தன் மகளுக்கும் இப்படி சிறப்பாய் திருமணத்தை நிகழ்த்தி பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தார்.
“என்னம்மா ட்ரீமா?…” என மதுரா கேட்கவும்,
“இப்ப வந்திடறேன்ங்க. பேசிட்டிருங்க…” என ஜகா எழுந்தான்.
இன்னுமே பாண்டியன் அழைப்பின் இணைப்பில் தான் இருந்தான். மதுராவின் பேச்சில் அழைப்பை துண்டிக்கவிருந்தவன் அப்படியே இருக்க,
“இல்ல தம்பி. நீங்க உட்காருங்க. பெருசா என்ன ரகசியம் பேசிட போறோம்? பேசற அளவுக்கு இங்க எந்த ரகசியமும் இல்லை. எல்லா அம்மாவுக்கும் இருக்கற மாதிரி கனவு தான்…” என்றார் மகேஷ்வரி.
“ஹ்ம்ம், வேறென்ன? இங்க பிரச்சனையே தலைக்கு மேல இருந்தாலும் பொண்ணோட கல்யாணம்ன்றது எல்லாருக்குமே மிகப்பெரிய கனவு தானே? அதான் யோசிச்சிட்டு இருந்தேன்…” மகேஷ்வரி சொல்ல,
“ம்மா அதது நடக்கும் போது பார்த்துக்கலாம். இப்ப ஏன்?…” என்றாள் மதுரா தாய் கலங்குவதை தாங்க முடியாமல்.
“விடுங்க த்தை. இந்த பத்திரிக்கை பார்த்ததும் உங்களுக்கு சட்டுன்னு இந்த எண்ணம். இவங்க கலியாணத்தை இதைவிட பெருசாவே செஞ்சிருவோம். அம்புட்டுத்தான…” என ஜகா சொல்ல,
“ஆமாங்கம்மா மொத்த மருதையே இங்கன வந்துரமாட்டோமா?…” என்றான் முனியாண்டியும் ஆறுதலாக.
“அது மதுரை…” மதுரா புன்னகையுடன் சொல்ல,
“மருத…” என்றான் முனியாண்டி மீண்டும்.
“அங்க பெரும்பாலும் மதுரையை பேச்சுவழக்குல மருதன்னு தான் சொல்லுவாங்க…” என சொல்லிய ஜகா,
“முனியாண்டி சொன்ன மாதிரி தான். பெருசா பண்ணிடுவோம். நீங்க வெசனப்படாதீங்க…” என்றான்.
“இந்த இன்விடேஷன் பார்த்து நானும் கிராண்டா பண்ணனும்னு நினைக்கறேன்னு நினைச்சிட்டீங்க போல?…” என்று சிரித்துக்கொண்ட மகேஷ்வரி,
“என் பொண்ணு கல்யாணம் சிறப்ப நடக்கனும்னு நினைக்கறேன். அது டாம்பீகமான்னு அர்த்தமில்லை. கண்ணுக்கும், மனசுக்கும் நிறைஞ்ச ஒரு கல்யாணம். உண்மையான பாசமாயிருக்கற உறவுகள். கூடவே தாங்கிப்பிடிக்கிற சொந்தங்கள். இவங்களோட சிம்பிளா நடந்தாலும் போதும்…” என்றார்.
“அப்பிடின்னா நீங்க எங்க ஊருலதேன் பொண்ண தரனும்மோவ். தங்கமாட்டம் தாங்கமாட்டோமா…” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு முனியாண்டி வெளியே சென்றான்.
முனியாண்டியின் எதார்த்தமான பேச்சில் ஜகா திகைத்து மகேஷ்வரியை பார்க்க அவர் அமைதியாக இருந்தார்.
மதுராவின் முகத்தில் எப்போதும் போல சிரிப்பு தான். முனியாண்டி சொல்லியதை பெரிதுபடுத்தவில்லை.
“பேசாம முனியாண்டிட்ட எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லிட வேண்டியது தான்…” என்று சிரித்துக்கொண்டே மதுரா எழுந்து செல்ல எழில்மணி சமைந்து போய் அமர்ந்திருந்தார்.
