ஆனாலும் அந்த நொடியை அவன் நழுவவிடவும் விரும்பவில்லை. மீசைக்கடியில் ரகசிய புன்னகை மிளிர்ந்தது.
கண்கள் லேசாய் சுருங்க அதில் கன்னக்கதுப்புகள் துடித்து மீண்டதை மீசை உணர்ந்து அடக்கியது.
அன்றும் சாம்பல் வர்ண பட்டுப்புடவையில் தான் இருந்தாள் மதுரா. கழுத்தை ஒட்டிய சிறு சங்கிலி, அதன் குட்டி ஜிமிக்கி.
பின்னலிட்டு தலையில் முல்லை சரம் சூடி புடவையை ஒற்றை தலைப்பில் பின் செய்திருக்க ஒவ்வொன்றாய் அவன் விழிகள் பருகிக்கொண்டிருந்தது.
அவள் நளினங்களில் பயணிக்கும் விழிகளின் கனவுகளை மனதோடு கட்டியவன் தன் கண்களை சட்டென்று மகேஷ்வரி புறம் திருப்பிக்கொண்டான் பாண்டியன்.
“வாங்க தம்பி, எப்படி இருக்கீங்க?…” என்றார் மகேஷ்வரி அவனிடம் இன்முகமாக.
“நான் நல்லாயிருக்கேன்…” என்று சொல்லியவன் மேலும் பேசும் முன்,
“நீங்க எப்படி இங்க?…” என்றாள் மதுரா.
“பொண்ணோட அப்பா தெரிஞ்சவங்க. அதான்..” என சொல்ல அவன் வந்துவிட்டதை கவனித்து பாண்டியன் நின்ற இடத்தில் வந்து அழைத்தனர் மணப்பெண்ணின் பெற்றோர்.
“தம்பி வாங்க வாங்க. எங்க நீங்க வராம போயிருவீங்களோன்னு நினைச்சேன். நல்லவேளை…” என அத்தனை சந்தோஷத்துடன் அவனை மணப்பெண்ணின் பெற்றோர் வரவேற்க அவர்களிடம் தலையசைத்தவன்,
“நீங்க போங்க. வரேன்…” என சொல்லி மகேஷ்வரியை பார்க்க,
“இவங்க உங்களுக்கு பழக்கமா தம்பி?…” என்றார் பெண்ணின் தகப்பனார்.
“ஆமா, என்னோட சொந்தக்காரங்க….” என பாண்டியனும் அறிமுகப்படுத்தினான் உடனே.
“என்னோட அத்தை, இவங்க அத்தை பொண்ணு…” என மதுராவை பார்த்து சொல்ல அந்த பார்வையில் மகேஷ்வரி பாண்டியனை தான் ஆழ்ந்து பார்த்தார்.
அவனே அவர்கள் நிறுவனத்தையும் சொல்லி குறிப்பு காட்ட முயல அவருக்கே தெரிந்திருந்தது அதனையும்.
“தெரியும் தம்பி. சம்பந்தம் பேசும் போது விசாரிச்சோம். அப்ப தெரியும்…” என்றவர்,
“சரிங்க தம்பி. வாங்க இப்பத்தான் தாலி கட்டி முடிஞ்சது. நீங்க மேடைக்கு வாங்க…” என்று அழைத்தவர்,
“நீங்களும் வாங்கம்மா…” என்றார் மகேஷ்வரி, மதுராவை.
“நான் கூட்டிட்டு வரேன். நீங்க போங்க…” என்ற பாண்டியன்,
“போலாங்களா?…” என்றான் இருவரிடமும்.
பாண்டியன் கேட்டு நிற்க அவனுக்காக பெண்ணின் தகப்பனார் நிற்க இல்லை என மறுக்க முடியவில்லை.
அப்படியே கிளம்பிவிட தான் மகேஷ்வரியும், மதுராவும் இருந்தனர். ஆனால் அதற்கு மேல் வரவில்லை என்று கூற இயலவில்லை.
மதுராவும் பாண்டியனுடன் மேடை ஏற மகேஷ்வரி பின்னால் வர பாண்டியனிடம் என்னவோ கேட்டுக்கொண்டே முன்னால் அவனுடனே இணைந்து நடந்தாள் மதுரா.
அகிலனின் பார்வையும், வசுந்தராவின் பார்வையும் இதனை அழுத்தமாய் கவனித்தது.
“தம்பி இவங்க தான் எங்க சம்பந்தகாரங்க…” என வசுந்தராவை, அகிலனை, நாராயணனை என தனித்தனியாய் அறிமுகம் செய்து வைக்க அவர்களின் முகத்தில் இவன் யாரென்று கேள்வி தான்.
‘இவனுக்கு என்ன இத்தனை முக்கியத்துவம்? யார் இவன்?’ என்பதை போல வசுந்தரா பார்த்து நிற்க சம்பந்தகாரர் சொல்லியதன் பேரில் வணக்கமும் வைக்க அவர்களிடம் தலையசைத்தான்.
பாண்டியனின் பார்வை நாராயணனிடமே துளைத்து நிற்க அந்த பார்வையிலேயே நாராயணனின் முதுகு தண்டு ஜில்லிட்டது.
“இவர் சொக்கநாதபாண்டியன். இவர்கிட்ட தான் வியாபாரத்துக்கு நாங்க சரக்கு எடுக்கறோம். ரொம்ப நல்ல மனுஷன்…” என்று அவனின் புகழ் பாடிக்கொண்டிருந்தார்.
