அழகாபுரத்தில் இருக்கும் பத்மநாபனின் பூர்வீக இல்லம். வெங்கடேசனிற்கும் விசாலாட்சிக்கும் அறுபதாம் கல்யாணம் நிகழவிருக்க குடும்பத்தார் எல்லோரும் அழகாபுரம் வந்திருந்தனர்.
வீட்டின் வெளித் தோட்டத்தில்…
“அருள் நில்லுப்பா.. பாட்டியால உன் பின்னாடி ஓடி வர முடியல” என்று நான்கு வயது நிரம்பிய தென்றல் மொழியின் மகன் அருள் மெய்யப்பனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் வசுந்தரா!
“மெதுவா ஓடி வாங்க பாட்டி. நான் நிக்கிறேன்” என்றவன் ஓடுவதை விட்டு அந்த தோட்டத்தில் இருக்கும் மரத்தின் அடியே நின்று விட மெதுவாக மூச்சு வாங்கியபடி அவனை நெருங்கிய வசுந்தரா கின்னத்தில் இருந்த சாதத்தை அவனுக்கு ஒரு வாய் ஊட்ட வர மீண்டும் தொடங்கியது அருளின் ஓட்டம்!
“தம்பு..” என்று வசுந்தரா பாவமாய் அழைக்க கொஞ்ச தூரம் ஓடியவன் பாட்டி தம்பு என்று அழைத்ததில் நின்ற இடத்தில் இருந்தே சிரிக்க வசுந்தரா செல்லமாய் பேரனை முறைத்தார்!
இப்போதெல்லாம் வசுந்தராவிற்கு தென்றல் மீனாவின் பிள்ளைகள் தான் உலகம்!
மணி மணியாய் மூன்று பிள்ளைகள்! மூவருமே எல்லோருக்கும் செல்லம் தான்.
அதுவும் மூத்தவர்கள் இரட்டையர்கள் என்றால் வெங்கடே சனிற்கும் சரி மற்றவர்களுக்கும் சரி அத்தனை பிரியம்!
வசுந்தராவிற்கும் பேத்திகள் என்றாள் மிகவும் பிடிக்கும். அமைதியான தேன்மொழியும் சேட்டைக்கார தேன்யாழினியும் அவர்கள் வசுப்பாட்டியின் அன்பிற்கு அடிமைகள்!
அவர்களுக்கு அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்தவன் தான் அருள் மெய்யப்பன்! தென்றல் மொழியின் குறும்புக் கண்ணன்!
அவன் சாப்பிடாமல் போக்குக் காட்டுவதை கண்டு வசுந்தரா பேரனுடன் மல்லுக் கட்ட முடியாமல் நிற்க அங்கே வந்த தேன்மொழி தம்பி செய்யும் அலுச்சாட்டியத்தை கண்டு “அருள்..” என்று அதட்ட “தேனக்கா…” என்றபடி அவளிடம் ஓடியவன் அக்காவின் கைப் பற்றிக் கொள்ள,
“சாப்பிடாம இருக்கிறது என்ன பழக்கம்? பாட்டி பாவம். உன் பின்னாடி ஓடி ஓடி டயர்ட் ஆகிட்டாங்க பாரு! ஒழுங்கா சாப்பிடு” என்று அழுத்தமாக சொல்ல மறுக்காமல் தலை அசைத்தவன் வசுந்தராவிடம் சென்று “சாரி பாட்டி” என்றபடி அந்த மரத்தின் கீழேயே அமர்ந்து கொள்ள வசுந்தாவும் சிரித்தபடி அமர்ந்து அவனுக்கு உணவினை ஊட்டி முடித்தார்.
அவர் ஊட்டி முடிக்கவும் வீட்டிற்குள் கார் நுழையவும் சரியாக இருந்தது. “அப்பா வந்தாச்சு….” என்றவன் உண்ட வாயுடன் காரை நோக்கி ஓட அவனைத் தொடர்ந்து ஒன்பது வயது தேன்மொழியும் ஓடினாள்!
