அதன் பின் வந்த பொழுதும் அவன் ஊரில் இல்லை. இப்போது அவனுக்காகவே, அவனை பார்க்கவே வந்திருக்க மனதில் என்னவோ புதிதாய் ஒரு உணர்வு.
ஆம், புதுமையான உணர்வு தான். இந்த உணர்வை இதற்கு முன் அனுபவித்ததில்லை.
முதல்நாள் பயணம் துவங்கியதில் இருந்து காலை மதுரையில் கால் பதித்த நொடி ஒருவாறு அந்த முடிவிற்கு வந்துவிட்டாள் மதுரா.
இது தான் மட்டும் எடுக்க கூடிய முடிவில்லையே? பாண்டியனுக்கு தன்னை பிடித்திருந்தாலும் தான் பேசிய பின்னர் என்ன சொல்வானோ என்றிருந்தது.
இதில் காந்திமதியை நினைக்க இன்னும் சிரிப்பு தான் வந்தது மதுராவிற்கு. தான் அனுப்பிய போட்டோவை வைத்து எத்தனை ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார் என கேட்டத்தை நினைக்கையில் தானாகவே புன்னகை அவளிதழ்களில்.
மதுரா பாண்டியனுடன் எடுத்த போட்டோவை காந்திமதிக்கு அனுப்பியிருக்க முதலில் பார்த்தது துர்கா தான்.
“மொத சத்தியம் பண்ணு கெழவி…” என துர்கா தன் கையை நீட்ட,
“ஆமாமா, விடாத துர்கா. கெழவி அதோட புது பேத்திக்கு தாரேன்னு சொல்லி வெச்சிருக்கு…” என போட்டுக்கொடுத்தான் ஜகா.
அவன் சொல்லவும் காந்திமதி மாட்டிக்கொண்டதை போல திருதிருவென முழிக்க,
“முழிய பாத்தியா திருட்டு முழி. நாஞ்சொல்லுதேன், அந்த போட்டோவ காமிக்காத…” என்று சொல்ல பேரனை உறுத்து விழித்தவர்,
“இந்தாடி எம்போன என்னத்துக்கு நீ எடுக்கவ? ரோசக்காரின்னா கொண்டா மொதல்ல…” என்று அதிகாரம் பறக்க காந்திமதி கூறினார்.
“அம்புட்டுத்தான. துர்கா அந்த போட்டோவ எம்போனுக்கு அனுப்பிட்டு அத்த அழிச்சிரு. கெழவி அது போனோட போராட்டம் பண்ணட்டும். ரோசமாயிருத்தா…” என்று ஜகா சொல்லிக்கொடுக்க,
“சும்மாயிருடா…” என்றவர்,
“செரி சத்தியத்த செய்யுதேன். கிட்ட வாத்தா…” என பேத்தியின் கையருகே கையை கொண்டுபோனவர் ஒரே இழுப்பில் துர்காவை சுருட்டி இழுத்து போனை பிடுங்கிக்கொண்டார்.
“ஆருக்கிட்ட, போடி…” என பேத்தியை விட்டு போனில் அந்த புகைப்படத்தை பார்த்தவருக்கு சந்தோஷம் தாள முடியவில்லை.
“இங்க பாரு வடிவு, எப்புடி சோடிப்பொருத்தமின்னு…” என பார்த்து பார்த்து பூரித்து மகிழ்ந்துபோனார்.
“ஆனா இன்னொன்னு எங்க? காணல?…” என அடுத்து வேறு போட்டோ இருக்கிறதா என தேடி பார்த்தார்.
“அடியே, அப்பிடியே கொமட்டுல இடிச்சேனா பாத்துக்கிடு…” என பேத்தியிடம் பாய்ந்தார்.
“செரி அவள ஏன் வைய்யுத? ஒனக்கு அவக ரெண்டுபேர மட்டும் தனியா பாக்கனுமின்னா நான் வெச்சுத்தாரேன். நல்லா பாரு…” என்று ஜகா சொல்லவும் அவனை நம்பாமல் பார்த்தார் காந்திமதி.
“நெசமாத்தேன் கெழவி. போட்டோவ சத்தியமா அழிக்கவே மாட்டேன். ஒனக்கு வெச்சு தரேமின்னா தருவேன்…” என காந்திமதி பாட்டியின் தலையிலடித்தவனை நம்பி போனை கொடுத்தவர்,
“ராசா சகா, அப்பிடியே அந்த போனுல முன்னாடி அந்த போட்டோவ வெக்கிதியா? தெறக்கவும் அதேம் வரனும்….” என கேட்க,
“ஒனக்கில்லாததா அப்பத்தா. இப்ப பாரு என்ன செய்யுதேமின்னு…” என்றவன் இருவர் மட்டும் இருக்குமாறு போட்டோவை வைத்தவன் முகப்பு படமாகவும் வைத்துவிட்டான்.
“நம்மளை எல்லாம் இந்தப்பத்தா தவுட்டுக்கு தூக்கிட்டு வந்திருக்கமாரியிருக்கு…” என்று துர்கா கடுப்பாய் கூறினாள் ஜகாவிடம்.
அதை எல்லாம் கண்டுகொள்ள காந்திமதிக்கு எங்கே நேரம்? கவனம் மொத்தமும் தன் போனில் தான்.
“ஹவ் இஸ் இட்?…” என ஜகா காந்திமதியிடம் போனை காண்பித்து கேட்க,