“பாட்டி போனா அப்பா காலி. ரெண்டுபேரும் சரியா நிப்பாங்க சண்டைக்கு…” என சொல்லி சிரித்தவள்,
“சொல்ல மறந்துட்டேன். இதை பாட்டிக்கிட்ட குடுத்திருங்க…” என பரிசுத்தாள் சுற்றிய ஒரு பார்சலை அவனிடம் நீட்டினாள் மதுரா.
“என்ன இது?…” பாண்டியன் வாங்காமல் கேட்க,
“பாட்டிக்கு தான். சின்ன கிப்ட்…” என்றவள்,
“அவங்களுக்கு சன் க்ளாஸ் வாங்கினேன். அதான்…” என நீட்டியபடியே இருக்க வாங்கிக்கொண்டவன் பார்வை சுற்றி இருந்தவர்களை கவனித்தது.
யாரும் பார்க்காமல், யாரின் பார்வையையும் மறைக்காமல் செய்ய முடியாதே? ‘ஸ்யப்பா’ என்று வேறு ஒருபக்கம் மனது அடித்துக்கொண்டது.
“செரி ஜகாவ வர சொல்லுதேம். கெளம்பு…” என தனது போனை அவன் எடுக்க,
“ஏன் நீங்க ட்ராப் பண்ண மாட்டீங்களா? அதான் நாம இப்ப கமிட்டாகிட்டோமே?…” என்று கண் சிமிட்டி மதுரா சிரிக்கவும் ‘ஆத்தே’ பாண்டியனுக்கு என்றிருந்தது அந்த பாவனை.
“செரி, வா…” என எழுந்துகொண்டவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் முன்னே நடந்தான்.
“செம்ம சில் இந்த தண்ணி. நான் பேருக்கு தான் பூர்வீகம் வில்லேஜ். ஆனா எங்கப்பா இதுக்கு கூட விட்டதில்லை…” என பம்புசெட்டில் சீறி பாய்ந்துகொண்டிருந்த குளிர்ந்த நீரை கையில் பிடித்தவள்,
“குடிக்கலாமா?…” என்றாள் அவனிடம்.
“ம்ம்ம், குடி தண்ணீதேன்….” என அவளிடம் சொல்லிவிட்டு,
“போனி உள்ள இருக்கு. எடுத்தாரேன்…” என்று நகர போக,
“அதெல்லாம் வேண்டாம். இப்படியே குடிச்சுப்பேன்…” என கைகளில் பிடித்து பருக பாண்டியன் சட்டென விழிகள் வேறு திக்கில் திரும்பிக்கொண்டது.
தண்ணீரை குடித்து முடித்தவள் திரும்பி பார்க்கையில் அவளுக்கு முதுகு காட்டி பின்னந்தலையை ஒரு கையால் கோதிக்கொண்டு நின்றவன் தான் தென்பட்டான்.
“போகலாம். குடிச்சுட்டேன்…” என்றவள் சத்தத்தில் திரும்பி பார்க்க மதுராவின் முகமெங்கும் நீர் முத்துக்கள் பூத்திருந்தது.
“ம்ம்ம்…” என்ற தலையசைப்புடன் வரப்பின் மேல் நடந்தவன் பார்வை மீண்டும் அவள் முகம் பார்க்க நினைக்க தலையை திருப்பவே இல்லை பாண்டியன்.
இருவருமாக அடைப்பின்றி மேல்க்கூரை மட்டும் வேய்ந்திருந்த காலி இடத்தை நெருங்கியிருக்க அங்கே பாண்டியனின் புல்லட்டும், ஜீப்பும் நின்றிருந்தது.
“முனியா வண்டி சாவிய கொண்டா….” என சத்தம் கொடுக்க சாவியுடன் வந்தான் வேலையாள்.
பாண்டியன் இலகுவாய் சொல்ல மதுரா வாயில் கைவைத்து மெல்லிய முறைப்பை தந்தவள்,
“ஒரு முடிவோட தான் இருக்கீங்க. எங்கப்பா இன்னும் சம்மதிக்கலை ஞாபகம் இருக்கட்டும்…”
“யார் இல்லன்னா? சம்மதிச்சா எதிர்க்க நின்னு அட்சத போடட்டும். இல்லன்னா தாலி கட்டறப்ப பக்கத்துல உக்காந்து சண்ட போடட்டும்….” என சொல்லி அவன் கண்கள் ஓரங்கள் சுருங்கியது.
“கொஞ்சம் நல்லா சிரிக்கலாம். நீங்க சிரிக்கறீங்கன்னு தெரிஞ்சுக்க கண்ணை தான் பார்க்க வேண்டியதா இருக்கு. இந்த மீசைக்குள்ள ஒன்னும் தெரியலை…” என்னும் பொழுதே பாண்டியன் விரல்கள் அவன் மீசையை வருடிக்கொண்டது.
“என்ன தெரியல?…” என கேட்டவன் குரலும் இளகி இருக்க,
“இப்படியே பேசிட்டிருந்தா நாளைக்காகிடும். நீங்க முதல்ல கிளம்புங்க…” என விலகி நின்றாள் மதுரா.
ஆர்ப்பாட்டமாய் வந்த சிரிப்பை தொண்டையோடு நிறுத்திக்கொண்டவன் இதழ்கள் விரியா புன்னகையை சிந்த ஜீப்பை கிளப்பிக்கொண்டு சென்றான் பாண்டியன்.
மதுரா உள்ளே செல்ல ஜீப் சத்தத்தில் நாயகி பாட்டி எழுந்து வாசலுக்கு வந்துகொண்டிருந்தார்.
“என்னத்தா பேசிட்டியா? காந்தி இங்கன போன போட்டு நச்சுக்கிட்டு இருந்தா…” என பேத்தியின் கை பிடித்து உள்ளே அழைத்து வர,
“எல்லாம் பேசியாச்சு. உங்க பேரன் இந்த திருவிழா திருக்கல்யாணம் அன்னைக்கு நிச்சயம் வச்சுக்கலாம்ன்னு சொல்லிருக்கார். கல்யாணம் நெக்ஸ்ட் மந்த் வச்சுக்கலாமாம். முகூர்த்தம் பார்த்துட்டு முடிவு பண்ணுவாங்க…” என்று சிம்பிளாக சொல்லிவிட,
“இதென்னடி இது பட்டுன்னு சொல்லிட்ட?…” என நாயகி பேத்தியின் முகத்தையே அளவெடுக்க,
“பாட்டி வேற என்ன செய்யனுமாம்? வெக்கப்பட்டு விரலால கிணறு தோண்டவா?…” என கேட்டு சிரித்துக்கொண்டே தாய்க்கு அழைக்க ஆரம்பித்தாள்.