தேன்யாழினி காலையிலிருந்து விளையாண்ட களைப்பில் உறங்கி இருந்தாள். இல்லை என்றால் அவள் தான் முதல் ஆளாக தந்தையிடம் ஓடி வந்திருப்பாள் என்பது குறிப்பிடத்தக்கது!
அனுஜாவுடன் ஒரு சர்வ தேசக் கலந்தாய்விற்காக ஆஸ்திரேலியா வரை சென்றிருந்தான் அருண்மொழி! பதினைந்து நாட்கள் கழித்து இன்று தான் வருகிறான்!
நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்திருந்தவன் அங்கிருந்து கௌதமின் குடும்பத்துடன் காரில் பயணித்து அழகாபுரம் வந்திருக்கிறான்.
அவன் காரை விட்டிறங்கியதும் பிள்ளைகள் இருவரும் அவனைக் கட்டிக் கொள்ள “தேனம்மா…” என்று மகளை ஒரு கையால் அணைத்துக் கொண்டவன், “அப்பா.. தூக்குங்க” என்று அருள் சிணுங்கியதில் மகனை கையில் அள்ளிக் கொண்டு கன்னத்தில் முத்தம் வைத்தவன்,
“சாப்பிட்டு வாஷ் பண்ணலையா அருள்?” என்று தந்தை கேட்டதற்கு இல்லை என்று சிரிப்புடன் தலை அசைத்தவன் “உங்களைப் பாத்ததும் ஓடி வந்துட்டேன் ப்பா” என்றான் அருண்மொழியை கட்டிக் கொண்டு.
“சரி தூங்கட்டும். வாங்க உள்ள போகலாம்” என்று அவன் பிள்ளைகளுடன் நடக்க வசுந்தரா அருணை வரவேற்று அருளை அழைத்து அவன் வாய் துடைத்து விட பாட்டியின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் “சாதம் சூப்பர் பாட்டி” என்றபடி ஓடிப் போனான் உள்ளே.
அருண்மொழி வந்ததும் எல்லோரும் அவனை வரவேற்று பயணத்தை பற்றி விசாரித்ததும் எல்லோருக்கும் புன்னகையுடன் பதில் கூறியவன் கண்கள் மனைவியைத் தேட “அக்கா மாடில மாமா” என்றான் நவீன் கிண்டலுடன்.
சிரிப்புடன் தலை அசைத்தவன் மாடியில் இருக்கும் அறைக்கு வர கட்டிலில் மகள் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவன் அவளை நெருங்கி உச்சியில் இதழ் பதிக்க சின்னவள் அசைந்தாள் இல்லை.
நல்ல அசதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மனைவியை தேட.. குளியலறையில் இருந்து சப்தம் வந்ததும் புன்னகையுடன் பைகளை வைத்து விட்டு மனைவி வரக் காத்திருந்தான்.
தென்றல் மீனாவும் வெளியே வர கணவனைக் கண்டதும் கண்கள் விரிய புன்னகையுடன் “மொழி” என்று அவனை நெருங்கி இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்!
“எப்போ வந்தீங்க?” என்று உதடுகள் முணுமுணுக்க மனம் கணவனின் அருகாமையை வெகுவாய் அனுபவித்தது!
பின்னே பதினைந்து நாட்களாக அவனின் ஒற்றை அணைப்பிற்கு ஏங்கி போய் இருந்தாளே..
“இப்ப தான்டா..” என்றவன் குளித்து முடித்து பளிச்சென்று இருந்த மனைவியை கண்டு கண் சிமிட்டி “ஜில் ஜில் தென்றல்” என்று நமட்டுச் சிரிப்புடன் கூற “மொழி…” என்று இன்றும் மாறாத அதே முகச் சிவப்புடன் சிணுங்கினாள் தென்றல் மீனா!
அதற்கே அருண்மொழியின் உணர்வுகள் விழித்துக் கொண்டது. “தென்றல்…” என்றவன் மனைவி முகத்தை அவசரமாக கையில் ஏந்தி அழுத்தமாக இதழ்களை களவாடிக் கொண்டான்.
