“மது…” என்றவர் பாண்டியன் என்ன சொல்வானோ என்று பார்க்க மதுராவின் பார்வையில் தலையசைத்து சரி என்றான்.
மூவருமாய் ஒரு புகைப்படம். அழகாய் இடம்பிடித்து நிறைந்துவிட்டது அவளின் கைபேசியில்.
“சரிங்க, பொறப்படுதேன்…” என்று கிளம்பிவிட்டான் பாண்டியன்.
மதுரா அவன் செல்வதையே பார்த்துக்கொண்டிருக்க மகேஷ்வரி தங்களின் காரை நோக்கி சென்றார்.
வசுந்தராவிடம் தான் சொல்லிய ‘வொய் நாட்’ இன்னும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
மதுராவே காரை கிளப்ப இன்னுமே யோசனையுடன் தான் இருந்தார் மகேஷ்வரி தன் மனதின் ஆசை என்பது கொஞ்சமாய் மேலெழும்பியது.
“காந்திமதி பாட்டிக்கு நாம எடுத்த செல்பியை அனுப்பி வச்சிருக்கேன். இன்னைக்கு என்ன பன்றாங்கன்னு பார்ப்போம்…” என்று சிரிப்புடன் மதுரா சொல்ல மகேஷ்வரி கவனம் அதிலில்லை.
“ம்மா…” என மதுரா அவரின் தோள் தொட்டு அழைக்க,
“சொல்லுடா…” என்றார் வலிக்கும் தலையை ஒரு கையால் தாங்கிக்கொண்டு.
“சொன்னேனே? நீங்க கவனிக்கலை போல?…” என்றவள்,
“இன்னொரு விஷயம் ம்மா…” என கூற,
“என்னப்பா?…” மகேஷ்வரி கவனத்தை மகளிடம் வைத்தார்,
“மிஸ்டர். சொக்குக்கு இன்னும் அந்த தாட் இருக்கும்ன்னு நினைக்கறேன்….” என்றவள் அவரின் பார்வையில்,
“என்னை மேரேஜ்க்கு கேட்டது. அதான், என் மேல இன்ட்ரெஸ்ட் அது இன்னுமே இருக்கு போல….” என கூறினாள் மதுரா.
“உன்கிட்ட அது பத்தி, இல்லை அதுமாதிரி எதுவும் பேசினாரா அந்த தம்பி…” என்று கேட்க,
“நேரடியா இல்லை. ஆனா எனக்கு ஃபீலாச்சு. இதுக்கு முன்னாடி அப்படி ஆனதில்லை. ஆனா இன்னைக்கு தோணுச்சு…”
“நீ என்ன நினைக்கிற மது?…”
“ம்மா, நான் என்ன நினைக்கனும்? ப்ரேக்கப்பாகி, ப்ச், அதை அப்படி கூட சொல்ல முடியாது. ஆனா இப்ப வேண்டாம். விடுங்க…” என்று தவிர்த்தாள் பெண்.
மகேஷ்வரி அதன்பின் மதுராவிடம் கேட்டுக்கொள்ளவில்லை. அந்த பேச்சுக்கள் அன்றுடன் முடிந்து போனது.
கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்திருந்தது. நாட்கள் சென்ற வேகமும் தெரியவில்லை.
அத்தனை பரபரப்பு. தொழிலை சரி செய்வது ஒரு கடும் போராட்டமாக இருப்பது ஒருபக்கமென்றால் அதனை தூக்கி பழையபடி நிறுத்துவது குதிரை கொம்பாக இருந்தது.
இதனிடையே மதுராவிற்கு வரன் என்று ஒன்று எழில்மணி நண்பர்கள் வட்டத்திலிருந்து வர மகேஷ்வரியால் அதற்கு மேல் மௌனம் காக்க முடியவில்லை.
“எனக்கு மதுராவை பாண்டியன் தம்பிக்கு குடுக்கறது தான் சரின்னு தோணுது. அங்க என் பொண்ணு நல்லா இருப்பா…” என்று சொல்ல சிறிது நேரம் எழில்மணி வாயடைத்து போனார்.
மகேஷ்வரி மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று நினைத்தும் பார்த்ததில்லை அவர்.
