‘யாராக இருக்கும்?’ என மூளையை குடைந்தெடுக்கும் கேள்வியை அவர்களிடம் முன்பை போல உரிமையாக கேட்டுவிட முடியாமல் கையிலிருந்த பேக்கில் இருந்து பத்திரிக்கையை எடுத்தார்.
“அகிலுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம். அதான் இன்விடேஷன் குடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்று சொல்ல,
“நல்லது, சந்தோஷம்…” மகேஷ்வரி தான் பேசினார்.
“நீங்க உட்காருங்க. ஏன் நின்னுட்டே இருக்கீங்க தம்பி?…” என்று ஜகாவிடம் கேட்ட மகேஷ்வரி,
“நம்ம வீட்டு சாப்பாடு எல்லாம் பிடிச்சதா?…” என்று விசாரித்தார்.
“ரொம்பவே நல்லாருக்குதுங்க…” என ஜகா சொல்ல அவனின் மொழியில் நாராயணன் புருவம் சுருங்கியது.
ஜகா அணிந்திருந்த உடையை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை என்றாலும் அவன் பேசியவிதத்தில் கண்டுகொண்ட நாராயணனிடம் எள்ளல்.
‘இவன் லாயராக இருந்தால் கூட என்ன? பெரிதாய் என்ன தெரிந்திருக்கும்?’ என்னும் இளக்காரம் பெருமளவு மண்டிக்கிடந்தது அந்த பார்வையில்.
கேட்டவிதத்தில் நக்கல் தொனித்தாலும் நாராயணன் பார்வை ஜகாவை இன்னும் அளவெடுத்தது.
“மகேஷ்…” என பல்லை கடித்தார் மணி.
“கிராமம்ன்னா? நீங்க மட்டும் என்ன சிட்டியா? கோழிக்கோடுல ரொம்ப சின்ன கிராமம் தானே? பழசை மறக்க வேண்டாம்…” மதுரா சூடாக எச்சரிக்கையாய் சொல்ல,
“மது…” என்றார் நாராயணன் குரல் உயர்த்தி.
“ப்ச், வந்த விஷயம் என்ன ஸார்? அதை முடிச்சீங்கன்னா நாங்க அடுத்த வேலையை பார்ப்போம்…” என்று கத்தரித்தாள்.
அவமானமாக இருந்தாலும் இப்போது அதனை காட்டிக்கொள்வதா என நரி மூளை குறுக்கே வர,
“பத்திரிக்கை குடுக்கத்தான் வந்தேன். அதோட முக்கியமான விஷயமும் இருக்கே மது. அதை பேசாம எப்படி போக?…” என்றார் அவர்களை நோகடிப்பதாக எண்ணி.
நாராயணன் வரும் பொழுதே இது விஷயமாக பேசாமல் செல்ல மாட்டார் என்று தெரிய அவரை அடையாளம் காண்பித்திருந்தாள் ஜகாவுக்கு.
முதல்நாள் வீடு வந்து சேரும் வரை இந்த சிக்கல் தொடர்பான சந்தேகங்கள் தெளிவாக அலசி ஆராயப்பட்டது. ஜகா, மதுரா, மகேஷ்வரி என்று மூவரும் பேசிக்கொண்டே தான் வந்தனர்.
ஜகாவை பார்த்த பார்வையிலும் அவன் என்ன பெரிய இவனா? அதுவும் ஊர்நாட்டான் வக்கீலாக இருந்தாலும் ஆட்டுமூளை தான் என நினைத்திருந்தார் நாராயணன்.
ஜகாவும் அவரிடம் எதுவும் பேசாமல் பார்வையாலேயே தொடர்ந்து கொண்டிருக்க பத்திரிக்கையை மணியிடம் நீட்டினார் நாராயணன்.
“அகில் கல்யாணத்துக்கு குடும்பத்தோட அவசியம் வரனும் எல்லாரும். வசுவும் வரதா இருந்துச்சு. ஆனா இதைவிட இன்னும் முக்கியமான வேலைல பிஸியாகிட்டா. அப்பறமா போன்ல பேசறேன்னு சொன்னா…” என்றவர்,
“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம். பணத்தை எப்ப தருவதா இருக்கீங்க?…” என்று ஆரம்பிக்க மதுராவிற்கு கடுகடுவென்று வந்தது.
“ஒன்மந்த் டைம் இருக்கே? அதுக்குள்ளே கேட்டா எப்படி?…” மதுரா கேட்க,
“அதுக்காக என்னோட தேவைன்னு ஒன்னு இருக்கே? என் மகனுக்கு கல்யாணம். செலவுக்கு பணமில்லாம எவ்வளோ கஷ்டப்படறோம் நாங்க. சரி பழகின பழக்கத்துக்கு கொஞ்சம் பொறுமையா இருந்தா அதையும் உங்க பேச்சும் நடத்தையும் உடைக்குதே?…” என்றார் அவர்.