வசுந்தராவிற்கு பாண்டியனை பற்றி கேட்டதுமே பொறி தட்டியது முன்பு மகேஷ்வரி சொல்லிய அந்த கிராமத்து மாப்பிள்ளை இவனாக இருக்குமோ என்று.
அந்த பெயரே கவனிக்க வைக்க வசுந்தரா வேகமாய் ஆராயும் பார்வை பார்த்தார் அவனையும், உடனிருந்த மதுரா, மகேஷ்வரியையும்.
அவர் பரபரப்பாய் பார்த்ததை வைத்தே மகேஸ்வரியும் வசுந்தராவின் எண்ணப்போக்கை கண்டுகொண்டார்.
“போட்டோவுக்கு நில்லுங்க…” என்று சொல்ல பாண்டியனின் அருகில் மதுரா நின்றுகொள்ள மகேஷ்வரியின் காதில் கிசுகிசுத்தார் வசுந்தரா.
“நீ சொன்ன அந்த கிராமத்து மாப்பிள்ளை இந்தாளா மகேஷ்?…” என கேட்க அகிலனின் காதிலும் விழுந்தது.
“மரியாதை முக்கியம் வசுந்தரா. ஆள் அது இதுன்னு நீ பேசற இடத்துல அவரில்லை. மைண்ட் யூர் வேர்ட்ஸ்…” என்று மகேஷ்வரி திருப்பி கொடுக்க,
“அப்போ அந்த வரன் தானா? பொண்ணை குடுக்கனும்ன்னு முடிவே பண்ணிட்ட போல?…” வசுந்தராவிற்கு அதை தெரிந்தாகவேண்டி இருந்தது.
“வொய் நாட்?…” என்று வசுந்தராவின் நெஞ்சில் இன்னும் தீயை பற்ற வைத்தார் மகேஷ்வரி.
“கிராமத்து மாப்பிள்ளை, மதுவுக்கு செட்டாகுமா?…” அடுத்த கேள்வி.
“ஒருசில சிட்டி பசங்களை விட கிராமத்து மனுஷங்க தைரியமானவங்க. அவங்க சுயமா முடிவெடுக்க தெரிஞ்சவங்க. முக்கியமா மனுஷங்களை பணத்தை வச்சு எடை போடறவங்க இல்லை…” என்று சொல்லிவிட்டு,
“கங்க்ராட்ஸ் அகிலன்…” என சம்பிரதாயமாக வாழ்த்திவிட்டு இறங்க அகிலனின் பார்வை மதுராவிடம்.
“போலாமா?…” என பாண்டியனிடம் கேட்டவள் அகிலனிடம் சிறு புன்னகையை சிந்திவிட்டு கீழே இறங்கினாள்.
உயிர் துடிக்க கை விட்டுப்போன வாழ்க்கையின் சுவடுகள் முற்றிலுமாய் அழிந்துவிட்டதை கண்முன்னே கண்டான் அகிலன்.
தன் திருமணம் மதுராவின் மனதிலும், முகத்திலும் சிறு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவளின் தெளிந்த முகம் காட்டியது அகிலனுக்கு.
ஒருமனம் இதுவும் நல்லதற்கு என எண்ணினாலும் இன்னொருமனம் அவளை விரும்பிய மனம் சண்டித்தனம் செய்தது.
அகிலனின் அத்தனை கோபமும் பெற்றோரின் புறம் சிறிது சிறிதாய் திரும்பியதை அவர்கள் உணரவில்லை.
“அண்ணே அந்த தம்பி ரொம்ப பெரிய இடமோ? பார்த்தா வில்லேஜ் மாதிரி இருக்கே….” என தன் சம்பந்தகாரரிடம் வசுந்தரா கேட்க,
“அதான் சொன்னேனே, நமக்கே சரக்கு அங்கருந்து தான் வருது. இதுமாதிரி எவ்வளோ பேருக்கு சப்ளை பண்ணுவாங்க. கிராமத்துலன்னு ஈஸியா நினைக்க கூடாது. விட்டா சிட்டில நீங்க நடத்தின மாதிரி நாலஞ்சு கம்பெனி நடத்துவாங்க. அவ்வளோ செல்வாக்கு…” என சொல்லிவிட்டு அடுத்த விருந்தாளி அழைக்கவும் பார்க்க சென்றார்.
“அன்னைக்கு மணி வீட்டுல இந்தாள் முகஜாடையில ஒருத்தனை பார்த்தேன் வசு. சொந்தம்ன்னு சொன்னாங்க. பணத்தை கூட இவங்க தான் குடுத்திருக்கனும்…” என நாராயணன் மெல்லிய குரலில் சொல்ல வசுந்தராவிற்கு இன்னுமே பார்வை பாண்டியனிடம் தான்.
“நான் அனுப்பிட்டு வரேன். எவ்வளோ பெரிய மனுஷன், இங்க வந்ததே பெருசு…” என்று மீண்டும் அவர்களிடம் வந்து சொல்லி கீழே இறங்கினார் பெண்ணின் தகப்பன்.
பாண்டியனை நெருங்கியவர் அவனின் கையை பற்றி சந்தோஷமாய் பேசிக்கொண்டிருக்க பாண்டியன் பார்வை நாராயணனையே சுற்றி வந்தது.
அவரின் சம்பந்தகாரரும் நாராயணனை பார்க்கவும் பின் பாண்டியனிடம் தலையசைப்பதுமாக இருந்துவிட்டு நாராயணனை நோக்கி கையசைத்து அழைத்தார்.