கணவனின் அருகாமை மயக்கம் தர அவளும் மகள் உறங்குவதை மறந்து கணவனோடு ஒன்ற சிறிது நொடிகள் பிரிவின் ஏக்கம் முத்த மயக்கத்துடன் வெளிப்பட்டது.
“இப்ப குளிச்சிட்டு வந்திருக்க தென்றல்? மதியான நேரம்?” என்று கேட்க அவன் மார்பில் சுகமாய் கண் மூடி சாய்ந்திருந்தவள் முறைப்புடன் நிமிர்ந்து “அதோ.. தூங்குறாளே.. எல்லாம் அவ பண்ண வேலை தான். தோப்புக்கு போய் விளையாடிட்டு வந்தவ போய் குளிக்காம இங்கேயும் ஆட்டம் போட்டு மண்ணோட வந்து என் மேலயும் விழுந்து வச்சுட்டா. அதான் அவ குளிச்சதும் நானும் குளிச்சிடலாமேன்னு குளிக்க போய்ட்டேன்” என்றவள்,
“கௌதமண்ணா அண்ணி எல்லாரும் வந்தாச்சா?” என்று விசாரிக்க, “வந்தாச்சுடா.. நீ போய் பாத்திட்டு வா. நான் ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வரேன்” என்றவன் மனைவி நகர எத்தனித்ததும் அவளின் முழங்கை பற்றி தடுத்தவன், அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து முகம் முழுவதும் நிதானமாய் முத்தமிட்டு அவளை விடுவிக்க “அப்ப்பா…..” என்ற சப்தத்தில் இருவரும் வேகத்துடன் விலகினர்.
“யாழி…” என்றவன் மகளை நெருங்க தாவி வந்து தந்தையை அணைத்துக் கொண்டவள் “எப்ப மொழிப்பா வந்தீங்க? ஏன் யாழியை பாக்க வரல” என்று சிணுங்க,
“வந்தேனே.. யாழிம்மா தூங்கிட்டு இருந்தீங்களா.. அதான் அப்பா எழுப்பல” என்றவன் மனைவியை பார்க்க அவள் இருவரையும் பார்த்து புன்னகையுடன் இரு பக்கமும் தலை அசைத்து விட்டு கீழே சென்றாள்.
மறு நாள் காலை வெங்கடேசன் மற்றும் விசாலாட்சியின் மணி விழா இனிதே முடிய இரண்டு நாட்கள் அங்கே தங்கி விட்டு எல்லோரும் சென்னை திரும்பினார்கள்.
இல்லம் வந்ததும் தேன்யாழினி கடற்கரை செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பிக்க “ரெஸ்ட் எடுடி. நாளைக்கு ஈவ்னிங் போகலாம்” என்று தென்றல் கூறியதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை!
“நோ ம்மா. அப்பா இல்லாம டூ வீக்ஸ் நம்ம பீச் போகவே இல்ல. இன்னைக்கு போயே ஆகனும். அதான் மார்னிங்ல இருந்து ரெஸ்ட் எடுத்தோமே. அது போதாதா?” என்று விவரமாய் பேச,
தேன்மொழி தன்னைப் போலவே இருந்து கொண்டு இந்தப் போடு போடும் தங்கையை ஆயாசத்துடன் பார்த்தவள் அன்னையிடம் “போகலாம் ம்மா. இல்லேன்னா யாழி நைட் எல்லாம் அழுவா” என்று தங்கையை பற்றி அறிந்தவளாக சொல்ல தென்றல் மீனா கணவனைப் பார்க்க கண்களால் மனைவியிடம் மகளுக்காக கெஞ்சினான் அவன்!
“கிளம்புங்க போகலாம்..” என்றதும் அந்த மாலை வேளையில் ஐவரும் கடற்கரைக்கு வந்திருந்தனர்.
பிள்ளைகள் மணலில் விளையாடத் துவங்க தென்றலும் மொழியும் அருகில் அமர்ந்து அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க “அலைல கால் நனைக்கலாம் மொழி” என்றதும் தேன்மொழி பெற்றோரை பார்த்து,
“நீங்க போங்க ப்பா. நான் யாழி, தம்பி கூட இருக்கேன்” என்றதும் மகளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் மனைவியோடு அலையில் சென்று நின்றான்.