“என்ன பேசனும்? உங்ககிட்ட வந்து அழுது புலம்பனுமா? இல்ல கெஞ்சனுமா? என்ன எதிர்பார்க்கறீங்க நீங்க?…” குரல் உயர்த்தி மதுரா அவரின் எண்ணத்தை போட்டு உடைக்கவும் திடுக்கிட்டார் அவர்.
“என்ன மகேஷ், மதுக்கிட்ட சொல்லி வை. நான் என்ன பேசறேன். அவ என்ன பேசறா?…” என்றார் மதுராவிற்கு பதில் சொல்ல முடியாமல்.
“அவ பேசறது ரைட் தான். பிள்ளையை எப்பவும் தலைதூக்க விடாம அவங்களை சுயமா முடிவெடுக்க விடாம நான் வளர்க்கலை. என் பொண்ணுக்கு தைரியமும், தனிச்சு நிக்கிற துணிச்சலும் இருக்கு. எதையும் பேஸ் பன்ற கெப்பாசிட்டியும் இருக்கு…” என்றார் மகேஷ்வரி.
‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டான் ஜகா. இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மெச்சியவனுக்கு தன் அப்பத்தாவும், அம்மாவும் தான் கண்முன் நின்றனர்.
தந்தையின் இறப்பிற்கு பிறகு அண்ணன் தலை தூக்கினாலும் வீட்டு பெண்களின் முன்னெடுப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.
அத்தனை நம்பிக்கையாய், துணையாய் நின்று அண்ணனையும் முன்னிறுத்திய பெண்கள் அவர்கள்.
இப்போது இத்தனை இக்கட்டிலும் தங்களின் சுயம் தொலைக்காமல் பேசும் மதுரா, மகேஷ்வரி மேல் பெரிய மரியாதையே கூடி இருந்தது ஜகாவிற்கு.
முதல்நாள் இரவு அவர்களை இறக்கிவிட்டதும் கிளம்புகிறேன் என்றவனை மகேஷ்வரி விடவே இல்லை.
ஒருநாளேனும் தங்கித்தான் செல்லவேண்டும் என்று சொல்லிவிட்டார் உறுதியாக.
எழில்மணி கூட மறுக்கவில்லை அதனை. காரில் எத்தனை சாதுர்யமாக அவன் பேசிக்கொண்டு வந்தான் என்று கவனித்து தான் இருந்தார்.
மகளுக்கும், மனைவிக்கும் மந்திரியாய் அவன் ஆலோசனை சொல்லி சட்ட சிக்கல்களையும் கூறி இருக்க ஜகா மேல் சிறு நல்ல அபிப்ராயம்.
அதோடு தொழில் புத்தி அவனை தங்களின் ஆலோசகனாக வைத்துக்கொண்டால் என்ன என்றும் யோசித்தார்.
அதனை கொண்டு அவன் தங்குவதில் எந்தவித தயக்கத்தையும் வெளிப்படுத்தவில்லை எழில்மணி.
“பேசாம இருந்து நாளைக்கு போகலாம்…” என சொல்லிவிட்டு செல்ல மகேஷ்வரி உடனே காந்திமதிக்கு அழைத்து விஷயம் சொல்ல பேரனை பிடி பிடியென பிடித்துவிட்டார் அவர்.
அப்போதும் அண்ணனுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல பெரும் யோசனைக்கு பின்னர் சரி என்றான் பாண்டியனும்.
அதன்பின் முனியாண்டி வெளியில் இருக்கும் அறையில் தங்கிக்கொள்வதாக சொல்லியிருக்க ஜகா வீட்டில் கீழிருக்கும் விருந்தினர் அறையில் தங்கிக்கொண்டான்.
இப்போதும் காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்புகிறேன் என்றவனை மதுரா தான் பேசி இருக்க வைத்திருந்தாள்.
இன்று ஒருநாள் தங்களுடன் அலுவலகம் வருமாறும் கேட்டிருக்க சரி என்றிருந்தான் ஜகாவும்.
இவற்றை யோசித்தபடி இருந்தவன் கவனம் இங்கேயும் இந்த பேச்சுக்களில் இருந்தது.
“இப்ப முடிவா என்னதா சொல்றீங்க? எப்ப எனக்கு பணத்தை செட்டில் பண்ணுவீங்க?…” என்றார் நாராயணன்.
“அதை எங்க லாயர் பேசுவார்…” என ஜகாவை கை காண்பித்துவிட்டாள் மதுரா.