மகேஷ்வரி பேசிய பின்னால் பேசிய எதுவுமே அவரின் காதில் விழவில்லை. அங்கேயே நின்றுபோனது அவரின் செவிப்புலன்.
‘என் பெண்ணின் திருமணத்திற்கு கூட இப்படி நினைக்கும் அளவிற்கு வைத்துவிட்டேனே? தான் என்ன மனிதன்?’ என்று வெதும்பி போயிருந்தார் அவர்.
நினைக்க நினைக்க ஆறவில்லை. உண்மையான சொந்தம் எது என்று வாழ்க்கை வலிக்க சொல்லி தந்திருக்க தங்கள் நிலையை எண்ணி வெறுத்திருந்தார்.
தன்னை உதாசீனப்படுத்தியவர்கள் முன்பு வளர்ந்து தன் பெண்ணிற்கு ஊரே மெச்சும்படி மாப்பிள்ளை பார்த்து முடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டவருக்கு பாண்டியன் நினைவில் எழவே இல்லை.
“நீங்க அவகள பாருங்க…” என்ற ஜகா எழுந்து வெளியே வந்து,
“என்னண்ணே, என்ன நெனைக்குதீக?…” என்றான் அண்ணனிடம்.
“என்னத்த நெனைக்க?…” என கேட்க,
“அவங்க நெனப்புல ஒங்க மேல ஒரு எண்ணமிருக்குன்னு படுதுண்ணே. அத்தே பேச்சுல வெளங்குது…”
“இங்காரு ஜகா அவக இப்பருக்கற நெலமைய வச்சு பொண்ண குடுங்கன்னு கேக்கறது செரியில்லடா. அது வேணாம். பாத்துகிடுவோம். விடேம்…” என்றான் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாய்.
“அவகளுக்கு இருந்து என்ன செய்யனுமோ செய்யி. கூட ஒத்தாசைக்கு ஆளு வேணுமின்னா கேட்டுக்க. அவக வீட்டுக்கு ஒத்தாள அனுப்புவோம்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
இத்தனை பார்த்து பார்த்து செய்யும் தன் அண்ணனின் மனதை இதைவிட எப்படி புரிந்துகொள்வதாம்?
இதற்காகவேணும் இருவரும் வாழ்வில் ஒன்று சேரவேண்டும் என்று வேண்டிக்கொண்டான் ஜகா.
நாராயணனிடம் சொல்லியதை போலவே அங்கே ஆட்களை வைத்து விசாரித்து தங்களுக்கு மிகவும் பரிட்சையமானவராக ஒரு லாயரை பார்த்து விஷயத்தை சுலபமாக்கி இருந்தான் ஜகா.
நோட்டீஸ் அனுப்புவதை அகிலனின் திருமணம் முடிந்த பின் செய்யலாம் என்றிருந்தாள் மதுரா.
ஜகாவும் தன்னாலான அனைத்து வழிகளையும் கண்டறிந்து ஆலோசித்து பிரச்சனைகளை சரிசெய்ய வழி வகுத்தான்.
பணம் எத்தனை பெரிய ஆயுதம்? இல்லாதவனுக்கு கிடைத்தால் பெரியாளாய் மாற்றும். இருப்பவன் தொலைத்தால் படுகுழியில் தள்ளும் என்பதற்கு தாங்களே பெரிய உதாரணம் என நினைத்துக்கொண்டாள் மதுரா.
எல்லாமே மாறிவிட்டது என்று சொல்லமுடியவில்லை என்றாலும் அவர்களின் இக்கட்டுகள் கொஞ்சம் தளர்ந்திருந்தது.
எந்த நேரமானாலும் தன்னை தொடர்புகொள்ளும்படி சொல்லிவிட்டு ஜகா கிளம்பிவிட அவ்வப்போது அவனிடம் போனில் பேசிக்கொள்வாள் மதுரா.
