவிற்கு அழைத்துச் சொல்ல சந்தோஷம் தாளாமல் விம்மித் துடித்து விட்டார். கூடவே அக்காவின் நியாபகமும்!
“சந்தோஷமா இருக்கு மீனு” என்றவர் தன் வாழ்த்துக்களை மனதார தெரிவித்து விட்டு அலைபேசியை அழகம்மையிடம் கொடுத்தார்.
வீட்டினர் எல்லோருக்கும் விஷயம் அறிந்ததும் குறைவில்லா பெரு மகிழ்வு! ஆனந்தத்தில் திளைத்தனர்.
அடுத்து வந்த நாட்களில் வசுந்தராவும் விசாலாட்சியும் தென்றல் மீனாவுடன் வந்து தங்கிக் கொள்ள அழகம்மையும் பாதி நாட்கள் பேத்தியுடன் தான் இருந்தார்.
இரட்டை குழந்தைகள் என்பதால் கூடுதல் கவனிப்பு அவசியம் என்று அவளோடே இருந்தனர். கடைக்கு வருகிறேன் என்றாலும் “வீட்டில இருடி. கொஞ்ச நாளைக்கு கடை எல்லாம் மறந்திடு” என்று அழகம்மை கூறியதில் அவளும் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே கடைக்கு சென்று வருவாள்.
அதுவும் யாராவது அழைத்து செல்வார்கள்! அவள் காரினை செலுத்த வேண்டாம் என்று அருண்மொழி அறிவுறுத்தி இருந்தான்.
இரட்டை குழந்தைகள் என்பதால் அவளுக்கு எப்பொழுதையும் விட கூடுதலாக பசிக்க அளவுக்கு அதிகமாக உண்பது ஒரு மாதிரியாக இருந்ததில் கணவனிடம் “ஒவரா சாப்பிடுற மாதிரி இருக்கு மொழி? இது வரைக்கும் இப்படி எல்லாம் சாப்பிட்டது இல்ல. எட்டு இட்லி சாப்பிடுறேன். ரெண்டு மணி நேரத்துல அடுத்து பசிக்குது. வசும்மா அவ்வளவு ப்ரூட்ஸ் கொடுக்குறாங்க. அதை சாப்பிட்டாலும் அடுத்து பசிக்குது. ஒரு மாதிரி இருக்கு மொழி! ரொம்ப சாப்பிடுறேன்னு ஃபீல் ஆகுது” என்று சோர்வாய் சொன்ன மனைவியை கண்டு புன்னகைத்தவன்,
“நீ மட்டும் சாப்பிடல தென்றல். உள்ள நம்ம ரெண்டு குட்டீஸ் இருக்காங்களே? அவுங்களுக்கும் பசிக்கும். நீ மூணு உயிருக்காக சாப்பிடுறடா. உன்னால எவ்வளவு முடியுதோ அவ்வளவு சாப்பிடு. எதுவும் ஃபீல் பண்ண வேண்டாம்” என்றவன் தான் செய்து எடுத்து வந்த சூப்பினை நீட்ட அதைக் குடித்தவள்,
“எங்களுக்கு பத்தல மொழி. இன்னும் ஒரு பவுல் ப்ளீஸ்” என்று கண்கள் சுருக்கி கேட்ட அழகில் சொக்கிப் போனான் அருண்மொழி.
மீண்டும் ஒரு பவுல் எடுத்து வந்தவன் அவளுக்குக் கொடுத்து விட்டு அவள் குடித்து முடித்து “இப்ப தான் ஃபுல்” என்றவள் குனிந்து வயிற்றினை தடவிக் கொடுத்து,
“உங்க மொழிப்பா வச்சுக் கொடுத்த சூப் சூப்பரா இருந்ததா?” என்று கேட்க மனைவி குழந்தைகளிடம் பேசியதில் அப்படி ஒரு புன்னகை அவனிடம்.
அதுவும் அந்த ‘மொழிப்பா’ என்னும் அழைப்பு…. மனதை சொல்லொண்ணா உணர்வில் ஆழ்த்தியது.
மனைவியை அணைத்துக் கொண்டவன் அவள் கன்னங்களில் இதழ் ஒற்றி “என் தென்றல் இப்பவே மொழிப்பான்னு சொல்லிக் கொடுக்குறாளே…” என்றான் நெகிழ்ந்த குரலில்!
அவன் மார்பில் சாய வந்தவள் வயிறு இடித்ததில் உதடு பிதுக்கி தன் ஐந்து மாத வயிற்றை தொட்டுக் காண்பித்து “கட்டி பிடிக்க விடாம இடிக்கிறாங்க மொழி ரெண்டு பேரும்” என்றாள் பாவமாய்!
அட்டகாசமாய் சிரித்தவன் மனைவியோடு பிள்ளைகளையும் சேர்த்து தன் ஒட்டு மொத்த உலகத்தையும் கட்டிக் கொண்டான் தென்றலின் மொழி!!