சிறிது நேரம் தான் சொல்லிய விஷயத்தை அவர் ஜீரணிக்க நேரம் கொடுத்திருந்து பார்த்துவிட்டு,
“என்ன சைலண்ட்டா இருக்கீங்க?…” மகேஷ்வரி கேட்கவும்,
“மகேஷ் என்ன பேசற நீ? அந்த குடும்பத்துல பொண்ணை குடுத்தோம்ன்னா மூத்த மருமகளா போகனும். பொறுப்பா பார்க்கனும். எல்லாம் தலைல தூக்கி சுமக்கனும். நம்ம மதுவால அங்க சுதந்திரமாவும், நிம்மதியாவும் இருக்க முடியாது. இந்த தேவையில்லாத பொறுப்பு நமக்கு தேவையா?…”
“என்ன பேசறீங்க நீங்க? என் பொண்ணு பொறுப்பா செய்யமாட்டான்னு சொல்ல வரீங்களா? இல்லை பொண்ணுங்கன்னா பொறுப்பா செய்யவே முடியாதுன்னு சொல்ல வரீங்களா?…” என சூடாக கேட்டவர்,
“கம்பெனியை நீங்க பார்த்துப்பீங்கன்னு உங்களை இவ்வளோ தூரம் விட்டதால தானே பேசறீங்க? நம்மோட ஏஜென்சியை என்னால பார்த்துக்க முடியாம உங்ககிட்ட விட்டுவைக்கலை. நீங்க தன்னிச்சையா செய்யனும்ன்ற உங்க ஆசையை தடுக்க வேண்டாமேன்னு தான் நான் தலையிடலை. இனி உங்க பிஸ்னஸ் உங்களுக்கு. என்னோட பிஸ்னஸ் எனக்கு…” சொல்ல எழில்மணி அதிர்ந்து போனார்.
“என்ன பிரிச்சு பேசற? அதுவும் நாம நம்ம பொண்ணை பத்தி பேசிட்டிருக்கோம். இதுல ஏன் பிஸ்னஸ்?…”
“ஆமா, பேசனும்னா எல்லாமே பேசனும். தொழில்ல எப்படி ரெண்டுபேருக்கும் பொறுப்பு இருக்கோ அதுமாதிரிதான் பொண்ணு விஷயத்திலையும்…” என்றவர்,
“இப்பவும் ஏஜென்ஸி என் பேர்ல தான் இருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா?..” சுருக்கென்று இருக்கும் என தெரிந்தே தான் கேள்வி கேட்டார் மகேஷ்வரி.
“மகேஷ்…”
“ஓகே, இதை நான் ரெண்டாவது பார்த்துக்கறேன். இன்னைக்கு ஈவ்னிங் நான் மதுகிட்ட இதுவிஷயமா பேச போறேன்…” என்றார் உறுதியாக.
“மது ஒத்துக்கமாட்டா…”
“அதை என் பொண்ணு சொல்லட்டும். அவளுக்கு அவ லைஃபை டிஸைட் பன்ற எல்லாம் ரைட்ஸும் நான் குடுத்திருக்கேன். நான் சொன்னேன்றதுக்காகவே ஒத்துக்கற பொண்ணும் அவ கிடையாது. அவ நோ சொல்லிட்டா எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை…” என சொல்லிவிட்டார் முடிவாக.
“அவ ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்கவே மாட்டேன். அந்த வாழ்க்கை என் பொண்ணுக்கு வேண்டாம். அவ கஷ்டப்படுவா…”
“அதை நீங்களா ஏன் முடிவு பன்றீங்க? கஷ்டம் எங்க தான் இல்லை?…” மகேஷ்வரி இன்னுமே பிடிவாதமாய் சொல்ல,
“நீ என்னவும் நினை. ஆனா நான் ஒத்துக்கவும் மாட்டேன். நடத்தவும் விடமாட்டேன்…” என்று எழில்மணி கொந்தளிக்க அதனை சட்டை செய்யவே இல்லை மகேஷ்வரி.
எழில்மணியிடம் சொல்லியதை போலவே அன்று மாலையே மகளிடமும் பேசிவிட சில நொடிகள் மௌனமானவள்,
“எனக்கு யோசிக்க டைம் வேணும் ம்மா. அதோட மிஸ்டர்.சொக் கிட்ட நான் நேரா பேசனும்…” என்றாள் மதுரா.
சொல்லியது போல மதுராவின் பயணம் மதுரை அலங்காநல்லூரை நோக்கி இனிதே துவங்கியது.
சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் அன்று. தூங்கா நகரம் திருவிழா கோலத்தில் அமோகமாய் ஆர்ப்பாட்டாமாக ஜொலித்தது.