பாண்டியனின் வீட்டினரிடமும் மகேஷ்வரி அவ்வப்போது உரையாட சொந்தம் இன்னுமே பலப்பட்டது.
எழில்மணி குதிக்கவில்லை இப்போதெல்லாம். எண்ணமெல்லாம் எப்படி இதிலிருந்து மொத்தமாய் மீண்டும் வெளி வருவது என்றிருந்தது.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் பாண்டியனுக்கான பணத்தை திருப்பி தந்துவிடும் வேகத்தில் ஓட ஆரம்பித்திருந்தார்.
அன்று அகிலின் திருமணம். சென்னையில் வைத்து தான் என்பதால் மகேஷ்வரியும் மதுராவும் வந்திருந்தனர்.
எழில்மணி மறுத்துவிட்டார். மதுராவை வேண்டாம் என்றும் சொல்ல அவள் கேட்கவிலை.
“ஏன் வேண்டாம்? என்னவோ அவங்களுக்கு பயந்துக்கிட்டு அவாய்ட் பண்ணின மாதிரி இருக்கும். நான் போவேன்….” என சொல்லி கிளம்பிவிட்டாள்.
மகேஷ்வரிக்கு மகளின் மனதைரியத்தில் அத்தனை சந்தோஷம் தான். ஆனாலும் ஓரிடத்தில் இது மகளுக்கு வலி தானே என எண்ணினார்.
“என்னோட ஸ்ட்ரெந்த் என்னன்னு எனக்கு தெரியாதா ம்மா? இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்க வொர்ரி பண்ண வேண்டாம்…” என்று சொல்லி இப்போது மண்டபத்திற்கும் வந்தாகிற்று.
அத்தனை கூட்டம். பெரும்பாலும் மணமகளின் சொந்தங்கள் தான் நிறைந்திருந்தனர்.
கேரளாவை சேர்ந்தவர்கள் அவர்களின் பாரம்பரியமான உடைகளில் இருக்க மதுராவிற்கு அந்த பக்க திருமண நிகழ்வு சுவாரஸியத்தை தந்தது.
வசுந்தரா எதிர்பார்க்கவே இல்லை மதுராவும் சேர்ந்து வருவாள் என்று. அது அவரின் பார்வையிலேயே தெரிய பதட்டமாக மகனை பார்த்தார்.
முதல்நாள் வரை அகிலனிடம் அத்தனை போராட்டம், இந்த திருமணம் வேண்டாம் என்று கெஞ்சியிருந்தான்.
உயிரை விட்டுவிடுவோம் என்று கெஞ்சி, மதுராவின் வீட்டில் பணத்தை கேட்கமாட்டோம் என்று சொல்ல என பலதும் செய்து தான் இப்போது மனமேடை வரை வந்திருக்க மதுராவின் வரவு மகனிடம் மீண்டும் மாற்றத்தை தூண்டினால்?
பதைபதைப்புடன் பார்த்தவர் வரவேற்காமல் நிற்க பெண்வீட்டினர் இன்முகமாக அழைத்தனர்.
உள்ளே சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் பேசியபடியே மகேஷ்வரி வெளிப்பக்கம் பார்க்க அங்கே ஆளுமையான தோரணையுடன் வந்துகொண்டிருந்தான் சொக்கநாதபாண்டியன்.
“மது அங்க பார்…” என மகளுக்கு காண்பிக்க திரும்பி பார்த்தவளின் உள்ளம் காரணமின்றி உற்சாகத்தில் துள்ளியது.
சொக்கநாதபாண்டியனை அங்கே சுத்தமாக மதுரா எதிர்பார்க்கவே இல்லை. அது அவளின் ஆச்சர்யபாவத்திலேயே தெரிந்தது.
“வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்…” என்றாள் வாய் வார்த்தையாகவும்.
அவளின் இந்த பாவனைகள் பாண்டியனின் மனதை வெகுவாய் அசைக்க தன் புருவத்தின் ஓரத்தை விரலால் கீறிக்கொண்டான் தன்னுணர்வுகளை மறைத்துக்கொண்டே.