மனம் முழுவதும் சந்தோஷம் தான்! இத்தனை ஆண்டு கால காதல் கூடிய திருமண வாழ்வில் அவர்களுக்குள் அன்பும் அரவணைப்பும் செழித்தோங்கி இருக்க இல்லறத்தில் இன்பத்திற்கு குறைவேது!!!!
முதல் முறையாக தென்றல் ‘மொழி’ என்று மொழிந்தது இதே கடற்கரையில் தான்! அவர்களின் காதலின் ஆழத்தை உணர்ந்ததும் இந்த ஆழியின் முன்பு தான்!
பிள்ளைகள் வந்த பின்னரும் கடற்கரை வருவதை அவர்கள் தொடர வாரத்தில் ஓர் நாள் கடற்கரை வருவது அவர்களின் வழமையாகிப் போய் இருந்தது.
அதுவும் தேன்யாழினி கடல் என்றால் முதல் ஆளாக நிற்பாள். இப்போதும் தேன்மொழி மற்றும் தம்பியுடன் மணலில் ஒரு வீட்டினை கட்டி முடித்தவள் தாய் தந்தையரை நிமிர்ந்து பார்க்க இருவரும் தோளில் கையிட்டு கடலலையை ரசித்து எதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பதை கண்டவள்,
“தேனு….. நான் அப்பா அம்மா கிட்ட போகப் போறேன்” என்றவள் எழுந்து குடுகுடுவென்று ஓடி இருக்க “யாழி…” என்று தேன்மொழி கத்தி அழைத்ததெல்லாம் அவளை நிறுத்தவில்லை.
மகள் அழைத்ததில் தென்றல் மொழி இவர்கள் புறம் திரும்பி இருக்க யாழினி ஓடி வருவதைக் கண்டு புன்னகையுடன் அருண்மொழி அவளை அள்ளிக் கொள்ள மற்ற இருவரையும் பார்த்து தங்களுடன் வரும் படி கை அசைத்தான்.
தேன்மொழியும் அருளும் அவர்களுடன் இணைந்து கொள்ள ஐவரும் கை கோர்த்துக் கொண்டு அலையில் கால் நனைத்தனர். எழும்பி வந்த அலையொன்று இவர்களின் பாதங்களை முத்தமிட்டுச் சென்றது!
சூரியன் மெல்ல மெல்ல கடலுக்குள் சென்று மறைந்திருக்க இரவிற்கு ஒளியூட்டும் நிலவின் வருகை பிரகாசத்துடன் வானில் பரவிய இருளில் தெரிய, ஒளிமயமான தருணங்களாய் இருந்தது அந்த கடல் பொழுது!
கடலும் அலையுமாய் அலையும் நுறையுமாய் நுறையும் மணலுமாய் ஒன்றை ஒன்று தழுவி ஈடில்லா நேசத்துடன் தங்கள் கூடினை விட்டுப் பிரியாத பறவைகளாய் அவர்களின் உலகம் வர்ணங்கள் கொண்ட வானவில்லென மிளிர்ந்தது!
புன்னகை எனும் வரத்தோடு அன்பானதொரு வாழ்க்கை அவர்களை ஆகர்ஷித்திருக்க நற்காதலுடன் நடைபோடும் வாழ்வு என்றும் வசந்தம் தான்!
பூந்தென்றாலாய் தன் வாழ்வில் வந்த தன் தென்றலும் தென்றல் அள்ளித் தந்த வரங்களும் வாழ்வை முற்றிலும் தேனாக மாற்றி இருக்க அருண்மொழி என்பவனின் வாழ்வின் அர்த்தங்கள் தென்றலாகப்பட்டது!
தென்றல் மொழியின் நேசத்துடனான வாழ்வியல் என்றும் தேன் சொட்டுக்கள் நிறைந்த தித்திப்பான வாழ்வே!
******** தென்றல் மொழியின் ஸ்வரங்கள் தேனாய்*********